Saturday, August 25, 2018


பேஷ்! பேஷ்! சீரீஸ் [3]
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 24, 2018

ஆங்கிலத்தில் அதிகப்படியாக ஒரு மைல் நடக்கவும் என்பார்கள். அதாவது உம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமையையும், அனுமார் கடலை தாண்டின மாதிரி, தாண்டி செயல்பட்டால் தான் மேன்மை என்பார்கள். என்னுடைய அனுபவத்தில் இந்த நல்வரவை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அரசு உத்யோகம் என்று மட்டுமில்லை. யாவருக்கும் - தோட்டியிலிருந்து தொண்டைமான்- வரைக்கும் இது பொருந்தும். 

‘செல்வகளஞ்சியமாக’ அங்கங்கே காப்பரேட் ஆஸ்பத்திரிகள் மடியில் கை போடும் இன்றைய சூழ்நிலையில், சென்னை பொது ஆஸ்பத்திரியில் (ராஜீவ் காந்தி நாமகரணம் பிற்காலத்தில். 400 வருடங்களுக்கு மேலாக பணி புரியும் தர்மாஸ்பத்திரிக்கு) அவசர மருத்துவ துறை 24x7 பரபரப்பாக இருக்கும்; எங்கு பார்த்தாலும் ரத்தம், ஓலம், ஒரு மாதிரியான அக்கறையின்மை, கீழ்த்தட்டு மக்களிடம் கீழ்த்தட்டு மக்கள் பணம் பிடுங்குவது, சாவு, சாவு கிராக்கி வகையறா.

கடந்த ஏழு மாதங்களுக்குள் மெச்சத்தக்க முன்னேற்றங்கள். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேவையான தகவல் வருமுன் கொடுத்து விடுவதால், ஒரு டீம் தயார் நிலையில் வரவேற்று உரிய அவசர சிகிச்சை அளிக்கின்றனர். கத்திக்குத்துப்பட்டவரும், இதயக்கோளாறு நோயாளியும், சைக்கிளிலிருந்து விழுந்து லேசாக சிராய்த்துக்கொண்டவருக்கும் வரிசைப்படி ஒரே டீம் கவனிப்பு. அதற்குள் ஒருவர் செத்தால், அது அவர் தலைவிதி. அந்தக்காலம் போச்சு. அதி அவசரம்: சிவப்பு/அவசரம்: பச்சை/ அவசரமில்லை: பச்சை என்று மூன்று பிரிவுகள் தேவைக்கு ஏற்ப, செயல்படுகிறார்கள். நாட்தோறும் சரசரி 220 நபர்கள் வருகிறார்கள். ஏழுமாதங்களில், இறப்பவர்களின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து விட்டது. சிகிச்சை நபர் வந்த 2/3 நிமிடங்களில் துவங்கி விடுகிறது. அவசர சிகிச்சைக்கு வேண்டிய மருத்துவ சாதனங்கள் கைக்கெட்டிய தூரத்தில் பொருத்தப்பட்டிருப்பதால், உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த புதிய ஏற்பாடு மிகவும் போற்றப்படுவதால், இதை முன்மாதிரியாக வைத்து, பரவலாக, மாநிலம் முழுதும் செயல் படுத்த ஒரு திட்டம் இருக்கிறதாம். வாழ்க: சென்னை பொது ஆஸ்பத்திரி.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, August 22, 2018

பேஷ்! பேஷ்! சீரீஸ் [2]

பேஷ்! பேஷ்! சீரீஸ் [2]


இன்னம்பூரான்


‘கலியிலே எலியும் புலியாகும்.’ என்ற கிலி நிஜமாயிடுத்தாம். காந்திமண்டபத்திற்கு எதிரில் இருக்கும் அண்ணாவின் பெயரை கெடுக்கவதற்கே இயங்கிவரும் பல்கலையில் ஒரு பரிக்ஷை நடந்தது. பெரிய வீட்டுப்பிள்ளையோ, ரவுடி வீட்டுத்தத்தாரியோ, ஒரு பையன் வாங்கிய மார்க் 24. அவனை கீர்த்தியுடன் கெலித்ததாகக்காட்டுகிறேன் என்று கை நீட்டி கையூட்டு வாங்கிய பரீக்ஷாதிகாரி அவர்களுக்கு தன் மதீப்பீடு கறார் என்ற அகந்தை உண்டு. மேலும்,அந்த விடைதாள் மறு பரீசீலனைக்கு உட்பட்டால், குட்டு வெளிப்படலாம் என்ற அச்சமும் உண்டு. பார்த்தார். பேனாக்கூட்டீல் தேடித்தேடி, அதே நிறத்தில் எழுதும் எழுதுகோலை எடுத்தார். கட கட என்று நீலகிரி எக்ஸ்பெரஸ் போல சரியான விடைகளை, மாடல் ஆன்ஸர்புக்கிலிருந்து எடுத்து எழுதினார். 14ஐ மனசாட்சியின் உதவியுடன் 94 ஆக்கினார். நல்ல வேளை. இவன் மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவன். அதிகப்படியாகப்போனால், அவனால் மாவு மிஷினை ரிப்பேர் செய்யமுடியாது. அவனே மருத்துவ மாணவனாக இருந்திருந்தால் எத்தனை கொலை செய்வானோ! ‘அறிவியலார்’ நம்பாத நரியை பரியாக்கின கதையை விட அதிசயமாக இல்லை, இந்த மாதிரியான வாத்தித் தொழில்💣
*
பின் குறிப்பு: விசாரணை நடந்ததாம். மேலா உத்தரவின் பேரில் மனசாட்சியை அடகு வைத்தாராம். மேலா பெயரை பகர்ந்தாராம். ஏன் அதை ஊடகங்கள் மறைக்கின்றன. அவர் சத்திய பிரமாணம் செய்து தன்னைலை விளக்கம் தாக்கல் செய்யவேண்டும். அது நிரூபிக்கப்பட்டால், மேலா ஜெயிலுக்கு போகவேண்டும். இல்லையெனில், இவர் ஜெயிலுக்குப் போக வேண்டும். இதை எல்லாம் சொல்ல ஊடகங்கள் ஏன் லஜ்ஜை படுகின்றன? அடுத்து வருவது நல்ல மகிழ்ச்சி தரும் சமாச்சாரம்
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


வல்லமை பிரசுரம்

Tuesday, August 21, 2018

பேஷ்! பேஷ்! சீரீஸ்

பேஷ்! பேஷ்! சீரீஸ்


  • Monday, August 20, 2018, 5:04

சுருங்கச்சொல்வது நாகரீகமாகி விட்டது. ஒரு பக்கக்கதை, ஒரு வரி தத்துவம், படம் போட்டு ஃபிலிம் காட்டுவது, கேலிச்சித்திரம் வரைந்து மூக்கொடைப்பது எல்லாம் தற்கால வைர, முத்து, பவள ரத்னங்கள். ‘பேஷ்! பேஷ்!’ சீரீஸ் நாட்டுநடப்பு, நடவாத உடைப்பு, நடை, உடை, பாவனைகளில் புதைந்து இருக்கும் அவல நிலை, கோக்கு மாக்கு, செரிமான போக்கு, ‘கர்மம்’ என்று தலையில் அடித்திக்கொள்ளவேண்டிய மர்மம், ‘நாயை கடித்த மனிதன்’ போன்ற விந்தை செய்திகள் வகையறாவை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக ‘பளிச்’ என்று பதிவு செய்யும். வாசகர்கள் இதை தந்தி போல் பாவித்து சிந்தனைப்பகிர்வு செய்து கொண்டால், துரித கதியில் கடுமா ( துரகம். சரி, குதிரை)
போல் நானும் ஓடலாம். இல்லையெனில் திருமால் போல படுத்துக்கிடக்கலாம்.
இன்னம்பூரான்
18 08 2018
பேஷ்! பேஷ்! [1]
மதுரை நகராட்சி மன்றம் வருடாவருடம் தந்தி அனுப்பிய செலவுகளை பதிவு செய்து இருக்கிறது.
2015-16 – ரூ.4,44,685/-
2016-17 – ரூ.1.74,132/-
பெரிசா சொல்றதுக்கு ஒன்றும் இல்லை.ஆனால், சார், தந்தி சேவையை தபால் துறை நிறுத்தியது ஜூலை,15, 2013 அன்று.
பேஷ்! பேஷ்!
இன்னம்பூரான்
18 08 2018
பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=87064#respond