Saturday, January 16, 2016

குல்லா மனிதன்: 17 01 2016


குல்லா மனிதன்: 17 01 2016

இன்னம்பூரான்
17 01 2016

“ சர்வ வல்லமையுடைய பரமபிதாவே! தரணியாளும் தேசாபிமானமுள்ள நாடுகள் யாவற்றிலும் சுதந்திரப்பற்றுடன் கூட மனித உரிமைகளை பற்றிய முழுமையான அறிவும் நீ அருளவேண்டும். அப்போது தான் தத்துவ வாதி ஒருவன் உலகின் எந்த பாகத்திலும் பாதம் பதித்து, இது என்னுடைய நாடு என்ற சொல்ல முடியும்.’
~ குல்லா மனிதன்

எனது அருமை நண்பர்களுடன், அதுவும் ஆத்யந்த நண்பரான பக்கத்து வீட்டுக்காரருடனும் அளவளாவும் போது, இந்த ஏக்கம் வெளிப்படும். தக்கதொரு விடை கிடைக்காமல் நாங்கள் தவிப்போம். எங்கு பார்த்தாலும் சண்டையும், சச்சரவும், மதபேத பிதற்றல்களும், வகுப்பு வாத  கதறல்களும், மற்றும் பல குஸ்திகளும் சின்ன சின்ன குடியிருப்புகளிலும்  கூட ‘முதல் தாம்பூலம்’ பெற்றுக்கொள்வதால், குல்லா மனிதனின் பிரார்த்தனை ஏட்டுசுரைக்காயாக பலருக்கு தோன்றும். அது தவறு.


300 வருடங்களுக்கும் முன்னால் 17 01 1706 அன்று ஜனித்த ‘குல்லா மனிதர்’ ஒரு அரசாளும் மேலாண்மை படைத்தவர், ராஜ தந்திரவாதி, எழுத்தாளர், விஞ்ஞானி, படைப்பாளி, தத்துவ ஞானி. இன்றைய அமெரிக்காவின் சுதந்திரமும், அரசாளும் சாஸனங்களும் கரையேறுவதற்கு நல்வழி வகுத்தவர்களில் ஒருவர்.

ஏழைக்குடும்பம். பெரிய குடும்பம். 17 குழந்தைகள். தந்தை சோப்பும், மெழுகுவர்த்தியும் செய்து குடித்தனம் நடத்தினார். நமது கதாநாயகன் பள்ளிக்கல்வி கற்றது சொற்பம். இவரோ சின்ன வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். படிக்கத்தொடங்கியது அதற்கும் முன்னால், என்று சொல்ல தேவையில்லை. சும்மா கிடக்க விரும்பாத மனிதன் 1723ல் ஊரை விட்டோடி லண்டன் வந்து பற்பல விஷயங்களை கற்ற பின், 18 மாதங்களுக்குள் நாடு திரும்பி, ஒரு இதழ் தொடங்கி புகழ் அடைந்தார். 15 வருடங்களில் சொத்துப்பத்து சேர்ந்த பின், வணிகத்தைத் துறந்து விஞ்ஞானி ஆனார். நவீன அடுப்பும், மின்னல் தாங்கியையும் கண்டுபிடித்து, மின்சாரத்தின் தந்தையானார். கையோடு கையாக அரசியலில் புகுந்து, சீர்திருத்தங்கள் செய்தவாறு புகழேணில் விரைவாக ஏறி, லண்டனில் சில பிராந்தியங்களின் பிரதிநிதியாக பணி புரிந்து, ஆங்கிலேய கலோனியத்துவத்தின் ஆதிக்கத்தை விலக்குவதற்காக, தாய்நாடு திரும்பினார். அமெரிக்கன் தத்துவவாதி மையத்தைத்துவக்கியவர், இவரே. கல்வித்துறையில் பணி புரிந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கு வித்திட்டார்.

அவர் திரும்பும் காலகட்டத்தில் அமெரிக்காவின் சுதந்திரப்போர் தொடங்கி விட்டது. சுதந்திர பிரகடனத்தை வரைந்து கையொப்பமிட்ட இவருக்கு ஒரு விசனம். மனைவியாகாத மற்றொரு மாதுவிடம் பிறந்த இவருடைய மகன் வில்லியம் ஆங்கில விசுவாசியாகத்தான் இருந்தார்.

மற்றபடி, கல்வியாளாராகுவும் இருந்த நம் குல்லா மனிதர், ஃபிரான்ஸில் அமெரிக்க தூதுவராக அனுப்பப்ட்டார். இரு நாடுகளுக்கு இணக்கம் உருவாக்கி, அதன் துணையினால், சுதந்திர போருக்கு முடிவு கண்டார். பின்னர் அமெரிக்கா திரும்பி வந்து பல முன்னேற்றங்களுக்கு வித்திட்டு, அரசியல் சாஸனத்தை எழுத உதவினார். அவர் 1790 ம் ஆண்டில் மறைந்தார். இன்றளவும் அமெரிக்காவில் போற்றப்படும், இவரது கனவை நனவு ஆக்குவதில் நாம் எல்லாரும் ஈடுபடவேண்டும்.

அடடா! மறந்து போனேனே! இந்த அதிசய குல்லா மனிதரின் பெயர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.

-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.geekadelphia.com/wp-content/uploads/2014/02/1-ManyHats_CARTOON-highres-650x1535.jpg

உசாத்துணை:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, January 15, 2016

சும்மா கிடப்பதே சுகம்! 16 01 2016

சும்மா கிடப்பதே சுகம்!



இன்னம்பூரான்
16 01 2016

களிப்புடன் பெருக்கெடுத்து , ஓடியாடி உருண்டோடி வந்தாலும், நதி மவுனமாகவே கடலில் சங்கமித்து விடுகிறது. அன்றொரு நாள் திருவையாற்றில் ஒரு சங்கீதக்கச்சேரி கேட்கப்போனேன். அங்கொரு சுட்டிப்பொண்ணு, இரண்டு வயது குட்டிப்பொண்ணு அதகளம் செய்து கொண்டிருந்தாள். அந்த அழகில் மயங்கிய ரசிகர் பட்டாளம் செவியை மட்டும் பாட்டுக்குக் கொடுத்து விட்டு, கண்கள் சொக்கச் சொக்க, இந்த குழந்தையின் விளையாட்டை ரசித்து வந்தார்கள். ஒரு வினாடி ஏறி குதித்தாள். அடுத்த வினாடி ஆழ்ந்து உறங்கி விட்டாள். ‘சும்மா கிடந்து அவள் கண்ட சுகமும்’ அழகு தான்.

‘...”பழையதை தின்று விட்டு சும்மா கிடக்கும்” மனப்பக்குவம் எப்போது வரும்?.’ “ என்ற வினாவை எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. அப்படியானால், நாம் கடமையாற்றவேண்டும் என்று வருத்திக்கொள்வது எல்லாம் வீண் தானா? ‘Que Sera! Sera’ என்று ஃபிரெஞ்சு மொழியில் சொல்வார்கள். அதாவது, நடப்பது நடந்தே தீரும்.

‘இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே’ 

என்று தாயுமானவர் அருளியதின் பொருள், இச்சை தான் நம் சிந்தையை இயக்கி பாடாய் படுத்துகிறதோ என்று தோன்ற வைக்கிறது.


ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும்-ஒன்றை 
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாழும் ஈசன் செயல். (நல்வழி-27)

இது அவ்வையார் அருளிய நல்வழி. சும்மா கிடக்க நான் நினைப்பது ஒன்று, அது ‘ஒழிந்திட்டு’ என்னை எழுத வைப்பது யாரு? இதோ விடை! நினையாதது முன் வந்து நிற்பது ஈசன் செயல் என்று அவரும் பட்டாங்கில் செப்பி விட்டுச்'சட்'டென்று' சென்று விட்டார்.

மாட்டிக்கொண்டு முழிப்பது நீங்கள் என்று யான் சொல்லமுடியாது, இந்த ஆனானப்பட்ட டெலீட் பட்டனும் , வாக்கும், வாதமும் இருக்கும் வரை. தலைப்பை எழுதி விட்டு சிந்தையில் ஆழ்ந்த போது, சும்மா கிடத்தும் உறக்கம் வந்த போதிலும், ஒரு கபீர் தாசரின் விமர்சனம் [‘Que Sera! Sera’] வந்து எய்தியது, அவ்வைப்பாட்டியின் வாக்கை பொய்க்காமல். விடலாமோ!

कबीरा किया कुछ न होते है, अन किया सब होय।
जो किया कुछ होते है , कर्ता और कोय ॥

‘தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ 
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ’


சுருங்கச்சொல்லின், அடித்துப்பிடித்துக்கொண்டு செய்தாலும், சுகமாக சும்மா கிடந்தாலும், 
‘தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ 
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ’

இது எல்லாம் ஒரு கபீர் தாசரின் திடீர் உபயம்.

கடவுளை கொண்டு வர எத்தனை உத்திகள் பாருங்கள்! தாயுமானவர் சிவராத்திரியில் தூங்கி வழிந்து ‘சும்மா கிடக்கும் சுகத்தை இப்படி வருணிக்கிறார்.


ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐய வொரு செயலுமில்லை [ஆமாம்! ஆமாம்!]

அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராம் என இருந்த பேரும்
நேராக ஒரு கோபம் ஒருவேளை வர அந்த
நிறைவொன்றும் இல்லாமலே
நெட்டுயிர்த்துத் தட்டழிந்து உளறுவார். [ஆமாம்! ஆமாம்!]

வசன
நிர்வாகர் என்ற பேரும்
பூராயமாய் ஒன்று பேசுமிடம் ஒன்றைப்
புலம்புவார்.  [ஆமாம்! ஆமாம்!]


சிவராத்திரிப்
போது துயிலோம் என்ற விரதியரும் அறிதுயில்
போலே இருந்து துயில்வார் [ஆமாம்! ஆமாம்!]

பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில் நின் செயல் அல்லவோ [ஆமாம்! ஆமாம்!]
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே

ஆமாம்! இந்த ‘வியர்த்தமான’ கட்டுரை எழுதும் விபரீதம் யாது என்று நீவிர் வினவினால், இதோ பதில்.

இன்று National Nothing Day in California. அப்படி ஒன்றை நிறுவி விட்டு அதில் நம்மை 'அம்போ' என்று விட்டு விட்டுப் போனவரை பற்றி நமக்கு தெரியாமல் இருப்பது நல்லது தான். தெரிந்து விட்டால் அது நத்திங் இல்லை. சம்திங்க் ஆகி விடும் என்கிறார், ஆண்டி ரூனி.

ஆளை விடுங்க சார்/மேடம். இன்று National Nothing Day என்பதால் ‘சும்மா கிடப்பதே சுகம்' என்ற மர்மத்தைப் பற்றி something எழுதிவிட்டேன்.

சுபம்.
பி.கு. இன்று காணும் பொங்கல். சும்மா சுத்திட்டு வாங்க.

சித்திரத்துக்கு நன்றி:https://anandchelliah.files.wordpress.com/2015/09/charlie-chaplin.jpg?w=535

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, January 14, 2016

நமது பாதுகாவலர்கள் தினம்


நமது பாதுகாவலர்கள் தினம்



இன்னம்பூரான்
15 01 2016

உலகிலேயே பெரிய ராணுவங்களில் ஒன்று, இந்திய ராணுவம். இரண்டு உலக யுத்தங்களிலும், விடுதலைக்குப் பிறகு நடந்த யுத்தங்களிலும், உலக சமாதான சேவைகளிலும், உள்நாட்டு கலவரங்களை தணிப்பதிலும், அண்மையில் சென்னை வெள்ளத்தை லாகவமாக கையாண்டு, மக்களை உய்வித்த பணியிலும், கட்டுப்பாட்டுடனும்,தியாக உணர்வுடனும், திறனுடனும், துணிவுடனும் இயங்கிய இந்திய ராணுவத்தின் மகத்துவத்தை பற்றி நாம் அறிந்து கொண்டது சொற்பம்.

இன்று இந்திய ராணுவ தினம். இதே தினத்தில் 1949ல் பிற்காலம் ஃபீல்ட் மார்ஷல் என்று கெளரவப்படுத்த்ப்பட்ட ஜெனெரல் கே.எம். கரியப்பா அவர்கள் ஜெனெரல் ஸர் ராய் புட்சர் அவர்களிடமிருந்து இந்திய ராணுவத்தின் தளபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதை நாம் கொண்டாட வேண்டும். 

ராணுவம் உகந்த முறையில் கொண்டாடும். நாமும் அதனுடைய வரலாற்றை அறிந்து கொண்டு, அவர்களுக்கு நன்றி செலுத்தும் செயலில்  முழுமனதுடன் ஈடுபடவேண்டும். அவர்களையும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களையும் சந்தித்துப் போற்றவேண்டும்.

ஆங்கிலேயர்கள் இந்திய ராணுவத்தை மதித்தார்கள். கிட்டத்தட்ட 1900 வருட காலகட்டத்தில் இங்கிலாந்தின் ராணுவம் தமது பட்டாலியன்களை இந்தியாவில் அமர்த்தும் வழக்கம் இருந்தது. மதராஸ், பம்பாய், பெங்கால் ராணுவங்களை ஒன்றுபடுத்தி இந்திய ராணுவத்தை கர்சான் பிரபு அமைத்தார். அக்காலத்து ராணுவ தளபதி கிச்சனர் பிரபு ராணுவ பயிற்சி மையங்களை 1903ம் வருடம் துவக்கினார். 1917லிருந்து இந்தியர்கள் உயர்பதவிகளில் அமர்வது தொடங்கியது. 1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் உருவான போது இராணுவம் இரண்டு பட்டது. ஆங்கிலேயர்களில் பலர் வெளியேறினர். இந்திய ராணுவத்தின் தன்னார்வ படை மிகவும் பெரிது.

என் குடும்பத்திலும், நண்பர்கள் குழாமிலும் ராணுவ வீரர்கள் உளர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சரகத்தில் பணி புரிந்தேன். அப்போது பல ராணுவ அதிகாரிகளுடன் பரிச்சயம் ஏற்பட்டது. பதவி சிறியது;ஆனால் பல பொறுப்புகள் : பட்ஜெட், ஆயுதங்கள் & தளவாடங்கள், விஞ்ஞான ஆலோசகரின் உதவியாளர், யுத்தம் பொருட்டு அதிரகசிய கையேடுகள் தயாரிப்பு, பாராளுமன்ற கவனிப்பு, இத்யாதி. அப்போது தளபதி ஜெனெரல் செளதரி அவர்கள். ராணுவ அதிகாரிகளிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அந்த மரியாதைக்கு ஏற்ற நன்றி செலுத்துகிறேன்.

எனக்கு ஒரு வருத்தம். எல்லா வாலிபர்களுக்கும் (16-17 வயது) கட்டாய ராணுவ சேவை கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால், நமது சந்ததி மிகவும் பொறுப்புடன் பல  சேவைகளை செய்வதை தன்னிச்சையாக கற்றுக்கொண்டிருக்கலாம். போனது போகட்டும் குழந்தைகள் பிறந்த வண்ணம். இனி மேலாவது இதை எல்லாம் செய்யலாம்.

வாழ்க இந்திய ராணுவம்.
சித்திரத்துக்கு நன்றி:http://indianarmy.nic.in/FlashImage/Fdss2.jpg

உசாத்துணை:





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, January 11, 2016

ஒரு கடுதாசி

அன்பார்ந்த திரு. ராவ் அவர்களுக்கு,

நீங்கள் அனுப்பிய பாபா மெயில் பதிவு தமிழரன்பர்கள் என்னுடைய கருத்துக்களையும் பெறவேண்டி என் வலைப்பூவிலும் மற்ற இடங்களிலும் என் பொறுப்பில் தமிழில் 
பதிவு செய்கிறேன்.

1. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதே,
எளிய அறிவுரை. அவரவர் பிரச்னை, தீர்வு அவரவர் கையில். சொந்த சமாச்சாரங்கள் தனியாரின் உரிமை. எனினும் ஆலோசனை மன்றங்கள் உளன. அது கேட்பவர்களுக்கு மட்டும் பொறுப்பாக அளிக்கப்படும். ஒருவர் மற்றொருவரின் சம்பளம் பற்றி கேட்பது அநாகரீகம். அவரே வட்டி விகிதம் பற்றி கேட்டால் தீர விசாரித்து சொல்வது நலம்.

2. மன்னித்து மறந்து விடு.
இதை சொல்வது எளிது. செய்வது கடினம். தாரதம்யம் வேறு இருக்கிறது. லஞ்சம் கொடுப்பவனை காட்டிக்கொடுக்கவேண்டும். துஷ்டனை கண்டால் தூர விலகுவது விவேகம். ஆனால் சிலர் அவமானப்படுத்துவார்கள். அவர்களை மன்னித்து விட்டு மறந்து விட்டால், மனம் இலேசு ஆகும்.

3. தம்பட்டம் அடித்துக்கொள்ளாதே.
தற்புகழ்ச்சியையும் புகழ்மாலைகளையும் விட்டொழிப்பது நன்மை பயக்கும். ‘பணி செய்து கிடப்பது’ உன்னதமான செயல். புகழ்பவர்கள், காலம் மாறினால், இகழ்வார்கள்.

4. பொறாமை வேண்டாம்.
வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு. பொறாமையினால் மன நிம்மதி தான் குலையும். அதை விட்டொழிக்க.
5. சூழ்நிலையுடன் ஒத்து வாழ்.
தலைக்கேற்ற குல்லா வாங்கு. குல்லாவுக்கு ஏற்றபடி தலையை வெட்டிக்கொள்ளலாமா?!

6. பொறுத்துக்கொள்வதே நிவாரணம்.
நம் கையில் யாதும் இல்லை. எல்லாமும் இருக்கிறது. இதில் முரண் யாதுமில்லை. மாற்ற முடியாத சிக்கல்களை சுயநம்பிக்கையுடன் இயங்கி தீர்வு காண முடியும். ‘பொறுத்தார் பூமியாள்வார்’.

7. இயன்றதை செய். அதிக பளு வேண்டாம்.
எளிது. ஆனால், நானே கேட்கவில்லை. பாருங்களேன்!⏳

8. தியானம் செய்,
நல்ல அறிவுரை. நானும் கேட்கப் பார்க்கிறேன்!⛺

9. மனதை சோம்ப விடாதே,
மனம் இயங்கிக்கொண்டிருந்தால், பிரச்னைகள் அணுகா. ஏதாவது ஆக்கப்பூர்வமான செயலை செய்து வா.

10. எதையும் ஒத்திப்போடாதே.
அதனால் தான், உடனே இதை எழுதினேன்!

11. நடப்பது நடக்கும். அலட்டிக்காதே.〽

பாபாமெயில் சொன்னபடி திரு. பி.எஸ்.ஆர்.ராவ். அவர் சொன்னதை சற்றே மாற்றி எழுதிய