Friday, August 9, 2013

விஷ்ணு நாரயண் பட்கண்டே,அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10




அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10

Innamburan Innamburan Wed, Aug 10, 2011 at 1:37 AM


அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10

கலை குலைந்து கலைந்து போவதற்கு காரணம் கலைஞர்களில் சிலர் அதை சொத்துரிமையாக பாத்தியதை கொண்டாடுவதே. முடிச்சுப்போட்டு வைத்துக்கொள்வதே. நான் தான் சாவேரி பாடுவேன் என்று அடம் பிடிக்கலாமோ என்று ஒரு இசைவிழாவுக்கு தலைமை தாங்க வந்திருந்த ஜஸ்டிஸ் எம்.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ் அவர்களிடம் கேட்டேன். அவர் இசை மேதை. உமக்கு பிடித்த ராகம் என்னவென்றார். கதனகுதூகலம் என்றேன். அதன் அருமையை அரைமணி நேரம் பாராட்டினார். எதற்கு சொல்ல வரேன் என்றால், எந்த துறையில் மனம் வைத்தாலும் அதில் உன்னத பதம் அடைவதில் சட்டமேதைகள் வெற்றி அடைவதை அடிக்கடி காண்கிறோம். 
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஏகாதிபத்திய கலைஞர்கள் கையில், வானரத்தின் கையில் சிக்கிய பூமாலையை போல, ஹிந்துஸ்தானி சங்கீதம் கசங்கிக் கிடந்தது. ராஜமரியாதை வேறு கிடைத்ததா! அகந்தை அகற்றாத பாடகர்கள், சிஷ்யகோடிகளைக் கூட வளரவிடவில்லை. இசையே அசைந்து வீழ்ந்தது. அதை புனருத்தாரணம் செய்து உய்விக்க, விஷ்ணுவே அவதாரம் செய்த மாதிரி, 1860 வருடம் கோகுலாஷ்டமி அன்று ஜனித்தார், விஷ்ணு நாரயண் பட்கண்டே. அனவரதமும் அந்த இசைப்பணியில் தன்னை இணைத்துக்கொண்ட இந்த பிரபல வழக்கறிஞர் எதிர்கொண்ட அலைச்சலும், ஆதங்கங்களும் ,இடைஞ்சலும், ஈட்டிநுனி மோதல்களும், உரசலும், ஊரறிஞ்ச நெரிசலும், எத்து வேலைகளும், ஏமாற்றங்களும் கணக்கிலடங்கா. எனினும், அவருடைய அபூர்வமான இசை ஞானமும், புத்திசாலித்தனமும், உழைப்பும், ஆளுமையும், வசீகரமும் அவருக்கு உறுதுணையாயின. 
இவரது தொண்டு இணையற்றது. வரலாற்றுணர்வை கற்றுக்கொடுத்தார். இசையின் இலக்கணத்தையும், கவின் ரசிகத்தன்மையையும் இணைத்தருளினார். இசை கருவூலமொன்றை நிறுவினார். ஒளிக்கப்பட்டவையெல்லாம் வெளியில் கொணர்ந்தார். அவரது பணியின் விவரணை எந்த துறைக்கும் அறிவுரை எனலாம். முதலில் அவர் தன்னை பாடகனாக தயார் செய்து கொண்டார், குருகுலவாசம் செய்து, அன்னை மடியிலிருந்து தொடங்கி. அன்னை இனியகுரலும், தந்தை கூரிய செவியும் அருளினர். அடுத்த படி பிரபல வக்கீலாகி செல்வம் குவித்தார், இசைத்தொண்டுக்காக. அதன் பின்னர் இசை தேடும் யாத்திரை -காஷ்மீரிலிருந்து, ராமேஸ்வரம் வரை, ஸூரத் திலிருந்து பூரி வரை. இசை நூலகங்களே குறி. தானறிந்த இசையை பகிர்ந்துகொள்ள விரும்பாத பாடகர்களை, மாணிக்கவாசகர் நரியை பரியாக்கியது போல, இனிய நண்பர்களாக்கினார். அவர்களும் கூட்டாளிகள் ஆனார்கள். 
அடுத்த கட்டம், பிரசுரக்கட்டம். பண்டித்ஜி (அது தான் அவரை எல்லோரும் விளிக்கும் முறை.) ஒரு மகத்தான சேவை செய்தார். அவர் சேகரித்த கருவூலம் பெரியது. அவற்றிலிருந்து, ‘அபிநவராகமஞ்சரி’ ‘அபிநவதாளமஞ்சரி’, ‘லக்ஷியசங்கீதம்’, ‘ஹிந்துஸ்தானி சங்கீத் பத்ததி’, ‘கிரந்த சங்கீதம்’, ‘பாவிக சங்கீதம்’,  ‘ஸ்வரமாலிகா’, கீத்மாலிகா’, ‘க்ராமிக்’ வரிசைகளில் தொகுப்புக்கள், சங்கீதத்தின் வரலாறு, சங்கீதத்தின் தத்துவங்கள் போன்ற வேறெங்கும் காணக்கிடைக்காத பிரசுரங்கள் வந்த வண்ணம். அதுவும், விளம்பரம் நாடாத வகையில் - விஷ்ணு சர்மா, சதுர்பண்டிட்’ என்ற புனைப்பெயர்களில். எத்தனை ராகங்களை பற்றிய கிரந்தங்கள் -250 என்று ஒரு கணக்கு. அவரே சொல்கிறார், ‘இசையின் மீது காதல் கொண்ட என் சகோதர-சகோதரிகளுக்கு, இசையின் இன்றைய நிலைமையை எடுத்துச்சொல்லும் பணியிது’ என்று.
அடுத்தகட்டம் ‘வெள்ளியெழுந்தாற் போல்’. சிஷ்யகோடிகள் குவிந்தனர் - பரோடா, க்வாலியர், ராம்பூர,தரம்பூர், அக்பர்பூர் போன்றை இசைதிக்கு, திசைகளிலிருந்து. இவரும் சங்கீதயாத்ரை தொடங்கினார். இவருடைய பாற்கடலில் உதித்தவை தான்,
பரோடா, க்வாலியர், லக்னெள, பம்பாய், நாக்பூர் இசைக்கல்லூரிகள். அதன் பின்னர் இசைவிழாக்கள், பரோடாவிலும், லக்னெளவிலும், வாராணசியிலும், டில்லியிலும் கூட.
ஆகஸ்ட் 10,  பண்டித்ஜியின் ஜன்மதினம் ~கோகுலாஷ்டமி. செப்டம்பர் 19, 1936 அவர்  அமரரான தினம் ~ கணேச சதுர்த்தி. கணேச சதுர்த்தி. அன்று, இன்றளவும் இவரை பாராட்டி இசைவிழா எடுக்கப்படுகிறது. மூன்று விஷயங்கள் ~ பண்டித்ஜி தென்னிந்தியாவில் சஞ்சாரம் செய்து இசைப்பணி செய்தார். அவருடைய திட்டமிடும் திறனுக்கு ஒரு சான்று: அஹமதாபாத் கலெக்டர் க்ளெமெண்ட் ஹிந்துஸ்தானி இசைக்கு மேற்கத்திய சங்கேதங்கள் வகுக்கத் தொடங்கினார். பண்டித்ஜிக்கு அதில் சம்மதமில்லை. ஆனால், கலெக்டரின் அதிகாரபலம் கோலோச்சியது. விஷ்ணு திகம்பர் என்ற இசைமேதைக்கும் இவருக்கும் ஒரு விதத்தில் ஏழாம் பொருத்தம். எனினும் அவரை தன் வழி கொணர்ந்து, க்ளெமெண்டை வாபஸ் வாங்கச்செய்தார். மூன்றாவதாக,  9 ஆகஸ்ட் 2011ல் தமிழுலகில் எழுந்த ஒரு வினாவுக்கு அன்றே விடை அளித்தார்! 
“...இசை பொருட்டு எதை கூறினாலும், இயன்றவரை உன்னுடைய தாய்மொழியில் உரைக்கவும்...”
இன்னம்பூரான்
pastedGraphic.pdf


10 08 2011
உசாத்துணை

Geetha Sambasivam Thu, Aug 11, 2011 at 1:33 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
தெரியாத செய்தி.  இந்த இசைமேதையின் பெயரை இன்றே அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி. ஒரு வாரமாய்த் தொடர்ந்த மின் தடை.  சில மடல்களே படிக்க, பார்க்க முடிகிறது. 
2011/8/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10

இன்னம்பூரான்
pastedGraphic.pdf


10 08 2011
உசாத்துணை



Innamburan Innamburan Thu, Aug 11, 2011 at 1:37 PM
To: mintamil@googlegroups.com

நன்றி, உங்கள் கருத்துக்காகக் காத்திருந்தேன். எனக்கும் நிறைவு தந்த இழை, இது.

 வணக்கம்.

இன்னம்பூரான்


Sunday, August 4, 2013

சென்னை குறிப்புகள் ~1



சென்னை குறிப்புகள் ~1
Inline image 1

நேற்றுப்போல் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம், கிட்டகிடுகிடுவென்று ஓடி விட்டது. ஜூலை ஆறு அன்று ஹீத்ரோ அடையும் போது சில வயோதிக பிரச்னைகள், நீரழிவு நோயினால். அதனால் தள்ளு வண்டி. தள்ளியது ஒரு குஜராத்திப்பெண். திறனுடன் இயங்கிய அந்த யுவதி டிப்ஸ் பெற்று கொள்ள மறுத்து விட்டாள். கொஞ்சம் வற்புறுத்தி கொடுக்க வேண்டியாகி விட்டது. இது வரை சென்னை அனுபவம், அந்த வசதிகள் பேச்சுடன் சரி. எழுதப்பட்டதை நீரில் எழுதியதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், தேவை குறைந்து விட்டபோதிலும், வண்டி ஆஜர். வற்புறுத்தி ஏற வைத்தார்கள், நான் தேவையல்ல என்று செய்தி அனுப்பியிருந்த போதிலும். அந்த வேலையில் இருக்கும் இளைஞர்களின் சீருடை அழுக்கு; வள வள பேச்சு அதிகம். தன்னிச்சைப்படி என்னை பரிமாற்றம் செய்து கொண்டார்கள். வரும்போதே அவர் ஒரு பவுனுக்கு குறைந்து டிப்ஸ் கொடுக்கலாகாது என்று சபதமேயிட்டிருந்தார். ஆனால், டாக்ஸி கம்பேனி டாலரோ/பவுனோ வாங்க மறுத்து அண்ணா நகர் செல்ல ரூபாய் 600/- கேட்டார்கள். நல்ல வேளை, கிளம்பும் போது என் பையர் சில இந்திய ரூபாய் நோட்டுகள் கொடுத்திருந்ததால், பிழைத்தேன். டிரைவர் நாலாவது மாடி வரை ஜாமான்களை கொண்டு வந்து உதவியதால் கொடுத்த டிப்ஸை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். வழியில் கார்கள் பூம் பூம். இருசக்கராதிபதிகள் கன்னா பின்னா பரபரப்பு. நடை பயணிகள், காலை ஆறு ஆகியும் காணக்கிடைக்கவில்லை. எங்கெங்கும் குப்பை தரிசனம். மெட்ரோ போடுவதால் வழி நெடுக வழி இல்லை. ஹிந்து இதழ் கரடியாக கத்தினாலும், நடை பாதைகள் அண்ணா நகரிலேயே தென்படவில்லை. குண்டும் குழியும் பாலை திணையை நினைவுறுத்தியன.  இறங்கியதும் கிடைத்தது...
(தொடரும்)

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk


http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சித்திரத்துக்கு நன்றி: http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/07/rain-sting.png