Wednesday, October 12, 2016

வம்பும் தும்பும் ~2


வம்பும் தும்பும் ~2


இன்னம்பூரான்
12 10 16

டவர் டாக்கீஸ்ஸில் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி சினிமா நடக்குது. ராணியம்மாவுக்கு பன்னீர் தெளிக்கும் உபநடிகை (எக்ஸ்ட்ரா) வராங்க என்று வாய்வார்த்தையா சொன்னா போதும். கூட்டம் அலை மோதும். நம்ம நாயக்கரோட தேர்தல் ஊர்வலம் வரணும். காச்சு மூச்சுநு கத்தணும். சோறு போட்டு, போத்தலும் கொடுத்து வள்ளிசா பச்சை நோட்டு இரண்டு தாராராம்னா போதும், ரேக்ளா ரேஸ் மாதிரி ஓடி வருவாங்க. இலவச கட்டில் எடுத்துப்போக, வாகா போட்டிருக்காங்க என்று மோப்பம் பிடித்த சுடலைமுத்து நாப்பது ஊரு சனங்களை இழுத்துக்கொண்டு வருவான். கமிஷனும் அடிப்பான். கூட்டம் கூட்டுவதும், ஊரை வளைக்கிறதும் ஒரு கலை. ஒரு குரங்குக்குட்டி போதும். பசங்களை இழுக்க. தெருவோரம் ஒருவர் ஹிந்தியில் பிளக்க, சகபாடி தமிழில் தந்தியடித்து தாதுபுஷ்டி லேகியம் விற்றால் விடலைகள் கூடும். மறு நாள் வேறு நகரில், சகபாடிகள் ட்யூட்டி  மாறுவார்கள். மாதரசிகளை வைத்து களை கட்ட, நாலு புடவையை 101% தள்ளுபடி என்று கூவினால் போதும்.

இத்தனை உத்திகள் இருக்க, இந்த அன்றாட வாழ்க்கை நெறி அறியாத விஞ்ஞானிகள் அடித்தக் கூத்தைக் காண, மோடி மஸ்தானே வரவேண்டும். அவர் தான் விஞ்ஞானிகளிடம், இந்த ‘போனால் போகட்டும் போடா’ என்ற அசட்டு தைரியத்தை விடுங்கள் என்று சொன்னார். இனி செய்தி.

இமாலய பிராந்தியத்தில் எல்லை பாதுகாப்பு என்ற அதிமுக்கிய பணியை பாதுகாப்பு இலாக்காவின் விஞ்ஞான ஆய்வு கழகம் [DRDO]  செய்யக்கூடிய பணிகள் பற்றி போனவாரம் ஒரு மாநாடு நடந்தது. உத்தராகாண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில் நடந்தது. இது சைனா எல்லை அருகில் இருக்கிறதே என்ற அச்சத்தில் ராணுவ விஞ்ஞானிகள் டிம்கி கொடுத்தாங்களாம்.  அடாது மழை பெய்தாலும் விடாது ஆட்டம் நடை பெறும் என்ற ஆர்வத்தில் அந்த மையம் மாநாட்டை நடத்தி மகிழ்ந்தார்கள். வந்தவர்களில், பெரும்பாலோர் எடுபிடி ஆட்கள், வண்டி ஓட்டுனர், அங்காடி கையாட்கள், காண்டீன் சர்வர் சுந்தரங்கள், மெக்கானிக் வகையறா. எல்லை பாதுகாப்புப் பற்றிய உரை ஆற்றியவர் ஒரு காண்டீன் பொடியன். மாநாடு நடத்தியவர்களை மட்டும் குறை கூறுவது நியாயமில்லை. பல மையங்கள் எடுபிடி ஆட்கள், வண்டி ஓட்டுனர், அங்காடி கையாட்கள், காண்டீன் சர்வர் சுந்தரங்கள், மெக்கானிக் வகையறாவை தான் அரசு செலவில் அனுப்பினார்கள்.

எல்லை பாதுகாப்புப் பற்றிய உரை ஆற்றிய காண்டீன் பொடியன் என்ன அறிவுரைகள் அளித்தார் என்று சரியாக கூறுபவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது.
சித்திரத்துக்கு நன்றி:








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, October 11, 2016

வம்பும் தும்பும் ~1

வம்பும் தும்பும் ~1


இன்னம்பூரான்
11 10 16
விஜயதசமி

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. வண்ணாரப்பேட்டை ஜனார்த்தனன் அதற்கு விதி விலக்கு அல்ல. திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் கோஷா ஆஸ்பத்திரியில் பிருந்தா என்ற அவர் இல்லத்தரசி மகப்பேறு பொருட்டு அனுமதிக்கப்பட்டார். தாயும், சேயும் நலம். இருவரையும் பார்க்க வந்த புருஷன் ஜனார்த்தனனை காவலாளர் அனுமதிக்க மறுக்கவே, அவரும் தந்திரசாலியாக செயலாற்றினார். உடனுக்குடன் காசு கொடுத்து வாங்கிய பர்தாவை மாட்டிக்கொண்டு அன்ன நடை போட்டு பிருந்தா தரிசனம் முடித்து விட்டு வெளியே திரும்பும் போது வசமாக மாட்டிக்கொண்டார். எப்போது? செருப்பை மாட்டிக்கொள்ளும் போது ~ ஆண் காலணி! ஷெர்லாக் ஹோம்ஸா வேண்டும்? மாட்டிக்கொண்டார், இந்த துப்படிக்கா பட்டர். 

1950 களில் ஊருக்கு பெரியவர்கள் தேர்தல் விழிப்புணர்ச்சி விவாதம் நடத்திய போது மாட்டிக்கொண்ட துப்படிக்கா பட்டர் பெயர்: கோபால் ரெட்டி. கனகச்சிதமாக, ந்டை, உடை ஆடை பாவனைகள் கொண்ட அந்த காங்கிரஸ்க்காரர் ஒரு ஆன்டி-பெண்ணிய ஜோக் அடித்தார்: ‘ கோஷா போட்டுக்கொண்டு முதலில் வந்த பீகம் மற்றொரு பீகமாகவும் இரு தடவை  வந்து வாக்களித்தார்.' கரகோஷம் அந்த ஶ்ரீநிவாச சாஸ்திரி ஹாலின் கூரையை பிளந்தது. சாவதானமாக எழுந்த திருமதி. நல்லமுத்து ராமமூர்த்தி அவர்கள் வினவியது: “கோபால்!  அந்த நபர் ஆண் இல்லை என்று உமக்கு எப்படி தெரியும்?” ரெட்டிகாரு அசடு வழிந்தார். அவையில் சலனம், மவுனம்.

(தொடரும்)
-#-

பின்குறிப்பு: நண்பர்களர் பலர் பங்கேற்பார்கள். முதற்கண்ணாக திரு. மருமக்கத்தாயனார்  வருகை புரிவார்கள் என்று தம்பட்டம் அடித்தார்கள்.

சித்திரத்துக்கு நன்றி: ttp://3.bp.blogspot.com/-brMq307AgWw/Tbv7Wavb_BI/AAAAAAAAAfw/Pa_hJ_QMJ10/s1600/funnysinger.jpg

இன்னம்பூரான்