Saturday, March 16, 2019

திணை பாயசமும், திருவிக குருகுலமும்

திணை பாயசமும், திருவிக குருகுலமும்
முகவுரை

மதறாஸ் வந்தால் இன்னம்பூரான் சார் வீட்டிலோ அல்லது கீதாம்மா வீட்டிலோ நிச்சயம் திணைப்பாயாசம் கொடுக்கணும்.



~ இந்த பதிவை பார்த்த இழையில் பதில் போட கூகிளார் ஒத்துழைக்க வில்லை. இது கண்டு என் மனம் நெகிழ்ந்தது. வருபவர்களுக்கு நானும் அக்கார வடிசல் தருவேன். டாக்டர் நா. கணேசனுக்கு இரண்டு தடா. என் குருநாதரின் அன்பு கட்டளை படி எனக்கு எல்லாரும் வேண்டும். இதமாக பழக வேண்டும். இங்கிதமான உறவு நாடுபவன், நான். இந்த இழை தொடரும். காழ்ப்புணர்ச்சியை உரக்கப் பேசுபவர்களை தணிந்து பேசச்சொல்லி கோரிக்கை விடுகிறேன்.
கனிவான அன்புடன்,
இன்னம்பூரான்

---------------------------------------------


திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [1]
-இன்னம்பூரான்

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=91188

சான்றோர்களைத் தற்காலத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் போது, அவர்களின் பிறந்து, வளர்ந்து, மறைந்த கதையை விட அவர்களின் வாழ்நெறியைக் கூறுவது முக்கியம். அத்தருணம் சில நிகழ்வுகளை முன்னிறுத்தி அலசுவது தான் வாழ்க்கைப்பாடங்களை அளிக்கும் வழி. அவ்வாறு தொகுக்கும்போது அட்டவணை போட்டு கட்டை விரல் சப்பியதில் தொடங்கி மரணாவஸ்தை வரை வரிசைப்படுத்துவது தேவையல்ல. சில சம்பவங்கள் அந்த சான்றோர்களின் பெருமைக்குக் கட்டியம் கூறும். சில அவர்களின் தர்மசங்கடங்களை பூடகமாகத் தெரிவிக்கும் – திறந்த மனதுடன் தேடினால். நான் என்னவோ என் மனம் அழைத்துச்செல்லும் ராஜபாட்டையில் தான் உங்களை அழைத்துச்செல்வேன். எனக்கு தெரிந்தது அவ்வளவு தான். பொறுத்தாள்க.

மஹாத்மா காந்தியின் ஜன்மதினம் அன்று உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா! சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். காந்திஜியை நினைவு கூர்பவர்கள் சொற்பம். 

அது கூட இல்லை. ‘தமிழ் காந்தி’ ‘தமிழ்தென்றல்’ திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம் அவர்களை தமிழர்கள் அறவே மறந்துவிட்டார்கள். ஏதோ விருது அளிக்கும் தினத்தில் ஒரு வரி உதட்டளவு புகழுரை. அத்துடன் சரி. அங்கும், இங்கும், எங்கும் இறைவனின் சிலாரூபத்தைப் பழிப்பவர்கள் எழுப்பிய மானிடஜன்மங்களில் சிலைகள் மலிந்த நம் நாட்டில், எனக்குத் தெரிந்து மூவருக்கு மட்டும் தான் ஆளுக்கு ஒரே ஒரு சிலை, பொது மக்களே முன் வந்து ஆர்வத்துடன் சந்தா அளித்து எழுப்பபட்டவை. அவர்களில் ஒருவர் திரு.வி.க. அவர்கள். மாஜி பி & ஸி மில் முன் நிற்கிறார், அஃறிணை ஆகி விட்ட திரு.வி.க. மற்ற இருவரை பற்றி யாராவது கேட்டால் சொல்கிறேன். இது நிற்க.

கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரிஜனல் காந்தியிடம் செல்வோம். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அந்த கனிவை ந்யூஸிலாந்தில் காண்கிறோம். அங்கு ஒரு பயங்கரவாதி பலரை சுட்டுத்தள்ளி விட்டான். அந்த நாட்டு வெள்ளையர் மக்கள் இஸ்லாமியர்களை தேடி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர்களுக்கு காந்தி மஹான் அறிமுகம் இருக்கிறது. நமக்குத்தான் இல்லை.

“ஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு. அந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி.” -இன்னம்பூரான்.

நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். 
தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ? காந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து எழுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும்! எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர்.
சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் – ‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’ இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.

சென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்ளெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும். பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர்! ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள்.

கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.
(தொடரும்)

இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.

கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.
(தொடரும்)


இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமம், பூர்வீகம். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார். ஒரு தொண்டு நிறுவனம் மூலம் வடசென்னை தாழ்த்தப்பட்டவர்கள் சமுதாயத்தைத் சேர்ந்த
மாணவிகளுக்கு ஐஏஎஸ் தேர்வுகளை திறனுடன் கையாள்வது பற்றி பாடம் எடுத்து வருகிறார்.


திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [2]

-இன்னம்பூரான்

பிரசுரம்:http://www.vallamai.com/?p=91227

‘வீட்டுக்கு போய், நாளை வருக.’

மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. ஐயம் ஒன்றும் இருப்பது சாத்தியமில்லை. இன்றைய அரசியல்வாதிகளை, சமுதாய பிரமுகர்களை நடிப்பு சுதேசிகள் என்று கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பே இனம் கண்டு கொண்டு மனவருத்தத்தில் ஆழ்ந்தவர். அவருக்கு ஏப்ரல் 6, 1919 ஒரு சுபதினம் என்று தோன்றியதும், அவர் ஆதவனின் பொற்சுடர்களை வருணித்ததும் வியப்புக்குரியவை அல்ல. அவருடன் கோரஸ்ஸாக, அந்த திருபள்ளியெழுச்சி பாடலை பாடி மகிழ்ந்து, அன்றைய நிகழ்வுகளை காண்போமாக.

திருப்பள்ளியெழுச்சி

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் ோயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
பொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே
வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ
குதலை மொழிக்கிரங்காதொரு தா
மகளே!பெரும் பாரதர்க்கரசே
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய்
ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே

நண்பர்காள்! இது சென்னை.வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.க. அவர்களின் ‘தேசபக்தனின்’ சாது அச்சுக்கூடம்.அதுவே யான் கூறும் குருகுலம்). சென்னையின் பட்டாளம் பகுதியில் தான் தொழிளாளர்கள் பெரும்பாலும் வசித்தனர். திரு.வி.க. அவர்கள் ஒரு தொழிளார் சங்கத்தலைவர் என்பதை நம்மில் பலர் அறிந்ததில்லை. மற்றொரு நாள் அது பற்றி, யாராவது கேட்டால் எழுதலாம். அத்தருணம், மதுரைக்காரர்கள் கேட்டால், மதுரை சத்யாக்ரஹம் பற்றியும் எழுதலாம். 

பட்டாளத்திலிருந்து தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெரிய பட்டாளம் சாது அச்சுக்கூடத்தில் வந்து சேர்ந்தது. சத்யாக்ரஹ சிந்தனைகடலில் மூழ்கி அவர்கள் உணர்ச்சிப்பெருக்கால் தத்தளித்தாலும், தலைவரின் ஆணையை மறக்கவில்லை.அதனால் நிம்மதியில்லாத அமைதி. அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு  அந்த பேரலை ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்ந்துவிட்டது.ஒரு குளிர்; ஒரு வெயில்.

தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.க. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா! முருகா!’ என்று நெக்குருக பாடுகிறார்.  அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இதை நூறாண்டுகளுக்கு (20 நாட்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்.) பின் எழுதும் போது, அர்ஜுனனின் உடல் நடுங்கியது போல, என் நாவு உலர்ந்து விட்டது. தேகமாடுகிறது. நடை தளர்ந்து விட்டது. இது என் அனுபவம்.
இந்த கூட்டம், களிறு போல், கடற்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும்  அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். இது, வணிக பெருமக்கள் அரசாணையை மீறிய அருங்காட்சி. திலகர் திடம். புனித பூமி. (தற்காலம் ‘அழகு’ படுத்தப்பட்டு உரம் இழந்தது.) தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.க. அவர்கள். அவரை கைது செய்வார்கள் என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது.
(தொடரும்) 

இன்னம்பூரான்


திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [3]

இன்னம்பூரான்

ஏப்ரல் 8, 2019

பிரசுரம்: வல்லமை 
http://www.vallamai.com/?p=91473

சான்றோர்கள் வரலாறு படைக்கிறார்கள். நிகழ்வுகளும் அவர்களது வாழ்க்கையின் படிநிலைகளாக அமைந்து விடுகின்றன. திரு.வி.க. அவர்கள் காந்தி மஹானை முதல் தடவை சந்தித்து தேசபக்தர் சேலம் விஜயராகவாச்சாரியர் அவர்களின் அன்பினால் கிடைத்த அறிமுகம். காந்திஜி சென்னைக்கு வரும் ரயிலில், அரக்கோணமோ, ஜோலார்பேட்டையா என்பது நினைவில் இல்லை. அந்த ஜங்க்ஷனில், சேலம் விஜயராகவாச்சாரியார் கொடுத்தக் கடிதத்துடன், ரயில் வண்டியில் ஏறி, தயக்கத்துடன் காந்திஜியை சந்தித்து அதை கொடுக்கிறார். தன் சொற்பொழிவுகளை தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்த்து அளிப்பதற்கு ஆள் தேடிக்கொண்டு இருக்கிறார். அதற்குத்தான் இந்த சிபாரிசு. காந்திஜி நேராக, சுற்றி வளைக்காமல், விஷயத்துக்கு வருபவர். அவருடைய வினாக்களுக்கு திரு.வி.க. விடையளித்தது என் தாத்தாவை எனக்கு நினைவூட்டுகிறது. தாது வருட பஞ்சத்தில் அடிப்பட்டு, தரிசாக போய்விட்ட அரந்தாங்கியை விட்டு, பிழைப்பு தேடி, செட்டி நாடு வந்த அவரை வேலைக்கு வைக்கப்போகும் செட்டியாரிடம், அவர் ‘ எனக்கு இங்கிலீஷ் தெரியாது; தமிழ் தான் நன்றாகத்தெரியும். உங்கள் வேலைகளை தரமான முறையில் செய்வேன்.’ என்றாராம். செட்டியாருக்கு இவர் வேலை செய்யும் தோரணையும், திட்டமிடுதலும், பிடித்துப்போய்விட்டதாம். கதவுகளில் வெள்ளித்தகடு அடித்த தன் சொந்தக் காரை தான் இவருக்கு அனுப்புவாராம். ஏதோ பழங்கதை. இதே மாதிரி தான், எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்யாததை முன் வைத்து, காந்திஜியின் உரைகளை உடனுக்குடன், தமிழாக்கம் செய்து அளிக்க முடியும் என்று தீர்மானமாக சொல்லி விடுகிறார். அவரும் ஏற்றுக்கொள்கிறார். பிறகு சென்னையில் அந்த ஊழியமும் காந்திஜிக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைகிறது. 

இவரும் தமிழ் காந்தியாகி வருகிறார். அந்த உருக்கமான தொடர் நிகழ்வை எழுத ஒரு தனி புத்தகம் தேவை. இது நிற்க.

இன்று ஏப்ரல் 8, 2019. நூறு ஆண்டுகளுக்கு முன் அதே தேதியில்
[ஏப்ரல் 8, 1919] நடந்ததை கவனிப்போம். அண்ணல் காந்தி நிறுவிய சத்யாக்ரஹா கமிட்டி தற்பொழுது, பத்திரிகை, படைப்புகள் ஆகியவற்றில் தனக்கு சாதகமாக இல்லாததை மட்டுறுத்துவது என்ற விதியை மட்டும் மீறப்போவதாக தீர்மானிக்கிறது. காந்திஜி எழுதிய ஹிண்ட் ஸ்வராஜ்யா இதழ்கள்,சர்வோதயா இதழ்கள், யுனிவெர்ஸல் உதயம், சத்யாக்ரஹியின் கதை, துருக்கி சீர்திருத்தவாதியும், சர்வாதிகாரியும் ஆன முஸ்தாஃபா கெமால் பாஷா அவர்களின் வாழ்க்கை, உரைகள் அடங்கிய நூல் ஆகியவை, தடை செய்யப்பட்டிருந்த்தாலும், அதை மீறி சட்ட விரோதமாக விற்கப்படுகின்றன. அதில் ஈடுபடும் தியாகிகளில், காந்திஜி, சரோஜினி நாயுடு, திரு.சோபானி, திரு லக்ஷ்மிதாஸ் டைஶ்ரீ ஆகியோர் பிரபலம், அவர்கள் துணிவுடன் தன் கையொப்பமிட்டே அவற்றையும், பல சிறிய புத்தகங்கள், போஸ்டர்களை விற்றனர். இந்த செயலை நாம் இன்று உற்று நோக்கும்போது, கருத்துத்தடை இன்றும் செயல்படுகிறது என்று புலப்படுகிறது. அதனால் தான் நான் எழுதிய திரு.வி.க. சரிதம் பிரசுரம் செய்ய முடியவில்லை. அதில் ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ என்று ஒரு அத்தியாயம் தலைப்புடன் மட்டும் நிற்கிறது.
-#-


இன்னம்பூரான்

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [4]
 ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ ?

இன்னம்பூரான்
ஏப்ரல் 12, 2019
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=91513


திரு.வி.க. அவர்களின் தன்னடக்கம், புலனடக்கம், ஒழுங்கு, சிந்தனை ஒழுக்கம், வாய்மை, நாட்டுப்பற்று, திறந்த மனம், சமுதாய சீர்திருத்த மனப்பான்மை, பெண்மைக்கு மதிப்பு ஆகிய நற்பண்புகளின் மேன்மை அவருடைய படைப்புகளிலும், சொற்பொழிவுகளிலும் புலப்படுகிறது. 

தற்காலம் எல்லாம் தேர்தல் மயம். கொள்கை, கோட்பாடு, கருத்து அடிக்களம் ஆகியவை தகர்க்கப்பட்டு, சுய முன்னேற்றம், ‘கெலித்தால் காசு; இல்லாவிடின் நீயே தூசு’ என்ற பேராசை, வாரிசு வரிசை கட்ட, கட்சி கேலிக்காட்சியானாலும்’ என்ற உள்குத்து, துட்டு விநியோகம், கூடாநட்பு ஆகியவை பொது மக்களை வாட்டும் தருணத்தில்,  ‘இன்று திரு.வி.க. இருந்தால்?’ என்ற ஆதங்கம் வருவது இயல்பே.

துறையூரில் ஆகஸ்ட் 6, 1932 அன்று தமிழ் மாணாக்கர் மகாநாட்டில் அவரது சொற்பொழிவு அருமையாக, பொருத்தமாக  அமைந்து இருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. 

சோழநாடு, உடலோம்பல், கல்வி, தமிழர் யார்?, சீர்திருத்தம் ஆகியவற்றை பற்றி அவர் அங்கு பகர்ந்து கொண்ட சிந்தனைகள் தற்கால சங்கடமான நிலைமையில் நாட்டுப்பற்று உள்ளவர்களின் மனதை தொடும். ஒருகால் அவர்கள் வாக்களிக்கும்போது அவரது நற்பண்புகள் கண் முன் தோன்றி, மனசாட்சிப்படி வாக்களிக்க தூண்டலாம். அவரது உரை நீண்டது. பொது மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, சில சிந்தனை துளிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உடனுக்குடன், தற்கால அவல நிலை பற்றி அவருடைய சிந்தனை எவ்வாறு அமையும் என்பதையும் எண்ணிப்பார்ப்போமாக.
சோழநாடு: “...சோழ நாடு தொன்மை வாய்ந்தது. மாண்புடையது. நாகரிகத்தில் முதிர்ந்தது...சோழ நாட்டுப் பழம்பெரும் கோயில்கள் ஓவியக்காட்சிகள் வழங்குதல் வெள்ளிடை மலை...”. 

- நாம் அன்றாடம் கோயில் கொள்ளைகளை பற்றி படிக்கிறோம். அயல் நாட்டுக்கு நமது புராதன கலைப்பொருட்கள் திருட்டுத்தனமாக அனுப்பபடுகின்றன. ஒரு காலகட்டத்தில் திரு. உத்தாண்டராமபிள்ளை அவர்கள் கோயில் துறைத்தலைவராக இருந்தார். அவர் ஆத்திகர். இசகு பிசகாகக்கூட தவறுகள் நடக்காது. நாத்திகப்பிரசாரம் செய்து கொண்டு மறைவில் ஆத்திக வாழ்க்கை நடந்து வந்தவர்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, நாத்திகர்கள் கோயில் அறங்காவலர்களாக ஆன பின், கோயில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோயில் நிலம் ஆக்ரமிக்கப்பட்டது. சிலைகள் திருடப்பட்டன. இந்த இழிசெயலில் ஆத்திக வேடம் போட்டவர்களும் ஈடுபட்டனர். சோழநாட்டு நாகரிகம் அழித்து வரப்படுகிறது. இவ்வாறு தான் திரு.வி.க. அவர்களின் வ்யாகூலம் அமையலாம்.

உடலோம்பல்: “...உடல் நலன் வேண்டற்பாலது. கிளர் ஈரலும், தடைபடாக் குருதியோட்டமும், எஃகு நரம்பும், ஏக்கழுத்தும், பீடு நடையும் உடையவர்களாக மாணவர்கள் திகழ்தல் வேண்டும்...மாணாக்கர் பார்வைக்கு இனியவராயிருத்தல் வேண்டும்.

- தற்காலம், அதுவும் கல்வித்தந்தைகள், திரை கடல் ஓடாமலே. திரவியம் தேடியதாலும், அரசுப்பள்ளிகள் பட்ஜெட் போதாமலும், அக்கறையின்மையாலும் தவிப்பதாலும், மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கூட கிடைப்பதில்லை. உடலோம்பல் எட்டாக்கணியாகவிடும் என்ற தோற்றம் எங்கும் தென்படுகிறது.

கல்வி: “...‘இளமையில் கல்’...எம்மொழியிலும் கல்வி பயிலவேண்டும்...முதல்முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலவேண்டும்...கலைகள் யாவும் தாய்மொழி வழி அறிவுறுத்தப்பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுங்காலமாகும்...”.

தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுவதற்கு பல்லாண்டுகள் பிடிக்கலாம். மற்றொரு தொடரில் [கஷ்டோபனிஷத்] தமிழ் படும்பாட்டை சான்றுகளுடன் எழுதியிருக்கிறேன். கலோனிய அரசுக்குப் பிறகு தமிழுக்கு இறங்குமுகம் தான். ஐயா முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கச்சேரியில் தமிழ் வலம் வந்தது. கலெக்டருக்குத் தாசில்தார் தமிழில் தான் கடுதாசி எழுதினார். ஐ.சி.எஸ். அதிகாரிகள் தமிழின் தொன்மை குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். திண்ணைப்பள்ளிக்கூடத்துக்கு மதிப்பு இருந்தது. பள்ளி நிலை தமிழ் பாடபுத்தகங்கள் தற்கால முதுநிலை பாடம் அளவுக்கு உயர் நிலை. தற்காலம் எங்கும் ஆங்கிலம் தான் பீடுநடை போடுகிறது. திராவிடக்கட்சிகள் தமிழின் வளர்ச்சிப்பொருட்டு இட்ட சட்டங்கள் கட்டத்திற்குள் உறங்குகின்றன. எல்லாம் உதட்டளவு தமிழன்பு. அவ்வளவு தான்.
இது கண்டு திரு.வி.க. அவர்களின் மனம் வெம்பி இருந்திருக்கும். 

தமிழர் யார்?:  “...தமிழர் தொன்மை வாய்ந்தவர்...பழந்தூய தமிழர் வழி வந்த தமிழரும், இடையே குடி புகுந்து சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும். கலப்பு என்பது இயற்கை...கலப்பால் வளர்ச்சியே உண்டு...இவருள் சைவரிருக்கலாம். வைணவரிருக்கலாம். அருகரிருக்கலாம். புத்தரிருக்கலாம். கிறிஸ்தவரிருக்கலாம். இஸ்லாமியரிருக்கலாம். ஆத்திகரிருக்கலாம். நாத்திகரிருக்கலாம். இவரனைவரும் தமிழர் என்பதை மறக்கலாகாது...தூய ஆரியராதல், தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்...பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப்பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது... வடமொழி பாரதநாட்டுக்குரிய பொது மொழி..தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர் தமிழைப் பயிலாமலும், தமிழ்த்தாய்க்கு சேவை செய்யாமலும் இருக்கின்றாரில்லை. முன்னாள்தொட்டு அவரும் தமிழ்த்தாயின் சேய்களாக நின்றே தமிழ்த்தொண்டாற்றி வருகிறார்...தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் தமிழராகப் பார்க்கும் நெஞ்சம் மாணாக்கர்கள் பால் அரும்பி மலர்வதாக.”

= இதை படிக்கும்போதே மனம் கலங்குகிறது. நெஞ்சம் பதைபதைக்கிறது. காங்கிரஸ் அரசும் சரி, திராவிடக்கட்சிகளும் சரி, மற்ற சாதிக்கட்சிகளும் சரி, அரசும் சரி, தேர்தலுக்கு சாதி மத பேதம் அடித்தளம். பிரசாரத்தில் சாதி ஒழிப்போம் என்று சொல்லும்போதே, சாதிப்பேயின் உலா அதில் உள்ளடங்கி இருக்கிறது. எறும்பை நசுக்கப் பாறாங்கல் எடுப்பது போல், சிறுபான்மையாராகிய பிராமண மீது எய்யப்பட்ட துவேஷத்தில், வன்முறையும், தீய செயல்களும் வளர்ந்தன, ஒற்றுமை குலைந்தது. கல்வி அளிப்பதில் ஆற்றலுக்கு இடமில்லை. ‘வாலும் போச்சு; கத்தியும் வரவில்லை..‘என்ற படி தமிழ் தள்ளுபடி; இந்தி ஒழிக; ஆங்கிலம் அண்டலாகாது என்றால், அடி வாங்குவது மாணாக்கர்கள் தாம்; அவர்களின் பெற்றோர்களும் தான். ஒரு வேண்டுகோள் எல்லாரும் திரு.வி.க. அவர்களின் ஆழ்ந்த சிந்தனையை புரிது கொள்ள முயலுங்கள். நல்லது பிறக்கலாம்.

சீர்திருத்தம்: “...அஃறிணை உலகம் பெரிதும் சீர்திருத்தத்தை விரும்புவதில்லை...தீண்டாமை மனத்தைத் துறந்து வாழ்வு நடாத்துங்கள்...தியானம் வேண்டற்பாலது...”.

என்னத்தைச்சொல்ல? திரு.வி.க. அவர்களின் பொன்வாக்கு [1932] ஒன்று” 
“ ‘ஒழுங்கு ஊராகும் என்பது பழமொழி. ஐரோப்போயரது வாழ்வில் ஒழுங்கு என்பது ஊடுருவிப்பாய்ந்து நிற்கிறது. அவர்தம் ஒழுங்கு ஊரையும் ஆள்கிறது. உலகத்தையும் ஆள்கிறது.”

பின்குறிப்பு 1: திரு.வி.க. ஒரு சிந்தனை மனிதர். அவரின் சொந்த வாழ்வின் அடித்தளத்தில் உள்ள ஆழ்மனதை புரிந்து கொண்ட ஒரே மனிதர், திரு. ஈ.வே.ரா. அவர்கள். அந்த உருக்கமான நிகழ்வு உரிய காலத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.

பின்குறிப்பு 2: மற்றவற்றை பார்க்கும் முன், அடுத்த பதிவில் அந்த 
“பேய்ப்பழம்” பழுத்த அட்டூழியத்தையும் பார்த்து விடுவோம்.
-#-




http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5]


ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!




image.png
Courtesy: Wikipedia
இன்னம்பூரான்
ஏப்ரல் 13/16, 2019

பிரசுரம்: வல்லமை:

http://www.vallamai.com/?p=91621

டி.எம். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வரலாற்று பேராசிரியர் என்னுடைய மாமனார். மணிக்கணக்காக நாங்கள் அளவளாவுவோம். அவர் ஜாலியன்வாலா பாக் குருதிப்புனல் காலத்து செய்திகளை அப்போதே அறிந்தவர். அவர் அது பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது என் மனதில் எழுந்த பிரவாஹத்தை, பல நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டேன். அது மனதில் உதித்தது, இன்றும்.

“குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹமன்றோ! ஊற்றுக்களும், உப நதிகளும், கிளை நதிகளும், காட்டாறுகளும், நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகளும், கால்வாய்களும், வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்காமாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்பசாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிறநீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்து கொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்...”

சில நூற்றாண்டு தினங்கள் சோகதினங்களாக அமையும். எல்லா வரலாறுகளும் அவற்றை புறக்கணிக்கமுடியாது. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன். காந்தீயவாதி. காந்திஜியின் சத்யாக்ரஹ துவக்கத்தின் தொடர்பாக நன்நிமித்தங்களும் நடந்தன. சம்பந்தமில்லாத தீநிமித்தங்களும் பேயாட்டம் ஆடின. அதைத் தான் ‘ஒரு பேய்ப்பழம்’ என்று இரண்டாவது பகுதியில் கூறினேன். கலோனிய அரசின்  அகம்பாவ ஆதிக்கத்தால் கண கண என்றிருந்த கனல், வேள்வித்தீயாக பரிமளித்து, புருதிகுனலாக அமைந்து விட்ட தினத்தின் நூற்றாண்டு தினம் இன்று. நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், பஞ்சாபின் ‘அமுதக்கேணி’ எனப்படும் அமிருதசரசில் டாக்டர் ஸைஃபுதீன் கிச்சலு, டாகடர் சத்யபால் என்ற இருவரையும் அரசு உளவுத்துறை கண்காணித்து வந்தனர். ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்த சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறை சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுடீன் கிச்லூவும், டாக்டர்.சத்யபாலும் கைது செய்யப்பட்டு தரம்சாலாவுக்குக் கடத்தப்பட்டனர்.

[டாக்டர் சைஃபுடீன் கிச்லூ 65 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென, அவரை பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கி குத்திய வண்ணம், அவர் ஆவேசமாக பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947ல் இந்தியாவின் பிரிவினையை கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்க்காரர், இவர் தான். அந்த கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்.] 

போலீஸார் கெடிபிடி ஓங்கியது. கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். சொல்லப்போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக, அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி. 

ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப்பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தாமாக. ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக் இல், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை.மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப்பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5 50லிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத்தள்ளினான். தாங்கமுடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர். சிலகாலம் முன்பு பாபு சிங்காரா சிங், 87 அந்த குருதிபுனலை நினைவு கூர்ந்தார். கூட்டத்தை நோக்கி, ராணுவத்தை அணி வகுத்து டையர் என்ற பேய்பிடித்த ராணுவ அதிகாரி, குறி வைத்து சுட்டதில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். இது அரசின் கணிப்பு. ஆயிரம் மக்கள் மாண்டதாக, மற்ற ஆய்வுகள் மூலம் அறிகிறோம்.

இந்த ஆங்கிலேயர்களுக்கு சொல் மாற்றம் கைப்பழக்கம். சில நாட்கள் முன்னால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே இந்த குருதிப்புனலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு கேட்க தயாரில்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டியதின் அவசியத்தை உணர்த்தினார்.

2019ம் வருடம் ஆங்கிலேய அரசின் விந்தையான அணுகுமுறை இது. நூறு வருடங்களுக்கு முன் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதை அடுத்தத் தொடரில் பார்த்து விட்டு, திரு.வி.க. பக்கம் திரும்புவோமாக.
-#-