Saturday, June 14, 2014

பனையூர் நோட்ஸ் 1: நெடுநல்வாடை

பனையூர் நோட்ஸ் 1



முன்னுரை

மும்பையிலிருந்து கொண்டு ‘பனையூர் நோட்ஸ் எழுதலாமா என்று கேட்காதீர்கள். ‘யாதும் ஊரே! யாவரும் கேளீர்...’ என்பது தானே தமிழ் பண்பு. இன்றிலிருந்து என் தாய்மொழியாகிய தமிழ் மொழியை கற்றுக்கொள்வதாக உத்தேசம். கற்றுக்கொள்வதை உடனுக்குடனே பகிர்ந்து கொள்வது சாலவும் தகும், என் வயதில்! விருப்பம் உள்ளவர்களும் சேர்ந்து கொள்ள வாய்ப்பு கிட்டும். நட்புரிமையுடன், திசை மாற்றாமல், எள்ளி குதிக்காமல் அளிக்கப்படும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும் கிடைக்கலாம். லாபம் ஒண்ணு. தனித்து விடப்பட்டால், சொந்த சாஹித்யமாச்சு. லாபம் இரண்டு. ‘பனையூர் நோட்ஸ்’ என்ற தலைப்பு ஒரு நெகிழ்வியல்பு கொடுக்கிறது. ‘திக்குத் தெரியாத காட்டில் புகுந்து விளையாடலாம். லாபம் மூன்று. ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பது போல மனம் இழுத்துச் செல்லும் மார்க்கத்தில்  நமது யாத்திரை பயணிக்கும். அதற்கு தடையேதும் இல்லை. லாபம் நான்கு. முதல் அடி எடுத்து வைச்சாச்சு.

பனையூர் நோட்ஸ்’ எழுதச்சொன்னவர் ஒரு பகுவேடதாரி, சில மாதங்களுக்கு முன்பு: ‘சவுடால்’/ஜில் ஜில்/ நாகராஜன். நன்றி அவருக்கு; தாமதத்திற்கு சால்ஜாப்பு நமது. ஹிலேரி பெல்லாக் என்ற ஆங்கிலேய கட்டுரையாளர் எதை பற்றியும் எழுதுவார். ஒரு தலைப்பு ‘On Nothing’. நமக்கு ஒரு முன்னோடியும் கிடைச்சாச்சு. சில வருடங்களுக்கு முன்னால், அந்த தலைப்பை வைத்துக்கொண்டு ஒரு ரோட்டரி மீட்டிங்கை சமாளித்தேன். எல்லாரும் வரவேற்றார்களாம். ‘அனுபவம் பேசுகிறது’ என்று சொல்லி மார் தட்டிக்கொள்ளலாம்.

இன்னம்பூரான்
14 06 2013

  1. நெடுநல்வாடை

சங்கத்தமிழினின் பத்துப்பாடல்களில் ஒன்றாகிய 188 அடிகள் கொண்ட நெடுநல்வாடை என்ற நூலை ‘ஒரு பெருஞ்சுரங்கம்’ என்று திரு.வி.க. பாராட்டுகிறார்கள். ‘வாடை’ துன்பத்தைக் குறிக்கும். ‘நல்ல’ என்பது அன்பை குறிக்கும்; ‘நெடு’ என்பது அழியாமையை குறிக்கும்; எனவே, இது அழியாது நீடும் நல்வாடை என்ற அந்த பெருந்தகை, ‘ ஒரு சிறு புல் நுனி மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் ஒரு பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன.’ என்கிறார். இதை விட வேறு என்ன பேறு வேண்டும், நமக்கு? எனக்கு நல்லதொரு தருணம் கிட்டியது. பாண்டித்தியம் மிகுந்த தமிழாசிரியர்களால் இந்த சங்கப்பாடல் பற்றிய பாடங்கள் எடுக்கப்படும். ஆய்வுகள் முன்னிறுத்தப்படும். நான் அங்கு ஒரு மாணவன். அதற்கெல்லாம் பீடிகை தான், இங்கே.

பாடியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
திணை – வாகை
துறை – கூதிர்ப்பாசறை
பாவகை – ஆசிரியப்பா
இன்று முதல் இரண்டு அடிகள் மட்டும்.
மழை பொழிதல்
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2)
தரணி தணிலே சூடு தணிந்து குளிர் பரவ, நீருண்ட மேகங்கள் உயர உயர ஏறின. புவனத்தை வளைத்தன. பொய்க்காமல் மழை பொழிந்தது. [மும்பையில் மான்ஸூன் மழைக்காக காத்திருக்கிறோம். ‘எங்கிருந்தோ வந்த’ மத்திய அரசின் பட்ஜெட்டே வருண பகவானின் கருணை பொறுத்துத் தான் அமையும். மாதுங்கா சங்கர மடத்திலே வருணஜபம் செய்தார்கள்.]
பழைய நினைவலை:
1966ம் வருடம் அந்தக்காலத்து கெரவெல் விமானத்தில் பம்பாய்-சென்னை பயணம். எட்டிப்பார்த்தால் பல மாடிகளுக்கு அடுக்கடுக்காய், கெட்டியாய், பஞ்சு மிட்டாய் போல இருந்தாலும், ஒரு நெகிழ்வியல்பு, ஆபரணமணியா, ஆலை குலைந்து நின்ற குதும்பாய் போல! நீருண்ட கார்மேகங்களுக்கு, நிமிடமொரு மேனியாக, வினாடியொரு அங்கமாக, மேகதூதம் விரைந்து விரைந்து நடந்து கொண்டிருந்தது. நெஞ்சம் மறக்கவில்லை.
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1 – 2)
இப்போது புரிகிறது.
விட்டேனே, அத்துடன்? மஹாகவி பாரதியை நினைத்துக்கொண்டேன். 
புயற்காற்று
(நள வருஷம் கார்த்திகை 8-ம் தேதி (1916-17) புதன்கிழமை இரவு.)
ஒரு கணவனும் மனைவியும்:
மனைவி: காற்றடிக்குது, கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாம்
தொளைத் தடிக்குது பள்ளியிலே.

கணவன்: வானம் சினந்தது; வையம் நடுங்குது
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.

மனைவி: நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே, இந்த
நேர மிருந்தால் என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமை யன்றோ!

மழை

திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடதித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு
தக்கையடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
அண்டம் குலுங்குது, தம்பி! - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்; - திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்; - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

மஹாகவியின் இந்த பாடலுக்கு, இடம், பொருள், ஏவல் உளது. யாராவது ஆயிரம் பேர் கேட்டால், பார்க்கலாம்.

அன்புடன்,
இன்னம்பூரான்
14 06 2014

குறிப்புகள் எடுத்துக்கொள்ள, இவை உதவும்; மற்றும் பல உள.
  1. உ.வே.சா. பதிப்பு (மூன்றாவது பிரசுரம்: 1931): https://archive.org/stream/TamilNedunalvadai/book-Tamil-Nedunalvadai-Nachchi-Uvesa-1909#page/n0/mode/1up
2. சில்லென்று ஒரு காதல் (நெடுநல்வாடை: எளிய வடிவில்) - மின்னூல் - என். சொக்கன்



சித்திரத்துக்கு நன்றி: http://cache2.asset-cache.net/gc/AD3992-002-layer-of-dense-cumulonimbus-clouds-gettyimages.jpg?v=1&c=IWSAsset&k=2&d=Fo5uDjh7ejCZ0DTbbB0Qm6MPwYbIRBpMiG4xh9IVA0U%3D

Friday, June 13, 2014

சிரிச்சு மாளலெ 8

*
சிரிச்சு மாளலெ 8



இன்னம்பூரான்
ஜூன் 13, 2014

ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலெ, ஹிந்தி மொழியை அரசு அலுவலகங்கள் ஜோரா பயன்படுத்துகின்றனவா? என்று பீராந்து ஆராய பார்லிமெண்டரி கமிட்டிகள் வந்து உயிரை வாங்குவாங்க. நான் அவர்களிடம் இரு முறை சிக்கிக்கொண்டேன். அவர்களுக்கு எக்கசக்கமாக பரிசுகள் வாங்கவேண்டும். திண்டியா சோறு போடவேண்டும். நாங்களோ ஆடிட் பசங்க: அதுவும் குஜராத்தில்! சுஷ்கம் (கருமி). அதனாலெ, அவுங்களுக்குக் கடுப்பு. அலஹாபாத்துக்கு மேலெ ஹிந்தியில் பேசினாலும், கன்னா பின்னா வசவு கியாரண்டி. ஹைதராபாத்தில், ஸாலார் ஜங் ம்யூசியம் காட்றேன் பேர்வழி என்று காலம் கடத்தித் தப்பித்தேன். அஹமதாபாத்தில் வசமாக மாட்டிக்கொண்டேன். அங்கு குஜராத்தி தான் செல்லுபடி; ஹிந்தி அடுத்தபடி தான். ஃபார்முலா படி ஹிந்தி தட்டச்சு இயந்திரங்கள் ஏன் வாங்கவில்லை என்று வசை பாட ஆரம்பித்தவுடன், குஜராத்தி மிஷன்கள் தான் தேவை; ஹிந்தி மிஷின் வேஸ்ட் என்றேன், வாய் தவறி. தொலைந்தது! வசை மழை பொழிய தொடங்கியது. தாங்கமுடியாமல், ‘உரிய பதில் என்னிடம் இல்லை’ என்ற சால்ஜாப்பு பொருளில்,’மைம் தோ லாஜவாப் ஹூம்.’என்றேன். வழக்கு மொழியில், ‘எனக்கு நிகர் யாருமேயில்லை’ என்று அதற்கு பொருளாம். என் ‘அசட்டு தைரியத்தை’ கண்டு விக்கித்து போன கமிட்டியார் எனக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து, மீட்டிங்கை முடித்தார்கள். அதை கொண்டு வந்து கொடுத்தவர் ஒரு அ.தி.மு.க. எம்.பி. ‘நீங்க என்ன சொன்னீங்க? அந்த பிசாசுகள் நமட்டுச்சிரிப்பு சிரிக்கிறாங்க.’ என்றார், அவர். எனக்கும் மூச்சு வந்தது. எதற்கு இதை சொல்றேன். ஆமாம். இந்த மாதிரி கமிட்டிகளால், செலவு ஜாஸ்தி. பாருங்களேன். ரூபாய் 89 லக்ஷம் செலவில் ஆறு கோவா எம்.எல்.ஏ.க்கள் பிரேசீலுக்கு போய் கால்பந்து விளையாட்டுப்பார்க்கப் போறாங்களாம். முதல்லெ ‘அப்படித்தான் செய்வோம். இந்த பிரிதிநிதிகள் அங்கு போய் பார்த்து வந்து, கோவாவில் கால்பந்தாட்டம் பரவ, அதற்கு வேண்டியதை பரிந்துரைக்க, கூட்டத்தை மேய்க்க இத்யாதி கற்றுக்கொள்ள இந்த ‘ஜாலி’ பயணம் இன்றியமையாதது. ஆஹா ஊஹூ’ என்றார், முதல்வர். ஆனால், எதிர்ப்பு வளர்வதை கண்டு, அந்த பிரிதிநிதிகளே தங்கள் செலவை பார்த்துக்கொள்வார்கள் என்று முடிவாச்சாம். இல்லை. இல்லை. யாரோ இரு செல்வமிக்க கம்பெனிகள் தான் உபயம் செய்கிறார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ஒரு சர்ச்சில் ஜோக் ஞாபகத்தில் வருது. இங்கிலாந்து எம்.பி.க்கள் பலர் ஒரு யாத்திரை போகோணும். இரண்டு விமானம் புக்ட். சர்ச்சில் இந்த பயணத்தை ரத்து செய்துவிட்டார், கிளம்பறசமயத்தில். எல்லாரும் போய் அவர்கிட்ட ரத்து செய்தததை ரத்து செய்ய சொல்லி கேட்டபோது, அய்யா சொன்னாராம், ‘ரோசனை பண்ணிப்பாரு. ஒரு விமானம் விழுந்தாக்கூட, எத்தனை பை-எலெக்ஷன் செய்யணும் என்ன செலவு ஆகும். அதை பாரு’ என்றாராம்!
ஒரே சமாச்சாரம். எத்தனை கோணங்களடா!
-#-\
சித்திரத்துக்கு நன்றி:

Thursday, June 12, 2014

அப்டேட் 2:: ஐ ஏ எஸ் வகையறா:

அப்டேட் 2:
‘45வது இடத்தில் ஜெயசீலன் என்பவர் இருக்கிறார். தமிழர் என்று தோற்றம். மொத்தத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறைவு தான். 

‘தமிழ்’ என்ற பாடம் எடுத்தால் கை நிறைய மார்க் வாங்கலாம் என்பது என் கணிப்பு. அது பற்றி நான் எழுதிய கையேட்டு நூலுக்கு, திரு.நரசய்யா அவர்கள் அணிந்துரை அளித்து மெருகேற்றினார். எத்தனை மாணவர்கள் படித்தார்களோ?

ஆர்வமுள்ளவர்கள் இருப்பின், மேலும் பல உத்திகள் வழங்கலாம்.

இன்னம்பூரான்
12 06 2014’

*
அப்டேட் 2:
திரு.ஜெயசீலன் சொல்வது, “...சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவி செய்த ஒரு உயர் அதிகாரி தான் என் மாடல்.  நான் தமிழில் தேர்வு எழுதினேன். தமிழுக்கு இது வெற்றி. தாய்மொழி மூலம் கல்வி பெறுவதை போற்றுபவன், நான். ஐஏஎஸ் வகையறா தேர்வுக்கு மொழி ஒரு பிரச்னை அல்ல. என் பெற்றோர்களுக்கு உயர்கல்வி கிடைக்கவில்லை. ஆனால், அவர்களின் உந்துதல் தான் எனக்கு ஊக்கம் அளித்தது. நான் கிராமத்தில் படித்தவன். சென்னையின் மனிதநேயம் அக்காதமி போன்ற மையங்கள் எனக்கு வழி காட்டின.” தமிழில் வினாக்களை தொகுத்து அளிக்க மாநில அரசு உதவவேண்டும் என்பது அவரது வேண்டுகோள். தேர்வில் கெலித்த 1122 நபர்களில் 100 நபர்கள் தமிழ் நாட்டிலிருந்து. சென்னையில் உள்ள வசதிகள் மிகவும் உதவின, என்கிறார், 143 வது இடம் பிடித்த செல்வி. கே.வெற்றிச்செல்வி.  அடிக்கடி மாதிரி வினாத்தாள்களுக்கு விடை எழுதுவது நல்ல பயிற்சி என்று சொல்லும் அவர், ஐஏஎஸ் எழுத விரும்பிய அவருடைய தந்தைக்கு சிவகங்கை மாநிலத்தில் தேவையான வசதிகள் கிடைக்க வில்லை என்றார். இவர் சென்னை எதிராஜ் கல்லூரி மாணவி. [இவர்கள் இருவரும் நான் கூறியதை எதிரொலிக்கிறார்கள். ]
உசாத்துணை: Printable version | Jun 13, 2014 2:42:48 PM | http://www.thehindu.com/news/national/tamil-nadu/ias-topper-from-tamil-nadu-took-exam-in-tamil/article6110306.ece

© The Hindu


Update:
கால் காசானாலும் கவர்ன்மெண்ட் உத்தியோகத்துக்கு மவுசு என்பார்கள், ஒரு காலத்தில். அது தேய்ந்து போய் விடவே, மவுசும் மங்கியது என்றாலும், அழுத்தித் துடைத்தால், அபரஞ்சி தங்கம் போல் மின்னும். பொருத்தமான உதாரணம்: பெற்றோர்களால் ‘எமக்கு கெவுரதை கொணர்ந்த்தான்’ என வாழ்த்தப்படும் திரு. கெளரவ் அகர்வால் (29), ஹாங்காங்கில் ஒரு மாபெரும் பன்னாட்டு நிறுவனத்தில் படா சம்பளம் வாங்கி இருந்த மாஜி மானேஜர். இவர் ஐ ஐ டி & ஐ ஐஎம் பட்டதாரி. அதை உதறி விட்டு, 2012ல் இந்தியாவின் போலீஸ் உயர்தர அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கெளரவ், நேற்று வெளி வந்த அறிவிப்புப்படி, ஐஏஎஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதல் நம்பராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.  விடாப்பிடியாக இந்த கடும்போட்டியில் கலந்து கொண்ட அவர், 

‘காசு மழை பொழிந்த ஹாங்காங் வேலையை விட, அரசு பணியில் இருந்தால், சிக்கல்களை சமாளிக்க இயலும்; மக்களுக்கு பணி செய்யமுடியும். என் குடும்பம் என்னை ஊக்கிவித்தது. ஐஏஎஸ்சுக்கு என்று பிரத்யேகமாக பயின்றேன். ஒரு நாளைக்கு  10 -12 மணி நேரம் படித்தேன்.’ என்று பொருள்பட கூறினார். அவர் ஐஏஎஸ் நேர்காணல் ஆன சில நாட்களிலேயே ப்ரீதியைதிருமணம் செய்து கொண்டார். ப்ரீதிக்கும் ரொம்ப ப்ரீதி.


pastedGraphic.pdf



நன்றி:

ஐ ஏ எஸ் வகையறா:
CIVIL SERVICES (MAIN) EXAMINATION,2013
S.NO. ROLL NO NAME
LIST BELOW. [சற்று முன் வெளியானது.]



45வது இடத்தில் ஜெயசீலன் என்பவர் இருக்கிறார். தமிழர் என்று தோற்றம். மொத்தத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறைவு தான். 

‘தமிழ்’ என்ற பாடம் எடுத்தால் கை நிறைய மார்க் வாங்கலாம் என்பது என் கணிப்பு. அது பற்றி நான் எழுதிய கையேட்டு நூலுக்கு, திரு.நரசய்யா அவர்கள் அணிந்துரை அளித்து மெருகேற்றினார். எத்தனை மாணவர்கள் படித்தார்களோ?

ஆர்வமுள்ளவர்கள் இருப்பின், மேலும் பல உத்திகள் வழங்கலாம்.

இன்னம்பூரான்
12 06 2014
சித்திரத்துக்கு நன்றி: இந்திய அஞ்சல் துறை.

Wednesday, June 11, 2014

மோடியும், நீயும், நானும். 3

மோடியும், நீயும், நானும். 3


இன்னம்பூரான்
ஜூன் 11, 2014: 20:38 IST/21.00 IST

இந்திய ஜனநாயக மரபின் படி ஜனாதிபதியின்  சொற்பொழிவு, மோடி அரசின் கொள்கையின் எதிரொலியே என்றாலும், பிரதமரின் நன்றி நவிலலும் இந்திய ஜனநாயக மரபே. அந்த தருணத்தில் பிரதமர் மோடி கூறிய கருத்துக்களின் சாராம்சம்.

  1. மாநிலங்களும், மத்திய அரசும் ஆரோக்கியமான கூட்டுறவுடன் இயங்கினால், நாடு வளரும்;
  2. பலமான அடித்தளம் வேண்டுமென்ற மக்களின் கோரிக்கை சம்பிரதாயமானது அல்ல.
  3. ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு நன்றி நவின்ற பிரதமர், இருள் நீங்கும் என்றார்;
  4. குறுகிய/பிராந்திய பாகுபாடுகளை களைந்து, அரசியல் முரண்களை பெரிது படுத்தாமல், வெற்றி, தோல்வி ஆகியவற்றை மறந்து நாம் யாவரும் தேசநலனை பாராட்டவேண்டும்;
  5. எங்கெங்கும் பரந்த நோக்கமுடைய சமத்துவமே வேண்டும்; 
  6. தேசத்தின் எல்லா அவயவங்களும் அத்தியாவசியமானவை; கட்டுப்பெட்டி திட்டங்கள் அதற்கு உதவா;
  7. ஜனநாயகம் கணக்குக்கேட்கும்; நாட்டின் நலன், பாதுகாப்பு தான் முக்கியம்; வலிமை வேண்டும்;
  8. பாலியல் வன்முறைகளை அரசியல் கருவியாக நோக்கக்கூடாது; மாவோயிஸ்ட் பிரச்னை பற்றி அந்தந்த மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவேண்டும் என்றார்;
  9. லஞ்ச வாவண்யம் ஒழிக்க கொள்கை அடிப்படை வகுக்கவேண்டும், முதலில், என்றார்; அதன் பொருட்டு இயங்குவதில் மூடி மெழுகுவது கூடாது என்றார்;
  10. நாடாளுமன்ற உறுப்பினர் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டால், ஒரு வருடத்துக்குள் தீர்வு காணவேண்டும் என்ற அவர், கறுப்புப்பணம் பற்றிய கமிட்டி அமைக்கப்பட்டதை சுட்டினார்.
  11. முந்தைய அரசுகள் தேசீய வளர்ச்சிக்கு பணி புரிந்திருந்தை சுட்டிக்காட்டி, அதன் வேகம் போதாது என்றார்; 
  12. மட்டமான அரசு நிர்வாகம் நீரழிவு நோயை விட மோசம் என்ற பிரதமர், மக்களுக்கு சுபிக்ஷம் கிடைத்தால் தான் நாடு வளரும் என்றார்;
  13. நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கை குலைந்து விட்டது என்ற பிரதமர், அதை மீட்பது தான் அவசரம் என்றார்;
  14. அரசியல் கட்சிகளை விட தேசம் தான் முக்கியம் என்ற பிரதமர், தான் எல்லா கட்சிகளின் ஒத்துழைப்பை நாடுவதாக சொன்னார்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://www.sobernation.com/wp-content/uploads/2011/12/gratitude.jpg

Tuesday, June 10, 2014

சிரிச்சு மாளலெ 7

***
சிரிச்சு மாளலெ 7


இன்னம்பூரான்
ஜூன் 11, 2014

‘அப்பாணை’ என்று தலையில் அடித்து சத்தியம் பண்ண பிறகு தான் ‘நான் மாங்காய் அடிக்கல்லை; களாக்காய் தான் அடித்தேன்’ என்று பொய் சொல்லுவோம், பால பருவத்தில். நம்பறாங்களா? இல்லையா? என்று பாயிண்ட் இல்லை. ஒன்று கிடக்க, ஒன்று சொல்வது தான் பொய்யை மெய்யாக்குவதில் முதல் பாடம். மெய்யை பொய்யாக்குவதும் உண்டு, ஆதாயம் கிடைத்தால், அரசியல் தளத்தில். கனம் கோர்ட்டார் முன்னிலையில் அளிக்கப்படும் வாக்குமூலங்கள் ‘அப்பாணை’ (I, Dumeel, son of Mr.Damaal, லொட, லொடா...) என்று தான் தொடங்கும். இத்தனைக்கும் ஒரு ஆங்கிலேய சட்டத்துறை வல்லுனர் பகர்ந்த நிதர்சனம்:
‘அம்மை அறிவோம்; அப்பன் அறியோம்! ‘. அப்படிப்பார்க்கப்போனா, ‘அப்பாணை’ என்பதே சத்தியம் என்று சொல்ல இயலாது. இனி, ‘அம்மானை’ (மெல்லினம் மென்மையாக இருக்கிறது!) என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணனும்னு சட்டம் வரலாமாக்கும். இது நிற்க.

கவர்னமெண்ட் தரப்பில் கனம் கோர்ட்டார் முன்னிலையில் அளிக்கப்படும் வாக்குமூலங்கள், அநேகமாக, சுப்பன் எழுதி, குப்பன் கையொப்பமிட்டு, ஆஜராகி பதிவு செய்வதாக அமையலாம்.
மேலா எழுதி, அடிமட்டம் தாக்கல் செய்யும். ஒரு சமயம், சட்டசிக்கல்களுக்கு பயந்து, நான் எழுதியதை மேலா தாக்கல் செய்ய, மேலா எழுதியதை நான் தாக்கல் செய்ய, கனம் கோர்ட்டார் ஓடாத குறை! இதுவும் நிற்க.

நமது மாஜி ராணுவ தளபதி ஜெனெரல் வீ.கே. சிங் அவர்களுக்கும், பிந்தைய அரசுக்கும் ஓயாத  சச்சரவு. முழுக்கதை சுவாரஸ்யம். அதை விடுவோம். எல்லாரும் உயிருடன் இருக்கிறார்கள். ஜெனெரல் வீ.கே. சிங் மற்றொரு ஜெனெரல் மீது எடுத்த நடவடிக்கை முறைகேடானது என்று ஜூன் 4, 2014 அன்று நமது ராணுவ அமைச்சரகம் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது. அது பிந்திய அரசின் நிலைப்பாடு. ஜெனெரல் வீ.கே. சிங் அவர்களை அமைச்சரவையில் அமர்த்தியிருக்கும் மோடி தர்பாரின் நிலைப்பாட்டுக்கு முரண். ‘அப்பாணை’ என்று தலையில் அடித்தி சத்தியம் பண்ண பிறகு தானே அந்த ‘வாக்குமூலத்தை’ தாக்கல் செய்தியிருக்கிறார்கள். நமது ராணுவ அமைச்சர் திரு. அருண் ஜெட்லி இது பற்றி ராணுவ அமைச்சரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்குள், காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சங்கவி, அமைச்சர் வீ.கே.சிங் ராஜிநாமா செய்யவேண்டும் என்று முழங்கியிருக்கிறார்!

எல்லாமே சுவாரஸ்யம் தான்! என்ன சொல்றேள்?
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


[MinTamil] சாக்ரட்டீஸ்



[MinTamil] சாக்ரட்டீஸ்
21 messages


இந்த இழை எதேச்சையாகக் கிடைத்தது, இன்று, கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து.


எனக்கென்னமோ, மற்றது எல்லாவற்றையும் விட்டு, இதை மட்டும் 'சிக்' என பிடித்துக்கொண்டு தொங்கலாமே என்று தோன்றுகிறது. 

"எதற்கெடுத்தாலும் 'காரணம் கேட்டு வாடி' என்ற வாய்ப்பாடு மனித இனத்தை வழி நடத்தும் போது மங்கலாகத் தான் நிலவுகிறது. போதுமான இயக்கம் இல்லாதது; தரம் தாழ்ந்தது…" என்ற பொருள்பட ஶ்ரீ அரவிந்தர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

இன்னம்பூரான்

10 06 2014
----------------------------------------------------------------------------------------------------------------------


Thamizth Thenee

 “ சில நாட்களுக்கு முன்னால், இன்னம்பூரானை அவர்களை அவர் வீட்டில்
சந்தித்தேன். உடல் நலம் குன்றியிருந்தார். அது பற்றி இங்கு
எழுதியிருக்கிறேன்.


 புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்  புத்திசாலி இல்லை  என்னும் பாடலில் நகைச்சுவை
நடிகர் சந்திரபாபு அவர்கள்

”சேர்ந்து வாழும் மனிதரெல்லாம் சேர்ந்து போவதில்லை” என்று ஒரு வரி
பாடுவார்

ஏனோ எனக்கு அவர் நினைவு வந்தது, பொதுவாக மனிதர்களின்  முதுமைக் காலங்கள்
கொடுமையானவை, அதுவும் உலகில் ஒரே துணை என்று நம்பப்படும் இல்லறத் துணை
அது ஆணோ பெண்ணோ  அவர்களும் பிரிந்துவிட்டால் , ஆறுதல் சொல்லக் கூட
யாருமில்லா நிலை,

”வேரென  நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்”
 என்னும் கண்ணதாசனின் பாடலும்  மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது,

யார் யாருக்கு என்ன நிலைமையோ யார் அறிவார், இன்னம்பூரார் போன்ற
தைரியசாலிகள், அனுபவசாலிகள், சமாளிக்கிறார்கள், எத்தனை எத்தனை மனிதர்கள்
இந்தத் தனிமையை சமாளிக்க முடியாமலும், அந்த தனிமையை  அழிக்க முடியாமலும்
அவதிப்படுகிறார்கள் என்பதை நினைத்து மனதுக்குள் வருந்தினேன், ஆனாலும்
எவற்றையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் திரு இன்னம்பூராருக்கு  என்னால்
முடிந்த ஆறுதலைக்  கூறினேன்,  அவர் மின்னாக்கத்துக்காக வாங்கி வரச்சொன்ன
காமிராவை துபாயிலிருந்து வாங்கி வந்தது அவரிடம் கொடுத்தேன்,  (பணத்தை
உடனே கொடுத்துவிட்டார்), அவர் வீட்டில் அவருடைய மனைவியின் புகைப்படம்
இருக்கிறது, அந்தப் புகைப்படத்தின் முன்னே  ஒரு வினாடி நின்று அந்த இனிய
தெய்வத்தை  இன்னம்பூராரைப் பார்த்துக்கொள்ளச்ச் சொல்லி  மனதார
வேண்டினேன் ,அதுவும் இன்னம்பூராருக்குத் தெரியாமல், கழுகு அல்லவோ
மூக்கில் வியர்க்கும், தணிக்கை அலுவலக நியாபகமும், அனுபவமும் உள்ள
மனிதர்,  ஒரு பார்வையில் வினாடி நேரத்தில் எடைபோடக் கூடிய மனிதர், அதனால்
அவர் அறியாமல் வேண்டினேன், நான் நடிகனல்லவா?


அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த போது  என் முத்தண்ணா பக்கத்தில்
உட்கார்ந்திருந்த ஒரு உணர்வு, மனம் நெகிழ்ந்தாலும் வெளிக்காட்டாமல்
இயல்பாக பொதுவாக சில விஷயங்கள் பேசின பிறகு, அவர் கையில் இருந்த ஒரு
புத்தகத்தை வாங்கிப்பார்த்தேன்- The Trial And Death of Socrates by
Plato. அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தேன். இஷ்டமிருந்தால் இந்த
மாதிரி சமாச்சாரங்களை கதை சொல்லியாக பேசுவார், . இல்லையெனில், என்ன
கேட்டாலும், பேச்சை மாற்றிவிடுவார். இவர் ஒரு குழந்தையா? அல்லது பெரிய
மனிதரா  என்று அடிக்கடி சந்தேகம் வரும்,  சுற்றி வளைச்சு? ஆரம்பித்தார்,
ஆமாம் அவரும் மனம் நெகிழ்ந்திருந்தார்,



அவராகவே சொன்னது, “ நாம் மின் தமிழில் எழுதுகிறோம்,  சோக்ரதர் என்ற நூலை
பற்றி தெரியுமா? எழுதியது ராஜாஜி; முன்னுரை திரு.வி.க. அவர் என்ன
சொன்னார் தெரியுமா?” என்று கேட்டு  விட்டு, சாக்ரடீஸ் எப்படி இறந்தார்,
தெரியுமா? என்று வேறு இடத்திற்கு சென்று விட்டார்.



தானே தைரியமாக சிரித்துக்கொண்டே ஒரே மூச்சில் விஷம் குடித்து இறந்தார்
என்றேன். இல்லை  தைரியமாகக் குடித்தார், ஆனால் அவர் ஒவ்வொரு பகுதியாகக்
குடித்தார், கொஞ்சம் கொஞ்சமாக  அவருடைய  உடல் மரத்துப் போய்க்கொண்டே
வந்தது  காலிலிருந்து பாகம் பாகமாக, கடைசீ பாகம் விஷத்தைக்
குடித்துவிட்டு சாக்ரடீஸ் சொன்னது என்று ஒரு செய்தி சொன்னார்

யாருக்கோ அவர் கொடுக்கவேண்டிய தொகையைக் கொடுத்துவிடச் சொன்னாராம்,
இறக்கும்போது கடன்காரனாக சாகவிரும்பாத சாக்ரட்டீஸ்


 அவருக்கு விஷம் கொடுக்க வந்த அரசு நியமித்த கொலையாளியே அழுகிறான் பார்
என்று படத்தை காட்டும்போதே அவர் கண்கள் கலங்கியிருந்தன.  மனித மனம்
விசித்திரமானது, அதைமட்டும் என்னால் உணரமுடிந்தது,

 சான்றோர்களின் கதி இது தான் என்றார். சாக்ரிட்டீஸ்ஸின் தத்துவங்களை
எடுத்து சொன்னார். சொஃபிஸ்ட்ஸ், சாக்ரெட்டீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில்,
சிசிரோ, வெ.சாமிநாத சர்மா என்று சொல்லிக்கொண்டே போனார்.சாக்ரட்டீஸ் தான்
காந்திக்கு வழிகாட்டி. ‘எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. தெரியாது
என்ற சொல்ல உனக்கு துணிவு இல்லை. நான் துணிவுடன் அதை ஒத்துக்கொள்கிறேன்
என்பது தான் அடிப்படை என்றார்.  கொஞ்சம் புரிந்தது. கொஞ்சம் புரியவில்லை.
ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது. அவர் அக்கால கிரேக்க தத்துவத்தில்
ஆழ்ந்து விட்டார். நானும் வீடு திரும்பி விட்டேன்.”

ஹூம்  எத்தனையோ  சாக்ரடீஸ்கள், விஷம் மட்டும் வித்யாசமானது

கொடுப்பவர் மாறுகிறார், காட்சிகள் மாறுகின்றன, கோலங்கள் மாறுகின்றன,
ஆனால் அறிஞர்கள் மாறுவதே இல்லை

பின் குறிப்பு:

சோக்ரதர் என்ற நூலை பற்றி தெரியுமா? எழுதியது ராஜாஜி; முன்னுரை
திரு.வி.க. அவர் என்ன சொன்னார் தெரியுமா?”  என்று கேட்டாரே தவிர

என்ன சொன்னார் என்று கடைசீ வரை  சொல்லவே இல்லை’


அன்புடன்
தமிழ்த்தேனீ


meena muthu
நெகிழவைத்துவிட்டீர்கள்..

இறையருள் என்றும் துணை நிற்கும். நீங்களும் ஒரு விதத்தில் இறைவன் :)

2010/10/20 Thamizth Thenee <rkc1947@gmail.com>
சோக்ரதர் என்ற நூலை பற்றி தெரியுமா? எழுதியது ராஜாஜி; முன்னுரை
திரு.வி.க. அவர் என்ன சொன்னார் தெரியுமா?”  என்று கேட்டாரே தவிர

என்ன சொன்னார் என்று கடைசீ வரை  சொல்லவே இல்லை’


[Quoted text hidden]

Jana Iyengar Thu, Oct 21, 2010 at 6:02 AM


Aiyah Tamizh Thenee, I would like to join your ilk. Not that I am good
in writing, but may be I could express my feelings that would be
regarded. The problem is communicating in our tongue. My Tamilzh is
tolerably good, but what I lack is know how of using the keyboard. How
to type in Tamizh as freely as we do in English?
Jana Iyengar

2010/10/20 Thamizth Thenee <rkc1947@gmail.com>:

[Quoted text hidden]
--
Jana

[Quoted text hidden]

coral shree Thu, Oct 21, 2010 at 8:18 AM


விவேகானந்தரை தரிசித்த மகானை தரிசித்த மகான் அய்யா நீங்கள் ! சந்திர பாபு பாடல்களெல்லாம் தத்துவ முத்துக்களாயிற்றே!   இ.அய்யாவைப் பற்றிக் கூறி உள்ளம் உறுக வைத்துவிட்டீர்கள். இத்தகைய பேரறிஞர்களின், கற்றோர் சபையில் எனைக் களித்திருக்கச் செய்யும் ஆண்டவனுக்கு வெறும் நன்றி மட்டுமா சொல்ல முடியும் ? பகிர்ந்து கொண்ட தமிழ்த்தேனீ அய்யாவிற்கு என் மனமார்ந்த நன்றி....
[Quoted text hidden]
--
[Quoted text hidden]

செல்வன் Thu, Oct 21, 2010 at 9:41 AM


இன்னம்பூராரை தரிசிக்கும் வாய்ப்பு எப்ப கிட்டும் என ஏக்கத்துடன்


-----------
செல்வன்

www.holyox.blogspot.com

God Bless America

[Quoted text hidden]

Tthamizth Tthenee Thu, Oct 21, 2010 at 9:45 AM


You are   welcome

அன்புடன்
தமிழ்த்தேனீ



seethaalakshmi subramanian Thu, Oct 21, 2010 at 9:47 AM


எனக்கும் தான்
என் அண்ணாவை எப்போ பார்ப்பேன்
சீதாம்மா

[Quoted text hidden]

venkatachalam Dotthathri Thu, Oct 21, 2010 at 10:49 AM


ஓம்.
அவரே ஒரு பல்கலைக் கழகம்.
இன்னம்புரான் அவர்கள் ஆத்மஸ்வரூபியானவர்.ஒரு பன்மொழிப் புலவர், இயற்கையின் ரசிகர், தீர்க்கதரிசி, நினைவாற்றல் மிகுந்தவர், நக்கீரர்-குற்றம்கண்டவிடத்து  நளினமாகச் சீறுபவர், புதுமை விரும்பும் பழமை வாதி. அவர் தீர்க்க ஆயுளுடன் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தொண்டாற்ற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்..
அன்புச் செல்வர் தமிழ்த்தேனி ஒரு மரபு அணில், பல்துறை விற்பன்னர், சாஸ்த்ரீய நாட்டம் மிகுந்தவர். வாழ்கபல்லாண்டு.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன்.
ஓம்

[Quoted text hidden]

coral shree Thu, Oct 21, 2010 at 10:53 AM


எனக்கும் அதே ஏக்கம் உண்டு.......



[Quoted text hidden]

devoo Thu, Oct 21, 2010 at 1:57 PM


இ ஐயாவைப்பற்றி  ஓம் ஐயா சொன்னதற்கெல்லாம் ஆம் ஆம்  போடுகிறேன்; ஒன்றை
மட்டும் சேர்த்துக்  கொள்கிறேன். இ சார் எந்த  ஒரு சூழ்நிலையிலும்
நகைச்சுவை உணர்வு குன்றாதவர்


தேவ்

Innamburan Innamburan Thu, Oct 21, 2010 at 5:27 PM

உங்கள் எல்லாருடைய தயவில், இந்த இழை ‘சாக்ரெட்டீஸ்’ என்றே தொடரட்டுமே.

தமிழ் தேனீ என்னில்லம் வந்தபோது, அங்கு சாக்ரெட்டீஸ் வியாபகமாகத்தான் இருந்தார். அந்த நூல் என்னிடம் வந்த பின்னணி: இங்கிலாந்தில், ஒரு நாள், என் மருமகப்பெண் என்னை தன்னுடைய ஃபிலாஸஃபி வகுப்புக்கு அழைத்துச்சென்றாள். அந்தக்குழுவின் இலக்கு, தற்கால சிறார்களுக்கு தத்துவபோதனை தொடங்குவது. என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘வடமொழி தெரியுமா?’ அடுத்தது, ‘ஆதி சங்கரரைப்பற்றி நன்கு அறிவீர்களா? இவ்வாறான அலை வரிசை இருக்குமிடத்தில், அந்த நூலை வாங்கிக்கொடுத்தாள், அவள்.

சில சமயங்களில், நம் மனக்கிடக்கையை மற்றவர்கள் சொல்லி புரிந்துக் கொள்கிறோம். தமிழ்த்தேனீ எனக்கு அந்த கொடுப்பினையை அளித்திருக்கிறார் என்றால் மிகையல்ல. I see Jean-Paul Sartre’s authenticity in his prayers to my wife, Vasantha. நெகிழ்வாக அவர் என்னை பற்றி, ஆதரவாகவும், புகழ்ந்தும் கூறியதையும், மீனா, செல்வம், ஜனா ஐயங்கார்,பவளா, சீதாலக்ஷ்மி, ஓம் ஐயா, தேவ் ஆகியோர் எனக்களித்த புகழுரைகளையும், ‘தன்னடக்கம்’ என்ற ஜமுக்காளத்தின் அடியில் தள்ளும் ரகம் அல்ல, யான். பணிவுடனும், துணிவுடனும், அந்த கெளரதைகளை மதித்து, மேலும், மேலும், யான் இயங்கும் தரத்தை உயர்த்திக்கொள்ள முயல்வேன். இனி என்னை ஒதுக்கிவிடுவோம். சாக்ரெட்டீஸ் வருகிறார்.

சிறு வயதில், தத்துவம் புரியாத நிலையிலும், சாக்ரெட்டீஸ் என்னை மிகவும் பாதித்தார்், வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழியாக்கத்தின் மூலம். என் மனம் அவர் உயிரிழந்த காரணத்தை ஒப்புக்கொள்ள மறுத்தது. 18/19 வயதில் கில்பெர்ட் முர்ரே, பெஞ்சமின் ஜொவெட் போன்ற பேராசிரியர்களின் நூல்களின் மூலம் தெளிவுரைகள் கிடைத்தன. என் பயணங்கள் எப்படியெல்லாம் அமைந்தாலும், சாக்ரெட்டீஸ் அக்ராசனராகவே இருந்தார். எனவே, தமிழ் தேனீ என்னில்லம் வந்தபோது, அங்கு அவர் சர்வவியாபகியாக இருந்தது வியப்புக்குரியது அல்ல.

எனினும், இனி நான் சொல்லப்போவது, சில நாட்கள் கழிந்த பின் 17 10 2010 அன்று கார்டியன் இதழில் வந்திருந்த சாக்ரெட்டீஸ் பற்றிய குறிப்பு. அதன் சுருக்கத்தின் சுருக்கம்,  என்னிடம் உள்ள நூலின் அட்டைப்படம். (இணைத்துள்ளேன்) ‘விண்ணுலகத்திலிருந்து தத்துத்தை இவ்வுலகில் தரவிறக்கம் செய்தவர் சாக்ரெட்டீஸ்’, என்கிறார், சிசிரோ. சாக்ரெட்டீஸ் வாழ்வின் இலக்கு அறிய விழைந்தார். அவரின் பாதை கடினம், கல்லும், முள்ளும். ஆனால், என்னே கவர்ச்சி! என்னே நேர்த்தி! என்று இளைஞர்கள் சூழ, அவரதடிகள் பணிய, கீர்த்திமானாகி விட்டார், அவர். ஐம்பது வருடங்கள் கழிந்தன, இவ்வாறு. கிரேக்க அரசுகள் சிறியவை, நகருக்கு ஒன்று. முனிசிபாலிட்டி என்று கூட சொல்லலாம். அவர் வாழ்ந்த  ஏதென்ஸ் நாட்டின் அரசுக்கு கெட்டகாலம்: போர்க்களங்களில் படு தோல்வி, நிதி நிலை மோசம், ஏழைகள் பட்டினி, எல்லாம் தலைகீழ். சால்ஜாப்பு தேவை. புரிகிறதா? [இன்று  இந்த உலகில் பல நாடுகள் இருக்கும் நிலைமை, இது. இந்தியாவிலும் தான். ]

அகப்பட்டுக்கொண்டது சாக்ரெட்டீஸ், கி.மு. 399ம் ஆண்டின் நாளொன்றில். அரசவைக்கு இழுத்து வரப்பட்டார். குற்றப்பத்திரிகை படிக்கப்பட்டது: 1. நாட்டின் கடவுளர்களை அவமதித்தது; 2. இளைஞர்களின் மனதை குலைப்பது. குற்றம் என்று தீர்ப்பு. தண்டனை: அரசு மேற்பார்வையில் தற்கொலை, ஹெம்லாக் என்ற விஷம் அருந்தி. 

கி.மு. 469ல் ஒரு கல்லுளி மங்கனாக (சொல் வந்து பொருத்தமாக விழுந்தது!) பிறந்த (son of a stonemason) சாக்ரெட்டீஸ், கிரேக்க அழகு இல்லாத விகாரரூபன்; பானை தொந்தி; விசித்திரமான நடை, தேடும் கண்கள், ரோமம் அடர்ந்த உடல். ஊரார் மாதிரி பட்டும், பகட்டும், அவரை கவரவில்லை. ஊருக்கு ஒவ்வாத மனிதன். சமயம் சமுதாயத்தின் பொது சொத்து ஆக ஆளுமை செய்த அக்காலத்தில், தன்னுடைய உள்ளுணர்வை ("daimonion") மட்டும் மதித்து, இளைஞர்களிம் மனம் கவர்ந்த இந்த கள்வனை, இன்று நாம் மதிப்பதின் காரணம், இன்றும் அவரின் கோட்பாடுகள் உன்னதமாக கருதப்படுவதே.அவர் வாழ்ந்த காலத்தில், ஜனநாயகத்தின் நுணுக்கத்தை, உட்பொருளை, வினா-விடையாக விளக்கியவரை, சர்வ வல்லமை பொருந்திய அரசு வெறுத்தது, இன்றும் நடக்கக்கூடிய இழிவே. லிங்கனும், காந்திஜியும் சுடப்பட்டது போல, இவரும் தாக்கப்படுவார்; 2010ல் அதிகாரமையங்கள்  அவரை கொல்லும்.  

"மாடமாளிகைகளும், போர்க்கப்பல்களும், சிலை வரிசைகளும் இருந்து பயன் என்ன, மக்கள் அதிருப்தியுடன்  இருந்தால்? நேசமில்லா வாழ்வினால் யாது பயன்?” என்று வினா தொடுத்தார், அவர். சுவாசிக்கும் காற்று போல, அறிவை நாடுவதை போற்றினார், அவர். ஏதோ ஒரு ஞானி என்று முத்திரை குத்தி, அவரை விலக்காதீர்கள்.  ஒரு பாமர மனிதன், அவர். நேசமும், ஆற்றலும் தான் அவருக்கு முக்யம். தண்ணியும் போடுவார். சண்டையும் போடுவார். இந்த உலக புருஷன், மற்றவர்கள் மாதிரித்தான்.
ப்ளேட்டோவும், க்செனோஃபானும். அவருடைய வரலாறு எழுதும் போது, அவரின் வினாக்களை கோர்த்து அளிக்கிறார்கள்.
  1. வாழ்க்கையின் பொருள் என்ன?
  2. அவரவரது வாழ்க்கையின் பொருள் என்ன?
  3. எது மகிழ்ச்சி தருகிறது?
  4. எது நன்மை பயக்கிறது?
  5. எது நன்கடமை?
  6. எது நேசம்?
  7. நாம் வாழ்க்கையின் தரம் உயர்த்த என் செய்யவேண்டும்?
மறுபடியும் படியுங்கள். இன்று நம்மை எதிர்நோக்கும் வினாக்களே, இவை. எனவே, அவர் சொல்வது இன்றும் சாலத்தகும்.
எழுதப்பட்ட ஆவணங்களை பற்றியும், நேருக்கு நேர் பேசுவதின் வலிமையையும் அறிந்த அவருடைய பிரசித்தமான வினா: ரொட்டியும், கள்ளும் எங்கு கிடைக்கும் என்று கேட்டு எளிய விடை பெற்ற அவர்,’ நேர்மையானதும், உன்னதமானதும் எங்கு கிடைக்கும் என்று , மற்றவர் தடுமாற, ‘என்னிடம் வா’ என்றார்.  உங்களுக்கு காந்திஜீம் சத்தியப்பிரமாணம் நினைவில் வருகிறதோ! சாக்ரெட்டீஸ், ‘சொல்லின் பொருள் ஆராய்ந்து அறிக’ என்று அடிக்கடி சொல்வார். ‘புரிந்து செயல்படுக.’ என்பார். தர்க்கவாதம் அவருக்கு பிடிக்காது.(Rhetoric without truth was one of the greatest threats to the "good" society.)
“The Hemlock Cup: Socrates, Athens and the Search for the Good Life, by Bettany Hughes” என்ற இந்த நூலாசிரியர், ஏதென்ஸ்ஸின் ஏமாற்றத்தின் பலிகடா, சாக்ரெட்டீஸ் என்கிறார்.  ஆராய்ந்து நெறிப்படுத்தாத வாழ்க்கை பயனற்றது ("the unexamined life is not worth living" ) என்ற அவரின் வாதம் எந்த சர்வாதிகார அரசுக்குத்தான் பிடிக்கும்?
சலிப்பு தட்டுகிறதா? முடித்து விடுவோம்.  அவர்  வழக்கு மன்றத்தில், ‘ என் குற்றங்களுக்கு தண்டனை இல்லை. வதந்திகளும், வீண்பேச்சுகளும், உங்கள் முணுமுணுப்புகளும் என்னை குற்றவாளியாக சித்தரிக்கன்றன’ என்று கூறி, இன்முகத்துடன், சட்டத்தை நிறைவேற்றி தன்னை மாய்த்துக்கொண்டார். 
தமிழ்த்தேனி சொல்வது போல், ‘ஹூம்  எத்தனையோ  சாக்ரடீஸ்கள்!’
நன்றி , வணக்கம்,

இன்னம்பூரான்
21 10 2010





Socrates – a man for our times | Books | The Guardian.webarchive
1000K

Geetha Sambasivam Thu, Oct 21, 2010 at 5:30 PM


அற்புதமாக உங்கள் எண்ணத்தை வடித்திருக்கிறீர்கள். நன்றி பகிர்வுக்கு.
2010/10/20 Thamizth Thenee 

rajam Thu, Oct 21, 2010 at 7:17 PM

சலிப்புத்தட்டுமா? அதுவும் மிகச் சிக்கலான செய்திகளையும் தெளிவாகவும் எளிமையாகவும்
நீங்கள் விளக்கும்போது?
 நல்ல கருத்துக்களை எங்களுக்கு நாள் பூராச் சொல்லுங்கள்.
கேட்போம், நன்றியோடு.

அன்புடன்,
ராஜம்


On Oct 21, 2010, at 4:57 AM, Innamburan Innamburan wrote:




Subashini Tremmel Fri, Oct 22, 2010 at 12:19 AM


தேனீயார்,
இனிய பகிர்வு. நேரம் கிடைத்தால் மீண்டும் ஒரு முறை சந்தித்து ஒலிப்பதிவு கருவியோடு சென்று என்ன சொன்னார் என்று பதிவு செய்து விடுங்கள். நெடுநாளாக திரு.இன்னம்பூரானின் திரு.வி.க பகுதி  போட்காஸ்ட் பகுதியில் விஷயங்கள் சேர்க்கப்படாமலேயே இருக்கின்றன.
அன்புடன்
சுபா
2010/10/20 Thamizth Thenee 


ஆராதி Fri, Oct 22, 2010 at 5:37 AM


திரு இன்னம்பூராரே

சாக்ரடீசையும் தமிழ்த்தேனையும் பிசைந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அருமை. அதற்கு நடுவில் I see Jean-Paul Sartre’s authenticity in his prayers to my wife, Vasanthaஇப்படி ஒரு வாக்கியத்தையும் இணைத்துள்ளீர்கள். ழான் போல் சார்த்தரையும் உங்கள் மனைவியையும் குறிப்படக் காரணம் என்ன. சற்று விரிவாகச் சொல்லுங்களேன்.

அன்புடன்
ஆராதி

2010/10/21 Innamburan Innamburan <innamburan@googlemail.com>


அஷ்வின்ஜி Fri, Oct 22, 2010 at 6:47 AM


திரு.வி.க என்ன சொன்னார்? யாராவது சோக்ரதர் புத்தகம் வைத்திருந்தால்
சொல்லுங்கள்.

சோக்ரதர் புத்தகத்தை யார் வெளியிட்டார்கள்?
மின்தமிழில் திரு நரசையா அவர்களின் கட்டுரை முன்பு வெளிவந்தது அதனை இங்கே
மீள் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
http://groups.google.com.sb/group/mintamil/browse_thread/thread/c9fdd5220553c42a?fwc=௧

-------------------------------------------------------------------------------------------------------------------

*லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி*

தம்து 83 வது வயதில் வெள்ளியன்று (12-06-09) காலமான திருமதி *லக்ஷ்மி*
தீரர்
சத்திமூர்த்தியின் ஒரே புதல்வி; 1925 ஜூலையில் பிறந்தவர்; திரு
கிருஷ்ணமூர்த்தி
93 அகவையைத்தாண்டியவர். கிருஷ்ணமூர்த்தி தம்பதியருக்கு மூன்று
குமாரர்கள்.

தீரர் சத்தியமூர்த்தியின் புதல்வி ஆகையால் ஆரம்ப காலத்திலிருந்தே
அரசியலில் ஆர்வ்மிருந்த்து. ஆனாலும் எந்த கட்சியிலும்
சேர்ந்திருக்கவில்லை
தமிழ் நாடு மேல் சபை உறுப்பினராக 1964 லிருந்து 1970 வரை பணியாற்றினார்.

1968 - 69 காலத்தில்  தமிழின்  மீது இருந்த ஆர்வமிகுதியால்,
தமிழுக்குச் சேவை செய்ய முன்வ்ந்தார்.
தம்து கணவ்ரின் துணையுட்னும், சிட்டியின் தூண்டுதலாலும், புக் வெஞ்சர்
என்ற ஒரு
அமைப்பைத் தொடங்கினார். அதன் மூல்மாக வாசகர் வ்ட்டம் என்ற அமைப்பை
உண்டாக்கி
சநதாதாரர்களைச் சேர்த்து, வருடத்திற்கு 25 ரூபாய் கொடுப்பவர்களுக்கு
சலுகை
விலையில் நூல்கள் வழ்ங்கப்பட்டன. பதிப்பகத்தின் முதலீட்டுப் பொறுப்பை
லக்ஷ்மி
ஏற்றுக் கொண்டார்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ந்டைபெற்ற இச்சோதனை முயற்சி மூலம் வெளிவ்ந்த
நூல்களே அவரது முயற்சியின் அத்தாட்சியும் சாட்சியுமாகும்!:

இராஜாஜி எழுதிய *சோக்ரதர் *என்ற நூல் தான் முதலில் வெளியிட்ப்ப்ட்ட்து.
அதன்
சிறப்பு, இராஜாஜியே அதை வெளியிட்ட்து தான்!




coral shree Fri, Oct 22, 2010 at 7:10 AM


சுபா கண்மணி கருமமே கண்ணாயினார்.



Innamburan Innamburan Fri, Oct 22, 2010 at 6:04 PM

1. அஷ்வின்ஜியின் குறிப்புக்கு நன்றி. அந்த நூல் என்னிடம் இருக்கிறது.
தேடவேண்டும். நான் ஒரு மூலையில் எழுதிவைத்த குறிப்பு: இராஜாஜியின்
'சோக்ரதர்'க்கு திரு.வி.க. வின் அணிந்துரை: '...கசிந்து கசிந்துருகிப்
பாடினோர் பாடலை, ஓதுவோரும் கசிந்து உருகுவது இயல்பே. இதை எழுதியபோது
ஆசிரியர் இராஜகோபாலர் தம்மை மறந்து சோக்ரதராக மாறியிருந்தார்...'

2. ஆராதிக்கு பதிலளிக்க, என் 1952 குறிப்பு ஒன்று
தேடிக்கொண்டிருக்கிறேன். பொறுத்தாள்க.

இன்னம்பூரான்

Innamburan Innamburan Thu, Oct 28, 2010 at 9:51 PM

T
     ஆராதிக்கு பிறகு பதில். இப்போது ‘ஒடெஸி’ , ‘இலியட்’எனப்படும் சிலப்பதிக்காரம், மணிமேகலை போன்ற அருமையான இரட்டைகாப்பியங்களை படைத்த, ஹோமர் என்ற கிரேக்க இலக்கிய கர்த்தாவுடன், காலசக்ரத்தை சுற்றி வளைத்து வந்து, உரையாடுவோமா! சுற்றி வளைப்பதாலும், எனக்கும் கொஞ்சம் தளர்வாக இருப்பதாலும், இன்று சிறிய அறிமுகம். மற்றவர்களுக்கு ஆர்வம் இருந்தால், வளர்த்தலாம். எங்கு போனாலும், எப்போது வேண்டுமானாலும் சாக்ரெட்டீஸ்சுக்கு திரும்பி வரலாம். அப்பிடி ஒரு ஆகுருதி அவருக்கு.
     எந்ததொரு காலகட்டத்திலும், நமது குறை/நிறை காணும் மக்களுக்கு பஞ்சமில்லை; அவர்கள் வாழும் நெறிகளை சொல்லியும் கொடுப்பார்கள்; அப்பேர்ப்பட்டவர்கள் இல்லையெனில், நம் மனசாட்சி கைகொடுக்கும் என்றார்,  ஜெஃப்ஃரி டேலர், பாரிஸ் அமெரிக்கன் அகாதமியில், ஜூலை 6, 2009 அன்று. பிறகு ஹோமருக்கு வருமுன், ஒரு பொன் வாக்கு, பெட்றார்க்கிடமிருந்து.
    
     “வாழ்க்கையின் பயணமோ துரிதம். எதற்கும் தயங்கி, தங்கிவிடாத ஓட்டமோ ஓட்டம்! வேகமாக தொடருவதோ சாவு!” (“L a vita fugge, et non s’arresta una hora, / et la morte vien dietro a gran giornate”)

     இதன் உள்ளுறை காண விழைபவர்கள், மெதுவாகத்தான் சுற்றி வளைத்து செல்லவேண்டும்.  பெட்றார்க் ஒரு நிகழ்வைக்கூறவில்லை. ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்கிறார் என்று ஒரு வியாக்யானம். இல்லை. உனது பாதை கல்லும், முள்ளுமாக, புதரும் பூச்சியுமாக இருக்கும். அதையெல்லாம் கடந்து முன்னேற மற்றோர் கருத்துக்களை கவனி என்று பொருள் என ஒரு விமர்சனம். சொல்லப்போனா, இரண்டுமே நேரிடையாக கூற படவில்லை. ஹோமரை பார்த்த பிறகு தான் விளக்கம் தேட இயலும் என்க.
     ஐயோனியாவில் கி.மு. 9 அல்லது 8 நூற்றாண்டில் வாழ்ந்த ஹோமர் மேற்கத்திய கலாச்சாரத்துக்கு அடித்தளம் கோலினார் என்றால், மிகையல்ல. ஒடெஸி’யின் சாராம்சம்: ஆசியா மைனர் பகுதியில் இருக்கும் ட்ரோஜன்களுடன் ஏழு வருடங்கள் போர் புரிந்தபின் வெண்ற மன்னன் ஓடிஸ்ஸ்யெஸ் தன்னுடைய தீவு நாடாகிய இத்தாக்காவுக்கு, கப்பலேறி வருகிறார். அவருக்காக, அங்கு காத்திருப்பது ராணி பெனெலோப். இவர் உயிருடன் திரும்புவாரா என்று கூட அவளுக்கு தெரியாது. வழியில் என்னே ஆபத்துக்கள் - ஒத்தைக்கண் இராக்கதன் ஸைக்ளோப்ஸ்,  மனிதருண்ணும் லைஸ்த்றிகான்ஸ்,  சைரன் என்ற மகளிர் அணி, வகையறா. அதையெல்லாம் தாண்டி வந்து பெனெலோப்பின் ஆசை நாயகர்களை கொன்று குவித்து, பற்பல இன்னல்களை கடந்து அரியணை ஏறுகிறார், மன்னர் ஓடிஸ்ஸ்யெஸ். அவரை தந்திரக்காரனாகவும், வீராதி வீரனாகவும், கனவானாகவும் சித்திரிக்கிறார், ஹோமர். கடவுளாரை நாடும் அவர் வாகை சூட, தன்னிச்சையாகவும் செயல் பட்டவர். கொஞ்சம் ராமாயணம், மஹாபாரதம் போல இருக்கிறது அல்லவா! நம் போல கிரேக்கர்களும், ஒடெஸியை, வாழ்வின் கண்ணாடி என்றும், ஞானச்சுடர் என்றும் கருதினர். [டயர்ட்]
(தொடரும்)
இன்னம்பூரான்
28 10 2010

coral shree Fri, Oct 29, 2010 at 10:56 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நன்றி அய்யா. முத்து முத்தான எழுத்துக்கள்......படிக்கப் படிக்க இனிமையாக உள்ளது. கொஞ்சம் ஓய்வு.....பின்பு வாருங்கள் அய்யா ....மேலும் சொல்ல.....காத்திருக்கிறோம்.









Monday, June 9, 2014

மோடியும், நீயும், நானும். 2





மோடியும், நீயும், நானும். 2



இன்னம்பூரான்
ஜூன் 10, 2014

தலைப்பு இன்றும் தொடருகிறது. அரசியல் துறையில் சொல்லின் செல்வர்கள் கோலோச்சுவார்கள், ஒரு சொல்லுக்கு பல படைப்பாளர்கள் இருப்பதால்; ஒரு பொருளை பல கோணங்களில் கூறமுடியும் என்பதாலும். தலைமைக்கு கோனார் நோட்ஸ் எழுதி தர ஒரு பட்டாளமே இருக்கும். சர்ச்சில், நேரு, படேல், மோடி போன்றவர்கள் அவரவது சிந்தனையை தாங்களே நன்கு பகிர்ந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு.

இந்திரா காந்தியின் ‘கரீபீ ஹடாவ்’ /20 பாயிண்ட் பட்டியல் நினைவில் இருக்கிறதோ? அவை கானல் நீர் ஆனதை அறியீரோ? அவருடைய திருமகனாரும் அடுத்த பிரதமரும் ஆன ராஜீவ் காந்தி, ஏழைகளுக்கு மான்யம் 16% தான் சேர்கிறது என்று சொன்னதும் நினைவில் இருக்கிறதோ? எதற்கும் இருக்கட்டும் என்று பழைய ஏடுகளை புரட்டினால், ‘அறம் செய்ய விரும்பு’ போன்ற கொள்கைகளுக்கு எதிர்வாதம் புரியாமல், செயல் ரீதியாக அவற்றை ஒதுக்கி தள்ளுவது தான் அரசியல் கட்சிக்ளுக்கு வாடிக்கை என்பது நிதர்சனமாகும். திரு.நரசிம்ஹராவ், தேவ் கெளடா ஆகியோரால் துவக்கப்பட்ட சில நற்காரியுங்கள் உறைந்து கிடக்கின்றன. அவற்றை உயிர்ப்பிக்கவேண்டும்.

 “ ஏக் பாரத் - ஷ்ரேஷ்டா பாரத்” என்ற மூலமந்திரத்தை உச்சாடனத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், கடமையாற்றலிலும் காணவேண்டும் என்றால், இந்தியமக்கள் யாவரும், எங்கிருந்தாலும், அங்கிருந்தபடியே எச்சரிக்கையாக இருந்து, ஏகாக்ரக சிந்தையுடன் பாரதமாதாவை வாழ்த்தி, வணங்கி தன்னுடைய முழு ஆற்றலையும் அவளது பாதாரவிந்தங்களில் சமர்ப்பிவிக்கவேண்டும்.  பிரதமர் மோடி சூத்ரதாரியாக இருக்கட்டும். அந்த பணிக்கு அவருடைய நியமனம் ஆகி விட்டது.
இனி மக்கள் நலம் மக்கள் கையில்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://a2.img.mobypicture.com/ae56525e92c4e27e21274791abe2cf7b_view.jpg