Friday, March 1, 2013

இதுவும் ஒரு பிருகிருதி: 4 கிச்சாமி அத்தான்


இதுவும் ஒரு பிருகிருதி: 4
கிச்சாமி அத்தான்

உங்களுக்கு கிச்சாமி அத்தானை தெரிஞ்சிருக்காது. அந்த பூவரசமரம் நிக்கறதே, அதான் அவாம். (வீடு). அந்த மரத்துக்கே ஒரு தனி மவுசு உண்டே. வேடந்தங்கல் பறவைகள் அழகு என்றால், இந்த மரம் பூத்து குலுங்கறதும்,சிந்தியிருக்கிறது அழகு தான். பூ பொறுக்கப் போனா, வெறி பிடிச்சமாதிரி விரட்டறத்துக்கு வந்துருவார், அத்தான். இத்தனைக்கும் அவர் வச்ச மரமா என்ன? அப்பா சொல்லுவார், ‘கிச்சாமி எச்சக்கையாலே காக்கா விரட்டமாட்டான்’ அப்டினு. அப்பாவுக்கு அவர் கருமி. எங்களுக்கு அவர் ஒரு கிருமி.

கிச்சாமி அத்தான் லோக்கல் ஃபண்ட் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர். கலர் கலரா மிக்ஸர் மெகா பாட்டில்களுடன் உறவாடுவார். ‘டாக்டர்னு ஒத்தன் வருவான். அவன் கிட்ட சீட்டு வாங்கிண்டு வா. நான் சரியான மருந்து தர்ரேன்’ என்பார். அதாவது சீட்டுக்கும், மருந்துக்கும் ஸ்னானபிராப்தி கூட கிடையாது. ஆனா, சீட்டு தான் பாஸ்போர்ட். டாக்டர் பிரணாதார்த்திஹரன் எல்.எம்.பி. அந்தக்காலத்து மனுஷன். வைஷ்ணவாளை கண்டா கொஞ்சம் பிடிக்காது. அவ்வளவு தான். அத்தான் பட்டை நாமம். டாக்டர் பட்டை விபூதி. மாட்டிக்கொண்டது ஊர் மனுஷா. சின்ன ஊர்னாலும், ஆஸ்பத்திரி தம்மாத்தூண்டு. மார்கழி வந்தா போறும், எல்லாம் மூக்கை சிந்தும். 

போர்ட்: காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை;
வாட்ச்மேன்: தினோம் 81/2 மணிக்குள்ளார திறப்பேங்க.
கிச்சாமி அத்தான் 9 மணிக்கும், டாக்டர் 10 மணிக்கும் வருவாஹ. 
இரண்டு பேரும் பேசிக்கொண்டதாக லோக்கல் ஃபண்ட் ஆஸ்பத்திரி வரலாற்றில் பதிவு இல்லை.
[இந்த இண்டெர்வல் ஒரு மணி நேரம் போது, எங்களுக்கு அத்தானை கவிழ்க்க. பின்ன என்னங்க? பூவரசாவது இவா வீட்டு வாசெல்ல. கொடுக்கப்புளி மரம் தள்ளி தானே இருக்கிறது. பறிக்கணும் கல்லாலடித்தால், மனுஷன் மூர்க்கத்தனமா வந்து கூச்சல் போடுவாரு.]

கூட்டம் நெட்டி முறிச்சுடும், டாக்டர் வருவதிற்கு முன்னாலே. பூஜை, புனஸ்காரம் எல்லாம் நடக்கும்; அத்தான் முறைச்சிண்டு மெகாபாட்டில்களுக்கு, பின்னால். டாக்டர் வலகை, இடகை ஆசாமி. இரண்டுப்பக்கமும், மாற்றி மாற்றி, நாடி பார்ப்பார்; நாக்கை பார்ப்பார். மின்னல் வேகத்தில், ஜலதோஷம். காய்ச்சல், இழுப்பு, காசநோய், புற்று நோய் எல்லாத்துக்கும் டயக்னஸிஸ்; கலர் மிக்ஸர் 1/2/3/4. அத்தான் கொடுப்பது 4/2/3/1 என்று அமையலாம். இத்தனை குளறுபடி நடுவிலே, ஊர்க்காரா அதிகமா செத்துப்போகவில்லை என்றால், தெய்வத்தில் அருள் தான் காரணம்.
அந்த 9 மணிக்கும், டாக்டர் 10 மணிக்கும் நடுவில் உள்ள இண்டெர்வலை பற்றி சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும் போல இருக்கு. பட்டப்பா, சீனு, கதிரு, லச்சுமி, வாசு, நான் ஆகிய குழுமம் ஒரு கட்சி; தனியா, திராணியில்லாமல் எங்களுடன் போராட ஒரே ஆளு, கிச்சாமி அத்தான். ஸ்கூல் பக்கத்திலே தான் ஆஸ்பத்திரி. வேறு வினை வேண்டாம்! 
உரையாடல் 1: காலை 9 10:
சீனு: ‘அத்தான்! லச்சுமி பூவெல்லாம் எடுத்துண்டு ஓட்றா.’
அத்தான் நோ ரிப்ளை.
வாசு: டேய்! அத்தான் வாய் நிறைய கலர் மிக்ஸர் டோய்! எனக்கும் அத்தான், ப்ளீஸ்.
[இது பரமரகஸ்யம். அத்தானோட டாஸ்மெக் இங்க தான். தினம் அடிப்பார். மெகாபாட்டில் எல்லாம் தண்ணி ரொப்பிடுவார். ]
அத்தான்: ‘ போங்கடா, காலிப்பசங்களா. டாக்டர்ட்டெ சொல்லிடுவேன்.’ [வாசு ரோஸ் கலர் மிக்ஸர் அடிச்சுட்டான், அதுக்குள்ளே.]
கதிர்: [ கதிரும் ஒரு பிரகிருதி தான். பாப்பாரக்கூட்டத்திலே ஒரே என்பி. (நான்பிராஹ்மின்: அந்தக்காலத்து வார்த்தை. No harm intended. அவன் சொற்களில் இல்லாத தெளிவு தொல்காப்பியத்தில் இல்லை.] ‘ கிச்சாமி, இன்னா பேச்சு பேச்றே, மேன். [கிச்சாமி நெளிகிறார் இந்த frontal attackலெ.] நீயும் டாக்டரும் பேசிக்கிணா மழை பெய்யுமே. எனக்கு அந்த பச்சை மிக்ஸர் கொடு - எடுத்து கொட்டிக்கிறான். 
அப்ப பார்த்து பட்டப்பா கொடுக்காப்புளி அடிக்க அனுமதி வாங்கறான். டாக்டர் வந்துட்டார். கப்சிப்.
உரையாடல் 2: காலை 10 10:
டா: ‘என்னாது இது, மருந்து வாசனை?’
அத்தான்: [முணுமுணுப்பு] ‘ஆஸ்பத்திரியில் கர்தப வாசனையா இருக்கும்.’
டாக்டருக்கு பாம்புச்செவி: ‘ டேய்! பட்டப்பா! நானும் கர்தபவாசனையைத்தான் நாசூக்கா சொன்னேன். ஐயங்கார் குளிச்சிட்டுத்தான் வந்தாறான்னு கேளு. அது சரி. நீ இங்கே எதுக்கு வந்தே? ஸ்கூலுக்குப் போ.
கதிர்: கிச்சாமி அத்தான்! பட்டப்பா கொடுக்காப்புளி அடிக்கச்ச, உங்காத்து ஜன்னல் கண்ணாடியை உடச்சுட்டான். ஓட்றான்.

கிச்சாமி வீட்டுக்கு ஓட, டாக்டர் பிரணாதார்த்திஹரன் எல்.எம்.பி. காலி மெகாபாட்டில்களை கண்டு புலம்ப, ஆஸ்பத்திரி மூடப்பட்டது. 
‘ஸர்வே லோகா சுகினோ பவந்து’
இன்னம்பூரான்

No comments:

Post a Comment