Showing posts with label மடல்பெரிது தாழை மகிழினிது. Show all posts
Showing posts with label மடல்பெரிது தாழை மகிழினிது. Show all posts

Wednesday, January 21, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:6 முதல் ஐந்து கடிதங்கள்

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:6

முதல் ஐந்து கடிதங்கள் 
இன்னம்பூரான்
21 01 2015

தமிழ் மரபு அறக்கட்டளையின் முகமலராகிய மின் தமிழ் நாட்தோறும் புதிய விஷயங்களை கட்டியம் கூறி வரவேற்கவேண்டும்: ஆக்கப்பூர்வமாக இயங்கவேண்டும்; மாணவ சமுதாயத்துக்குத் தொண்டு செய்யவேண்டும்;  த.ம.அ சேகரங்களை அலசி, ஆராய்ந்து அருளவேண்டும் என்ற என் அவாவுக்கு வரவேற்பு இருப்பதாக, கண்ணன், சுபா, திரு.நரசய்யா, ஷைலஜா போன்றவர்களின் பின்னூட்டங்கள் அமைகின்றன. தமிழ் மொழியை கையாளும் போது, நான் தமிழ்த்  தென்றல் திரு.வி.க. அவர்களின்  அறிவுரைகளை ஏற்கிறேன். 

“...தாய்மொழியிற் கல்வி பெறுவது இயற்கை...பின்னை வேறு பல மொழிகளை பயிலலாம்: ஆராயலாம்...இந்நாளில் (1932) தூயத்தமிழர் இன்னாரென்றும், குடிபுகுந்து நிலைத்த தமிழர் இன்னாரென்று பிரித்துக்காட்டல் எவராலும் இயலாததொன்று...இப்போது தூய ஆரியர் இன்னார்’-’தூய தனித்தமிழர் இன்னார்’ என்று எவரே பிரிக்கவல்லார்?...பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரதநாட்டுக்குரிய பொது மொழி...”

வல்லமையிலும் அவ்வாறே தான் எழுதிவருகிறேன். சொல்லின் பயனைப் பொருளின் சுவையில் காண்கிறேன். இந்த ஐந்து கடிதங்களும் வெவ்வேறு விதங்களில் சுவை கூட்டுகின்றன; மகிழ்விக்கின்றன; அறிவுரை அருளுகின்றன; இயல்பாக அமைந்து என் அணுகுமுறையை ஆதரிக்கின்றன.

  1. முதல் கடிதம் மிகவும் பிரபலமாக அமெரிக்காவில் பல்லாண்டு பல்லாண்டாக வளையவரும் சிரஞ்சீவி மடலின் தமிழாக்கம். பொறுப்பு எனதே. தற்கால தமிழாளுமையார்கள் வர்ஜீனியாவுக்கு பதில் போடுவார்களா என்பது கேள்விக்குறி.  பதில் எழுதிய இதழாளர் சிறுமிக்கு புரியும் வகையில் எழுதினார்; ஷேக்ஸ்பிரிய ஆங்கிலத்தில் எழுதவில்லை. வர்ஜீனியாபிரிய ஆங்கிலத்தில் எழுதினார்.
  2. இது ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கடிதத்தில் ஒரு பகுதி. ‘ஆஸ்பத்திரி’, ‘பிரத்யேகமாக’, ‘பாஷை’ போன்ற சொற்களை இயல்பாகவே பயன்படுத்தியுள்ளார்.  தமிழார்வத்தில் நாம் ஒருவருக்கும் குறைந்தவர் இல்லை, அவர். இது அந்தக்கடிதத்தில் உள்ள மென்மையான நகைச்சுவையிலிருந்து  தெரிகிறது. யாருமே அவர் பெயரை ஊகிக்கவில்லை என்று குறைப்பட்டுக்கொள்கிறேன்.
  3. இந்த கற்பனை கடிதம், எம்.ஏ. பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. திரு.நரசய்யா சொல்வதை என் நிர்வாக அனுபவம் ஆதரிக்கிறது. சுபாஷிணி சொல்வதை என் சமூகவியல் ஆய்வுகள் ஆமோதிக்கின்றன. அதீதமாக மிகைப்படுத்தி எழுதப்படும் கடிதங்கள் பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால், மிகையாக தோன்றும் புகையே, பகை தான் என்றால் சிந்திக்கப்படவேண்டிய/அவசர உதவி அளிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது எனலாம்.  ஒரே கடிதத்தில், டாஸ்மாக் கண்டனம், சுகாதாரக்குறைவின் சாபமாக அன்னை ஆஸ்பத்திரியில், ஒரு உளவியல்,  வேலையில்லாத்திண்டாட்டம், பளாரென்று நம்மை செருப்பால் அடிக்கும் வறுமை எல்லாம் இடம் பெற்று விட்டன. இதை தர்ப்பண (முகம் பார்க்கும் கண்ணாடி) இலக்கியம் எனக் கருதுகிறேன். ‘இக்கடிதம் உண்மையே என்று எடுத்துக் கொள் ளும் நிலையில், தமிழகத்தின் மிகச் சாதாரண வாழ்வியல் நிலை அதாவது அடித்தட்டுவர்க்கமக்களின் அன்றாட நிலையை ஒரு கடிதத்திலேயே வெளிச்சமாக்கும் ஆவணமாகத் திகழ்கின்றது.’ என்பது நிதர்சனம்.
  4. ‘... 'ஜன சக்தி' வார மலரை ஒரு இதழ்கூடத் தவறவிடாமல், கட்டாயம் சேர்த்துவைப்பாய் என்று நம்புகிறேன்.’ என்பதிலேயே இவருடைய முகவிலாசம் இருக்கிறது. இவர் தான் கம்யூனிஸ்ட் துறவி ப. ஜீவானந்தம் அவர்கள். பெண்ணியத்துக்கு முகநூல் இந்தக்கடிதத்தொகுப்பு என்றால் மிகையல்ல. அவர் விளிக்கும் பெண்மணி கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால் கடித இலக்கியம் அற்புதமான படிப்பினைகளை அள்ளி அள்ளித் தருவதற்கு, இது ஒரு சான்று. ஜீவாவும் கோஷம், வியாபகம்,பரிட்சை போன்ற வடமொழிச்சொற்களை பயன்படுத்த தயங்கவில்லை. மேலும் ரஞ்சனி சொன்னாற்போல், ‘"நல்ல வைத்தியனிடம் மூன்று பண்புகள் இருக்கவேண்டும். ஒன்று, தன்னலங் கருதாமலும் உள்ளதை மறைக்காமலும் இருக்கும் உணர்வு; இறந்து, நோயாளி படுகிற துன்பத்தையும் வேதனையையும் தீர்க்க விரும்பும் பரிவு; மூன்று, நோயின் தன்மையையும் அதனால் வரும் கேட்டையும் பகுத்து அறிந்து, அதைக் குணப்படுத்தும் மருந்தை அறிகிற அறிவு" என்ரு பகுதியில் மூலத்திலேயே ‘இரண்டு’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘இறந்து’ என்ற சொற்பிழை நேர்ந்துள்ளது. ரஞ்சனி உன்னிப்பாகப்படித்தது எனக்கு ஆறுதல். மற்றபடி யார் படிப்பார்கள் என்று நினைத்தேன்.
  5. தமிழனை ‘அப்பாவி’ என்றும் அவன் பேசும் பாஷையை பொல்லாதது என்றும், அவனை பயித்தார ஆஸ்பத்திரிக்கு அனுப்பவேண்டும் என்று கேலி செய்தது ரசிகமணி அவர்கள் தாம். நாம் தான் இன்னும் மாறவில்லை.

-#-

Monday, January 5, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:4: ஒரு முடங்கல்: புதுமைபெண் 1

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:4
ஒரு முடங்கல்: புதுமைபெண் 1
இன்னம்பூரான்
05 01 2015

முற்றும் துறந்து பற்றறவராக தன் கொள்கைக்காகவே வாழ்ந்த ஒரு சான்றோன் எழுதிய கடிதம். அவரது முகவிலாசம் கடிதத்திலேயே இருக்கிறது. இது ஒரு பதில் கடிதம். அந்த பெண் எழுதிய வினாக்கடிதம் காணக்கிடைக்கவில்லை. இந்தக்கடிதத்தில் அதன் உள்ளுறை இதில் இருப்பது போதுமே. அவர் ஆற்றிய உரைகளை கேட்டிருக்கிறேன்.சாதாரணம். ஆனால் நம்மை கவர்ந்து விடுவார். அவர் உள்ளதை உள்ளபடி எளிய தமிழில் இயல்பான,யதார்த்தமான, எழுத்தறிவில்லாத பாமர்களும் புரிந்துகொள்ளும் தரத்தில், அருகே நின்று அளவளாவது போல இருக்கும் உரையாற்றல், அவரது. மடலின் சில சொற்களை, சொல்லாக்கங்களை, குறிப்பால் உணர்த்தியுளேன். நுட்பம் அறிக.

தற்காலம் நானிருக்கும் இடத்தில் ‘அல்லி ராஜ்யம்’ தான் என்றால் கேலி அன்று; சற்றே அவர்களுடன் களங்கமில்லாமல் பகிர்ந்து கொள்ளும் மிகை. எல்லாருமே முதியவர்கள். 90 வயதைக் கடந்த மூதாட்டிகள் புன்னகையோடு வலம் வருகிறார்கள்.ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் நூல்கள் எழுதியுள்ளார்கள்;சிலர் கையில் ஐபேட். பாகவதமும், திருப்பாவையும், திருவெம்பாவையும்.  பெரும்பாலும் எல்லாருமே மெத்தப்படித்தவர்கள். முனைவர்களும் உளர். மேற்படி கடிதம் எழுதப்பட்ட காலகட்டத்தில், இவர்கள்இளம்பெண்கள்,சிறுமிகள்,குழவிகள்.  இவர்களுக்கும், வினாக்கடிதம் எழுதிய பெண்ணுக்கும் பின்புலம் வேறா?
*
அன்புமிக்க............
உனது முடங்கல் தடங்கலின்றிக் கிடைத்தது. கடிதத்தின் உள்ளடக்கத்தைச் சுவைத்தேன்; மேலும் சுவைத்தேன். என் நெஞ்சம், உணர்ச்சியை இன்பத்தில் தோய்த்துத் தோய்த்து எடுத்தது."பழம்பெரும் தமிழ்ப்பண்பாட்டில் பெண்களைப் பற்றிய கருத்து என்ன? கண்ணோட்டம் என்ன? சாதாரண மக்களிடையில், தலைமுறைத் தத்துவமாக, பெண்களைப்பற்றி இருந்துவரும் மனப்பான்மை என்ன? சான்றோர்கள் பெண்மையைப் பற்றி, குறைத்துப் பேசுகிறார்களா? கூட்டிப் பேசுகிறார்களா? சரியாக, முறையாகப் பேசுகிறார்களா?"

அன்பே! இவ்வாறு உனது கடிதத்தில் கேள்விமேல் கேள்வி கேட்டிருக்கிறாய். 
இன்று உலக முழுவதிலும் பெண்கள் நிலைமை என்ன? பாரத நாட்டில் பெண்கள் வாழ்வு எப்படி? தமிழகத்தில் பெண்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஜனநாயகம் என்றும், சமதர்மம் என்றும், சமாதானம் என்றும் உலகமெங்கும் முழங்கப்படுகிறது அல்லவா, இன்று? இந்த கோஷங்களுக்கும் பெண்களுக்கும் என்ன ஒட்டு? என்ன உறவு!பெண்களுக்குத் தனிப் பிரச்சினைகள் உண்டா? உண்டென்றால் அவைகளுக்கு பைசல் காண பெண்களுக்கு மட்டும் தான் பங்கா? அல்ல ஆண்களுக்கும் பங்கு உண்டா? பெண்ணுரிமைக்காக, பெண் விடுதலைக்காகத் தனி இயக்கம் வேண்டுமா? தனி ஸ்தாபனங்கள் வேண்டுமா? உலகத்தில், இந்தியாவில், தமிழகத்தில் பெண்கள் இயக்கம் எந்த நிலையில் இருக்கிறது? என்னென்ன பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது?  இவ்வாறு, உனது அன்புக் கடிதத்தில் கேள்வி மாரி பொழிந்திருக்கிறாய். என்றும் இல்லாதவாறு, என்னைக் கேள்வி மழையில் தள்ளி, திக்கு முக்காடச் செய்திருக்கிறாய்.  இதுகாறும் தீட்டிய கடிதங்களில், நீ குடும்பக் கதைகளை எழுதுவாய்; உனது படிப்பையும், பரீட்சைகளையும் பற்றி எழுதுவாய்; ஆடல் பாடல்களைப் பற்றி எழுதுவாய்; கிடைத்த 'மார்க்கு' களையும் தேறிய தரத்தையும், பெற்ற பரிசுகளையும் பற்றி எழுதுவாய்; நீயும் உனது தோழியர்களும், பொழுது போக்குக்காக அவ்வப்போது நடத்தும் இனிய உரையாடல்கள் பற்றியும், அவற்றில் நீர்க்குமிழிபோல் தோன்றி மறையும் செல்லச் சண்டைகள் பற்றியும் எழுதுவாய். இவைகளையெல்லாம், நான் படிக்கப் படிக்க சுவை சொட்ட, இன்பம் சொட்ட எழுதுவாய். இது உனது வழக்கம். ஆனால், இன்று நான் பெற்ற உனது கடிதமோ, முன்மாதிரியானதல்ல. உன் உணர்ச்சியில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கடிதம் இது. அன்பே! உலகச் சரித்திரத்தில் பெண்கள் இயக்கம், எப்படித்தோன்றி வளர்ந்து வந்திருக்கிறதென்று வினா எழுப்பி, விடை கேட்கிறாய். சகல துறைகளிலும், சர்வ வியாபகமாய்ப் பெண்கள் இயக்கம் எப்படிப் பரவிப் படர்ந்து நிற்கிறதென்று என்னிடம் கேட்கிறாய். இவைகளைப்பற்றிய எனது அறிவையும், அனுபவத்தையும் பற்பல கேள்விகளால் நயமாகக் கிண்டிவிட்டு, விடை காண முயல்கிறாய். என்றைக்கும் இல்லாத புதுமையாக நீ சரமாரியாகக் கேள்விகள் கேட்டும் கடிதம் எழுதி யிருக்கிறாய். உலகம் தழுவிய ஒரு பெரும் இயக்கமான, பெண்கள் இயக்கத்தைப்பற்றிக் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறாய். தேனென இனிக்கும் வகையில் சுவை படக் கடிதம் எழுதியிருக்கிறாய். இவை யாவற்றிற்கும் மேலாக, பொட்டு வைத்தது மாதிரி, மனித இனத்தின் செம்பாதியும், உன் னினமும் ஆகிய பெண்ணினத்தின் பிரச்னைகளை யெல்லாம் கிளறி, முன்னிறுத்தி எனது பதில்களில் என்ன தீர்வுகள் பிறக்கின்றன என்று பார்க்கவும் துணிகிறாய்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல், அன்பே இன்றையப் பெண்கள் இயக்கத்தில், நவீனப் படிப்புப்படித்த பெண்களின் கடமை என்ன, சொல்லுங்கள்! என்றும் கேட்டு எழுதி யிருக்கிறாய்.
உனது கடிதத்தை, குறிப்பாக, உனது கேள்விகளுக்குப் பதில் சொல்லும் உனது எழுத்துப் பாணியை, நினைக்க நினைக்க ஏற்பட்ட எதிரொலியைத்தான், உனது கடிதத்தைப் படித்ததும் எனது நெஞ்சம் இன்பக் கடலாடுகிறது என்று தொடக்கத்தில் படம்பிடித்துக் காட்டினேன்.
இவ்வளவு தூரம் உனது கடிதத்தைப் பற்றியே எனது மன வெழுச்சியைக் கூறினேன். இது இருக்கட்டும். அன்பே! உனது வேண்டுகோள்படி பெண்கள் இயக்கத்தின் பல்வேறு கூறுகளைப் பற்றி உனக்கு அடுத்த கடிதத்திலிருந்து எழுதுவேன். பலப்பல கடிதங்கள் எழுதுவேன். இடையீடின்றித் தொடர்ச்சியாக எழுதுவேன். எனவே 'ஜன சக்தி' வார மலரை ஒரு இதழ்கூடத் தவறவிடாமல், கட்டாயம் சேர்த்துவைப்பாய் என்று நம்புகிறேன்.  இனி இந்தக் கடிதத்தில், அறிமுகமாக உனக்குச் சில சொல்ல விரும்புகிறேன், நினைவாற்றலும், சிந்தனைத் திறனும் படைத்த நீ, கருத்தில் ஊன்றி வைத்துக்கொள்வாய் என்பது உறுதிசொல்கிறேன், கேள்.
படித்த, படிக்கிற யுவதிகளில் பலர் எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? கடற்கரையில் விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைகள் துள்ளிக் குதித்து, ஆடி, இங்கும் அங்கும் ஓடி, அங்கு ஒரு அழ காண சிப்பியையும், இங்கு ஒரு மெல்லிய கடற்பாசியையும் கண்டு மகிழ்வதைப்போல் வாழ்கிறார்கள்.
ஆனால், நீ அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவளல்ல. அறியப்படாமல் பரந்து விரிந்து கிடக்கும் பெருங்கடலை அறிய முயல்கிறாய் நீ. அதனால்தான், விடைவேண்டி, ஆயிரத்தெட்டுக் கேள்விகளை என்னிடம் கிளப்பி இருக்கிறாய். இலட்சியம் இல்லாத ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, திசையறி கருவியில்லாத கப்பல் என்ற உண்மை உன் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது என்பதை நான் காண்கிறேன். கண்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன். அன்பே! எனக்கு மிகப்பழக்கமான ஒரு பெரிய டாக்டரிடம் ஒரு தடவை ஒரு கேள்வி கேட்டேன். ஒரு சிறந்த மருத்துவரிடம் என்னென்ன பண்புகள் இருக்கவேண்டும் என்பது என் கேள்வி. அவர் சொன்னார்:
"நல்ல வைத்தியனிடம் மூன்று பண்புகள் இருக்கவேண்டும். ஒன்று, தன்னலங் கருதாமலும் உள்ளதை மறைக்காமலும் இருக்கும் உணர்வு; இறந்து, நோயாளி படுகிற துன்பத்தையும் வேதனையையும் தீர்க்க விரும்பும் பரிவு; மூன்று, நோயின் தன்மையையும் அதனால் வரும் கேட்டையும் பகுத்து அறிந்து, அதைக் குணப்படுத்தும் மருந்தை அறிகிற அறிவு" என்று. இதை உன் நினைவுக்குக் கொண்டுவருகிறேன். ஏன்! நான், மேலே காட்டிய நல்ல டாக்டரின் பண்போடு சமுதாய வாழ்வில் பெண்ணினத்தின் பிரச்னைகளையும் பைசல்களையும் தெரிந்து புரிந்து காட்டுவதில் எந்த அளவு வெற்றி பெறப்போகிறேன் என்பதை நீதானே முடிவு கட்ட வேண்டும்? அதற்காகத்தான்.

அன்பே! ஏடுகளையும் நூல்களையும்போல் எனது கடிதமும் ஓரளவுக்குத்தான் உனக்கு உதவி செய்ய முடியும். மற்றப் பெரும் பகுதி, அனுபவ வாயிலாக அறிய வேண்டியவைகளே. கைகாட்டி மரம் உனக்கு வழியைச் சுட்டிக் காட்டமுடியும். ஆனால் நீ போகவேண்டிய இடத்திற்கு உன்னைக் கொண்டு சேர்க்க அதனால் முடியாது.
இவைகளை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, எனது கடிதங்களை நீ ஊன்றிப் படிப்பாய் என்று நம்புகிறேன். உனது சகோதரிகளையும் படிக்கவைப்பாய் என்பதில் எனக்கு நம்பிக்கை யுண்டு.
இந்தக் கடிதம் உனக்கு எந்த அளவு சுவைக்குமோ எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்த கடிதத்தை நீ ஆவலோடு எதிர்பார்ப்பாய் என்று மட்டும் என்னமோ என் மனதில் படுகிறது. 

-#-

Friday, January 2, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:2


‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:2

இன்னம்பூரான்
02 01 2015

சில கடிதங்கள் இயல்பாக அமைந்து விடுகின்றன. சில எழுதப்படுகின்றன. சில படைக்கப்படுகின்றன. என் அம்மா எழுதிய கடிதங்களில் சிலவற்றை இன்று பார்வையிட்டேன். இன்லண்ட் கடுதாசி தான் எழுதுவார். ஒரு வெற்றிடம் இல்லாமல் குறிப்புகள் தென்படும். அன்பு தொனிக்கும். அறிவுரை மென்மையாக இருக்கும். விசாரணைக்கெல்லாம் குறைவில்லை. ‘நீ ஸ்னானம் பண்ணுகிறாயா?’ என்று மாட்டுப்பெண்ணுக்கு ஒரு வரி, பிள்ளையார் சுழிக்கு மேலே! அப்பா கடுதாசிலே மார்க் கேட்பார். கண்டனம் இருக்கும். அவருடைய ஆதங்கங்கள் எனக்கு மட்டும் புலப்படும். இவை இயல்பாக அமைந்த கடிதங்கள். நேருஜி-இந்திரா கடிதங்கள் எழுதப்பட்டவை. சிந்தித்து, சிந்தித்து, பல அரிய விஷயங்களை எழுதினார். செஸ்டர்ஃபீல்ட் பிரபுக்கு சாமுவேல் ஜான்சன் எழுதியது படைக்கப்பட்ட வகை. பிற்காலம் இன்னம்பூரானும் இதைப்பற்றி எழுதட்டுமே என்ற முன்யோசனை உள்ளங்கை நெல்லிக்கனி! இத்தனை முஸ்தீபு எதற்கு என்று கேட்பீர்கள். சில கடிதங்களில் படைப்பாற்றல் தென்பட்டாலும், இல்லை, விழுந்து விழுந்து நாட்தோறும் அவர் கடிதங்கள் எழுதினாலும், இயல்பு முத்திரை காணப்படும். அப்படிப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

“...கம்பர் விழாவில் உரைகல்லில் உரைத்து உரைத்துப்பார்த்துத் தெலுங்கு ராமாயணத்துக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். தமிழன் அப்பாவி என்ன செய்வான். பொன்னாடை போர்த்துவதற்கு நாமாவது கிடைத்தோமே என்ற அனுதாபத்தோடு சந்தோஷப்பட்டிருப்பான் அந்த தெலுங்காசாமி. இனி-...நம்முடையவர்களுக்கு ஆஸ்பத்திரியைப் பிரத்யேகமாகத்தான் கட்டவேண்டும். கீழ்ப்பாக்கத்தில் உள்ளது போதாது...தமிழ் பொல்லாத பாஷை என்று தெரிகிறது. தமிழனையே ஏமாற்றி விடுகிறது. அப்படியானால் அயலார் பாடு என்னாகும்! ...எனக்கு உடம்பு சுமாராய் இருக்கிறது...டாக்டர் தினம் வந்து போகிறார்...”. குறிப்பு: ப”பெரிய குழந்தைக்குச் சாப்பாடு ஏற்று வருகிறது. எல்லாம் சரியாய்ப் போய்விடும் நாளை.”
-#-
குறிப்பு? யார், எப்போது, எங்கே, ஏன் என்றா கேட்கிறீர்கள்? ஊகிப்பதில் மன்னர்களும், ராணிகளும் வாழுமிடம் இது அல்லவோ?!

1, 2, 3...