அன்றொருநாள்: மார்ச் 4
உரையின் உரைகல்
The final paragraph of Lincoln's First Inaugural Address
‘அன்றொரு நாள்/பெப்ரவரி 12: உயர்ந்த மனிதரால் உயர்ந்த நாடு.’ என்ற இழையின் தொடரே இது எனலாம். கீதா சாம்பசிவத்தின் உபயம். ஒரு தனி இழையாகவும், இதை கருதலாம். அன்று பேசப்பட்ட அப்ரஹாம் லிங்கன் மார்ச் 4, 1861 அன்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக பதவியேற்றார். உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கைகள் வந்திருந்த போதிலும், திறந்த வாகனத்தில் தான், ஜனாதிபதியின் முதல் உரையாற்ற பயணித்தார். அந்த நீண்ட உரை சம்பிரதாயமானது என்றாலும், இன்றளவும் அது போற்றப்படுகிறது. நாடு பலத்த கலவரத்திலும், குழப்பத்திலும், உள்நாட்டு காழ்ப்புணர்ச்சியிலும் உழன்று கொண்டிருந்த காலகட்டம், அது. அதை மனதில் கொண்டு, மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது அந்த உரை. அரசியலர் சுற்றி வளைத்து பேசுவர்; காந்திஜி, ராஜாஜி போன்றோர் அதற்கு விதிவிலக்கு; அவர்களுக்கு முன்னோடி லிங்கன். பிரச்னையும், சர்ச்சையும் இல்லாத விஷயங்களை பற்றி பேச்சில்லை என்று தான் உரையை துவக்குகிறார். மாநிலங்களின் சுயேச்சையை மதிப்பது, சொத்து, நிம்மதி, பாதுகாப்பு மூன்றுக்கும் தேவையான உத்தரவாதம், அடிமை தளையை கழற்றுவது, மனிதநேயம், மென்மையான ஆய்வு, அரசியல் சாஸனத்தின் அருமையை பற்றி, மாநிலங்கள் ஐக்யநாடுகளாக திகழ்வதின் இலக்குகள் ஆகியவற்றை தொகுத்து அவர் அளித்தவிதத்தின் நேர்மையும், வாய்மையும், சுயம்பிரகாசமாக, பிரகாசிக்கின்றன.
ஒரு டைம்லைனை, தன் கூற்றுக்கு சாக்ஷியாக, அவர் கூப்பிடும் நேர்த்தியை பாருங்கள். “...அரசியல் சாஸனத்திற்கு முந்தியது நமது ஐக்யம் -1774. பழம் கனிந்தது, 1776ம் வருட சுதந்திர பிரகடனத்தினால். கனிந்த பழமும் நழுவி பாலில் விழுந்தது போல், 1778ல் பதிமூன்று மாநிலங்களும், நிரந்தர ஐக்யத்திற்கு அடி கோலின. அந்த நிரந்தர ஐக்யம் வழுவமைதியுடன் இயங்க வேண்டும் என்று 1787ல், சாஸனப்பதிவு ஆயிற்று.” கையோடு கையாக, எந்த மாநிலமும் ஐக்யத்திலிருந்து விலகமுடியாது என்ற எச்சரிக்கை. விலக நினைப்பதே நாட்டின் மேலாண்மையை குலைக்கும்; அதை தடுத்தாட்கொள்வது தான், என் பணி என்று ஒரு போடு போட்டார். அது கேட்டு, எதிர்ப்பாளர்களின் முகம் சிவக்கும் முன், சமாதான புறா:
“...ஜனாதிபதிக்கு ஆளுமை கொடுத்தது மக்கள்...அவனுடைய கடமை அரசை உருப்படியாக நடத்துவது...என் தேசவாசிகளே. நிதானித்து யோசியுங்கள். நேரம் எடுத்துக்கொள்வதால், நட்டமில்லை...உள்நாட்டுப்போரை தவிர்ப்பது உங்கள் கையில். அரசு தாக்காது. ஆனால், நான் அரசை போற்றி, பாதுகாப்பதாகத்தான் சத்தியபிரமாணம் செய்கிறேன்...உரை முடிய போகிறது. நமக்குள் பகையில்லை. கருத்து வேற்றுமையின் வலிமையை விட, நம் பரஸ்பர அன்பு திடமானது. முடிந்து போன போர்கள், உயிரை தியாகம் செய்த தேசாபிமானிகள் ஆகிய சேதனங்கள், நம்மை ஆசீர்வதிக்கின்றன. நம் இயல்பே தேவதைகளின் இருப்பிடம் அல்லவா!”
எளிதில் மொழியாக்கத்திற்கு வளைந்து கொடுக்காத இலக்கிய கோர்வை, இது. என்னுடைய மொழியாக்கம் சிறப்புற அமையவில்லை; ஆனால், கருத்தைத் தெரிவிக்கிறது என்று நினைக்கிறேன். லிங்கனின் முழு உரையை படித்து விடுங்கள், உசாத்துணையிலிருந்து.
இன்னம்பூரான்
04 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment