Tuesday, January 6, 2015

என்னத்தைச் சொல்ல?! ~7: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [3]

என்னத்தைச் சொல்ல?! ~7: 




ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [3]

இன்னம்பூரான்
ஜனவரி 6, 2015

பல வருடங்களுக்கு முன் மும்பையில் சொற்பசம்பளத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் ஒரு ஆபத்பாந்தவன் வந்து சேர்ந்தார். அவர் நடத்தும் தர்மஸ்தாபனத்துக்கு சில ஆயிரங்கள் காசோலை மூலம் நன்கொடை அளித்தால், கறாராக அதை முழுதும் காசாகவே திருப்பிக்கொடுப்பேன். உங்களுக்கு வரிச்சலுகை. எனக்கு நிறமாற்றம் (கருப்பிலிருந்து வெள்ளை). எப்படி ஐடியா என்று கொக்கரித்தார். இது அதர்மமில்லையோ என்ற என்னை புழுவைப்போல் துச்சமாகப் பார்த்தார். பத்து வருடங்கள் முன்னால் இந்திய மக்கள் ஆலோசனை மன்றம் துவக்கவேண்டும் என்ற வீராப்புடன் மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் தரமுயர்ந்த தன்னார்வக்குழுக்களுடன் கலந்தாலோசனை செய்தேன். அடிப்படை ஊழியம் செய்ய ஆள் கிடைக்கவில்லை. ஆனால் யாரோ பதினொரு ஆசாமிகளை கொணர்ந்து என்ஜீவோ சிறகு சொருக பல சில்லறைகள் தயாராக இருந்தன. போட்ட கைப்பணம் போச்சு என்று நானும் வாகை சூடா மன்னனாக இங்கிலாந்து திரும்பினேன். எதற்கு இந்த பீடிகை என்றா கேட்கிறீர்கள்?

இதோ. இந்தியாவில் கோடிக்கணக்கான ரூபாய்களில் புரளும் 25 லக்ஷம் தன்னார்வக்குழுக்களில் 10 % தான் சட்டத்திற்கு உட்பட்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்கள் என்ற இந்திய புலன் விசாரணை கழகத்திடம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ஹெ.எல்.டத்து அவர்களின் தலைமையில்  அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு, ‘எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தொகுக்கவும்.பிறகு, உங்கள் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம். இந்த தன்னார்வக்குழுக்கள் அவர்களை ஆவணப்படுத்திய மையங்களுக்கு முழுமையாக கணக்கு வழக்கு தரவேண்டும் என்ற விதி என்ன ஆனது? அப்போது தான் வெளிப்படுத்தல் ஒழுங்காக நடைபெறும்.” என்று அறிவுரை அளித்தது. 

புள்ளியியல் கூறுவது: ஒன்பது மாநில தன்னார்வக்குழுக்களிலிருந்து தகவல் இல்லை. தமிழ் நாடும் அவற்றில் ஒன்று. 20 மாநிலங்களில் 23 லக்ஷம் குழுக்களில் 2.23 லக்ஷம் குழுக்கள் தான் கணக்கு வழக்கு அளித்தன.கிட்டத்தட்ட வருடம்தோறும் 950  கோடி அரசு மான்யம் பெறும் குழுக்கள் 2002 -2009 ல் பெற்ற மான்யம்: 6654  கோடி ரூபாய். மத்திய அரசின் நேரடி அரசாட்சி பெறும் பிராந்தியங்களில், டில்ல் பதில் சொல்லவில்லை மற்றவையில் கணக்குக் கொடுத்தவர்கள்: நூறில் ஒன்று. (1%). 22 ஆயிரம் குழுக்கள் பெற்ற வெளிநாட்டுக்கொடை $ 3.2 பில்லியன்.

இதெல்லாம் தோண்டித்துருவிய பெருமை எம்.எல். சர்மா என்ற வழக்கறிஞருக்கு உரியது. ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை என்ற அன்னா ஹஜாரேயின் தன்னார்வக்குழுவை பற்றி அவர் விவரங்கள் கேட்க, இரண்டு வருடங்களுக்கு முன் உச்ச நீதி மன்றம் புலன் விசாரணைக்கு ஆணையிட, இத்தனை தேள், புழு, பூரான், நட்டுவாக்கிளி எல்லாம் தெரிய வந்தது.
எனக்கு என்னமோ சம்சயங்க:
  1. எந்த தைரியத்தில் அத்தனை அழுச்சாட்டியம் நடந்தது?
  2. உடன்கட்டை ஏற்றப்படுபவர்கள் யாரார்?
  3. கேட்க வேண்டியவர்கள் செத்து விட்டார்களா?
  4. தமிழ் நாட்டு தன்னார்வத்துக்கு தெனாவட்டு ஏன்?
  5. இந்த தன்னார்வக்குழுக்களை சீஏஜியை விட்டு தணிக்கை செய்தாலாகாதா?
அடுத்த ஐந்து கேள்விகளை நீங்கள் தான் கேட்கணும்.‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்று குந்திக்கிணு இருந்தா எப்படீங்க!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.pambazuka.net/images/articles/500/hakima_abbas/gado_ngo_cashcow.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, January 5, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:4: ஒரு முடங்கல்: புதுமைபெண் 1

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:4
ஒரு முடங்கல்: புதுமைபெண் 1
இன்னம்பூரான்
05 01 2015

முற்றும் துறந்து பற்றறவராக தன் கொள்கைக்காகவே வாழ்ந்த ஒரு சான்றோன் எழுதிய கடிதம். அவரது முகவிலாசம் கடிதத்திலேயே இருக்கிறது. இது ஒரு பதில் கடிதம். அந்த பெண் எழுதிய வினாக்கடிதம் காணக்கிடைக்கவில்லை. இந்தக்கடிதத்தில் அதன் உள்ளுறை இதில் இருப்பது போதுமே. அவர் ஆற்றிய உரைகளை கேட்டிருக்கிறேன்.சாதாரணம். ஆனால் நம்மை கவர்ந்து விடுவார். அவர் உள்ளதை உள்ளபடி எளிய தமிழில் இயல்பான,யதார்த்தமான, எழுத்தறிவில்லாத பாமர்களும் புரிந்துகொள்ளும் தரத்தில், அருகே நின்று அளவளாவது போல இருக்கும் உரையாற்றல், அவரது. மடலின் சில சொற்களை, சொல்லாக்கங்களை, குறிப்பால் உணர்த்தியுளேன். நுட்பம் அறிக.

தற்காலம் நானிருக்கும் இடத்தில் ‘அல்லி ராஜ்யம்’ தான் என்றால் கேலி அன்று; சற்றே அவர்களுடன் களங்கமில்லாமல் பகிர்ந்து கொள்ளும் மிகை. எல்லாருமே முதியவர்கள். 90 வயதைக் கடந்த மூதாட்டிகள் புன்னகையோடு வலம் வருகிறார்கள்.ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் நூல்கள் எழுதியுள்ளார்கள்;சிலர் கையில் ஐபேட். பாகவதமும், திருப்பாவையும், திருவெம்பாவையும்.  பெரும்பாலும் எல்லாருமே மெத்தப்படித்தவர்கள். முனைவர்களும் உளர். மேற்படி கடிதம் எழுதப்பட்ட காலகட்டத்தில், இவர்கள்இளம்பெண்கள்,சிறுமிகள்,குழவிகள்.  இவர்களுக்கும், வினாக்கடிதம் எழுதிய பெண்ணுக்கும் பின்புலம் வேறா?
*
அன்புமிக்க............
உனது முடங்கல் தடங்கலின்றிக் கிடைத்தது. கடிதத்தின் உள்ளடக்கத்தைச் சுவைத்தேன்; மேலும் சுவைத்தேன். என் நெஞ்சம், உணர்ச்சியை இன்பத்தில் தோய்த்துத் தோய்த்து எடுத்தது."பழம்பெரும் தமிழ்ப்பண்பாட்டில் பெண்களைப் பற்றிய கருத்து என்ன? கண்ணோட்டம் என்ன? சாதாரண மக்களிடையில், தலைமுறைத் தத்துவமாக, பெண்களைப்பற்றி இருந்துவரும் மனப்பான்மை என்ன? சான்றோர்கள் பெண்மையைப் பற்றி, குறைத்துப் பேசுகிறார்களா? கூட்டிப் பேசுகிறார்களா? சரியாக, முறையாகப் பேசுகிறார்களா?"

அன்பே! இவ்வாறு உனது கடிதத்தில் கேள்விமேல் கேள்வி கேட்டிருக்கிறாய். 
இன்று உலக முழுவதிலும் பெண்கள் நிலைமை என்ன? பாரத நாட்டில் பெண்கள் வாழ்வு எப்படி? தமிழகத்தில் பெண்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஜனநாயகம் என்றும், சமதர்மம் என்றும், சமாதானம் என்றும் உலகமெங்கும் முழங்கப்படுகிறது அல்லவா, இன்று? இந்த கோஷங்களுக்கும் பெண்களுக்கும் என்ன ஒட்டு? என்ன உறவு!பெண்களுக்குத் தனிப் பிரச்சினைகள் உண்டா? உண்டென்றால் அவைகளுக்கு பைசல் காண பெண்களுக்கு மட்டும் தான் பங்கா? அல்ல ஆண்களுக்கும் பங்கு உண்டா? பெண்ணுரிமைக்காக, பெண் விடுதலைக்காகத் தனி இயக்கம் வேண்டுமா? தனி ஸ்தாபனங்கள் வேண்டுமா? உலகத்தில், இந்தியாவில், தமிழகத்தில் பெண்கள் இயக்கம் எந்த நிலையில் இருக்கிறது? என்னென்ன பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது?  இவ்வாறு, உனது அன்புக் கடிதத்தில் கேள்வி மாரி பொழிந்திருக்கிறாய். என்றும் இல்லாதவாறு, என்னைக் கேள்வி மழையில் தள்ளி, திக்கு முக்காடச் செய்திருக்கிறாய்.  இதுகாறும் தீட்டிய கடிதங்களில், நீ குடும்பக் கதைகளை எழுதுவாய்; உனது படிப்பையும், பரீட்சைகளையும் பற்றி எழுதுவாய்; ஆடல் பாடல்களைப் பற்றி எழுதுவாய்; கிடைத்த 'மார்க்கு' களையும் தேறிய தரத்தையும், பெற்ற பரிசுகளையும் பற்றி எழுதுவாய்; நீயும் உனது தோழியர்களும், பொழுது போக்குக்காக அவ்வப்போது நடத்தும் இனிய உரையாடல்கள் பற்றியும், அவற்றில் நீர்க்குமிழிபோல் தோன்றி மறையும் செல்லச் சண்டைகள் பற்றியும் எழுதுவாய். இவைகளையெல்லாம், நான் படிக்கப் படிக்க சுவை சொட்ட, இன்பம் சொட்ட எழுதுவாய். இது உனது வழக்கம். ஆனால், இன்று நான் பெற்ற உனது கடிதமோ, முன்மாதிரியானதல்ல. உன் உணர்ச்சியில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கடிதம் இது. அன்பே! உலகச் சரித்திரத்தில் பெண்கள் இயக்கம், எப்படித்தோன்றி வளர்ந்து வந்திருக்கிறதென்று வினா எழுப்பி, விடை கேட்கிறாய். சகல துறைகளிலும், சர்வ வியாபகமாய்ப் பெண்கள் இயக்கம் எப்படிப் பரவிப் படர்ந்து நிற்கிறதென்று என்னிடம் கேட்கிறாய். இவைகளைப்பற்றிய எனது அறிவையும், அனுபவத்தையும் பற்பல கேள்விகளால் நயமாகக் கிண்டிவிட்டு, விடை காண முயல்கிறாய். என்றைக்கும் இல்லாத புதுமையாக நீ சரமாரியாகக் கேள்விகள் கேட்டும் கடிதம் எழுதி யிருக்கிறாய். உலகம் தழுவிய ஒரு பெரும் இயக்கமான, பெண்கள் இயக்கத்தைப்பற்றிக் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறாய். தேனென இனிக்கும் வகையில் சுவை படக் கடிதம் எழுதியிருக்கிறாய். இவை யாவற்றிற்கும் மேலாக, பொட்டு வைத்தது மாதிரி, மனித இனத்தின் செம்பாதியும், உன் னினமும் ஆகிய பெண்ணினத்தின் பிரச்னைகளை யெல்லாம் கிளறி, முன்னிறுத்தி எனது பதில்களில் என்ன தீர்வுகள் பிறக்கின்றன என்று பார்க்கவும் துணிகிறாய்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல், அன்பே இன்றையப் பெண்கள் இயக்கத்தில், நவீனப் படிப்புப்படித்த பெண்களின் கடமை என்ன, சொல்லுங்கள்! என்றும் கேட்டு எழுதி யிருக்கிறாய்.
உனது கடிதத்தை, குறிப்பாக, உனது கேள்விகளுக்குப் பதில் சொல்லும் உனது எழுத்துப் பாணியை, நினைக்க நினைக்க ஏற்பட்ட எதிரொலியைத்தான், உனது கடிதத்தைப் படித்ததும் எனது நெஞ்சம் இன்பக் கடலாடுகிறது என்று தொடக்கத்தில் படம்பிடித்துக் காட்டினேன்.
இவ்வளவு தூரம் உனது கடிதத்தைப் பற்றியே எனது மன வெழுச்சியைக் கூறினேன். இது இருக்கட்டும். அன்பே! உனது வேண்டுகோள்படி பெண்கள் இயக்கத்தின் பல்வேறு கூறுகளைப் பற்றி உனக்கு அடுத்த கடிதத்திலிருந்து எழுதுவேன். பலப்பல கடிதங்கள் எழுதுவேன். இடையீடின்றித் தொடர்ச்சியாக எழுதுவேன். எனவே 'ஜன சக்தி' வார மலரை ஒரு இதழ்கூடத் தவறவிடாமல், கட்டாயம் சேர்த்துவைப்பாய் என்று நம்புகிறேன்.  இனி இந்தக் கடிதத்தில், அறிமுகமாக உனக்குச் சில சொல்ல விரும்புகிறேன், நினைவாற்றலும், சிந்தனைத் திறனும் படைத்த நீ, கருத்தில் ஊன்றி வைத்துக்கொள்வாய் என்பது உறுதிசொல்கிறேன், கேள்.
படித்த, படிக்கிற யுவதிகளில் பலர் எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? கடற்கரையில் விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைகள் துள்ளிக் குதித்து, ஆடி, இங்கும் அங்கும் ஓடி, அங்கு ஒரு அழ காண சிப்பியையும், இங்கு ஒரு மெல்லிய கடற்பாசியையும் கண்டு மகிழ்வதைப்போல் வாழ்கிறார்கள்.
ஆனால், நீ அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவளல்ல. அறியப்படாமல் பரந்து விரிந்து கிடக்கும் பெருங்கடலை அறிய முயல்கிறாய் நீ. அதனால்தான், விடைவேண்டி, ஆயிரத்தெட்டுக் கேள்விகளை என்னிடம் கிளப்பி இருக்கிறாய். இலட்சியம் இல்லாத ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, திசையறி கருவியில்லாத கப்பல் என்ற உண்மை உன் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது என்பதை நான் காண்கிறேன். கண்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன். அன்பே! எனக்கு மிகப்பழக்கமான ஒரு பெரிய டாக்டரிடம் ஒரு தடவை ஒரு கேள்வி கேட்டேன். ஒரு சிறந்த மருத்துவரிடம் என்னென்ன பண்புகள் இருக்கவேண்டும் என்பது என் கேள்வி. அவர் சொன்னார்:
"நல்ல வைத்தியனிடம் மூன்று பண்புகள் இருக்கவேண்டும். ஒன்று, தன்னலங் கருதாமலும் உள்ளதை மறைக்காமலும் இருக்கும் உணர்வு; இறந்து, நோயாளி படுகிற துன்பத்தையும் வேதனையையும் தீர்க்க விரும்பும் பரிவு; மூன்று, நோயின் தன்மையையும் அதனால் வரும் கேட்டையும் பகுத்து அறிந்து, அதைக் குணப்படுத்தும் மருந்தை அறிகிற அறிவு" என்று. இதை உன் நினைவுக்குக் கொண்டுவருகிறேன். ஏன்! நான், மேலே காட்டிய நல்ல டாக்டரின் பண்போடு சமுதாய வாழ்வில் பெண்ணினத்தின் பிரச்னைகளையும் பைசல்களையும் தெரிந்து புரிந்து காட்டுவதில் எந்த அளவு வெற்றி பெறப்போகிறேன் என்பதை நீதானே முடிவு கட்ட வேண்டும்? அதற்காகத்தான்.

அன்பே! ஏடுகளையும் நூல்களையும்போல் எனது கடிதமும் ஓரளவுக்குத்தான் உனக்கு உதவி செய்ய முடியும். மற்றப் பெரும் பகுதி, அனுபவ வாயிலாக அறிய வேண்டியவைகளே. கைகாட்டி மரம் உனக்கு வழியைச் சுட்டிக் காட்டமுடியும். ஆனால் நீ போகவேண்டிய இடத்திற்கு உன்னைக் கொண்டு சேர்க்க அதனால் முடியாது.
இவைகளை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, எனது கடிதங்களை நீ ஊன்றிப் படிப்பாய் என்று நம்புகிறேன். உனது சகோதரிகளையும் படிக்கவைப்பாய் என்பதில் எனக்கு நம்பிக்கை யுண்டு.
இந்தக் கடிதம் உனக்கு எந்த அளவு சுவைக்குமோ எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்த கடிதத்தை நீ ஆவலோடு எதிர்பார்ப்பாய் என்று மட்டும் என்னமோ என் மனதில் படுகிறது. 

-#-

Sunday, January 4, 2015

இடை வேளை ‘மடல்பெரிது தாழை மகிழினிது...’


ஒரு இடை வேளை பதிவு. 

*
முனைவர்.பெருமாள் முருகன் அவர்கள் நாமக்கல் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நாட்டுப்புறவியல்த் துறையில் புகழ்பெற்ற் இவரது கட்டுரைகளுள் சிம்கார்டுக்குத் தமிழ்ச்சொல் என்ன? என்னும் கட்டுரை பெரிதும் பேசப்பட்டதாக அமைகிறது.'மாதொரு பாகன்' நினைவுக்கு வருகிறதா?
இன்ன்ம்பூரான்
04 01 2015

*

தமிழ் அறிக-8 (சிம்கார்டுக்குத் தமிழ்)

சிம்கார்டுக்குத் தமிழ்ச்சொல் என்ன? 

சில மாதங்களுக்கு முன் எனது செல்பேசிக்கு நான்கைந்து குறுஞ்செய்திகள் வந்திருந்தன. எல்லாம் ஒரே விஷயத்தைச் சொல்வன. யாரோ ஒருவர் அனுப்பியதை அப்படியே முன்னனுப்பியவை. ஆனால் தமிழரின் மான உணர்ச்சியைத் தூண்டிப் பார்க்கும் செய்தி அது.  ‘நீ செம்மொழித் தமிழனா? அப்படியானால் சிம்கார்டு என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன? உடனே சொல்’ என்பதுதான் செய்தி.
செம்மொழித் தமிழன் என்னும் உணர்விருந்தால் இன்னும் எத்தனையோ சொற்களுக்குத் தமிழ்ச்சொல் தெரிந்திருக்க வேண்டும். ’செயல்முறைத் தமிழ்’ என்னும் பாடம் ஒன்றைத் தமிழிலக்கியம் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு நடத்திக் கொண்டிருக்கிறேன். அப்பாடத்தில் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் கண்டறிதல் என்னும் பகுதி ஒன்று உள்ளது. அதை நடத்தியபோது இந்தக் குறுஞ்செய்தி பற்றிச் சொன்னேன். உடனே மாணவர்கள் நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பல சொற்களுக்குத் தமிழ்ச்சொல் என்னவென்று கேட்கத் தொடங்கிவிட்டனர். நீங்களே கண்டுபிடியுங்கள் என்று சொல்லிச் சமாளித்தேன்.
சார்ஜர் என்பதற்கு என்ன தமிழ்? வின்னர், ரன்னர் என்பவற்றிற்குத் தமிழ் என்ன? மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றுக்குத் தமிழில் சொற்கள் உண்டா? பைக், ஸ்கூட்டர், மொபெட்  என்பவற்றிற்கெல்லாம் தமிழ் யாது? இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. சைக்கிளுக்குத் தமிழில் என்ன எனக் கேட்டேன். ‘மிதிவண்டி’ என்று கத்தினார்கள். நல்லது, சைக்கிளில் உள்ள ஹேண்டில் பார், கேரியர், மக்கார்ட், செயின், பிரேக், பால்ரஸ், பெடல் எனக் கணக்கிட்டால் நூற்றுக்கு மேல் வரும் பாகங்களுக்கெல்லாம் தமிழில் சொற்கள் உருவாக்கி இருக்கிறோமா? யாராவது உருவாக்கிக் கொடுத்தால் நாம் பயன்படுத்தத் தயாராக உள்ளோமா? ஏதாவது புதிய சொல் உருவாக்கினால் அதைக் கேட்டு ஏளனமாகச் சிரிக்கத்தான் நம்மால் முடியும். என்றெல்லாம் என் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துக்கொண்டேன்.  

சிம்கார்டு என்பதற்குத் தமிழ் என்ன என்று கேட்டு எனக்கு வந்த குறுஞ்செய்திகளுக்கு மதிப்புக் கொடுத்துத் தீவிரமாக யோசித்துப் பார்த்தேன். ‘பேசிப் பயனர் அட்டை’ என்பதை உருவாக்கி என் பிள்ளைகளிடமும் சொல்லி ஒப்புதல் வாங்கி எல்லாருக்கும் இச்சொல்லைத் தெரிவித்தேன். பேசி என்பதை இன்று பெயர்ப் பொருளில் பரவலாக வழங்குகிறோம். தொலைபேசி, செல்பேசி ஆகியன வழக்குக்கு வந்து நாட்களாகி விட்டன. இதை மேலும் சுருக்க முடியுமா என யோசித்தேன். வெகு சுருக்கமாக இருக்கும் கலைச்சொல்தான் நிலைபெறும்.

‘பேசிப் பயனர் அட்டை’ என்பதை இன்னும் சுருக்கிப் ‘பேசியட்டை’ என்று சொல்லலாம் எனத் தோன்றியது. பேசிப் பயனர் அட்டை என்பதில் மூன்று சொற்கள் இருக்கின்றன. ‘பேசியட்டை’ என்பதில் இரண்டு சொற்கள்தான். அவையும் இடையில் ‘ய்’ என்னும் உடம்படுமெய் ஏற்று ஒரே சொல் போல வடிவம் பெற்றுவிட்டன.  ஒருசொல் நீர்மைத்தாய் உருவாக்கப்படும்  கலைச்சொற்களே சிறந்தவை. அப்படி வடிவம் கொண்ட பேசியட்டை என்பதையே சிம்கார்டுக்கு நிகரான தமிழ்ச்சொல்லாகப் பயன்படுத்தலாம்.

என் சொல் உருவாக்கம் சரியா? தெரியவில்லை. ஆனால் இது ஒரு முயற்சி. பேசியட்டை என்பதையும் எல்லாருக்கும் குறுஞ்செய்தி வழியாகத் தெரிவித்தேன். செம்மொழித் தமிழனா என உணர்ச்சி பொங்க வினா எழுப்பியவர் எவரும் இந்த விடையைப் பற்றிக் கவனம் செலுத்தவில்லை.  சொல் உருவாக்கம் பற்றிக் கருத்தும் தெரிவிக்கவில்லை. செய்தியை யாருக்கும் முன்னனுப்பவும் இல்லை. இதுதான் செம்மொழித் தமிழன் இயல்பு.
                                                                             ---------------
பி.கு. நம் மின் தலிழ் மாதிரி இல்லை. பல கருத்துக்கள் பின்னூட்ட்ங்களில் பயின்று வரும். அதில் ஒன்று இங்கே:


அமர பாரதி சொன்னது…
பெருமாள் முருகன் சார்,

இந்த பின்னூட்டத்துக்கு தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் தோன்றியதை எழுதுகிறேன்.  

சிம் கார்ட் என்பதன் ஆங்கில வடிவம் "Subscriber Indentity Module" இதற்கும் தாங்கள் சொல்லிய பேசியட்டை என்ற சொல்லுக்கும் எந்த சம்பந்தமாவது உள்ளதா? இந்த மாதிரி தமிழ் படுத்துதலே தவறு என்பது என் எண்ணம். சிம் கார்டையும் செல் போன் தொழில் நுட்பத்தையும் நாம் கண்டு பிடிக்க வேண்டும், அதன் பிறகு அதற்கு தமிழில் பெயரிட வேண்டும். அது உலகம் முழுதும் புழங்க வேண்டும். அதற்கு வக்கிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பிறர் பெற்ற குழந்தையை பெயர் மாற்றிக் கூப்பிட நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆப்பிளையும் சப்போட்டாவையும் சொல் மூலம் கண்டு பிடித்து அதற்கும் பெயர் வைப்பீர்களா?  

ஒரு உதாரணத்திற்கு நாம் பேசியட்டை என்றே அழைத்து அதை எல்லோரும் உபயோகிப்பதாகவே வைத்துக் கொள்வோம். நாம் பெங்களூருக்கோ அல்லதது கைதராபாத்துக்கோ சென்றால் அந்த செல் போன் கடையில் பேசியட்டை என்று சொன்னால் அவன் நம்மை பைத்தியக்காரன் என்று எண்ண மாட்டானா? அது அபத்ததின் உச்சமாகவே இருக்கும்.

நாம் பெற்ற குழந்தைக்கு நாம் பெயர் வைப்போம். அடுத்தவன் பெற்ற குழந்தையை அவன் வைத்த பெயரைக் கொண்டு அழைப்போம். அதுவே முறை.

முடிந்தால் எதையாவது கண்டு பிடிப்போம் அல்லது இப்படி தமிழ்ப் "படுத்துதலையாவது" நிறுத்துவோம்.

இப்படி சொல் உருவாக்கம் எந்த மொழியிலும் இருப்பதாக தெரியவில்லை. தமிழில் மட்டுமே இருக்கிறது. அதே போல ஸ்பெல்லிங் மாற்றி எழுதுவது. நடத்துவது என்பதை நடாத்துவது என்று எழுதுவது போன்றவை. ஆங்கிலத்தில் இந்த மாதிரி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஒரு உதாரணத்திற்கு "DAUGHTER" என்பதை "DATTOOOOR" என்று எழுதினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்?
14 மார்ச், 2011 ’அன்று’ 6:00 முற்பகல்
உசாத்துணை: http://www.perumalmurugan.com/2011/03/8.html