Sunday, August 2, 2009

நூறு வருஷங்களுக்கு முன்னால்- 3 என் அத்தை

7/21/2009 6:09 PM

நூறு வருஷங்களுக்கு முன்னால்- 3

என் அத்தை

பின்னோக்கி பயணிக்கும்போது, வருடங்களை துல்லியமாக நிறுவவேண்டுமா, என்ன? நினைவலைகள் கடந்த/நிகழ்/வருங்காலத்துக்கு அப்பாற்பட்டது. அதன் காலத்தின் கண்ணாடிக்கு உயிரோட்டம் உண்டு. அது அலை பாய்ந்து இங்குமிங்குமாக, இப்போதும் அப்போதுமாக, அப்படியும் இப்பிடியுமாகத் தான் திரியும். நாம் என்னவோ வரலாற்று திறனாய்வில் இறங்கவில்லை. மனம் போனபடி போக விட்டு விடுங்கள். உங்களுக்கு புண்ணியம் உண்டு.

ஒரு கீர்த்திமான், சென்னையில் இருந்தார். பிரபலமான வக்கீல்; நீதியரசர். வள்ளல். இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு. பல மொழிகள் அவருக்கு சரளம். தமிழின் மீது காதல் என்றே சொல்லலாம். எக்காலமும், அவரை சுற்றி ஒரு குழாம், ஏன், குழாங்களே இருக்கும். கட்சிக்காரர்கள், சக வக்கீல்கள், புலவர்கள், பண்டிதர்கள், வேதம் ஓதுபவர்கள், நாலாயிர பிரபந்தங்களை, சாங்கோபாங்கமாக இசையுடன் பாடும் கோஷ்டி, சைவத்திருமுறைகளை ஓதுவார்கள் இத்யாதி. இத்தனைக்கும் நடுவில், அவரோடு நிழல் மாதிரி தொடர்ந்தவர், ஒரு தமிழ்ப்புலவர். இருவரின் இணைப்பிரியா உறவு விநோதமனாது என்று கூட சொல்லலாம். பொழுது விடிந்தால், இரவு படுக்கும் வரை வக்கீலுக்கு பல ஜோலிகள். புலவருக்கோ இலக்கியம் மற்றுமே குறி. சாப்பிடுவதும் ஒன்றாக. கோர்ட்டுக்கு போகும் போது, இரண்டாமவர் வழித்துணை; வெளியூர் பயணம் என்றால் கேட்கவேண்டாம். இருவரும் அயராமல் பேசி எழுதி வந்த வடமொழியில் எழுதி வந்திருந்த ச்ரமஸ்லோகங்களை வாசித்தார்கள். அ

என் அத்தை

“பித்தை1 தனைக்கோதிப்

பின்னிப் பெருமணிப்பூ

கொத்தை முடித்துக்

குலவத்திலகம் இட்டு

தந்தை மொழிபயிற்றித்

தாலாட்டிச் சீராட்டி

அத்தை தனைப்போல

ஆதரிப்பார் ஆரேயோ! 1

முத்தைப் பழித்தொளிரும்

மூரல்2 முதிரை3வகை

மத்தைக் கொடுகடைய

வந்த நறுவெண்ணைய்

சத்தைத் தரும் நெய்

தயிர்பால் இவற்றுடனே

அத்தை தனைப்போல்

அமுதளிப்பார் ஆரேயோ! 2

முத்தை மணியை

முழுக்கனகச் சங்கிலியின்

கொத்தை அணிந்து

குழை அணிந்து பட்டுத்திப்

புத்தைத்4 தடுக்கும்

புதல்வன்இவன் என்றெண்ணி

அத்தை தனைப்போல்

அலங்கரிப்பார் ஆரையோ! 3

“ஆதரித்தாள், அமுதளித்தாள், அலங்கரித்தாள். எப்படிப்புத்திமதி கூறினாள் என்று பார்ப்போம்.”

இத்தைச் செய்யாதே

இதனை இயம்பாதே

சொத்தைப் பரிபாலி

சோம்பித் திரியாதே

வித்தை விரும்பென்று

நாளும் விதம்விதமாய்

அத்தை தனைப்போல்

அறிவுறுப்பார் ஆரேயோ! 4

“ஆசீர்வதிக்கும்போது ஏற்படுகிற ஆத்திரம் தான் என்ன?”

வித்தை தலைஎடுக்க

வேண்டாதார் கண் முன்னே

மெத்தைப் பெரு வீடு

கட்டி விபவமுடன்

சொத்தைப் பெருக்கிச்

சுகமான வாழ்வைஎன

அத்தை தனைப்போல

ஆசிசொல்வார் ஆரேயோ! 5

வித்தை அளித்து

விபவம்மிக உண்டாக்கி

தத்தை மொழியாள்

தனிமணமும் செய்வித்து

“இந்த இடத்தில் ஆர்வம் துள்ளிக் குதித்துப் பொங்கி வருகிற அதிசயத்தைப் பார்க்கவேண்டும்.”

எத்தைத் தருவ (து)

எனஇன்றி, எல்லாமும்

அத்தை தனைப்போல்

அருள்செய்வார் ஆரேயோ! 6

“அடுத்த கவிதையில்...எதுகை மாறுகிறது. மாறுகிறதனால் உண்டான பயனும் தெரிய வரும்.”

“என்னத்தை கண்டாய்

இளம்பிள்ளை நீயறியாய்

சொன்னத்தைக் கேளாய்!

“இந்த கோபமெல்லாம் எப்படி இளகி விடுகிறது, அடுத்து வரும் வார்த்தையில்!”

துரையே” எனக்கொஞ்சிக்

கன்னத்தை முத்தம் இட்டு

கட்டி அணைத் (து) எனக்கு

என்னத்தை போல

இதம் சொல்வார் ஆரேயோ! 7

“இந்த கவி கடாக்ஷத்தினால் வந்தது. புலவருக்குச் சம்பந்தம் இல்லை என்றுகூடச் சொல்லலாம். இனி கடைசிக் கவியில், உற்றாரை எல்லாம் விலக்கி விட்டு இதயத்தில் தனியிடம் அத்தைக்கு அமைக்கிற அழகு தனியான அழகு.”

“முத்தைப் பழிக்கும்

முளைமுறுவல்க் காதலியும்

பித்தைத் தரும்செல்வப்

பிள்ளை களும் பின்னவனும்

தந்தைக்(கு) இணையாகத்

தங்கைகள் தாம் இருக்க,

அத்தை தனைப்போல்

அரியவர்தாம் ஆரேயோ!” 8

----------

1. தலைமுடி. 2. அன்னம். 3. பருப்பு. 4. புத்திரன் இல்லாதவர் போகும் நரகம். 5.பல். 6. மயக்கத்தை.

-----------

“இந்த பாடல்களைக் கேட்டால் யாருக்குத்தன் மனம் கலங்காது, கண் கலங்காது? அத்தையின் மனதில் தோன்றிய ஆசைகளையும், கிளர்ச்சிகளையும், மலையிலிருந்து விழும் அருவிபோல் எவ்வளவு அழகாகத் துள்ளி துள்ளி இறங்க செய்கிறார் புலவர். ஸ்ரீமான் ஐயங்காரின் இதயத்துக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து விடுகிறார். பாடல்களில் உள்ள எதுகைகள் எல்லாம் ‘அத்தை! அத்தை! என் அத்தை! என்று ஏங்குகின்றன. கதறுகின்றன. நம்முடைய இதயங்கள் போலவே தமிழ்ச்சொற்களும் அத்தையை நோக்கி செல்கின்றன. ஆயிரக்கணக்கான வருஷங்களாக பழுத்தது தமிழ் என்பதைச் சுவைத்தே உணர்ந்து விடுகிறோம்...என்ன எளிமை, என்ன இன்னிசை, என்ன ஆர்வம்! இம்மூன்றும் சேர்ந்தால் தானே கவி...”

“கிரியைகள் முடிவாகும் பதின்மூன்றாம் நாள் சாயங்காலம் வைதிகமுறைப்படி பிரபந்த பாடல்கள் பாடினார்கள். பிறகு அங்கு வந்த சம்ஸ்கிருத பண்டிதர்கள் தாம் பாடியிருந்த சரமசுலோகங்களை வாசித்தார்கள். அவை எல்லாம் முடிந்த பிறகு, பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியார் சபைக்கு வந்து, தம் பாடி வந்த ‘என் அத்தை’ என்ற தமிழ் பாடல்களை பாடினார்.அவ்வளவு தான். எல்லோருக்கும், உட்காந்திருந்தவர்,நின்றவர், ஆண் பெண் எல்லோருக்குமே கண்ணிலிருந்து கண்ணீர் துளிக்க ஆரம்பித்துவிட்டது. அத்தையம்மாள் இறந்து போன அந்தத் தருணத்தில் கண்ணீர் வராத எங்களுக்குப் பதிமூன்றாம் நாள் கழிந்த பிறகு மனங் கலங்கிக் கண்ணீர் பெருகிவிட்டது.

அத்தை முறை கொண்டாடதவர்களே கண்ணீர் விட்டார்கள் என்றால், அத்தை கொண்டாடும் உரிமையுடைய எங்கள் பாடு இன்னதென்று சொல்லவேண்டியதில்லைதானே!”... பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியாருக்குத் தமிழ்ப் பாஷையே வந்து பாடும்படி தூண்டி உதவியும் புரிந்த்தது என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவு எளிமை, அவ்வளவு பாவம், அவ்வளவு சொல் வாய்ப்பு.

ஸ்ரீமான் ஐயங்கார்: ஸ்ரீ. வி.வி. ஸ்ரீனிவாஸ ஐயங்கார் (1871-1954)

கவி: ஸ்ரீ. பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியார்

சான்றோர்: ஸ்ரீ. டி.கே.சி. சிதம்பரநாத முதலியார் (1881-1954)

ஆதாரம் & நன்றி: தீப.நடராஜன், காவ்யா சண்முகசுந்தரம்: (தொகுப்பு): ரசிகமணி கட்டுரைக்களஞ்சியம் (2006): சென்னை: காவ்யா: ப. 304-310

பின் குறிப்பு: இந்த சிறு கவிதையை ஃபிரேம் போட்டு வைத்திருந்த வி.வி.எஸ், டி.கே.சி.க்கு வாசித்து, கண்ணீர் உகுத்தார். இந்த தொகுப்பை விட்டால், மின் - தமிழை விட்டால், இது வேறு எங்கும் கிடைப்பது அரிது.

(என் அத்தையும் வருவாள்)

இன்னம்பூரான்

ஸூர்யகிரகணோத்ஸ்வம் 7/22/2009 8:10 AM

ஸூர்யகிரகணோத்ஸ்வம் 7/22/2009 8:10 AM

இன்று சென்னையில் அதிகாலையில் கதிரோன் பிறந்ததே அரைகுறை பிரசவத்தில் என்று ஒரு மாயை. விஞ்ஞான மையத்தில் கணிசமான அளவில் மக்கள் கூட்டம். ஒரு மூதாட்டி, ரொம்ப ஃபேஷனபிலாக தொலைநோக்கி கருவிகள் சகிதம் மும்மரமாக அலைந்து கொண்டிருந்தாள். ஒரு இரண்டு வயது சிறுவன் கும்மாளமிட்டு கொண்டிருந்தான். வெள்ளைக்காரப்பையன். அவனது தந்தையின் ஆர்வத்தை மெச்சினேன். நானும், என் பங்குக்கு, இரு சிறுமிகளையும், ஒரு காலேஜ் பையனையும், ஒரு ஆஃபிஸரையும், அழைத்து கொண்டு அங்கு விரைந்தேன். ஒருவரின் (இளம் விஞ்ஞானியோ!) குடுமியையும், அதை அவர் கோடாலி முடிச்சு போட்டு இருந்ததையும் ரசித்தேன்.

ஏற்பாடு நன்றாக இருந்த்தது. நிர்வாகி திரு. அய்யம்பெருமாள், அங்குமிங்குமாக அலைந்தபடி, யாவருக்கும் ஊக்கம் அளித்துக்கொண்டிருந்தார். நல்ல தரிசனம், எல்லாருக்கும். தரெக்னாவில் மேகமூட்டம் எல்லாரையும் ஏமாற்றிவிட்டதாம்.

முழு விவரங்களுக்கும், படங்களுக்கும் பார்க்கவும்:

http://www.hindu.com/2007/03/20/stories/2007032017700200.htm

மூடநம்பிக்கைகள் தகர்ந்த்தே ஹிலாரயிஸ் தான்.

இன்னம்பூரான்

சென்னைபட்டின உலா

June 30, 2009

சென்னைபட்டின உலா

வீ.ஆர். கிருஷ்ணையர் ராகுல் காந்திக்கு ஹிந்து பத்திரைக்கையில் கடிதம் வரைந்த்தது போல,

இக்கடிதம் எனது ஆப்தநண்பர் ஒருவருக்கு, மின் - தமிழ் தொடரில் வரையப்பட்டிருக்கிறது. எனக்குரிய தன்னடக்கத்துடன் சொன்னால், மயில் ராவணன் கதையைப் போல, ‘பத்து தலைகளை சுற்றி மூக்கை தொட்ட’ காதையாகும்; உண்மை விளம்பினால் ‘ஆயிரம் தலைகளை சுற்றோ என்று சுற்றி மூக்கை தொட்ட அபூர்வ சிந்தாமணி’ யின் காப்பியமாகும்.

இன்னம்பூரான்

(தொடரும்)

June 31, 2009

சென்னைபட்டின உலா

நேற்று, நாடு கடந்து, காடு கடந்து, வரை கடந்து, திரை கடந்து வாழ்ந்த நான், சென்னை நகர வலம் வரும் அரிய வாய்ப்பை பெற்றேன். நானும், நண்பரும் ரோஜா முத்தையா மன்றத்தில் ஒரு அரிய நிகழ்ச்சிக்காக, தனி தனியே வெவ்வேறு பேட்டைகளிலிருந்து பயணித்தோம். ஒருவரை ஒருவர், முன்னும் பின்னும் பார்த்திருக்கவில்லை என்பதால் (அதனால் தான், நாம் யாவரும் சந்திக்கவேண்டும் என முன்பு கூறியதை நினைவு கூர்க.), நாங்கள் தடுமாறியது சுவையான கதை.

ஒரு சமூக சேவைக்கு, முன்கூட்டியே ஒரு வீ.ஐ.பியின் அலுவலகத்தில் சந்திப்பதாக முன்னேற்பாடு. அங்கு ஐயாவைக்காணாமல், மற்றொருவரிடம், நான் கேட்கப்போய், அவர் தான் ‘முனைவர் முத்தைறையானார்’ என பதிலளித்து, மீசை படபடக்க முறைத்தார். சளைத்தவனா, என்ன? முடியா வழக்காகிய, ‘வாலிவதம் நியாயமானதா?’ என்று வினவினேன். அவரோ, ‘எனது 1962ம் ஆண்டு ஆய்வு “சங்ககாலத்திற்கு முந்திய தமிழும், மெஸபடோமியாவின் பழகு ஆங்கிலமும்” என்று பகர்ந்து, ‘வாலி தற்கால கவிஞராமே’ என்றார். உமது ‘கிணறு’ எந்த ஊரிலிருக்கிறது? என்று கேட்க தயங்கி, நானும் லாகவமாக ஜகா வாங்கினேன். நிகழ்ச்சியில் சில சலசலப்புக்களுக்கு பிறகு, இருவரும் இனம் கண்டு கொண்டோம். இது நிற்க.

நிகழ்ச்சியும் இனிதே நிறைவேற, வீடு திரும்பும் நல்லெண்ணம் மேலோங்க, நான் போட்ட தப்புக்கணக்கு யாதெனில், ‘8.73 கிலோமீட்டர் வருவதற்கு, பஸ்ஸில் 37 நிமிடம் பிடித்தது; ஐயாவோ புத்தம் புதிய காரில், இருக்கை அளித்தார், தோதான இடத்தில் இறக்கிவிடுவதாக. சத்திய பிரமாணம் செய்தார். 21 நிமிடத்தில் வீடு என்று இறுமாந்தேன்.

உலா தொடங்கியது, கம்பராமாயணத்தில், இராம-இலக்குவனர் ஆச்சா மரங்களும், ஏலமரங்களும், சந்தனமலர்களும், பூகுன்றங்களும், ஊசலாடும் வானர அழகிகளும் நிறைந்த கிட்கிந்தை மலையில், தேன் வழுக்கிய தடங்களில் நடந்த்து போல! முதல் தோதான இடத்தில், மின்பாடி வண்டி தடுக்க, அதற்கு பின், ஒன்றன்பின் ஒன்றாக, தடுப்பு சுவர்களும், மொஹஞ்சதாரோ-ஹாரப்பா அகிழாய்வு போன்ற அரைகுறை மேல்/கீழ்/பக்கவாட்டு/எதிர்பக்க/அடையாளமற்ற/குழப்பும் பாலங்களும் பயமுறுத்த, சிக்னல்கள் மின்னலடிக்க, மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், உப்பரிகைகள், சேரிகள், இல்லாத நடைபாதையிலும் வசிப்பவர்கள், நெய்யும் துணியின் பாவு போல ஓடியாடும் ஆட்டோக்களும் படுத்திய பாட்டில், ஐயாவால், வண்டியை நிறுத்தமுடியவில்லை. இடைவிடாத பேச்சினால், சில இடங்களை கோட்டை விட்டோம். நான் அமைதி காத்தால், அவரது கைப்பேசி பேசித்தீர்த்துவிடும். கிண்டி பார்த்தோம்; கண்டு கொள்ளவில்லை. கத்திப்பாராவில், நான் கத்தவில்லை, இறக்கிவிடு என்று; ஈக்காடு தங்கலில், யாம் தங்கவில்லை; அஷோக் பில்லரில், வழி தவறினோம்; ஐயா இல்லை என்பார்; கோயாம்பேட்டில் கோட்டை விட்டோம்; ‘டக்’ என்று ஒரு பொறி தட்ட, ‘சட்’ என்று நிறுத்தினார். கைலாகு கொடுத்து, என்னை ரோடு கடத்தினார். இரு பஸ்கள் மாறி வீடு சேர்ந்தேன் - 47 கிலோமீட்டரை 274 நிமிடங்களில் விரைவாக கடந்த அனுபவம் புதிது.

இன்னம்பூரான்

பி.கு. இடம், பொருள், ஏவல் மாற்றியுள்ளேன்; ஊரும், பேரும் சொல்லவில்லை; ஏன்? மரபு காக்க. எப்படியும், துணிவு இருந்தால், ஐயா குட்டை உடைக்கமாட்டாரா, என்ன?