Friday, January 2, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:2


‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:2

இன்னம்பூரான்
02 01 2015

சில கடிதங்கள் இயல்பாக அமைந்து விடுகின்றன. சில எழுதப்படுகின்றன. சில படைக்கப்படுகின்றன. என் அம்மா எழுதிய கடிதங்களில் சிலவற்றை இன்று பார்வையிட்டேன். இன்லண்ட் கடுதாசி தான் எழுதுவார். ஒரு வெற்றிடம் இல்லாமல் குறிப்புகள் தென்படும். அன்பு தொனிக்கும். அறிவுரை மென்மையாக இருக்கும். விசாரணைக்கெல்லாம் குறைவில்லை. ‘நீ ஸ்னானம் பண்ணுகிறாயா?’ என்று மாட்டுப்பெண்ணுக்கு ஒரு வரி, பிள்ளையார் சுழிக்கு மேலே! அப்பா கடுதாசிலே மார்க் கேட்பார். கண்டனம் இருக்கும். அவருடைய ஆதங்கங்கள் எனக்கு மட்டும் புலப்படும். இவை இயல்பாக அமைந்த கடிதங்கள். நேருஜி-இந்திரா கடிதங்கள் எழுதப்பட்டவை. சிந்தித்து, சிந்தித்து, பல அரிய விஷயங்களை எழுதினார். செஸ்டர்ஃபீல்ட் பிரபுக்கு சாமுவேல் ஜான்சன் எழுதியது படைக்கப்பட்ட வகை. பிற்காலம் இன்னம்பூரானும் இதைப்பற்றி எழுதட்டுமே என்ற முன்யோசனை உள்ளங்கை நெல்லிக்கனி! இத்தனை முஸ்தீபு எதற்கு என்று கேட்பீர்கள். சில கடிதங்களில் படைப்பாற்றல் தென்பட்டாலும், இல்லை, விழுந்து விழுந்து நாட்தோறும் அவர் கடிதங்கள் எழுதினாலும், இயல்பு முத்திரை காணப்படும். அப்படிப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

“...கம்பர் விழாவில் உரைகல்லில் உரைத்து உரைத்துப்பார்த்துத் தெலுங்கு ராமாயணத்துக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். தமிழன் அப்பாவி என்ன செய்வான். பொன்னாடை போர்த்துவதற்கு நாமாவது கிடைத்தோமே என்ற அனுதாபத்தோடு சந்தோஷப்பட்டிருப்பான் அந்த தெலுங்காசாமி. இனி-...நம்முடையவர்களுக்கு ஆஸ்பத்திரியைப் பிரத்யேகமாகத்தான் கட்டவேண்டும். கீழ்ப்பாக்கத்தில் உள்ளது போதாது...தமிழ் பொல்லாத பாஷை என்று தெரிகிறது. தமிழனையே ஏமாற்றி விடுகிறது. அப்படியானால் அயலார் பாடு என்னாகும்! ...எனக்கு உடம்பு சுமாராய் இருக்கிறது...டாக்டர் தினம் வந்து போகிறார்...”. குறிப்பு: ப”பெரிய குழந்தைக்குச் சாப்பாடு ஏற்று வருகிறது. எல்லாம் சரியாய்ப் போய்விடும் நாளை.”
-#-
குறிப்பு? யார், எப்போது, எங்கே, ஏன் என்றா கேட்கிறீர்கள்? ஊகிப்பதில் மன்னர்களும், ராணிகளும் வாழுமிடம் இது அல்லவோ?!

1, 2, 3...

Wednesday, December 31, 2014

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:1




‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:1



மடல் இலக்கியத்தின் தனித்துவம் நிகரற்றது; அறிவுரையும்,ஆளுமையும், கனிவும் இயல்பாகவே, ‘கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போல’ ரசவாதமாக கலந்தோடி வரும்.  மூதுரையில் ஒளவைப்பாட்டி உவமையாக எடுத்துரைத்த தாழம்பூவைப் போல நறுமணத்தின் உறைவிடமாகவும்  மகிழம்பூவைப்போல மணம் தெளிப்பதாகவும் கடிதங்கள் அமையலாம்.  மடலிலக்கியத்தினூடே வம்பு பேசலாம்; குசலம் விசாரிக்கலாம்; அதட்டலாம்; சிந்தை செய்யலாம்; அறிவுரை அள்ளி வழங்கலாம். மனம் போனபடி எழுதும் கலையை வளர்க்கலாம்.  எல்லாம் செல்லுபடியாகும்.  

‘மடல்பெரிது தாழை மகிழினிது’ என்ற தலைப்பில் துவக்கப்படும் இந்த இழை மடல்/கடிதம்/லிகிதம் என்ற வகையில் அமையும் இலக்கிய விசாரணை என்க.  தந்தையிடம் பணம் கேட்டு எழுதும் கடிதம், காதல் கடிதம், மாதவி மடல், அம்மாவிடம் சிபாரிசு கோரும் கடிதம், இலக்கிய விமர்சன கடிதம், அரசியல் கடிதம், அநாமதேயக்கடிதம் எல்லாமே இங்கு இடம் பெறும்.  ஒரு விதத்தில் பார்க்கப்போனால், ‘... ஸுபாஷிணி எழுதி வரும் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் பற்றிய தொடர்  ஒரு நல்ல முன்னுதாரணம். ..’ எனலாம்’. என்று அன்று சொன்னது, இன்று எனக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்து விடுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் (28 10 12) நான் நாவன்னா காவன்னாவுக்கு எழுதிய மடல்: 

‘என் புரிதல் படி மின் தமிழ், தமிழ் மரபு அறக்கட்டளையின் தோழி, பணிப்பெண் ஆகவும் அன்றாடம் இயங்கினால் நல்லது. மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்களையும், மற்ற பதிவுகளையும் ஆய்வு செய்யலாம். நூல் மதிப்பீடுகள் காணக்கிடைப்பது, அரிதாக இருக்கிறது. அந்தக்குறையை நீக்கலாம். மற்ற மொழிகளிலிருந்து நல்வரவுகள், மொழியாக்கங்கள், சமுதாய முன்னேற்றம் ஆகியவை இடம் பெறலாம். மாணவர்கள் விரும்பும்/ அறிந்து கொள்ள வேண்டிய இடுகைகள் இடம் பெறலாம். ஸுபாஷிணி எழுதி வரும் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் பற்றிய தொடர்  ஒரு நல்ல முன்னுதாரணம்.  நாம் லண்டனில் கூடி பேசிய பொழுது, அன்றாடம் புதிய/ தரமுயர்ந்த பதிவுகள் நாட்தோறும் இடம் பெறவேண்டும் என்ற ஆவலை நான் தெரிவித்தது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்’. நேற்று புத்தாண்டு வாழ்த்துக்கள் வழங்கிய ஸுபாஷிணியின் இலக்கும் இவ்வாறு தான் அமைகிறது என்று தோன்றுகிறது. 

நம் நண்பர் திரு.நரசய்யா கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக கிருத்திகாவும் சிட்டியும் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் ஆத்மாவை 2011ல் பிரசுரித்ததை யாம் அறிவோம். அதனை ஒரு நாள் எடுத்து நம்மில் ஒருவர் இங்கு இலக்கிய விசாரனை செய்யலாமே? இன்று புத்தாண்டு தினம். அதன் பொருட்டு, புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, ஒரு மீள் பதிவு. இந்த இரு மடல்களும் அமர காவியங்கள். குழந்தைகளுக்கு சூதுவாது தெரியாது. அவர்கள் பாராசாரி புரவி போல வெகு வேகமாக பல விஷயங்களை அறிந்து கொள்வது, வினா-விடை தடம் தான் அவர்களுக்கு ராஜபாட்டை. சிறார்களுடன் மடலாடுவது அக்காரவடிசல் உண்பது போல. தித்திக்கும்.
*
‘அன்பார்ந்த ஆசிரியருக்கு,
எனக்கு வயது எட்டு. என்னுடைய சின்ன நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து, ஸாண்டா க்ளாஸ் இல்லை என்கிறார்கள். என் அப்பாவோ, உங்கள் இதழில் ஸாண்டா க்ளாஸ் நிஜம் என்றால் நிஜம் என்கிறார். உண்மை என்ன?
வர்ஜீனியா ஓஹான்லன், 115 , மேற்கு 95 வது தெரு…’
*
வர்ஜீனியா,
உன்னோட ஃப்ரெண்ட்ஸ் சொல்றதெல்லாம் தப்புடா, செல்லம். காலம் கெட்டுக்கிடக்கு, பாரு. எதையும் துருவித்துருவி கேட்டுப்பிட்டு, எதையும் நம்பாத கலி காலம், பாப்பா. உன் கண்ணால் பாத்தியா அப்டினு கேப்பானுக. சிறிசுகள் தானே. அவா மனசுக்கு எட்டாததை இல்லேன்னுடுவா. வர்ஜீனியா! பெரியவாளோ, சின்னவாளோ, எல்லாருக்கும் சின்ன மனசு. இந்த பிரபஞ்சமோ பிரமாண்டம். இவனோ தூசி! அறிவு, ஞானம் எல்லாம் இவனுக்கு தம்மாத்தூண்டு!

ஸாண்டா க்ளாஸ் இருக்கார். வர்ஜீனியா! எங்கெல்லாம் அன்பும், உதாரகுணமும், பக்தியும் இருக்கோ, அங்கெல்லாம் அவர் இருக்கார். அந்த மூணும் தான் அழகு தரது ~ குஷிப்படுத்தறது. நோக்குத் தெரியுமே, அந்த பிரகலாதன் கதை! அன்னிக்கு சாலியமங்கலத்திலெ பாகவத மேளா பார்க்க போனோமே, ஞாபகம் இருக்கோ. நீ தானே அன்னிக்குக்கேட்டே, ‘தூண்லெ மட்டும் தான் பெருமாள் இருப்பாரா’ என்று. எல்லாரும் சிரிச்சவுடனே, உனக்கு ‘ஷை’ ஆயிடுத்து.  ஸாண்டா க்ளாஸ் இல்லேன்னா, லோகமே பேஸ்து அடிக்கும், பாப்பா!, ‘வர்ஜீனியா இல்லேங்கிறமாதிரி!’  அப்டி சொல்ல விட்றுவோமா? எப்டிருக்கு நான் சொல்றது? குழந்தை மாதிரி நம்பிட்றது, பாட்டு, கூத்து, ஜாலி, ஒண்ணுமே இருக்காதே, அம்மா! என்ன! நான் சொல்றது! என்ஜாய் பண்ண முடியாது. கண்டதே காட்சி; கொண்டதே கோலம்னா போரடிக்கும். இந்த லோகத்துக்கே விளக்கு ஏத்தறது மழலையின் கீதம். அதை அணைச்சுட்டா, என்னம்மா பண்றது?

ஸாண்டா க்ளாஸ் மேலெ நம்பிக்கை இல்லெனா, தேவதைகளை நம்பமாட்டே. நீ வாணாலும் அப்பாட்டெ சொல்லி கூலிக்கு ஆள் பிடிச்சு, புகைப்போக்கி சிம்ணி, மொட்டை மாடி, பரண், மச்சு, எல்லா இடத்திலும் தேடச்சொல்லு. என்ன தெரியும்? அவா கண்ணுக்கு அவர் படலை. அவ்வளவு தான்! அவர் இல்லென்னு ஆயிடல்லையே! புரியறதா? நான் சொல்றேன். கேளு. இந்த லோகத்திலெ நிஜத்தைப் பாக்கறது தான் கஷ்டம். பசங்களுக்கும் கண்லெ படாது பெரியவாளுக்கும் கண்லெ படாது. ஆமாம். நீ என்ன தேவதைகள் நம்மாத்து லான் புல்லுமேலே டான்ஸ் ஆடி பாத்திருக்கையா? அதனால அது இல்லெனா எப்டி? நான் சொல்றேன். கேளு. நாம பாக்காததையும், நம்மாலெ பாக்கமுடியாததெயும் இல்லென்னு அசடு தான் அடிச்சுப் பேசும்.

தம்பிப்பாப்பாவொட கிலுகிலுப்பையை பிரிச்சுப்போட்டு, எப்டிறா சத்தம் வருதுன்னு பாக்கலாம். ஆனா, இந்த லோகத்திலெ எல்லாத்தையும் ஏன் பாக்கமுடியலெ தெரியுமா? பனாரசி டிஷ்யூ புடவைன்னு வச்சுக்கோ, அந்த மாதிரி ஒரு தங்கத்திரை ஒண்ணு (ஹிரண்மயேன பாத்ரேண) போட்டு ஜிகுஜிகுன்னு மூடிவச்சுறுக்கா. கிங்க் காங்க் வந்தாக்கூட அதை விலக்கமுடியாது தெரியுமோ? நம்பிக்கை, கற்பனை, கவிதை, அன்பு, லவ்வு அதெல்லாம் வந்தாத் தான், இந்த ஜிகு ஜிகு திரையை விலக்கி ஆனந்தமய கோஷத்தை திவ்யதரிசனம் பண்ணமுடியும், வர்ஜீனியா. நான் ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ. இதுக்கு மேலெ நிஜம்னு,சாஸ்வதம்னு ஒண்ணுமே கிடையாது.

ஸாண்டா க்ளாஸ்ஒம்மாச்சிக்கு தேங்க்ஸ் சொல்லுடா, செல்லம். ஸாண்டா க்ளாஸ் மார்க்கண்டேயனாக்கும். பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டு, அவர் சூப்பர்மார்க்கெட், ஒண்டாரியா மால், சர்க்கஸ், மலைக்கோயில்,ஆம்னிப்ரெஸெண்ட். பெரிய சாக்குமூட்டையெல்லாம் எடுந்திண்டு வந்து குழந்தைகளை குஷிப்படுத்துவார். அப்றம் டிஸெம்பர் 24 அர்த்தராத்ரிலெ, ஆகாசத்திலெ ஊர் சுத்துவார், சக்கரை அம்மாள் மாதிரி. சிம்ணி வழியா இறங்கி வந்து, நீயும், நானும் நட்டு வச்சோமே, அந்த கிருஸ்த்மஸ் மரத்திலெ, உனக்கு கிஃப்ட் எல்லாம் கட்டி வைப்பார்.
என்னை கேட்டா, அவர் தினோம் வரணும். நீ என்ன சொல்றே?
-#-


இன்னம்பூரான்
ஜனவரி 1, 2015

Monday, December 29, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II ~ சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2





ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2


இன்னம்பூரான்
29 12 2014

தொடர் கதைன்னா நின்னு கேக்கணும்; அடுத்த வாரத்துக்கு வையிட் பண்ணனும். அந்தக்காலத்திலே சார்லஸ் டிக்கென்ஸ் ஒருத்தர் இருந்தார், எங்கள் போர்ட்ஸ்மத்தில். அவர் நினைவாலயம் கூட அங்கு இருக்கிறது. அவர் நாவல் நாவலாக எழுதிக்குவிப்பார். முதல்லே சீந்துவார் இல்லை. அப்றம் சூடு பிடித்து விட்டது. எக்கச்சக்க சேல்ஸ். போன வருஷம் கூட லைப்ரரியில் புது பதிப்புகளை பார்த்தேன்.  அவருடைய நாவல்கள் தொடர்கதைகளாக வந்து கொண்டிருந்தன. அமெரிக்காவில் அவருக்கு ரசிகர் மன்றமே இருந்தது. ஒரு கப்பலில் வந்து இறங்கிய இதழில் கதை சஸ்பென்ஸ்லெ முடிந்திருக்கும். அடுத்த கப்பல் வரச்சே, ஜனங்கள் எல்லாரும், டென்ஷனா, துறைமுகத்திலே காத்திருப்பார்களாம். ஒத்தர் ஓடோடி வந்து, கண்ணீர் மல்க, ‘சிட்னி காட்டனை தூக்கிலெ போட்டுட்டாங்களா?’ என்று கேட்டாராம்.  அந்த மாதிரி, இது வரை வந்த கதைல்லே ‘சின்சினாட்டிச் சின்னத்தாத்தா’ ஏன் வரவில்லை என்று கேட்டால், என்னால் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல்லே. எனக்கே தெரியாது என்று உண்மையை சொல்லிவிடலாம். அப்ப எல்லாரும் ‘யாருடா, இவன்? புருடா விட்றான்’னு படிக்காம விட்றுவாங்க.
என்னடா பண்ணலாம் என்று ரோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போதே....
*
ரண்டு நாள் முன்னாலெ .... கல்லூரியில் படித்து 19..ம்வருட ...இயல் முதுகலை தேர்வு எழுதிய கல்லூரி தோழர்களில், அகப்பட்ட ஆறு பேர்கள் ஜிம்கானா கிளப்பில் கூடினோம். மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின், வராத நண்பர்களுக்கு அர்ச்சனை நடந்தது.  சில பாமரகீர்த்தி நினைவு மலர்களும் விகசித்தன. எம்மில் மூவர் சினிமா பிரியர்கள். மாலைக்காட்சி முடிந்து வந்தால், ஹாஸ்டல் துவாரபாலகன் ‘மாலைக்கண்’ மாசிலாமணி கிட்ட மாட்டிக்கொள்வோம். ஜாலியாகவே வரவேற்ற அவருக்கு ஆள்மாறாட்டமாகத்தான் அறிய முடியும். ரஜினிகாந்த் வந்து நின்னால் சிவகுமார் என்பார். சினேகாவை கே.ஆர்.விஜயா என்பார்.  முண்டாசு, குல்லா, கறுப்புக்கண்ணாடி, பொய்மீசை போன்ற உத்திகளால் அவரை நன்றாகவே ஏமாற்றமுடியும்.‘இந்தா ராசா! இந்த ரிஜிஸ்டர்லெ கையெழுத்துப்போடு. சாமி வந்தா ஆயிரம் கேள்வி கேட்கும்’ என்பார், மறைந்த மாமுனிவர் பிரேமானந்தா போல. சரி. பேர் வேண்டாம். அந்த இருவரும் அழகாக ‘வைஜயந்திமாலா’, ‘எம்.கே. தியாகராஜபாகவதர்’ என்று நேர்த்தியாகவே கையொப்பமிட்டு, வந்து படுத்தார்கள். மூன்றமவன் ‘திருவள்ளுவர்’ என்று கையொப்பமிட்டுவிட்டு, சுவரேறி ஓடி விட்டான். 
மறு நாள் காலை எட்டு மணிக்கு ஆராய்ச்சிமணி அடித்தது. போய் நின்னா, கோர்ட் மார்ஷல். என்னோடெ இருபது வருஷ சர்வீஸ்சில் இது எல்லாம் நடந்ததில்லை என்று மாசிலாமணி அலுத்துக்கொண்டார். எள்ளும் கொள்ளுமா வெடித்துக்கொண்டிருந்த சாமியாரிடம் அவருக்கு 
லவலேசமும் பயம் கிடையாது.  அவர் தான் சாமியாரை சின்ன வயசிலேயே பாத்திருக்காறே. கையை கட்டிண்டு பிராக் பார்த்துக்கொண்டிருந்தார். புலன் விசாரணை நடந்தது. எதற்கும் வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் கூப்பிடலாமே என்று நான் முணுமுணுத்ததை பாம்புச்செவியாக கேட்ட சாமியார், ‘நீயும் போனாயா?’ என்று கடுமையாக வினாவினார். என்னைத் தான் பிரார்த்தனையில் பார்த்தீர்களே என்று நான் பிராது போடவே, சாமியார் ஜகா வாங்கினார். அது தான் சாக்கு என்று சோமு ( மே ஹிஸ் ஸோல் ரெஸ்ட் இன் பீஸ்.) சொன்னான், ‘சுவாமிஜி! யாருமே வெளியில் போகவில்லை. நான் சாக்ஷி. நன்றாக இருட்டிவிட்டது. அந்த பிரும்மராக்ஷஸ் வந்து இப்டி....’. பேச்சு திசை மாறிப்பயணிக்கவே, நான் பிரார்த்தனை முடியும் முன் ஜன்னல் வழியாக வெளியேறியதை எங்கள் ‘வீபீஷணன்’ கந்தசாமி சொல்ல முடியவில்லை. பிசாசு உண்டு/ இல்லை என்ற வாதத்தினால், வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் மறந்து விட்டார்கள். ‘திருவள்ளுவர்’ வந்து போன மர்மமுடிச்சு அவிழ்க்கவேயில்லை. நிராசையாக திரும்பினார், சுவாமிஜி.

அதுவும் இதுவுமாக அரட்டை அடித்து. இனிமையாக பொழுதைப் போக்கினோம். சொல்றதுக்கு நிறைய இருக்கு. என் சைக்கிளின் அசுரபலம், பாலு வீட்டு ஓனர் மகள் காஞ்சனையின் கனவு, பெருமாள் கோயில் உலா, அங்கு மங்கலான ஆஞ்சநேயர் சன்னதி வாசலில் நம்ம குருவும், அவனோட ஆளு சரசாவும் ஊடல்... ஒரு புராணமே இருக்கு. நாங்கள் ஆறு பேருமே அறுபடை வீட்டார் போல குருவோட கல்யாணத்துக்குப் போயிருந்தோம். ஆனால் சரசாவோட இல்லை! அந்தக்கதை ரோமியோ-ஜூலியட் கதையை தோற்க அடித்துவிடும். இன்னொரு நாள் சொல்லணும், கேட்டவாளுக்கு மட்டும். ம்ம். சும்மாச்சொல்லக்கூடாது. அவன் கை தாராளம்.  இங்கிதமாகவே, எங்கள் எல்லாருக்கும் பேண்ட், ஷர்ட் எல்லாம் பரிசில் கொடுத்தான். அதான், இத்தனை நாட்களுக்கு அப்றம் சொல்றேன். நன்றி வேணுமோல்லியோ, சார். அதான், அவா ரண்டு பேரும் போறவரைக்கும் சொல்லலை. 

அந்த சமயம் பார்த்து, தன்னுடைய டையை தளர்த்தி விட்டுக்கொண்ட சுப்புடு, தண்டபாணி, தனை மறந்து தண்டால் போட்ட வைபவத்தை அமர் சித்திரக்கதா போல, தொடர்கதையாக சொல்ல ஆரம்பித்தான். சுப்புடுவோட பாட்டி கோரோஜனை ஜாஸ்தி கொடுத்துட்டா போல இருக்கு. அப்படி ஒரு குரல் அவனுக்கு; ஒரே கூக்குரல், ஆம்படையாளுடன் ரகசியமா பேசச்சவே! எங்கள் பார்ட்டி நடந்தது ஒரு தனி ரூமில். ‘தடால்னு’ ஒத்தர் கதவை திறந்துகொண்டு வந்து,‘என்னை பற்றி இப்படி அவதூறு பேசின சுப்புடுவை விட்டேனா பார்?’ என்று புஷ்டியை உயர்த்தினார். இன்னொரு கைலே விஷ்கி! அதுவும் மத்யான வேளையில்!  நம்ம தண்டபாணி! எல்லாரும் கை தட்டி, வரவேற்று அவனை ஆசுவாசப்படுத்தின பிறகு தான், சுப்புடு விட்ட கதையை விறுவிறுப்பா தொடங்கினான். 
சொல்ல மறந்துட்டேனே. தண்டபாணி டீ ஷர்ட் வாசகம் கொட்டை கொட்டையா சிவப்பு மசியில்.
அதுவும் தமிழில்!
சின்சினாட்டிச்சின்னதாத்தா!!!
(தொடரும்)

Tuesday, December 23, 2014

Christmas & New Year 2015 Greetings

'Tis the season!I  join the most imaginative Greetings
from Google with one and all, with respectful acknowledgement and thanks to GOOGLE.

I wish you all joyous Festivities

Innamburan

Sunday, December 21, 2014

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:1 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III




ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:1


இன்னம்பூரான்
21 12 2014

சொல்றது எளிது. செய்வது கடினம். ராமநாதனோட அப்பா கர்ணம், திருக்கருகாவூரில். அப்போதெல்லாம், ஊர் அத்தனை பிரபலம் இல்லை, பிள்ளை வரம் அளிப்பதில். அதனால், அதிகப்படியான போக்குவரத்து கிடையாது. நாளைக்கு ஒரு பஸ் உச்சிவேளையில் வரும். சாயும் வேளை திரும்பும். அந்தக்காலத்தில் மூன்று போகம் சாகுபடி. சர் ஆர்தர் காட்டன் போட்ட வாய்க்காலில் தண்ணீர் கல கல என ஓடும். தலையாரி ஆறுமுகமும், ஏழுமலையும் ஒரு நாள் பிச்சுமணி அய்யரின் ( அதான் ராமநாதனனின் தந்தை) பேச்சை கேட்பார்கள். அடுத்த நாள் மணியக்காரர் ஹாஜி அப்துல் காதர் மொய்னுதீன் பேச்சை கேட்பார்கள். அது ஒரு ராஜதந்திரம். பக்கத்தில் இருக்கும் பண்டாரவாடையில் வெற்றிலை சாகுபடி செய்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர். என்ன தான் சாதிக்கட்டுபாடுகள் இருந்தாலும் அந்த பிராந்தியத்தில் ஒற்றுமை அதிகம். சம்பிரதாயத்துக்கு ஒன்றும் குறைச்சல் இருக்காது. என்ன தான் அன்யோன்யம் இருந்தாலும், நாமநாதன் ஹாஜி வீட்டில் சாப்பிடமுடியாது. பீபீ கொடுக்கிற அல்வாத்துண்டை ரகசியமாக வாயில் போட்டுக்கொள்வான். கோகுலாஷ்டமி பக்ஷணங்கள் எல்லாம் சீர் வரிசை மாதிரி மணியக்காரர் வீட்டுக்குப் போகும். இத்தனைக்கும் கிஸ்தி விவகாரத்தில் இரண்டு பேருக்கும், கைகலப்பைத் தவிர, மற்ற எல்லா சண்டையும் உண்டு. ஒரு நாள் கலைக்டர் ஜான்சனே வந்து சமாதானம் பன்ணி வைத்தான் என்று சொல்லிக்கொள்வார்கள். ராமநாதன் தாம் அரைகுறை இங்கிலீஷில் துபாஷியாம்.

என்னடா! ஐயங்கார் இருக்கவேண்டிய இடத்திலே ஹாஜியா என்று சில பேர் மூக்கிலெ விரலை வைக்கிறார்கள். நம்ம மொய்தீன் சாகிபுடைய தாத்தா ஜனாப் முகம்மது மொய்தீன் தான் கும்பகோணம் துளிர் வெற்றிலைக்குத் தகப்பன் எனலாம். ஏக்கர் கணக்கா வெற்றிலைத்தோட்டம். அப்பவே ஏற்றுமதி ஆச்சு என்பார்கள். எந்த வெளியூர்க்காரன் வெற்றிலை போடுவான் என்று கேட்காதீர்கள். ஜான்சனுக்கு ஸ்பெஷல் சப்ளை போகும். உறையூரிலிருந்து சுருட்டு வரும். சாம்பசிவம் அய்யர் ( அதான் ராமநாதனுடைய கொள்ளுத்தாத்தா) ஜனாப் சாஹிபுடைய குமாஸ்தா. பற்று வரவு எல்லாம் அவருக்குத்தான் அத்துபடி. திடீரென்று ஒரு நாள் ஊரில் ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு. கோமளா மாமி தான் அடுப்பை அணைக்க மறந்து போயிட்டா. கூரை பற்றிக்கொண்டது என்பார், சிலர். பிரச்னம் கேட்டோம், மலையாளத்து பிராமணாள் மூலமா.  தெய்வகுற்றம் என்று சொல்கிறார்கள். இது ஒரு கட்சி. அக்ரஹாரமும் எண்ணைக்காரத்தெருவும் சப்ஜாடா காலி. அக்னி பகவான் ஸ்வாஹா பண்ணிட்டார். எல்லா வீடுகளும் சாம்பலாயின. ஜனாப் முகம்மது மொய்தீன் தான் எல்லாருக்கும் கட்டிக்கொடுத்தார். பட்டா, கிட்டா பிரச்னையெல்லாம் தீர்த்து வைத்தார். சுயம்பு மாதிரி, யாரும் ஏதுவும் செய்யாமலே, பட்டாமணியம் அப்பாசாமி ஐயங்கார் தேக வியோகம் ஆனபின், ஜனாப் முகம்மது மொய்தீன் தான் பட்டாமனியம் என்ற எழுதப்படாத விதி வந்தது. பரம்பரை சொத்தாகவும் மாறியது. இனபேதம், மதபேதம் இல்லாமலும், சம்பிரதாயமான இனபேதமும், மத  பேதமும் உடன் வர, கிராமத்தில் நல்லாட்சி நடந்து வந்தது. இது எல்லாம் ராமநாதன் சொல்லித்தான் எனக்குத்தெரியும். ஏதோ பழைய பேப்பரை எல்லாம் குடைந்து விட்டு அவன் சொன்னான், ‘டேய் ராஜூ! மன்மோகன் சிங் மாதிரி சாம்பசிவம் அய்யர், சோனியா மாதிரி, ராவுத்தர்னு. ஒரு நமுட்டுச்சிரிப்பு வேறே!

(தொடரலாமா?) 

சித்திரத்துக்கு நன்றி: நம்ம http://www.heritagewiki.org/images/9/95/Indian_village.jpg

Friday, December 19, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 11

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 11

என்னத்தைச் சொல்ல! 8


இன்னம்பூரான்
19 12 14

‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்...’ என்று ‘நல்வழி’ யில் ஒளவைப்பாட்டி பாடினார். அது அவ்வாறு இருக்க, தனது உயிரை தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. மனநிம்மதியை குலைக்கின்றன.  இன்றைய செய்திகளில் எடுத்துரைக்கப்பட்ட தற்கொலைகளின் பின்புலமும், பயங்கரமான செய்முறைகளும், அவலங்களும் நம்மையே தற்கொலை செய்துகொள்ள தூண்டிவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது.

பாண்டிச்சேரியின் முக்கியத்துவம் ஶ்ரீஅரவிந்தர் ஆசிரமம் தான். ஶ்ரீஅரவிந்தர் நிறுவிய அந்த ஆன்மீக மையம் அண்மையில் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. அங்கு வசித்து வந்த ஐந்து சகோதரிகளுக்கும் ஆசிரம பொறுப்பாளர்களுக்கு ஒவ்வாமை, சண்டை. கோர்ட் வாசற்படி ஏறினார்கள்.  உச்சமன்றம் அவர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என ஆணையிட, அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஐவரும் அவர்களது பெற்றோரும் தற்கொலை செய்ய கடலில் குதித்தனர். மூவர் காலி. மூவர் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் தன்னை காப்பாற்றியவரே தன்னை பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கினர் என்று புகார் அளித்தார். தந்தை பெரியார் திராவிடகழகத்தினர் ஆசிரமத்தைத் தாக்கினர்.

கந்துவட்டி துன்பம் தாங்காமல் கரூரில் இரு சகோதர்கள் நஞ்சுண்டு செத்துப்போனார்கள். இருளப்பசாமி என்ற விவசாயி தன் தந்தை காசிராஜனிடம் உரம் வாங்கக்கொடுத்தப் பணத்தில் கள்ளை குடித்து விட்டு வந்தார், தந்தையார். மகன் அதைக் கண்டிக்க, அப்பன் தீக்குளித்து மரணம் அடைந்தார். கலப்பு மணம் செய்து கொண்ட ஒரு யெளவன தம்பதியை, இரு தரப்பிலும் வீட்டார் ஒதுக்கி வைத்தனர். தன்னுடைய வளைகாப்பு வைபவத்துக்கு ஒருவரும் வரவில்லை என்று மனைவி தூக்கில் தொங்க, அதை கண்டு மனமுடைந்த கணவனும் தூக்குப்போட்டுக்கொண்டான்.  தேனியில் தலைமை ஆசிரியை தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் தீக்குளித்தான்.  மேலதிகாரி ஒருவர் தலைமை ஆசிரியை மீது குற்றம் என்றார். அந்த அம்மையும் ரஜாவில் போய்விட்டார்.

தமிழகமே! நீ எங்கே போகிறாய்? Quo Vedis?

Image Credit:

http://www.notable-quotes.com/s/suicide_quote.jpg

Tuesday, December 16, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 10: மாதங்களில் நான் மார்கழி.

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 10: மாதங்களில் நான் மார்கழி.


இன்னம்பூரான்
16 12 14

இன்று மார்கழி மாதம் பிறந்தது. ஐப்பசியில் தீபாவளி கொண்டாடினோம். புத்தாடை பூட்டினார்கள்.  கார்த்திகையில் சொக்கப்பானை கொளுத்தினோம். இன்று வைகறையில் கோஷ்டிகானமாக,  உன் பள்ளியறை முன் நின்று திருப்பள்ளியெழுச்சிப் பாடி, உமது உறக்கத்தை மென்மையாக கலைத்தோம்.

'சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன் 
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்..'

என்று உன்னுடன் உறவாடினோம்.

அதன் தொடராக மதியம் பக்தி விஜயமாக கேசவனை, பாண்டு ரங்கனை, விட்டலனை சேவித்தோம்.

அதன் தொடராக ' நவீன' ஆண்டாள் திருக்கல்யாண வைபோகத்தைக் கண்டு களிப்போமாக.


Monday, December 15, 2014

ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9 என்னத்தைச் சொல்ல! 7


ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9
என்னத்தைச் சொல்ல! 7
இன்னம்பூரான்
15 12 2014
கிணற்றுத்தவளை ஒன்று ஒரே தாவலில் ஓடோடி குளம், குட்டை, கண்மாய் எல்லாவற்றையும் கன கச்சிதமாக அனுமார் போல தாண்டி, கடலிலேயே கலந்து உறவாடியமாதிரி, மத்தியப்பிரதேசத்து மாமனிதர் கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வாங்கினார். உலக பிரசித்தமானார். மனமுருக சொற்பொழிவு ஆற்றினார். சிறார்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆபத்பாந்தவனான அவரை அறியாதவர்கள் இருப்பது, அந்த மத்தியப்பிரதேசம் எனப்படும் கிணற்றில் ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும்’ பிரபலங்களின் வாழ்க்கை நெறி! ஆண்டவா! 

மத்திய பிரதேச சட்டசபையில் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை போற்றி ஒரு தீர்மானம் நிறைவேறிய பின்னும், அவருக்கு பர்த்தியாக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு வாழ்த்துரை மடல்கள், நோபல் பரிசு பெற்றதற்கு! 

வழங்கிய மேதைகள்:

“ நமது சகபாடி அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை தருகிறது. அவர் செய்த சமூகசேவையை பாராட்டவேண்டும்.” -அமைச்சர் குஸும் மாஹ்டெலெ. ஆஹா!

“ கைலாஷ் விஜயவர்கியாவை போல சாதனையாளர்கள் எங்கள் கட்சியின் பல அங்கத்தினர்கள்!” - அமைச்சர் ஞயான் சிங். ( இவர் கலாச்சாரத்தின் விசிறி. ஆன்மீக இசை வித்தகர்.) பேஷ்!

திலீப் சிங் பரிஹார், ரஞ்சீத் சிங் என்ற சட்டசபை அங்கத்தினர்கள் விஜயவர்கியாவை போன்ற சாதனையாளர்கள் இந்தூரில் செய்த சமூக சேவைக்கு பரிசில் கொடுத்த நோபெல் கமிட்டியின் அருமை பெருமைகளை பாராட்டினார்கள். இதை கண்டு பொறுக்காத எதிர்கட்சி பெருமகனார் ஒருவர் விஜயவர்கியாவுக்கு நோபெல் பரிசு கொடுக்கப்பட்டதே மத்திய அரசும், மாநில அரசும் செய்த சதி என்று குற்றம் சாட்டினார். சத்ய பிரகாஷ் என்ற ‘உண்மை விளம்பி’ விஜயவர்கியாவை தாக்கிப்பேசினார்.

ஒரு ‘கைலாச’ குழப்பம். அரசியல் துறையில் முதுகலைபட்டம் பெற்றிருந்த சஞ்சய் பதக் என்பவர் ‘தபக்’ என்று ஒரிஜனல் கைலாஷை மறந்து விட்டு கைலாஷ் விஜயவர்கியாவுக்கும்  கைலாஷ் சாவ்லாவுக்கும் கன்ஃப்யூஸ் செய்து கொண்டு, யாரை பாராட்டுவது என்ற ‘தொபக்கட்டீர்’ வியாகூலத்தில் ஆழ்ந்தார். அஞ்சாநெஞ்சனாகிய அமைச்சர் பூபேந்திர சிங் இதையெல்லாம் ‘ஃபூ..பூ...’ ஊதி விட்டார். கைலாஷ் விஜயவர்கியா எல்லா புகழுரையும் ஜாலியாக வாங்கிக்கொண்டாலும் எதிர்க்கட்சிகளின் மனநிலையை குறை கூறினார்.

இந்த கந்தரகூளங்களை ஊடகங்கள் எள்ளல் செய்ததை பொறுக்காத இந்த ஆட்சி மேலாண்மை மவுனம் காத்தனர். நம்ம கிராம ஊழியர்கள் தேர்வு வைத்தால் இதுகள் தோல்வி தழுவுங்கள். அதை விடுவோம். மாபெரும் சாதனையாளர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை விதீஷா என்ற உள்ளூர் வாசிகள் கண்டு கொள்ளவேயில்லை. அவர் விளம்பரம் நாடாத உழைப்பாளி. அவரால் பல உதவி பெற்றவர்களே அவரை மதிக்கவில்லை. சிறார்களுக்கு அவர் இத்தனை பாடுபட்டபின்னும் உள்ளூரில் இன்று கூட சிறுவர்களை வேலை வாங்குகிறார்கள், விதீஷாவில்.

தமிழ்நாட்டு அமைச்சர்கள் இந்த ரகம் அல்ல. சுதாரித்துக்கொள்வார்கள். 1970ம் வருடம் ஏ.ஜீ ஆஃபீஸில் ஒரு கலை நிகழ்வு. ஒரு அமைச்சர் சிறப்புரை ஆற்றினார், தேனீர் ஆற்றுவது மாதிரி!
கலையை பற்றி பேசுவதில் இடைச்செருகலாக, ‘நாங்கள் உங்களுக்கு அகவிலைப்படி வாங்கிக்கொடுத்தோம். நன்றி செலுத்துக’ என்று ஒரு ஊசிப்பட்டாசு வீசினார். மத்திய அரசு துறையான அந்த அலுவலக ஊழியர்கள் முணமுணத்தார்கள், உரத்த குரலில். அமைச்சர் தப்புத்தவறி தலைமை தாங்கிய நான் இதை அவரிடம் விளக்கி, இந்த ஆடிட் பசங்க ஒரு டோண்ட் கேர் டைப் என்றேன். புன்னகை பூத்த அமைச்சர் பிரான் அடுத்து சொன்னது, ‘ புதுக்கோட்டை அருகில் இருக்கும் சித்தன்ன வாசலிலே... என்று அரை மணி நேரம் ஒரு பிடி பிடித்த லாகவம். இல்லை லாவகமா?

மாரல்: கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கலாம்.






pastedGraphic.pdfSatyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

Satyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

Thursday, December 4, 2014

வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்
On VRK

இன்னம்பூரான்  
I am devastated. Age did not wither him. Wisdom did not leave him. Compassion dwelt in his soul. Mother India sobs. I had an opportunity of meeting with him two decades ago. I relived the memory of Gandhiji. Who am to say? His soul will rest in peace.
~ the HIndu comments



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, December 2, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: 8: கனம் கோர்ட்டார் அவர்களே!….14



ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: 8

‘ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்’ தொடரை யாரும் படிக்காமலே நிலைக்கு வந்து விட்டது என்று நினைத்தேன்; அமைதி காத்தேன். மவுன விரதம் அனுஷ்டித்தேன். இன்று இருவர் படிப்பதாக சொன்னார்கள். அதான் வந்து நிற்கிறேன், பெரிசு ஆறுமுகம் சேர்வை அய்யாவுடன்.
இன்னம்பூரான்
02 12 14 
கனம் கோர்ட்டார் அவர்களே!….14

எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். மதம் பிடித்த யானை ஏறி, ஏறி மிதித்தாலோ, முதலையின் பல்லிடுக்கில் அகப்பட்டுக்கொண்டாலோ, என்ன ஆவது? இந்த பாரத தேசவாசிகள் அத்தகைய பேராபத்தில் சிக்கிக்கொண்ட வேளையிலும், வாதப்பிரதிவாதங்களில், பட்டிமன்றங்களிலே, அரட்டைக்கச்சேரியிலே, குடலாடி (மடலாடலில் ஒரு வகை!) மகிழும்போது, மலையை தடவிப்பார்க்கிறார்கள், ஊர்ந்த எறும்பு நகர்ந்த பின்!
என்.ஹெச்.சசிதல் என்ற அரசு ஊழியர் மீது அதீதமாக ரூ.33.44 லக்ஷம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து 27 வருடங்கள் ஆயின. அக்காலத்தில், இது ஒரு கணிசமான தொகை. அவரோ, அலுத்துப்போய், வழக்கை வாபஸ் வாங்கக் கோரியுள்ளார். தற்காலிக பதவி நீக்கம், கீர்த்தி நாசம், வாழ்வியல் பாதிப்பு எல்லாம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக, அவருடைய பிராது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற வாசகங்கள் (obiter dicta):

“லஞ்சலாவண்யம் மக்களுக்கு ஒரு மந்திரமாகிவிடுமோ என்ற கவலை…தற்காலம் நம் தேசத்தின் குடலுருவி, நீக்கமற நிறைந்துள்ளது லஞ்சம். தம்பிடியோ, தங்கக்கட்டியோ, குற்றம் குற்றமே…இப்பெல்லாம் கோடிக்கணக்கில்… பதவி துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டுவது சமூக விரோதம்; மக்களை இழிவு படுத்துவது; சட்டத்தைத் துச்சமென கடாசுவது ஆகும்…அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் ஆட்சி நன்றாக அமையாது…பதவி துஷ்பிரயோகம் பெருவாரி வியாதியாக எங்கும் பரவி விட்டது. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது…லஞ்சப்பேய், ~குட்டிச்சாத்தான், கொள்ளிவாய் பிசாசு எதாக இருந்தாலும்…அந்த கூளி குழப்பம் விளைவித்து, சமுதாய முன்னேற்றத்தில் குண்டு வீசி, ரவுடிகளின் கொம்பு சீவி, மனசாட்சியை கொன்று, சமுதாய மையங்களை குலைத்து, தேசத்தின் செல்வத்தை சூறையாடி, நல்லிணக்கத்தைத் தொலைத்து, அரசாளுமையின் புற்று நோயாக அமைந்து, சர்வநாசினி என்க…கன்னாபின்னாவென்று, முறைகேடாக, சொத்து சேர்ப்பதின் முதல் பலிகடா, மக்களின் நம்பிக்கை இழப்பு…பொது வாழ்வில் யோக்கியதை இல்லையென்றால், அடி வாங்குவது, மக்கள்…இது தான் தீர்ப்பின் பின்னணி.
தீர்ப்பு: என்.ஹெச்.சசிதலின் மனு நிராகரிக்கப்படது. தாமதம் மோசம் தான். அந்த சால்ஜாப்பைச் சொல்லி, லஞ்ச வழக்குகளை வாபஸ் செய்தால், அது ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற போக்கில் கயவாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும்.
இதை எங்க கிராமத்துப் பெரிசு ஆறுமுகம் சேர்வையிடம் சொன்னேன். ‘இப்போ மட்டும் என்ன வாழுது?’ என்று கேட்டார். மயக்கம் வருமளவுக்கு, ஹூடாவின் ஹூடா, அப்பாவின் தாதுபுஷ்டி சப்பைக்கட்டு, நீர்மூழ்கியானாலும், பறக்கும் தட்டு ஆனாலும் ‘அடிடா கமிஷன்’ மந்திரம், மலை முழுங்கி தந்திரம், மணல் அள்ளும் யந்திரம் என்று அனுமார் வால் போல ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த அளவுக்கு ல.லா. அபகீர்த்தி துர்வாசனை அடிக்கிறது.
அவருக்கு மூச்சு வாங்கியதை சாக்காக வைத்துக்கொண்டு, விடை, மத்திய அரசு அசோக் சவான் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் இருக்கிறதே என்றேன். அவர் தான் மூச்சுமுட்ட எல்லா ஊடக செய்திகளை படிச்சுட்டாரே.  நான் சொன்னால், கேட்கமாட்டீர்கள். அவரே சொன்னார். கேளும், ஐயாமாரே! அம்மாமாரே!
பெரிசு ஆறுமுகம் சேர்வை: 
ராஜூ! என்னமோ காலேசிலே போய் படிச்சுட்டோம், ஜனநாயகம், தேசாபிமானம், தியாகம், அரசியல் சாஸனம், தேர்தல், பிரதிநிதி, அது, இது என்று உளறிக்கொட்டி, கிளறி மூடிரீங்க. என்ன தான் இருந்தாலும், வெள்ளைக்காரன் இப்படி வயத்திலே மண்ணடிக்கல்லை. அசோக் சவான் என்ற பிரதிநிதி சாமான்ய ஆசாமி இல்லை. முதல் மந்திரியாக்கும். அவர் மேலே ஆதர்ஷ் ஊழலிலும் பிராது கொடுத்தாங்க. தேர்தலில், பணத்தை வாரி இழைத்ததாகவும், ஊடகங்களில் காசு கொடுத்து, தற்புகழ்ச்சியை செய்தியாக போட்டு, வாக்கு என்று கொக்கின் தலை மேல் வெண்ணெய் வைத்ததாகவும், தேர்தல் கமிஷனுக்கு உண்மைக்குப் புறம்பான பிரமாணம் தாக்கல் செய்ததாக பேசறாங்க. இப்போ போய் தேர்தல் கமிஷனுக்கு அது பற்றி விசாரிச்சு, அவர் பதவிக்கு லாயாக்கா, இல்லையா என்று சொல்ல உரிமை இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அடிச்சுப்பேசறது. கணக்குக்கொடுக்காவிட்டால் தான் அவர்கள் தலையிடலாமாம். பொய்யும், புனைசுரட்டும் பேசினாக்க, தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்று சொல்லலாமா? அந்த தகுதி தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்று ராசாங்கம் சொல்லுது, அப்பா, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். இத்தனைக்கும், இந்த ‘அப்புராணை’ பிரமாணம் ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்மறை. (பல வருஷங்க முன்னாலெ அப்பு.) உனக்குத்தான் தெரியுமே, ராசாங்கத்தின் “ஆடிட்டர் ஜெனெரல் ஒழிக” அப்டிங்கிற கண்ணியம்! என்று சொல்லி விட்டு, புகையிலை துண்டு ஒண்ணை வாயில் அடக்கிக்கிட்டு, கொள்ளை சிரிப்புச் சிரித்தார், யாகாவா முனிவர் மாதிரி.
ஓசை அடங்கின பின், ‘தணிக்கைத்துறை சமாச்சாரம் நிறைய இருக்கு, மாமு’ என்றதற்கு ஒரு நமுட்டுச்சிரிப்பு தான் பதில். முத்தாய்ப்பா, சொன்னேன், ‘மாமு! சேதி தெரியுமா? இதே அசோக் சவான் மீது அவரிடம் ‘தோத்துப்போனவர்’ ஒருவர் போட்ட வழக்கில், “ ‘ கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு, அவரை பதவியிலிருந்து நீக்கணும்’ என்ற மனுவை ஜனவரியிலேயே உச்ச நீதி மன்றம் நிராகரித்து விட்டது.” என்றேன். நான் பேசியது குட்டிச்சுவருடன். அவர் எழுந்து போய்விட்டார், மாட்டுக்குத் தண்ணி காட்ட.
(தொடரும்)
 இன்னம்பூரான்
டிசம்பர் 2, 2014
பி.கு: இந்த தலைப்பில் பல கட்டுரைகள் வந்துள்ளன. இது பதினாலாவது. முன்னும் பின்னும், வரப்போவதெல்லாம் படித்தால், ராம் ஜெத்மலானி, கபில் சைபால் போல வாதாடும் திறன் கூடுமாம்! ~ பெரிசு ஆறுமுகம் சேர்வை அய்யா

சித்திரத்துக்கு நன்றி
பிரசுரம் & நன்றி: வல்லமை: 22 03 2013 பதிப்பு







இன்னம்பூரான்


http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com