இன்னம்பூரானின் ரயில் பயணமும், அதன் பலாபலன்களும்
டைம்லைன் 1962:
‘Mr.S.Soundararajan, Deputy Accountant General, AP left for Hyderabad.’ அந்தக்காலத்தில் ஹிந்து இதழில், Social & Personal என்ற தலைப்பில் இத்தகைய அரிய செய்திகள் வரும். (எங்க ஆஃபீஸ் அனுப்பித்தான்!). தேடினால், தேதி கிடைக்கும். இப்போ Obituary கூட காசு கொடுத்தால் தான் போடுவார்கள். நான் மேற்படி பயணம் மேற்கொள்ளும் போது, லோயர் பெர்த் உத்தரவாதம். எனக்கு எல்லாம் ஒண்ணு தான். இவ்வாறு ஒரு நாலு பெர்த் வண்டியில் மதியம் அமர்ந்து, அறிமுகங்கள், உபயகுசோலபரி எல்லாம் இனிதே நடந்தேறி, எஞ்சின் ஊதும்போது, அடித்துப்பிடித்துக்கொண்டு ஒருவர் ஏறினார். திருக்கோவிலூர் ஆழ்வார்களுடன், நாலாவதாக வந்து நின்றானே, அவனைப்போல. ஆனால் ஐந்தாவது! மூன்று வீ.ஐ.பி.களும் ஒருவரை ஒருவர் பார்த்து உதடுகளை பிதுங்கினர். பொருள்: யார் இந்த காட்டான்? இத்தனைக்கும் விதிப்படி ஆறு நபர்கள் சாயுங்காலை வரை இதில் அமரலாம். க்ஷணத்தில் புரிந்து கொண்டேன், அவர் யார் என்று. நால்வர் அறிமுகம் ரிஸர்வேஷன் அட்டையை பார்த்தபிறகு. இவரை அறிமுகப்படுத்தியது, யான் செய்த பாக்கியம். மூவரும் சுயநிலைக்கு திரும்பினர், ராக்காலம் போவது எப்படி என்ற 64 ஆயிரம் டாலர் சிந்தனையோடு!
அப்பெல்லாம், ஹோல்டால் என்ற மெத்தை, தலைக்கணி சுருள். பெட்டி, கூஜா, டிஃபன் கேரியர் இன்றியமையாத உறுதுணைகள். படுக்கைகள் விரிக்கப்பட்டன. அவரிடம், நான் தரையில் படுத்துக்கொள்வேன் என்று அடம் பிடித்து, அவரை என்னுடைய விலை மதிப்பற்ற லொயர் பெர்த்தில் சயனிக்கச்செய்தேன். மற்ற மூவரும் ‘அப்பாடா!’ என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ‘உஷ்ஷ்ஷ்..’ / ஊதுகுழல்/ கர்ர்ர்./ போன்ற குறட்டையில் ஆழ்ந்தனர். ஹைதராபாத்தும் வந்தது. ஒருவரை ஒருவர் மறப்பதில்லை என்ற போலி பிரமாணம் செய்து கொண்டு பிரியா விடை பெற்றோம். பலாபலன்கள் வரும் பின்னே!
வருடங்கள் கடந்தோடின. டைம்லைன் 1968:
அக்காலம் நான், ஹைதரை கைவிட்டுவிட்டு, அஹ்மதை பரிணயம் செய்து கொண்டிருந்தேன். அதாவது அஹமதாபாத்தில் வேலை. அப்பாவின் மணிவிழாவுக்காக, நெய்வேலி வந்திருந்தேன். நான் படைக்கு அஞ்சமாட்டேன், தம்பி உடையான் என்பதால். (அவன் என் தனிப்படைக்கு அஞ்சுவான், அக்காலம்; இப்போது, ஓய்வு பெற்றும், கியாதியான சம்பளம். மணி விழா நடந்தேறியது; பக்கத்து வீடு. அவனிடம் இதை சொல்லாதீர்கள்; அஞ்சுவது யான்!) இந்த தம்பி மேல்படிப்பை உதறிவிட்டு, சென்னையிலிருந்து,சண்டியராக வருகை புரிய, அப்பா ஒரு கோரிக்கை எடுத்து முன் வைத்தார். அவன் மூன்றாமவன். மூத்த இரு ஆண்பிள்ளைகளும் பட்டப்படிப்பு முடித்தவர்கள். அவனும் பட்டம் பெறவேண்டும். ‘காரியத்தில் இறங்கு’ என்று எனக்கு ஆணை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று, யானும், அவனும், அவனுடைய ‘கொடாய்ங்க்’ மார்க் லிஸ்டுடன், விரைந்தோம், அண்ணாமலை பல்கலைக்கழகம் நோக்கி. எடுத்தவுடன், இணை வேந்தரிடம் சென்றோம். அவர் என்னை அடையாளம் புரிந்து, ‘யார் இந்த மஹாபுருஷன்?’ என்று மறந்துவிட்ட நிலையில், வாய் தவறிக் கேட்டுவிட்டார், ‘What can I do for you?’ என்று. விட்டேனா நான். ‘Sir, I gave you a berth that day. I want only a seat now.’ என்றேன். உடனடி ஷாக் தணிந்த பின், இன்முகத்துடன், B.Sc. (Chemistry) seat கொடுத்தாரே, பார்க்கலாம்! அவர் தான் தத்துவ பேராசிரியர் சந்திரன் தேவநேசன், சென்னை கிருத்துவக்கல்லூரியில், 1962ல். ஒரு கேள்வி எழலாம். வேறு கல்லூரியில் பொருளியல் படித்த உனக்கு, இவரை எப்படி தெரியும்? இவரின் அருமையான இண்டெர்காலேஜியட் லெக்ச்சர் கேட்க மகளிர் கூட்டமிருக்கும். அதான்.
இது பலாபலன் நம்பர் 1. மேற்படி சொல்ல அச்சம்.
இப்படிக்கு,
இன்னம்பூரான் (‘பூ’ நெடில்)
10 10 2010
2010/10/10 N. Kannan
இது சரித்திர இழையென்று நம் இன்னம்புரான் சார் ‘சர்டிபிகேட்’
கொடுத்துவிட்டதால் சொல்கிறேன்..
*
அன்புடையீர்,
சரித்திர இழை என்பதாலும் வரலாறு என்று வரும்போதும் கொஞ்சம் ஆவண் உட்திற்னாய்வு Internal criticism of document தேவை.
உங்களின் மலரும் நினைவுகளில் சில சந்தேகங்கள்
அண்ணாமலைப் பல்கலையின் இணை வேந்தர் செட்டிநாட்டு அர்சர் குடும்பத்தில் ஒருவராக் இருத்தல் மரபு. எனவே சந்திரன் தேவநேசன் இணைவேந்தராய் இருப்பதற்கு வாய்ப்பில்லை. என் யூகம் சரியா?
மேலும் சந்திரன் தேவநேசன் வரலாற்றுப் பேராசிரியர். அவர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றியவர்.
அருள்கூர்ந்து மீண்டும் நினைவுகூர்ந்து நீங்கள் லோயர் பெர்த் கொடுத்து கெமிஸ்ட்ரி சீட் வாங்கிய பேராசிரியரின் பெயரை மீண்டும் நினைவு கூறவும்..
நானும்
‘கொடாய்ங்க்’ மார்க் லிஸ்ட் தான். கெமிஸ்ட்ரி தான், அந்த்க்காலத்தில் அந்தமார்க்குக்கு கெமிஸ்ட்ரி அந்தர் பல்டி போட்டாலும் கிடைக்காது.
அண்ணாமலைப் பல்கலையில் டாக்டர். ஆதிநாராயணா என்ற உளவியல் பேராசிரியர் துணைவேந்தராக இருந்திருக்கிறார். ஒரு வேளை அவராக இருக்குமோ
நாகராசன்
*
மிக்க நன்றி, பேரசிரியரே, I am all for internal criticism of document
and shall welcome it. 'துணை'/இணை குழப்பம் இருந்திருக்கலாம் என்னிடம்.
நிகழ்வுகள் நடந்தவை என்பதால், டாக்டர் ஆதிநாராயணாவைத்தான் நான்
குறிக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. எனக்கு இருவரையும் தெரியும்;
சந்திரன் தேவநேசன், டாக்டர் பாயிட்டின் காலத்திற்கு பிற்காலம் சென்னை
கிறிஸ்துவக்கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றியதும்
ஞாபகத்தில் இருக்கிறது.
பிழை திருத்தம்: 'சந்திரன் தேவநேசன்' என்பதற்கு பதில் 'டாக்டர் ஆதிநாராயணா'.
இன்னம்பூரான்
*
Sir, I gave you a berth that day. I want only a seat now.’ <<
Superb, Excellent!!
Dev
*
அதெல்லாம் அப்படித்தான்! Accountant General--னா எப்பவும் balance book-எ maintain பண்ணுவார்கள் என்று சொல்லிக் கேள்வி!
அன்புடன்.
ராஜம்
*
இன்னம்பூரான்
26 04 2013
No comments:
Post a Comment