Saturday, July 25, 2015

இன்னுயிர் தந்தெமை !!! (தொடர் 001)

இன்னுயிர் தந்தெமை !!! (தொடர் 001)

இன்னம்பூரான்
25 07 2015

மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் கற்பனையும், பரவசமும், இலக்கியசுவையும், நாட்டுப்பற்றும், மனிதாபிமானமும், என்னை அவரது சொல்வளத்தின் நன்முத்து ஒன்றை தலைப்பாக வைக்கத்தூண்டியது. என்ன தான் குறை கண்டாலும், நமது பராம்பரியமும், பண்பும், அளவு கடந்த பரிவும், நேசமும் போற்றத்தக்கன. போற்றுவுமாக.

சில சமயங்களில் தெய்வசன்னிதானம் கட்டாந்தரையில் வைபோகமாக அற்புத நடனம் ஆடுகிறது. கண்டு களிப்பீர்களாக. திருவனந்தபுரத்தில் ஶ்ரீ சித்திரை திருநாள் ஆஸ்பத்திரி புகழ் வாய்ந்தது. அங்கு திரு.நீலகண்ட சர்மா ஆவி துறக்காமல், இறந்து விட்டார். இங்கு முரண் யாதுமில்லை. அவரது மூளை முற்றும் செயலற்றுப்போகவே, இனி அவர் உயிர் தரித்திருந்தாலும், அவருக்கு வாழ்க்கைக்குத் திரை போடப்பட்டுவிட்டது. தற்காலம் உறுப்பு தானம் யாவரும் அறிந்ததே. மரணத்தை வென்றுவிட்டோம். யாவரும் சிரஞ்சீவியே. சடலாமாயினும் கண் தானம் செய்யலாம்; சிறுநீரகம் தானம் செய்யலாம். அவை, மருத்துவ உதவியுடன்,கூடு விட்டு கூடு பாய்ந்து மற்றும் பலராக மலர்ந்து புது வாழ்க்கையை தடங்கலின்றி தொடங்கலாம். சர்மாவின் குடும்பம் உடனுக்குடன் உறுப்பு தானத்துக்கு சம்மதிக்கவே, அவருடைய இதயம் இந்திய கடற்படையின் விமானத்தில் கொச்சிக்கு பறந்து போய், அங்குள்ள லிஸ்ஸி ஆஸ்பத்திரியில், இதய நோயினால் அவஸ்தைப்பட்ட மாத்யூ அச்சதன் என்ற ஆட்டோ ஓட்டுனர் நெஞ்சகத்தில் குடி புகுந்தது. ஐந்து மணி நேரம் எடுத்துக்கொண்ட இதய இரவல் அறுவை சிகிச்சை முடிந்தவுடனே நான்கு மணி நேர கெடுவுக்குள் கொச்சிக்குக்கொணரப்பட்டு, மாத்யூவின் உடலில் சர்மாவின் இதயம் துடிக்கிறது. இந்த ஆத்மதரிசனத்துக்கு, ஆஸ்பத்திரிகள், வாகனம், அரசு விமானம், கேரள முதல்வர் எல்லாரும் எடுத்துக்கொண்ட பணிகள் போற்றப்படவேண்டும். இதே மாதிரி சென்னையில் நடந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. டில்லி அருகே உள்ள குட்காவ்ன் என்ற இடத்திலிருந்து, கசகச போக்குவரத்து சாலைகளில், ஊரையை கட்டிப்போட்டுவிட்டு, ஒரு இதயம் 29 நிமிடங்களில் நூறு மைல் வேகத்தில் பயணித்து, ஓக்லாவில் உள்ள ஃபோர்டிஸ் ஆஸ்பத்திரியில் ஒரு 16 வயது இளைஞனின் நெஞ்சக்த்தில் புகுந்தது.

ஏன்? இந்த திங்கட்கிழமை அன்று சென்னை பொதுஜன ஆஸ்பத்திரியிலிருந்து, எக்கச்சக்க போக்குவரத்தை கச்சிதமாக ஒதுக்கி 14 நிமிடங்களில் அடையாரு ஃபோர்டிஸ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லவே, புதிய உடலில், பழைய இதயம் இன்பத்துளிராகத் துடித்து, ‘தெய்வம் மனுஷ ரூபேண’ (மனிதனாக தெய்வம்) என்று புதிய வாழ்க்கையை தொடங்கியது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. [குறள் 327]

விளக்கம்:
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

இடம், பொருள், ஏவல் கருதி, சற்றே மாற்றி:

தன் உயிரை இழக்க நேரிட்டால், அஞ்சேல்.  அது வேறு உடம்பில் குடி போகட்டும். அப்போது, அது இழப்பு அல்ல. வாழ்வு நிரந்தரம்.

-#-

இன்னம்பூரான்

Friday, July 24, 2015

“பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!


“பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!

– இன்னம்பூரான்.
பிரசுரம்: வல்லமை: ஜூலை 24, 2015
http://www.vallamai.com/?p=59957

காமராசர் பாமரனின் பிம்பம். பிரதிபிம்பம் அன்று. மக்கள் என்ற கடலோடு கலந்து உறவாடிய தலைமாந்தன். மண் வாசனை பூமியில் ஊன்றிய கால்களை அவர் அகற்றியதும் இல்லை; ஆகாயகோட்டை கட்டியதும் இல்லை. அதனால், பாமரமக்களின் வாழ்வாதாரம் அவரது இதயகமலத்தில். அவர் முதல்வராக இருந்த போது, கலோனிய அரசின் இரும்புக்கோட்டை எனப்படும் ஐ.சி.எஸ் அதிகாரிகள் உயர்பதவிகளில் இருந்தார்கள். படிக்காத மேதை என்று தவறாக சுட்டிக்காட்டப்பட்ட முதல்வரிடம் அவர்கள் மிகுந்த மரியாதையுடன் பழகினார்கள். அதன் பின்னணியை ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி கூறியதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
கிராமங்களுக்கு மின் வசதி கொடுக்கும் திட்டத்தின் படி அந்தந்த ஜில்லா (மாவட்டம்) கலைக்டர்களிடமிருந்து நான்கு கிராமங்களை பற்றி பரிந்துரை வரவேண்டும். இது சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை கூடியபோது ஒரே ஒரு கலைக்டரிடமிருந்து பரிந்துரை வரவில்லை. முதல்வருக்கு திடீரென்று அசாத்தியமான சினம் வருவது உண்டு, நற்காரியங்களுக்கு யாராவது முட்டுக்கட்டை போட்டால். அதனால் அமைச்சரவையில் ஒரு பதட்டம். நிதானமாக ‘அய்யா’ அவர்கள் (அவரது இந்த அடையாளம் தான் புழக்கத்தில் இருந்தது) அந்த ஜில்லாவின் நான்கு கிராமங்களின் பெயரை பட்டியலில் சேர்க்க சொல்லிவிட்டு, அடுத்த திட்டத்துக்கு போய்விட்டார். நிர்வாகப்புலி என்ற புகழ் வாய்ந்த அந்த அதிகாரி, “மக்கள் தொகை/வறுமை/வேளாண்மை தேவை/கல்வி/மின் இணைப்பு சாத்தியம்/ காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று எப்படி பார்த்தாலும் இத்தகைய தேர்வை எந்த கலைக்டரும் செய்திருக்கமுடியாது” என்றபோது, குழுமியிருந்த அதிகாரவர்க்கம் மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்ந்தது. அய்யா அவர்களின் காலடி படாத கிராமமே கிடையாது எனலாம். தமிழ் நாட்டின் புவியியல் பாடம் எடுக்க அவருக்கு இணை யாரும் இல்லை; இது அய்யாவே சொன்னது. பாரத மிகுமின் நிறுவனத்துக்குத் திருவெறும்பூரை பரிந்துரைத்தவர், அய்யாவே. மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்த்து கற்றாரை காமுற்றவர் அல்லவா! ஒளவை பாட்டி அகமகிழ்வாள்.
அதே நிர்வாகத்திறனின் மறுபக்கம்: 1954ல் முதல்வரான அய்யா அப்போது சட்டமன்றத்தில் அங்கத்தினர் அல்ல. பிற்காலத்து மாஜி பிரதமரை போல, மேல் மன்றத்தில் இடம் பெற்று இயங்க மறுத்ததே, மக்களாட்சிக்கு அவர் கொடுத்த மரியாதை. குடியாத்தத்தில் இடை தேர்தல்; கம்யூனிஸ்ட் போட்டி. இருபக்கமும் தீவிர பிரச்சாரம். ஆனால், வாக்காளர் நியாயமாக கேட்ட மேம்பாலம் பற்றி வாக்குறுதி அளிக்க அய்யா மறுத்து விட்டார். அவருடைய விதுரநீதி: “நியாயமே ஆயினும், என் வாக்குறுதிக்கு இணையாக எதிர்கட்சி தோழர் கோதண்டம் வாக்குறுதி கொடுக்க முடியாது. நான் அந்த அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கில்லை.” எட்டே அமைச்சர்கள் இருந்த அவரது அமைச்சரவையில் நால்வர், இவருடைய அலைவரிசையில் இல்லை என்றாலும், தகுதிக்கு மதிப்பு கொடுத்தார். இதை எல்லாம் எந்த பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறார்கள்?
ராஜாஜிக்கும் காமராசருக்கும் கருத்து வேற்றுமை நிலவியது என்றாலும், நகராட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் கண்ணியம் தான் அடித்தளம். இருவரும் சிபாரிசு செய்யமாட்டார்கள். ஒரு நல்வழிப்பாதையிலிருந்து மற்றொரு நல்வழிப்பாதைக்கு குறுக்கு வழியில் செல்லமாட்டார்கள். இருவரும் சுற்றத்தை அண்ட விடமாட்டார்கள். சராசரி மனிதர்களோடு அவர்கள் இருவரும் பழகும் விதம் அலாதி. ராஜாஜி சென்னை வரும்போது, விமான நிலையத்தில் வரிசையாக பலர் நிற்பார்கள். ஒருவரிடன் மகளின் திருமணத்தை பற்றியும், மற்றொருவரிடம் மகனுக்குக் கிடைத்த வேலை பற்றியும், மற்றொருவரிடம் நாற்று நட்டச்சா என்றும் கேட்பார். எல்லாருக்கும் தன்னை பற்றி மட்டுமே மூதறிஞர் நினைக்கிறார் என்று தோன்றும். அதே மாதிரி பெருந்தலைவர் காமராசர் எல்லாரையும் நினைவில் வைத்துக்கொண்டு, அவரவருக்கு இதமாக பேசுவார். ஆயுள் முழுதும் முருக தனுஷ்கோடி போன்ற அன்யோன்ய நட்புகள் சில.
அவருடைய தமிழ், கறார் கலந்த கொஞ்சும் தமிழ்; ஒரு ‘ரசாயனக்கலவை’ எனலாம். அதனால், அதிகார மையங்களில், அய்யா சொல்வதை எல்லாரும் கவனமாகக் கேட்பார்கள். ‘பார்க்கலாம்’ என்ற சொல் காமராசருடன் ஐக்யமாகி விட்டது. அது அவருடைய நிதானத்தையும், சிந்தித்து செயல் படுவதை சுட்டுகிறதே தவிர, அங்கு எள்ளலுக்கு இடம் கிடையாது. அய்யா அவர்களின் மேலாண்மையையும், அரசியல் அணுகுமுறையையும், நிர்வாகத் திறனையும், நாட்டுப்பற்றையும், கொள்கை என்ற அசையா நிலையையும், மக்கள் தொண்டையும், தொலை நோக்கையும், விருதுப்பட்டியும் (பின்னர் தான் விருதுநகர் என்ற விலாசம்!) அறியும்; தமிழகமும் அறியும்; இந்தியா முழுதும் அறியும். ‘மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன்’ ஒரு ரசவாத வித்தகர் தான். கர்மவீரர் காமராசரை போல் ஒருவரை ’…நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா…’ என்று கவிஞர் வாலி விசனத்துடன் வினவிய போது, ‘இல்லை! இல்லை!’ என்று எட்டுத் திக்குக்களிலிருந்தும் எதிரொலி கேட்டதாம்!
அத்தகைய சான்றோனின் வரலாறு, வருங்கால சந்ததிக்கு வாழ்வியல் பாடமாக அமையும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. ‘காமாட்சி’ குலதெய்வம். அந்த பெயரை அவருக்கு சூட்டினார்கள். அன்னை சிவகாமிக்கு, அவர் ‘ராசா’. திரிபு: காமராசு. ஆறு வயதில் தந்தை மரணம்; பள்ளிப்படிப்புக்கு முழுக்கு. மாமனின் துணிக்கடையில் எடுபிடி வேலை. சிறுவயதிலேயே நாட்டுப்பற்று பற்றிக்கொண்டது. 16 வயதிலேயே அரசியல் பணி; ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்ரகம்; முதல் முறை கைது. நாடு விடுதலை பெறுவதை கண்டு களிக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட தீரர் சத்தியமூர்த்தி தான் இவரது அரசியல் ஆசான். அவரது ஆசை நிறைவேறவில்லை எனினும், ஆகஸ்ட் 15, 1947 அன்று அவரது இல்லத்தில் அய்யா அவர்கள் தேசீயக்கொடியை ஏற்றியபோது, அவரது ஆத்மா பங்கேற்றுக்கொண்டிருக்கும்.
மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக பணி புரிந்த காமராசர், 1954ல் முதல் முறை பதவி ஏற்றுக்கொள்ளும் முன்னால், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் இல்லத்துக்குச் சென்று, அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து ஆசி பெற்ற பின் தான் அரசியல் பணியை துவக்கினார். அது அமோகமாக அமைந்தது என்பது குறிப்படத்தக்கது. மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதல்வராக மக்களால் அரியணையில் அமர்த்தப்பட்ட காமராசர், கட்சிப்பணியும், நாட்டுக்குத் தொண்டும் முக்கியம் என்று ஒரு நிலைப்பாடு எடுத்தது, பிரதமர் நேருவைத்தவிர மற்றவர்களுக்கு வியப்பு அளித்தது. முதல்வர் பதவியை உதறினார். அக்டோபர் 9, 1963 அன்று அகில இந்திய காங்கிரசின் தலைவர் ஆனார். அய்யா அவர்களின் தியாகமும், அரசியல் உத்தியும் பெரிதும் போற்றப்பட்டன.
நேரு மறைந்தவுடன், பிரச்னைகள் அணுகாத வகையில், லால் பகதூர் சாஸ்திரி பிரதமராவதற்கும், அவருடைய அகால மரணத்திற்கு பிறகு இந்திரா காந்தி பிரதமராவதற்கும் வழி வகுத்தது, காமராசர் தான். என்றும் தன் கடமையிலிருந்து வழுவாத காமராசரின் கரும வீரத்துக்கு, இந்திரா காந்தியின் தன்னிச்சைப்போக்கு ஒரு அறை கூவலாக எழுந்தது. கட்சி உடைந்தது. இந்திரா காந்தியின் “அவசர நிலை” என்ற மின்வேலி அவருக்கு தாங்கொண்ணா கவலை கொடுத்தது. தேசபக்தர்களான ஜெயப்பிரகாஷ் நாரயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தினர். காந்தியடிகள் பிறந்த நாளன்று (அக்டோபர் 2, 1975) அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி அவரை மிகவும் வாட்டியது. அன்றே உயிர் துறந்தார். அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
தியாகராய நகரின் திருமலைப்பிள்ளை வீதியில் அவர் வாடகைக்கு இருந்த தெருவிலே நானும் குடி இருந்ததால், அடிக்கடி காலையில் அவருடைய வீட்டை தாண்டித்தான் போகவேண்டும். மூன்று வயது சிறுவனான என் மகன், அவர் வீட்டு வாசலில் நின்று விடுவான்; வாசலில் நிற்கும் காவலரின் துப்பாக்கியை தொடவேண்டும்! அந்த நாளில் தடாலடி காவல் பட்டாளம் எல்லாம் கிடையாது. ஒருவர் மட்டும் தான். சில நாட்கள் அரிதாக, அய்யா அவர்கள் அந்தப்பக்கம் நின்று கொண்டிருப்பார். சிறுவனுடன் இரண்டு வார்த்தை பேசுவார். எனக்கு புளகாங்கிதம். பொது கட்டுரையில் சுய அனுபவங்களை மட்டுறுத்த நினைத்தேன். இல்லை. சொல்லத்தான் வேண்டும். அய்யா அவர்களை பற்றி எது சொல்ல நேரிட்டாலும், இன்றைய இளைய சமுதாயம் அவரது வாழ்க்கைக்குறிப்புகளின் ஒவ்வொரு வரியிலும் நல்வழி கற்கக்கூடும்.
சான்றாக, மேலும் இரு செய்திகளை கூறலாம். விருதுநகரில் வசித்த அன்னைக்கு மாதம்தோறும் பணம் அனுப்புவார். அன்னை சிக்கனமாக வாழ்ந்தால் தான், அது போதுமானது. காமராசருக்கு உள்ளூரில் பக்தி கலந்த மரியாதை இருந்தது. அக்காலம் வீடுகளுக்கு குழாய்நீர் கொடுப்பது சொற்பம். தெருக்குழாய் தான் நீருக்கு ஆதாரம்; அஞ்சல் அதிகாரி வீட்டு வாசலில் தபால் பெட்டி வைப்பது போல, தெருக்குழாயை காமராசர் அன்னைக்கு வசதியாக, அருகில் வைத்துக்கொள்ள அவருடைய சகோதரிக்கு ஆசை; அதை அய்யா நிராகரித்து விட்டார். அதை விட முக்கிய அறிவுரை, ஒரு நிகழ்வு ரத்து செய்ததில். அரசியல் வாதிகளின் திருவிளையாடல்களுக்கு எல்லை கிடையாது. யாரோ ஒருவரின் தூண்டுதலால், பிரதமர் நேரு தமிழகத்தில் பயணம் செய்த போது, விருதுநகரில் காமராசரின் அன்னை அவருக்கு விருந்தோம்ப ஏற்பாடு நடந்தது, அவருக்கு தெரியாமல். நேருவும் சம்மதித்து விட்டார். இந்த சேதி அய்யாவுக்கு தாமதமாகத்தான் கிட்டியது. அன்னையிடம் கோபித்துக்கொண்டார். நிகழ்வை ரத்து செய்து, நேருவிடம் தெரிவித்து விட்டார். அதனால் ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை அவர் பொருட்படுத்தவேயில்லை. நேர்மை நீர்த்து விடக்கூடாது என்பதில் அவர் வாழ்நாள் முழுதும் திண்ணமாகவே இருந்தார்.
பாருங்களேன். நான் அவரை கடைசியாக பார்த்தது, ராஜாஜியின் மரணத்தின் போது. ராஜாஜி ஹாலில் அவருடைய பூதவுடல் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்டகூட்டத்தில் நடுவில் அய்யா அவர்கள் ‘தனிமையில்’ நின்று கொண்டிருந்தார். லேசான தூறல். அக்காலத்தில் காவல் துறையின் மாணிக்கமாக கருதப்பட்ட கமிஷனர், கே.ஆர்.ஷெனாய் (ஆம். அவரை கேலி செய்துதான் கண்ணதாசன் அய்யாவிடம் செமையாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.) அவரை அணுகி, ‘அய்யா களைத்து போய்விடுவீர்கள். ஒரு நாற்காலியும் குடையும் கொண்டு வருகிறேன்’ என்றார். ‘பெரியவரே போய்விட்டார்.’என்றவர், மவுனத்தில் ஆழ்ந்தார். வேறிடம் செல்லவேண்டிய அவசரம், கமிஷனருக்கு. ‘ அய்யா மனதளவில் வேறு எங்கோ இருக்கிறார். அவரை விட்டு நகராதே. நான் விரைவில் வருகிறேன்.’ என்று சற்றே பரிச்சியமாகியிருந்த என்னிடம் கட்டளையிட்டு விட்டு, விரைந்தார்.
நான் நகரவில்லையே -இன்றும் தான். வாழ்நாள் முழுதும் நகரமாட்டேன்.

சித்திரத்துக்கு நன்றி: http://static-numista.com/catalogue/photos/inde/g1117.jpg

தஞ்சை வெ.கோபாலன்:  24 July, 2015, 9:18 பெருந்தலைவர் காமராஜரைப் பற்றிப் படித்து அறிந்ததைக் காட்டிலும், அவரை நேரில் பார்த்து, அவர் செயல்பாடுகளைக் கண்டு அதிசயித்த மனிதர்கள் நிகழ்ச்சிகளைச் சொல்லும்போது புல்லரிப்புதான் ஏற்படுகிறது. இத்தனை பெரிய மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்தார்கள் எனும் எண்ணம் நம்மை புளகாங்கிதம் அடையச் செய்கிறது. இனி அப்படியொரு காலம் வராதா? அப்படியொரு தலைவர் நம்மிடையே தோன்ற மாட்டாரா? எனும் ஏக்கமும் ஏற்படுகிறது. மிக அருமையான அற்புதமான செய்திகளைத் தந்திருக்கிறீர்கள்; அதற்கான சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது; நீங்கள் பாக்கியம் செய்தவர்.

இன்னம்பூரான்:
24 July, 2015, 14:14 நன்றி, தஞ்சை வெ.கோபாலன். உங்கள் மதிப்புரை எனக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது. உங்களில் மகாகவி பற்றிய பணியை போற்றும் எனக்கு, உங்கள் கருத்து முத்து முத்தாக அமைந்துள்ளது.
-#-

Thursday, July 23, 2015

கஜானா காலி [2] -சிக்கிமுக்கி...!

கஜானா காலி [2] -சிக்கிமுக்கி...!

இன்னம்பூரான்
23 07 2015

தணிக்கைத்துறையில் நாங்கள் பார்க்காத வினோதங்கள் கிடையா. மிஷினில் புல் வளர்த்தார்கள்! உடையும் எஃகை வளைத்தார்கள்! அம்பாசிடர் காருக்கு டெண்டர் விட்டாங்க! விதி மீறாமல் காண்டிராக்ட்டை பினாமிக்கு கொடுத்துக்கொண்டார்கள்! வடுமாங்காயை தேங்காய் என்று விற்று துட்டு பார்த்தார்கள்! ஓடாத நதிக்கு பாலம் போட்டார்கள்! சற்றே மிகை.தங்கத்திலே தண்ணிக்குழாய் இழுத்தாங்க! ஆண்டவன் விதித்தக் கட்டளைப்படி, எனக்குக் காண கிடைத்தத் துட்டட்டூழியத்துக்கு மணி விழா எடுத்தாச்சு. அந்தோ பரிதாபம்!!!

லஞ்ச லாவண்ய லீலாவினோதங்கள் நடக்காத மாநிலமே இல்லை போலும். அந்த அனுமார் வால் பட்டியலில் சிக்கிமுக்கி முனகுவது மஹராஷ்ட்டிரா சிக்கி விவகாரம், ஆயிரத்தில் ஒன்று. சிக்கி என்றால் கடலை மிட்டாய். மும்பை-பூனே ரயில் பயணத்தில் லோனாவாலா என்ற இயற்கை அழகு சொட்டும் இடத்தில், வாங்கிப்போவது, ஒரு வழக்கம். அதை வாங்கினாங்க ஒரு அம்மா. அவங்க பெயர் பங்கஜ் முண்டே. எக்கச்சக்கமாக ஓட்டு வாங்கி அமைச்சரனாவர், அவர். நல்ல காரியம் தான். அங்கன்வாடி சிறார்களுக்கு போஷாக்கு அளிக்க. ஆனால் பாருங்க. ‘த்ராட்லெ’ நல்லா மாட்டிக்கிணு, சிக்கியை மெல்லவும் முடியாமல், கடிக்கவும் முடியாமல் அவஸ்தை பட்றாங்க.

அரசு பணத்தில், 200 கோடியோ ரூபாய்க்களை அப்பன் வீட்டு சொத்து மாதிரி இரண்டே நாட்களில், டெண்டர், கிண்டர் இல்லாமலெ, அள்ளி வீசி, சிக்கி வாங்கி சிக்கிக்கொண்டார். முக்கி முனகினாலும், சிக்கினது சிக்கினது தான் போலும்! வேண்டப்பட்டவங்க தான் சப்ளையராம்! ஆனால், அவங்க கொடுத்த சிக்கியில் சகதி இருக்காம். [எப்டி வந்திருக்கும் என்று எனக்கு ஊகம் ஒன்று உண்டு. கேட்டா சொல்றேன்.] அவற்றை சாப்பிடலாகாது என்று அரசுடைய ஆய்வு சொல்கிறது என்று, அம்மணி ஆட்சி செய்யும் அரசே உயர் நீதி மன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறது. இந்த சகதி மர்மம் எல்லாம் அவர்களாக வெளிப்படுத்தவில்லை. ஏழை மாணவர்கள் தானே. சிக்கி தின்னு சிக் ஆனால் ஆகட்டும் என்று வாளா இருந்திருப்பார்கள்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது சந்தீப் அஹாரே என்ற பொதுநலவாதி, நம்ம ட் ராஃபிக் ராமசாமி மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவர் பொது நல வழக்குப்போட்டு, இந்த சகதி சமாச்சாரத்தை அவிழ்த்து விடவே, சினம் மிகுந்து, கொலாபாவாலா, கானடே என்ற இரு நீதிபதிகள், வழக்கின் தீவிரம் கண்டு, அரசை உண்மை விளங்க வைத்தார்கள். இந்த மாதிரி 20 வஸ்துக்கள் வாங்கப்பட்டனவாம். டெண்டர், கிண்டர் இல்லாமலெ, இந்த முண்டே அம்மை செய்தது பசங்களை கூண்டோடு கைலாசம் அனுப்பிவிட்டால், யார் பொறுப்பு?

ஆமாம். இந்த மேகி விவகாரம் சூடு பிடித்த போது, இந்திய பரிசோதனை நிலையங்கள் தூக்கி எறிந்த மேகியை சிங்கப்பூரும், இங்கிலாந்தும் நல்லா தான் இருக்கு என்று அனுமதித்தார்கள். நம்ம டெஸ்ட் ரிப்போர்ட்டை காட்டுங்கள் என்றால் காஷ்டமெளனம். அப்படின்னா, இந்த முண்டே புகழ் சிக்கிகளை எங்கே அனுப்பப்போறாங்களாம்????
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://photos1.blogger.com/blogger/4838/1326/1600/DSCN0598.0.jpg

உதவி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, July 22, 2015

ஜமாய் பாபு !!! தொடர் [3]

ஜமாய் பாபு !!! தொடர் [3]


இன்னம்பூரான்
ஜூலை 22, 2015

அந்தப்புரங்களில் கூடகோபுரங்களும் உண்டு; மாடமாளிகைகளும் உண்டு; வானளாவும் உப்பரிகைகளும், புஷ்பமாரி பொழியும் நந்தவனங்களும் உண்டு. எங்கும் காதலும், காமமும் ஆட்சி செலுத்துவதாக ஒரு மர்மமும் உண்டு. சீனியர், ஜூனியர், சப்ஜூனியர் ராணிமார்கள் கோலோச்ச நினைத்தாலும் அந்தப்புர ஓனர் ராசா ஒருத்தன் தானே. அவனால் எத்தனை ராணிமார்களை தாக்குப்பிடிக்க முடியும்?
நமது மாண்புமிகு மக்கள் மன்றத்தை ராசாவாக பாவித்தால், ஒதுக்கப்பட்ட உப்பரிகைகளுக்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் மக்கள் பிரதிநிதிகளால் எத்தனை வீண்செலவு! 47 ஜமாய் பாபுகள்! ஜாலினா ஜிம்கானா என்று விருந்தினர் விடுதிகளிலும், நக்ஷத்திர ஹோட்டல்களிலும், படா படா பங்களா ஒதுக்கப்பட்டபின்னும், ஜொலிக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் 'SD Bandi vs Divisional Traffic Officer, KSRTC & others' (Civil Appeal number 4064 of 2004) என்ற வழக்கில் தீர்வு கண்டபடி பழையன ஒரு மாதத்திற்குள் கழிந்தால் தான் புதியன புக முடியும் என்பதால், பல பங்களாக்களில், உரிமம் இழந்த பின்னும் குந்தியிருக்கும் மாஜிகளிடமிருந்து 47 ஜமாய் பாபுகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவான ரூபாய் 24 கோடியை வசூல் செய்ய வேண்டும். அஜீத் சிங் போன்ற மாஜி அமைச்சர்கள் போடாத சண்டை கிடையாது. எல்லாம் மக்கள் செலவில் சொகுசு வாழ்க்கை நடத்த ~சட்டவிரோதமாக. தயார் நிலையில் உள்ள இல்லங்களுக்கு செல்லாமல், ஐந்து நக்ஷத்திர சொகுசு வாழ்க்கை நடத்துபவர்களிடமிருந்தும் வசூல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு இல்லத்தில் பெரும்பாலோர் இப்படி வாசம் செய்கிறார்கள். என்னத்தை செய்ய?


உசாத்துணை

சித்திரத்துக்கு நன்றி: http://img1.myhomeideas.timeinc.net/sites/default/files/image/2008/new/1662790_living-room_xl.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, July 21, 2015

நாளொரு பக்கம்: 69

நாளொரு பக்கம்: 69


May 20, 2015

संरोहति अग्निना दग्धं वनं परशुना हतं ।
वाचा दुरुक्तं बीभत्सं न संरोहति वाक् क्षतम् ॥

The Forest Department draws long-term  Working Plans for the regeneration of forests laid waste either by potu cultivation wild fires lit by the nomadic tribes, cut down by smugglers and those legally harvested in cycles. Even vast tracts of forest cover can be regained. But, dear friends, rude words, once spoken, cannot be taken back. The hurt caused by such crude behavior will never heal. 

குறள் 127: 
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

மு.வ உரை:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.]

Literally translated, this Subhashitham says:

A forest burnt down by fire, or cut down by axe will eventually grow back. But wounds caused by harsh, inappropriate words will never heal.
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, July 20, 2015

பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [2]



பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [2]



இன்னம்பூரான்
ஜூலை 20, 2015

குடியரசு புரிவது என்றால் அது ஒரு வகையான ‘பினாமியா’ என்ற வினா எழுகிறது. தேர்தல் நடக்கவேண்டும்; அதை முறையே நடத்தவேண்டும்; அமங்கலமும் வேண்டா; திருமங்கலமும் வேண்டா; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ‘பினாமி’ போல் இல்லாமல், பொது நலனுக்கு பாடுபடவேண்டும். ஆனால் பாருங்கள். பஞ்சாயத்துத் தலைவிக்கு பினாமி அவருடைய கணவர் பல இடங்களில். முனிசிபல் கெளன்சிலருக்குக் கைத்தடிகள் மெய்/பொய் காப்பாளர்கள். துட்டு புரளும். எம். எல். ஏ என்றால் தடபுடல் தான். அழுத குழந்தை வாயை மூடும். அடுத்த வீட்டுக்கிழவி சாபமிடுவாள். இந்த கரை வேட்டிகள் வெட்டியா படுத்தற பாடு, பல வருஷங்களாக பிரசித்தம். கரை மாறும். உறை மாறாது. எம்.பி. என்றால், அவர் எதிர்வீட்டு எதிராஜுவாக இருந்தாலும், ஆகாயத்துக்கும் அந்தரத்துக்கும் குதியா குதிப்பார். பார்லிமெண்ட் காண்டீனில் வயிறார உண்டு களிப்பார்கள். சுத்துப்படை படுத்தற பாடு இந்த பரமனுக்கே பொறுக்காது. இதற்கும் ஒரு மேல்சாதி ஒன்றுண்டு. அது தான் அமைச்சரின் அருமந்த காரியதரிசி குழு. மணலை கயிறாக திரித்து, தக்ளியில் அதை நூல் நூற்று, சிட்டம் போட்டு காந்திஜியின் கதர் என்று விற்று விடுவார்கள். 

கீர்த்தனாரம்பம் இப்படி இருக்கையிலே, வியத்தகு நிகழ்வு ஒன்று எமக்கு மன மகிழ்வு அளித்தது,எமது அன்பார்ந்த பந்து மித்திர சோதரர்காள்! மொகல்சராய் ஒரு பெரிய ரயில்வே சந்திப்பு. ஜாமான்கள் பொட்டிப்பொட்டியாக, மலைபாம்புகள் போல வந்து போகுமிடம். அவ்விடத்து பிரதிநிதி பப்பன் சிங் செளஹான் தன் எல்லைக்குட்பட்ட அலிநகருக்கு ஈத் வாழ்த்துக்கள் கூற, கெளன்சிலர் மூர்ஷிதா பேகத்தின் கணவருடன் போய், வசமா மாட்டிக்கிட்டாரு. அங்கு மின்வெட்டும், மின் தட்டுப்பாடும் அன்றாட வாடிக்கை. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி இல்லையா? கிராமப்புறம் என்றால் இளப்பம் தான். தருமமிகு சென்னை மால் தோறும் கண்ணைப்பறிக்கும் ஜகஜ்ஜால லாந்தர்கள். தாம்பரம் தாண்டினா பம்பரமாக சுற்றினாலும் மருண்ட உலகமே. அப்டின்னா உத்தர் பிரதேச கிராமம் என்றால், அதலபாதாளம் தான். ஆனால் இந்தக்காலத்து ‘விழிப்புணர்ச்சி’ குடிமகன் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறான். ஆக மொத்தம், அலிநகர் மாந்தர்கள் கேட்டது, ‘ஓய்! ரொம்ப நாளாக அந்த விவசாய கனெக்ஷனை அவிழ்த்து விட்டு நகரம் நோக்கி நகரும் இணைப்பு கொடுங்கள். அலி நகர் மொகல்சராயில் உள்ள பேட்டை தானே என்று கரடியா கத்தறோம். கம்னு இருக்கேயே. சொல்லு பதில்.’ என்று அதட்டிக்கேட்டவுடன், சினம் மிகுந்த பப்பன் சிங் செளஹான் எம்.எல்.ஏ. அவர்கள், ‘நான் தான் கலைக்டர் கிட்டேயும், பொறியாளர் கிட்டேயும் சொல்லிட்டினே.’ என்று திருப்பி அதட்ட, கோபாவேசம் தலை தூக்க, மக்கள் அவர்கள் இருவரையும் கயிற்றால், அமர்ந்திருந்த நாற்காலிகளில் கட்டி விட்டனர். நாலுமணி நேரம் கேரோ! கலைக்டர் கிட்டேயும், பொறியாளர் கிட்டேயும் கதறினார்கள். ஊஹூம். நோ ஹெல்ப். அப்றம் போலீஸ் வந்து சமரசம் செய்தார்களாம். ஆனால் பாருங்கள், பந்து மித்திர சோதரர்காள் ! அந்த பப்பன் சிங் செளஹான் எம். எல். ஏ. ஹிந்து இதழிடம் சொன்ன பொன் வாக்கு, “ நான்கு மணி நேரம் கட்டுண்டு இருந்தோம். உதவி வரவில்லை. சட்டசபையில் புகார் செய்வேன்!!!!!!!!!”. டொண்டானுக்குண்டொய்!!!

சர்வ வல்லமையுடைய பாரதமாதாவே! உனக்கு இத்தகைய மைந்தர்கள் தேவையா???
-#-

Sunday, July 19, 2015

நாளொரு பக்கம் 68

நாளொரு பக்கம்  68


Sunday, the 9th thMay 2015 

"Little strokes fell great oaks."
-Benjamin Franklin
Epigrams, Quotes, Proverbs, Witticisms and such assembly of words share the trait of speaking the truth and also of packing it in a bitter pill; when they utter the untruth for the sheer devilry of confounding the Reader, as Ambrose Bierce does, concealing it in a cake, they make for contrarian statements. Luckily for us, Benjamin Franklin, Statesman Extraordinary, Scientist-at -large, indefatigable experimenteer and Wisdom Surround of USA makes a crucial point in an epigram of four words.

எறும்பூர கல்லும் தேயும். The very rock on which armies of ants travel for long will be somewhat eroded in the track. சிறுதுளி பெருவெள்ளம். This is more of a positive statement. Coming back to Benjamin Franklin, we may be able to achieve great things by the simple habit of being at it without let or hindrance incessantly. Bricklaying is an excellent example. We may be ably tumble forth Humpty Dumpties and totally incapicitate them in slow motion, shaking the very foundation slowly, but, steadily.

In short, Be Aware. A series of small steps can topple a heavy weight.   

-x-


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

அந்தோ பரிதாபம்!!! தொடர் [5]


அந்தோ பரிதாபம்!!! தொடர் [5]



இன்னம்பூரான்
ஜூலை 19, 2015

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்/ மாண்டார் வருவரோ மாநிலத்தீர் ...’ என்று நல்வழியில் ஒளவைபாட்டி உணர்த்தினார். தானே நாண்டு கொண்டு மாண்டவர்களை பற்றி பரிதாபப்படுவதைத் தவிர, யாது செய்ய முடியும்? கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் ஒரு சிறுமி பூப்படைந்தாள். உதிரப்போக்கு அவளை நிலைகுலைய செய்தது. அத்தனை திகில்! மென்மையாக உணர்த்த யாரும் இல்லை போலும். தாங்கொண்ணா மன அழுத்தம் உந்த, தன்னை மாய்த்துக்கொண்டாள். இதன் பொருட்டு, சிந்தித்த ஒருவர் துவக்கிய Befriender International அமைப்பு எத்தனையோ தற்கொலைகளை தடுத்து நிறுத்தி, அந்த மாந்தர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. சென்னையிலும் அத்தகைய அமைப்பு பற்பல வருடங்களாக, இந்த பணியை சிறப்புற செய்து வருகிறது. எனினும், போன வருடம் 16,122 நபர்கள் [16.2%: இந்தியா] தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டனர். எனக்கு அரைகுறையாக தெரிந்தவர் ஒருவரும் தன்னை மாய்த்துக்கொண்டார். அந்த 16, 122 நபர்கள் வறுமை, கஞ்சா, சாராயம் போன்ற லாகிரி, இல்லறச்சிக்கல், தீரா வியாதி என பல காரணங்களால் உந்தப்பட்டனர் என்று ஆய்வு கூறுகிறது. காதல் தோல்வி: 506. தற்கொலை செய்து கொண்டவர்களில், பெரும்பாலோர் எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. 16,122 ல் 11,738 நபர்களுக்கு வருட வருமானம் ஒரு லக்ஷத்துக்குக் குறைவு; அவர்களில் 3,880 நபர்கள் அன்றாடம் காய்ச்சிகள்; 166 நபர்கள் திவாலானவர்கள். 5,155 பெண்மணிகளில், 2,143 பெண்மணிகள் இல்லத்தரசிகள். என்ன அரசியோ! 36 நபர்களுக்கு சீதனக்கொடுமை; 853 மாணவர்கள் தற்கொலை; அவர்களில் 247 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள். 70% தற்கொலையாளர்கள் திருமணம் ஆனவர்கள். 552 நபர்கள்  லாகிரி சாவு என்று ஒரு ஆய்வு. எய்ட்ஸ் பொருட்டு 18 நபர்கள் தற்கொலை. 
தற்கொலை தலைநகரம் சென்னை, பின்னர் பெங்களூரு, டில்லி, மும்பை.

சரி, தடுக்க/ கட்டுப்படுத்த/ புத்துயிர் கொடுக்க என்ன செய்யலாம். ‘ஸ்நேகா’ என்ற புகழ் வாய்ந்த அமைப்பு சென்னையில் நாட்தோறும், இடை விடாமல், நேரிலும், தொலை பேசி மூலமாக ஆலோசனை வழங்கி ஆயிரக்கணக்கான தற்கொலைகளை தடுத்து உளது.

ஸ்நேகா சினேகத்துடன் சொல்வதை கேளுங்கள்.
*

விலாசம்:

SNEHA
11, Park View Road,
R.A. Puram,
Chennai-600028. 

Helpline Phone
91-44-2464 0050 [HOT LINE]
91-44-2464 0060

Helpline Email
help@snehaindia.org

Admin E-mail
admin@snehaindia.org

சித்திரத்துக்கு நன்றி: http://ivanhanigan.github.io/images/sneha-ad.jpg


-#-

கஜானா காலி !!! தொடர் [1]

அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]
ஜமாய் பாபு !!! தொடர் [1]
கஜானா காலி !!! தொடர் [1]
பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]
இன்னம்பூரான்
ஜூலை 17, 2015
*

.

அன்றாடம் பற்பல தகவல் களஞ்சியங்கள் கூறையை பிரித்து கொட்டுவதால், மேற்கண்ட தலைப்புகளில், சுவாரஸ்யமானவை தந்தி போல் சுருக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்படும். சட்புட்னு எழுதுவதால், உசாத்துணை மிஸ்ஸிங் ஆகலாம். இஷ்டப்பட்ட போது வரும்.

இங்கே:



கஜானா காலி !!! தொடர் [1]
இன்னம்பூரான்
19 07 2015

எங்கே போச்சு அந்த 38 கோடி ரூபாய் வரிப்பணம்?

ஆட்டைத்தூக்கி மாட்டிலெ போட்டுட்டு, மாட்டைத்தூக்கி காட்டுப்பன்றி மேல் போட்டானாம் என்பது நவீன சொலவடை. இந்த பாழாய் போன ஆடிட்டர் ஜெனெரல் வருஷம் தவறாமல் என்ன தான் இடித்துரைத்தாலும், இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் அரசு கரன்ஸியை காய் மறைவா, இலை மறைவா, துஷ்பிரயோகம் செய்து விடுவார்கள். வாய் கிழிய சால்ஜாப்புக்கள் ஊற்றெடுக்கும். தப்புத்தண்டா செய்தவர்கள் எனப்படும்:  முகம்மது அலி, சுரேஷ் கல்லுமாடி, ஆனானப்பட்ட ராசாக்கள், தேனொழுக பேசுபவர்கள், பெயரளவில் கிருஷ்ண பரமாத்மாக்கள், தாத்தா பாட்டிகள்,கதிரோனதிபதிகள் போன்றோரை பாருங்கள். தலை நிமிர்ந்து, புன்னகைப் பூத்துப் போஸ் கொடுப்பார்கள்.  சரி, பிலாக்கணம் போதும். விஷயத்துக்கு வருவோம்.

கோவா மாநிலம் ஒரு சமஸ்தானம் மாதிரி. யதேச்சையதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். தமிழ்நாடு போன்ற மா மாநிலங்கள் என்ன வாழ்ந்து விட்டன என்று கேட்காதீர்கள். உங்களுக்குத் தெரியாததா?  கோவாவில் அதிகம் பேசப்படும் கொய்யா, அடுத்த வருடம் நடக்கப்போகும் தேசீய விளையாட்டு பந்தயங்கள். அதற்கு அதிகப்படியாக 285 கோடி ரூபாய் வேணும்னு மத்திய அரசுக்கு மனு போடப்பறங்களாம், கஜானா காலி என்ற கெஞ்சலோடு.  
ஏற்கனவே பெற்றுக்கொண்ட மான்யம் 110 கோடி + 12 கோடி + 70 கோடி + மான்யம் போன்ற கடன் 28 கோடி. கொடுத்தக் காசுக்குக் கணக்குக் கொடுக்கவில்லை என்பதால், 2012-13க்கு பிறகு நோ மான்யம். சமய சந்தர்ப்பம் தெரியாமல் இந்த ஆடிட்டர் ஜெனெரல் " 38 கோடி ரூபாயை அந்த விளையாட்டு வாரியத்துக்குக் கொடுக்காமல், 11% வட்டிக்கு 50 கோடி ரூபாயை கடன் வாங்கச் சொன்னது ‘இன்னா நாயம்?’ என்று எளுதிப்போட்டு வத்தி வச்சுட்டார் என்று அவர் மேலே காட்டம். தேசீய விளையாட்டு வாரியமோ 324 கோடி செலவழிச்சுட்டு, வழிச்சுக்கிணு நிக்கறொம் என்று ஓலமிடுகிறார்கள். 

எங்கே போச்சு அந்த 38 கோடி ரூபாய் வரிப்பணம்? மர்மம் நீடிக்கிறது.
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com