Monday, December 29, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II ~ சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2





ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2


இன்னம்பூரான்
29 12 2014

தொடர் கதைன்னா நின்னு கேக்கணும்; அடுத்த வாரத்துக்கு வையிட் பண்ணனும். அந்தக்காலத்திலே சார்லஸ் டிக்கென்ஸ் ஒருத்தர் இருந்தார், எங்கள் போர்ட்ஸ்மத்தில். அவர் நினைவாலயம் கூட அங்கு இருக்கிறது. அவர் நாவல் நாவலாக எழுதிக்குவிப்பார். முதல்லே சீந்துவார் இல்லை. அப்றம் சூடு பிடித்து விட்டது. எக்கச்சக்க சேல்ஸ். போன வருஷம் கூட லைப்ரரியில் புது பதிப்புகளை பார்த்தேன்.  அவருடைய நாவல்கள் தொடர்கதைகளாக வந்து கொண்டிருந்தன. அமெரிக்காவில் அவருக்கு ரசிகர் மன்றமே இருந்தது. ஒரு கப்பலில் வந்து இறங்கிய இதழில் கதை சஸ்பென்ஸ்லெ முடிந்திருக்கும். அடுத்த கப்பல் வரச்சே, ஜனங்கள் எல்லாரும், டென்ஷனா, துறைமுகத்திலே காத்திருப்பார்களாம். ஒத்தர் ஓடோடி வந்து, கண்ணீர் மல்க, ‘சிட்னி காட்டனை தூக்கிலெ போட்டுட்டாங்களா?’ என்று கேட்டாராம்.  அந்த மாதிரி, இது வரை வந்த கதைல்லே ‘சின்சினாட்டிச் சின்னத்தாத்தா’ ஏன் வரவில்லை என்று கேட்டால், என்னால் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல்லே. எனக்கே தெரியாது என்று உண்மையை சொல்லிவிடலாம். அப்ப எல்லாரும் ‘யாருடா, இவன்? புருடா விட்றான்’னு படிக்காம விட்றுவாங்க.
என்னடா பண்ணலாம் என்று ரோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போதே....
*
ரண்டு நாள் முன்னாலெ .... கல்லூரியில் படித்து 19..ம்வருட ...இயல் முதுகலை தேர்வு எழுதிய கல்லூரி தோழர்களில், அகப்பட்ட ஆறு பேர்கள் ஜிம்கானா கிளப்பில் கூடினோம். மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின், வராத நண்பர்களுக்கு அர்ச்சனை நடந்தது.  சில பாமரகீர்த்தி நினைவு மலர்களும் விகசித்தன. எம்மில் மூவர் சினிமா பிரியர்கள். மாலைக்காட்சி முடிந்து வந்தால், ஹாஸ்டல் துவாரபாலகன் ‘மாலைக்கண்’ மாசிலாமணி கிட்ட மாட்டிக்கொள்வோம். ஜாலியாகவே வரவேற்ற அவருக்கு ஆள்மாறாட்டமாகத்தான் அறிய முடியும். ரஜினிகாந்த் வந்து நின்னால் சிவகுமார் என்பார். சினேகாவை கே.ஆர்.விஜயா என்பார்.  முண்டாசு, குல்லா, கறுப்புக்கண்ணாடி, பொய்மீசை போன்ற உத்திகளால் அவரை நன்றாகவே ஏமாற்றமுடியும்.‘இந்தா ராசா! இந்த ரிஜிஸ்டர்லெ கையெழுத்துப்போடு. சாமி வந்தா ஆயிரம் கேள்வி கேட்கும்’ என்பார், மறைந்த மாமுனிவர் பிரேமானந்தா போல. சரி. பேர் வேண்டாம். அந்த இருவரும் அழகாக ‘வைஜயந்திமாலா’, ‘எம்.கே. தியாகராஜபாகவதர்’ என்று நேர்த்தியாகவே கையொப்பமிட்டு, வந்து படுத்தார்கள். மூன்றமவன் ‘திருவள்ளுவர்’ என்று கையொப்பமிட்டுவிட்டு, சுவரேறி ஓடி விட்டான். 
மறு நாள் காலை எட்டு மணிக்கு ஆராய்ச்சிமணி அடித்தது. போய் நின்னா, கோர்ட் மார்ஷல். என்னோடெ இருபது வருஷ சர்வீஸ்சில் இது எல்லாம் நடந்ததில்லை என்று மாசிலாமணி அலுத்துக்கொண்டார். எள்ளும் கொள்ளுமா வெடித்துக்கொண்டிருந்த சாமியாரிடம் அவருக்கு 
லவலேசமும் பயம் கிடையாது.  அவர் தான் சாமியாரை சின்ன வயசிலேயே பாத்திருக்காறே. கையை கட்டிண்டு பிராக் பார்த்துக்கொண்டிருந்தார். புலன் விசாரணை நடந்தது. எதற்கும் வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் கூப்பிடலாமே என்று நான் முணுமுணுத்ததை பாம்புச்செவியாக கேட்ட சாமியார், ‘நீயும் போனாயா?’ என்று கடுமையாக வினாவினார். என்னைத் தான் பிரார்த்தனையில் பார்த்தீர்களே என்று நான் பிராது போடவே, சாமியார் ஜகா வாங்கினார். அது தான் சாக்கு என்று சோமு ( மே ஹிஸ் ஸோல் ரெஸ்ட் இன் பீஸ்.) சொன்னான், ‘சுவாமிஜி! யாருமே வெளியில் போகவில்லை. நான் சாக்ஷி. நன்றாக இருட்டிவிட்டது. அந்த பிரும்மராக்ஷஸ் வந்து இப்டி....’. பேச்சு திசை மாறிப்பயணிக்கவே, நான் பிரார்த்தனை முடியும் முன் ஜன்னல் வழியாக வெளியேறியதை எங்கள் ‘வீபீஷணன்’ கந்தசாமி சொல்ல முடியவில்லை. பிசாசு உண்டு/ இல்லை என்ற வாதத்தினால், வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் மறந்து விட்டார்கள். ‘திருவள்ளுவர்’ வந்து போன மர்மமுடிச்சு அவிழ்க்கவேயில்லை. நிராசையாக திரும்பினார், சுவாமிஜி.

அதுவும் இதுவுமாக அரட்டை அடித்து. இனிமையாக பொழுதைப் போக்கினோம். சொல்றதுக்கு நிறைய இருக்கு. என் சைக்கிளின் அசுரபலம், பாலு வீட்டு ஓனர் மகள் காஞ்சனையின் கனவு, பெருமாள் கோயில் உலா, அங்கு மங்கலான ஆஞ்சநேயர் சன்னதி வாசலில் நம்ம குருவும், அவனோட ஆளு சரசாவும் ஊடல்... ஒரு புராணமே இருக்கு. நாங்கள் ஆறு பேருமே அறுபடை வீட்டார் போல குருவோட கல்யாணத்துக்குப் போயிருந்தோம். ஆனால் சரசாவோட இல்லை! அந்தக்கதை ரோமியோ-ஜூலியட் கதையை தோற்க அடித்துவிடும். இன்னொரு நாள் சொல்லணும், கேட்டவாளுக்கு மட்டும். ம்ம். சும்மாச்சொல்லக்கூடாது. அவன் கை தாராளம்.  இங்கிதமாகவே, எங்கள் எல்லாருக்கும் பேண்ட், ஷர்ட் எல்லாம் பரிசில் கொடுத்தான். அதான், இத்தனை நாட்களுக்கு அப்றம் சொல்றேன். நன்றி வேணுமோல்லியோ, சார். அதான், அவா ரண்டு பேரும் போறவரைக்கும் சொல்லலை. 

அந்த சமயம் பார்த்து, தன்னுடைய டையை தளர்த்தி விட்டுக்கொண்ட சுப்புடு, தண்டபாணி, தனை மறந்து தண்டால் போட்ட வைபவத்தை அமர் சித்திரக்கதா போல, தொடர்கதையாக சொல்ல ஆரம்பித்தான். சுப்புடுவோட பாட்டி கோரோஜனை ஜாஸ்தி கொடுத்துட்டா போல இருக்கு. அப்படி ஒரு குரல் அவனுக்கு; ஒரே கூக்குரல், ஆம்படையாளுடன் ரகசியமா பேசச்சவே! எங்கள் பார்ட்டி நடந்தது ஒரு தனி ரூமில். ‘தடால்னு’ ஒத்தர் கதவை திறந்துகொண்டு வந்து,‘என்னை பற்றி இப்படி அவதூறு பேசின சுப்புடுவை விட்டேனா பார்?’ என்று புஷ்டியை உயர்த்தினார். இன்னொரு கைலே விஷ்கி! அதுவும் மத்யான வேளையில்!  நம்ம தண்டபாணி! எல்லாரும் கை தட்டி, வரவேற்று அவனை ஆசுவாசப்படுத்தின பிறகு தான், சுப்புடு விட்ட கதையை விறுவிறுப்பா தொடங்கினான். 
சொல்ல மறந்துட்டேனே. தண்டபாணி டீ ஷர்ட் வாசகம் கொட்டை கொட்டையா சிவப்பு மசியில்.
அதுவும் தமிழில்!
சின்சினாட்டிச்சின்னதாத்தா!!!
(தொடரும்)

Tuesday, December 23, 2014

Christmas & New Year 2015 Greetings

'Tis the season!I  join the most imaginative Greetings
from Google with one and all, with respectful acknowledgement and thanks to GOOGLE.

I wish you all joyous Festivities

Innamburan

Sunday, December 21, 2014

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:1 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III




ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:1


இன்னம்பூரான்
21 12 2014

சொல்றது எளிது. செய்வது கடினம். ராமநாதனோட அப்பா கர்ணம், திருக்கருகாவூரில். அப்போதெல்லாம், ஊர் அத்தனை பிரபலம் இல்லை, பிள்ளை வரம் அளிப்பதில். அதனால், அதிகப்படியான போக்குவரத்து கிடையாது. நாளைக்கு ஒரு பஸ் உச்சிவேளையில் வரும். சாயும் வேளை திரும்பும். அந்தக்காலத்தில் மூன்று போகம் சாகுபடி. சர் ஆர்தர் காட்டன் போட்ட வாய்க்காலில் தண்ணீர் கல கல என ஓடும். தலையாரி ஆறுமுகமும், ஏழுமலையும் ஒரு நாள் பிச்சுமணி அய்யரின் ( அதான் ராமநாதனனின் தந்தை) பேச்சை கேட்பார்கள். அடுத்த நாள் மணியக்காரர் ஹாஜி அப்துல் காதர் மொய்னுதீன் பேச்சை கேட்பார்கள். அது ஒரு ராஜதந்திரம். பக்கத்தில் இருக்கும் பண்டாரவாடையில் வெற்றிலை சாகுபடி செய்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர். என்ன தான் சாதிக்கட்டுபாடுகள் இருந்தாலும் அந்த பிராந்தியத்தில் ஒற்றுமை அதிகம். சம்பிரதாயத்துக்கு ஒன்றும் குறைச்சல் இருக்காது. என்ன தான் அன்யோன்யம் இருந்தாலும், நாமநாதன் ஹாஜி வீட்டில் சாப்பிடமுடியாது. பீபீ கொடுக்கிற அல்வாத்துண்டை ரகசியமாக வாயில் போட்டுக்கொள்வான். கோகுலாஷ்டமி பக்ஷணங்கள் எல்லாம் சீர் வரிசை மாதிரி மணியக்காரர் வீட்டுக்குப் போகும். இத்தனைக்கும் கிஸ்தி விவகாரத்தில் இரண்டு பேருக்கும், கைகலப்பைத் தவிர, மற்ற எல்லா சண்டையும் உண்டு. ஒரு நாள் கலைக்டர் ஜான்சனே வந்து சமாதானம் பன்ணி வைத்தான் என்று சொல்லிக்கொள்வார்கள். ராமநாதன் தாம் அரைகுறை இங்கிலீஷில் துபாஷியாம்.

என்னடா! ஐயங்கார் இருக்கவேண்டிய இடத்திலே ஹாஜியா என்று சில பேர் மூக்கிலெ விரலை வைக்கிறார்கள். நம்ம மொய்தீன் சாகிபுடைய தாத்தா ஜனாப் முகம்மது மொய்தீன் தான் கும்பகோணம் துளிர் வெற்றிலைக்குத் தகப்பன் எனலாம். ஏக்கர் கணக்கா வெற்றிலைத்தோட்டம். அப்பவே ஏற்றுமதி ஆச்சு என்பார்கள். எந்த வெளியூர்க்காரன் வெற்றிலை போடுவான் என்று கேட்காதீர்கள். ஜான்சனுக்கு ஸ்பெஷல் சப்ளை போகும். உறையூரிலிருந்து சுருட்டு வரும். சாம்பசிவம் அய்யர் ( அதான் ராமநாதனுடைய கொள்ளுத்தாத்தா) ஜனாப் சாஹிபுடைய குமாஸ்தா. பற்று வரவு எல்லாம் அவருக்குத்தான் அத்துபடி. திடீரென்று ஒரு நாள் ஊரில் ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு. கோமளா மாமி தான் அடுப்பை அணைக்க மறந்து போயிட்டா. கூரை பற்றிக்கொண்டது என்பார், சிலர். பிரச்னம் கேட்டோம், மலையாளத்து பிராமணாள் மூலமா.  தெய்வகுற்றம் என்று சொல்கிறார்கள். இது ஒரு கட்சி. அக்ரஹாரமும் எண்ணைக்காரத்தெருவும் சப்ஜாடா காலி. அக்னி பகவான் ஸ்வாஹா பண்ணிட்டார். எல்லா வீடுகளும் சாம்பலாயின. ஜனாப் முகம்மது மொய்தீன் தான் எல்லாருக்கும் கட்டிக்கொடுத்தார். பட்டா, கிட்டா பிரச்னையெல்லாம் தீர்த்து வைத்தார். சுயம்பு மாதிரி, யாரும் ஏதுவும் செய்யாமலே, பட்டாமணியம் அப்பாசாமி ஐயங்கார் தேக வியோகம் ஆனபின், ஜனாப் முகம்மது மொய்தீன் தான் பட்டாமனியம் என்ற எழுதப்படாத விதி வந்தது. பரம்பரை சொத்தாகவும் மாறியது. இனபேதம், மதபேதம் இல்லாமலும், சம்பிரதாயமான இனபேதமும், மத  பேதமும் உடன் வர, கிராமத்தில் நல்லாட்சி நடந்து வந்தது. இது எல்லாம் ராமநாதன் சொல்லித்தான் எனக்குத்தெரியும். ஏதோ பழைய பேப்பரை எல்லாம் குடைந்து விட்டு அவன் சொன்னான், ‘டேய் ராஜூ! மன்மோகன் சிங் மாதிரி சாம்பசிவம் அய்யர், சோனியா மாதிரி, ராவுத்தர்னு. ஒரு நமுட்டுச்சிரிப்பு வேறே!

(தொடரலாமா?) 

சித்திரத்துக்கு நன்றி: நம்ம http://www.heritagewiki.org/images/9/95/Indian_village.jpg

Friday, December 19, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 11

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 11

என்னத்தைச் சொல்ல! 8


இன்னம்பூரான்
19 12 14

‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்...’ என்று ‘நல்வழி’ யில் ஒளவைப்பாட்டி பாடினார். அது அவ்வாறு இருக்க, தனது உயிரை தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. மனநிம்மதியை குலைக்கின்றன.  இன்றைய செய்திகளில் எடுத்துரைக்கப்பட்ட தற்கொலைகளின் பின்புலமும், பயங்கரமான செய்முறைகளும், அவலங்களும் நம்மையே தற்கொலை செய்துகொள்ள தூண்டிவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது.

பாண்டிச்சேரியின் முக்கியத்துவம் ஶ்ரீஅரவிந்தர் ஆசிரமம் தான். ஶ்ரீஅரவிந்தர் நிறுவிய அந்த ஆன்மீக மையம் அண்மையில் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. அங்கு வசித்து வந்த ஐந்து சகோதரிகளுக்கும் ஆசிரம பொறுப்பாளர்களுக்கு ஒவ்வாமை, சண்டை. கோர்ட் வாசற்படி ஏறினார்கள்.  உச்சமன்றம் அவர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என ஆணையிட, அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஐவரும் அவர்களது பெற்றோரும் தற்கொலை செய்ய கடலில் குதித்தனர். மூவர் காலி. மூவர் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் தன்னை காப்பாற்றியவரே தன்னை பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கினர் என்று புகார் அளித்தார். தந்தை பெரியார் திராவிடகழகத்தினர் ஆசிரமத்தைத் தாக்கினர்.

கந்துவட்டி துன்பம் தாங்காமல் கரூரில் இரு சகோதர்கள் நஞ்சுண்டு செத்துப்போனார்கள். இருளப்பசாமி என்ற விவசாயி தன் தந்தை காசிராஜனிடம் உரம் வாங்கக்கொடுத்தப் பணத்தில் கள்ளை குடித்து விட்டு வந்தார், தந்தையார். மகன் அதைக் கண்டிக்க, அப்பன் தீக்குளித்து மரணம் அடைந்தார். கலப்பு மணம் செய்து கொண்ட ஒரு யெளவன தம்பதியை, இரு தரப்பிலும் வீட்டார் ஒதுக்கி வைத்தனர். தன்னுடைய வளைகாப்பு வைபவத்துக்கு ஒருவரும் வரவில்லை என்று மனைவி தூக்கில் தொங்க, அதை கண்டு மனமுடைந்த கணவனும் தூக்குப்போட்டுக்கொண்டான்.  தேனியில் தலைமை ஆசிரியை தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் தீக்குளித்தான்.  மேலதிகாரி ஒருவர் தலைமை ஆசிரியை மீது குற்றம் என்றார். அந்த அம்மையும் ரஜாவில் போய்விட்டார்.

தமிழகமே! நீ எங்கே போகிறாய்? Quo Vedis?

Image Credit:

http://www.notable-quotes.com/s/suicide_quote.jpg

Tuesday, December 16, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 10: மாதங்களில் நான் மார்கழி.

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 10: மாதங்களில் நான் மார்கழி.


இன்னம்பூரான்
16 12 14

இன்று மார்கழி மாதம் பிறந்தது. ஐப்பசியில் தீபாவளி கொண்டாடினோம். புத்தாடை பூட்டினார்கள்.  கார்த்திகையில் சொக்கப்பானை கொளுத்தினோம். இன்று வைகறையில் கோஷ்டிகானமாக,  உன் பள்ளியறை முன் நின்று திருப்பள்ளியெழுச்சிப் பாடி, உமது உறக்கத்தை மென்மையாக கலைத்தோம்.

'சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன் 
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்..'

என்று உன்னுடன் உறவாடினோம்.

அதன் தொடராக மதியம் பக்தி விஜயமாக கேசவனை, பாண்டு ரங்கனை, விட்டலனை சேவித்தோம்.

அதன் தொடராக ' நவீன' ஆண்டாள் திருக்கல்யாண வைபோகத்தைக் கண்டு களிப்போமாக.


Monday, December 15, 2014

ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9 என்னத்தைச் சொல்ல! 7


ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9
என்னத்தைச் சொல்ல! 7
இன்னம்பூரான்
15 12 2014
கிணற்றுத்தவளை ஒன்று ஒரே தாவலில் ஓடோடி குளம், குட்டை, கண்மாய் எல்லாவற்றையும் கன கச்சிதமாக அனுமார் போல தாண்டி, கடலிலேயே கலந்து உறவாடியமாதிரி, மத்தியப்பிரதேசத்து மாமனிதர் கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வாங்கினார். உலக பிரசித்தமானார். மனமுருக சொற்பொழிவு ஆற்றினார். சிறார்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆபத்பாந்தவனான அவரை அறியாதவர்கள் இருப்பது, அந்த மத்தியப்பிரதேசம் எனப்படும் கிணற்றில் ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும்’ பிரபலங்களின் வாழ்க்கை நெறி! ஆண்டவா! 

மத்திய பிரதேச சட்டசபையில் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை போற்றி ஒரு தீர்மானம் நிறைவேறிய பின்னும், அவருக்கு பர்த்தியாக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு வாழ்த்துரை மடல்கள், நோபல் பரிசு பெற்றதற்கு! 

வழங்கிய மேதைகள்:

“ நமது சகபாடி அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை தருகிறது. அவர் செய்த சமூகசேவையை பாராட்டவேண்டும்.” -அமைச்சர் குஸும் மாஹ்டெலெ. ஆஹா!

“ கைலாஷ் விஜயவர்கியாவை போல சாதனையாளர்கள் எங்கள் கட்சியின் பல அங்கத்தினர்கள்!” - அமைச்சர் ஞயான் சிங். ( இவர் கலாச்சாரத்தின் விசிறி. ஆன்மீக இசை வித்தகர்.) பேஷ்!

திலீப் சிங் பரிஹார், ரஞ்சீத் சிங் என்ற சட்டசபை அங்கத்தினர்கள் விஜயவர்கியாவை போன்ற சாதனையாளர்கள் இந்தூரில் செய்த சமூக சேவைக்கு பரிசில் கொடுத்த நோபெல் கமிட்டியின் அருமை பெருமைகளை பாராட்டினார்கள். இதை கண்டு பொறுக்காத எதிர்கட்சி பெருமகனார் ஒருவர் விஜயவர்கியாவுக்கு நோபெல் பரிசு கொடுக்கப்பட்டதே மத்திய அரசும், மாநில அரசும் செய்த சதி என்று குற்றம் சாட்டினார். சத்ய பிரகாஷ் என்ற ‘உண்மை விளம்பி’ விஜயவர்கியாவை தாக்கிப்பேசினார்.

ஒரு ‘கைலாச’ குழப்பம். அரசியல் துறையில் முதுகலைபட்டம் பெற்றிருந்த சஞ்சய் பதக் என்பவர் ‘தபக்’ என்று ஒரிஜனல் கைலாஷை மறந்து விட்டு கைலாஷ் விஜயவர்கியாவுக்கும்  கைலாஷ் சாவ்லாவுக்கும் கன்ஃப்யூஸ் செய்து கொண்டு, யாரை பாராட்டுவது என்ற ‘தொபக்கட்டீர்’ வியாகூலத்தில் ஆழ்ந்தார். அஞ்சாநெஞ்சனாகிய அமைச்சர் பூபேந்திர சிங் இதையெல்லாம் ‘ஃபூ..பூ...’ ஊதி விட்டார். கைலாஷ் விஜயவர்கியா எல்லா புகழுரையும் ஜாலியாக வாங்கிக்கொண்டாலும் எதிர்க்கட்சிகளின் மனநிலையை குறை கூறினார்.

இந்த கந்தரகூளங்களை ஊடகங்கள் எள்ளல் செய்ததை பொறுக்காத இந்த ஆட்சி மேலாண்மை மவுனம் காத்தனர். நம்ம கிராம ஊழியர்கள் தேர்வு வைத்தால் இதுகள் தோல்வி தழுவுங்கள். அதை விடுவோம். மாபெரும் சாதனையாளர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை விதீஷா என்ற உள்ளூர் வாசிகள் கண்டு கொள்ளவேயில்லை. அவர் விளம்பரம் நாடாத உழைப்பாளி. அவரால் பல உதவி பெற்றவர்களே அவரை மதிக்கவில்லை. சிறார்களுக்கு அவர் இத்தனை பாடுபட்டபின்னும் உள்ளூரில் இன்று கூட சிறுவர்களை வேலை வாங்குகிறார்கள், விதீஷாவில்.

தமிழ்நாட்டு அமைச்சர்கள் இந்த ரகம் அல்ல. சுதாரித்துக்கொள்வார்கள். 1970ம் வருடம் ஏ.ஜீ ஆஃபீஸில் ஒரு கலை நிகழ்வு. ஒரு அமைச்சர் சிறப்புரை ஆற்றினார், தேனீர் ஆற்றுவது மாதிரி!
கலையை பற்றி பேசுவதில் இடைச்செருகலாக, ‘நாங்கள் உங்களுக்கு அகவிலைப்படி வாங்கிக்கொடுத்தோம். நன்றி செலுத்துக’ என்று ஒரு ஊசிப்பட்டாசு வீசினார். மத்திய அரசு துறையான அந்த அலுவலக ஊழியர்கள் முணமுணத்தார்கள், உரத்த குரலில். அமைச்சர் தப்புத்தவறி தலைமை தாங்கிய நான் இதை அவரிடம் விளக்கி, இந்த ஆடிட் பசங்க ஒரு டோண்ட் கேர் டைப் என்றேன். புன்னகை பூத்த அமைச்சர் பிரான் அடுத்து சொன்னது, ‘ புதுக்கோட்டை அருகில் இருக்கும் சித்தன்ன வாசலிலே... என்று அரை மணி நேரம் ஒரு பிடி பிடித்த லாகவம். இல்லை லாவகமா?

மாரல்: கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கலாம்.






pastedGraphic.pdfSatyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

Satyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

Thursday, December 4, 2014

வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்
On VRK

இன்னம்பூரான்  
I am devastated. Age did not wither him. Wisdom did not leave him. Compassion dwelt in his soul. Mother India sobs. I had an opportunity of meeting with him two decades ago. I relived the memory of Gandhiji. Who am to say? His soul will rest in peace.
~ the HIndu comments



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, December 2, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: 8: கனம் கோர்ட்டார் அவர்களே!….14



ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: 8

‘ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்’ தொடரை யாரும் படிக்காமலே நிலைக்கு வந்து விட்டது என்று நினைத்தேன்; அமைதி காத்தேன். மவுன விரதம் அனுஷ்டித்தேன். இன்று இருவர் படிப்பதாக சொன்னார்கள். அதான் வந்து நிற்கிறேன், பெரிசு ஆறுமுகம் சேர்வை அய்யாவுடன்.
இன்னம்பூரான்
02 12 14 
கனம் கோர்ட்டார் அவர்களே!….14

எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். மதம் பிடித்த யானை ஏறி, ஏறி மிதித்தாலோ, முதலையின் பல்லிடுக்கில் அகப்பட்டுக்கொண்டாலோ, என்ன ஆவது? இந்த பாரத தேசவாசிகள் அத்தகைய பேராபத்தில் சிக்கிக்கொண்ட வேளையிலும், வாதப்பிரதிவாதங்களில், பட்டிமன்றங்களிலே, அரட்டைக்கச்சேரியிலே, குடலாடி (மடலாடலில் ஒரு வகை!) மகிழும்போது, மலையை தடவிப்பார்க்கிறார்கள், ஊர்ந்த எறும்பு நகர்ந்த பின்!
என்.ஹெச்.சசிதல் என்ற அரசு ஊழியர் மீது அதீதமாக ரூ.33.44 லக்ஷம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து 27 வருடங்கள் ஆயின. அக்காலத்தில், இது ஒரு கணிசமான தொகை. அவரோ, அலுத்துப்போய், வழக்கை வாபஸ் வாங்கக் கோரியுள்ளார். தற்காலிக பதவி நீக்கம், கீர்த்தி நாசம், வாழ்வியல் பாதிப்பு எல்லாம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக, அவருடைய பிராது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற வாசகங்கள் (obiter dicta):

“லஞ்சலாவண்யம் மக்களுக்கு ஒரு மந்திரமாகிவிடுமோ என்ற கவலை…தற்காலம் நம் தேசத்தின் குடலுருவி, நீக்கமற நிறைந்துள்ளது லஞ்சம். தம்பிடியோ, தங்கக்கட்டியோ, குற்றம் குற்றமே…இப்பெல்லாம் கோடிக்கணக்கில்… பதவி துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டுவது சமூக விரோதம்; மக்களை இழிவு படுத்துவது; சட்டத்தைத் துச்சமென கடாசுவது ஆகும்…அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் ஆட்சி நன்றாக அமையாது…பதவி துஷ்பிரயோகம் பெருவாரி வியாதியாக எங்கும் பரவி விட்டது. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது…லஞ்சப்பேய், ~குட்டிச்சாத்தான், கொள்ளிவாய் பிசாசு எதாக இருந்தாலும்…அந்த கூளி குழப்பம் விளைவித்து, சமுதாய முன்னேற்றத்தில் குண்டு வீசி, ரவுடிகளின் கொம்பு சீவி, மனசாட்சியை கொன்று, சமுதாய மையங்களை குலைத்து, தேசத்தின் செல்வத்தை சூறையாடி, நல்லிணக்கத்தைத் தொலைத்து, அரசாளுமையின் புற்று நோயாக அமைந்து, சர்வநாசினி என்க…கன்னாபின்னாவென்று, முறைகேடாக, சொத்து சேர்ப்பதின் முதல் பலிகடா, மக்களின் நம்பிக்கை இழப்பு…பொது வாழ்வில் யோக்கியதை இல்லையென்றால், அடி வாங்குவது, மக்கள்…இது தான் தீர்ப்பின் பின்னணி.
தீர்ப்பு: என்.ஹெச்.சசிதலின் மனு நிராகரிக்கப்படது. தாமதம் மோசம் தான். அந்த சால்ஜாப்பைச் சொல்லி, லஞ்ச வழக்குகளை வாபஸ் செய்தால், அது ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற போக்கில் கயவாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும்.
இதை எங்க கிராமத்துப் பெரிசு ஆறுமுகம் சேர்வையிடம் சொன்னேன். ‘இப்போ மட்டும் என்ன வாழுது?’ என்று கேட்டார். மயக்கம் வருமளவுக்கு, ஹூடாவின் ஹூடா, அப்பாவின் தாதுபுஷ்டி சப்பைக்கட்டு, நீர்மூழ்கியானாலும், பறக்கும் தட்டு ஆனாலும் ‘அடிடா கமிஷன்’ மந்திரம், மலை முழுங்கி தந்திரம், மணல் அள்ளும் யந்திரம் என்று அனுமார் வால் போல ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த அளவுக்கு ல.லா. அபகீர்த்தி துர்வாசனை அடிக்கிறது.
அவருக்கு மூச்சு வாங்கியதை சாக்காக வைத்துக்கொண்டு, விடை, மத்திய அரசு அசோக் சவான் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் இருக்கிறதே என்றேன். அவர் தான் மூச்சுமுட்ட எல்லா ஊடக செய்திகளை படிச்சுட்டாரே.  நான் சொன்னால், கேட்கமாட்டீர்கள். அவரே சொன்னார். கேளும், ஐயாமாரே! அம்மாமாரே!
பெரிசு ஆறுமுகம் சேர்வை: 
ராஜூ! என்னமோ காலேசிலே போய் படிச்சுட்டோம், ஜனநாயகம், தேசாபிமானம், தியாகம், அரசியல் சாஸனம், தேர்தல், பிரதிநிதி, அது, இது என்று உளறிக்கொட்டி, கிளறி மூடிரீங்க. என்ன தான் இருந்தாலும், வெள்ளைக்காரன் இப்படி வயத்திலே மண்ணடிக்கல்லை. அசோக் சவான் என்ற பிரதிநிதி சாமான்ய ஆசாமி இல்லை. முதல் மந்திரியாக்கும். அவர் மேலே ஆதர்ஷ் ஊழலிலும் பிராது கொடுத்தாங்க. தேர்தலில், பணத்தை வாரி இழைத்ததாகவும், ஊடகங்களில் காசு கொடுத்து, தற்புகழ்ச்சியை செய்தியாக போட்டு, வாக்கு என்று கொக்கின் தலை மேல் வெண்ணெய் வைத்ததாகவும், தேர்தல் கமிஷனுக்கு உண்மைக்குப் புறம்பான பிரமாணம் தாக்கல் செய்ததாக பேசறாங்க. இப்போ போய் தேர்தல் கமிஷனுக்கு அது பற்றி விசாரிச்சு, அவர் பதவிக்கு லாயாக்கா, இல்லையா என்று சொல்ல உரிமை இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அடிச்சுப்பேசறது. கணக்குக்கொடுக்காவிட்டால் தான் அவர்கள் தலையிடலாமாம். பொய்யும், புனைசுரட்டும் பேசினாக்க, தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்று சொல்லலாமா? அந்த தகுதி தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்று ராசாங்கம் சொல்லுது, அப்பா, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். இத்தனைக்கும், இந்த ‘அப்புராணை’ பிரமாணம் ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்மறை. (பல வருஷங்க முன்னாலெ அப்பு.) உனக்குத்தான் தெரியுமே, ராசாங்கத்தின் “ஆடிட்டர் ஜெனெரல் ஒழிக” அப்டிங்கிற கண்ணியம்! என்று சொல்லி விட்டு, புகையிலை துண்டு ஒண்ணை வாயில் அடக்கிக்கிட்டு, கொள்ளை சிரிப்புச் சிரித்தார், யாகாவா முனிவர் மாதிரி.
ஓசை அடங்கின பின், ‘தணிக்கைத்துறை சமாச்சாரம் நிறைய இருக்கு, மாமு’ என்றதற்கு ஒரு நமுட்டுச்சிரிப்பு தான் பதில். முத்தாய்ப்பா, சொன்னேன், ‘மாமு! சேதி தெரியுமா? இதே அசோக் சவான் மீது அவரிடம் ‘தோத்துப்போனவர்’ ஒருவர் போட்ட வழக்கில், “ ‘ கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு, அவரை பதவியிலிருந்து நீக்கணும்’ என்ற மனுவை ஜனவரியிலேயே உச்ச நீதி மன்றம் நிராகரித்து விட்டது.” என்றேன். நான் பேசியது குட்டிச்சுவருடன். அவர் எழுந்து போய்விட்டார், மாட்டுக்குத் தண்ணி காட்ட.
(தொடரும்)
 இன்னம்பூரான்
டிசம்பர் 2, 2014
பி.கு: இந்த தலைப்பில் பல கட்டுரைகள் வந்துள்ளன. இது பதினாலாவது. முன்னும் பின்னும், வரப்போவதெல்லாம் படித்தால், ராம் ஜெத்மலானி, கபில் சைபால் போல வாதாடும் திறன் கூடுமாம்! ~ பெரிசு ஆறுமுகம் சேர்வை அய்யா

சித்திரத்துக்கு நன்றி
பிரசுரம் & நன்றி: வல்லமை: 22 03 2013 பதிப்பு







இன்னம்பூரான்


http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, November 27, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 7: இதுவும் ஒரு பிருகிருதி: 4

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 7

இதுவும் ஒரு பிருகிருதி: 4

உங்களுக்கு கிச்சாமி அத்தானை தெரிஞ்சிருக்காது. அந்த பூவரசமரம் நிக்கறதே, அதான் அவாம். (வீடு). அந்த மரத்துக்கே ஒரு தனி மவுசு உண்டே. வேடந்தங்கல் பறவைகள் அழகு என்றால், இந்த மரம் பூத்து குலுங்கறதும்,சிந்தியிருக்கிறது அழகு தான். பூ பொறுக்கப் போனா, வெறி பிடிச்சமாதிரி விரட்டறத்துக்கு வந்துருவார், அத்தான். இத்தனைக்கும் அவர் வச்ச மரமா என்ன? அப்பா சொல்லுவார், ‘கிச்சாமி எச்சக்கையாலே காக்கா விரட்டமாட்டான்’ அப்டினு. அப்பாவுக்கு அவர் கருமி. எங்களுக்கு அவர் ஒரு கிருமி.

கிச்சாமி அத்தான் லோக்கல் ஃபண்ட் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர். கலர் கலரா மிக்ஸர் மெகா பாட்டில்களுடன் உறவாடுவார். ‘டாக்டர்னு ஒத்தன் வருவான். அவன் கிட்ட சீட்டு வாங்கிண்டு வா. நான் சரியான மருந்து தர்ரேன்’ என்பார். அதாவது சீட்டுக்கும், மருந்துக்கும் ஸ்னானபிராப்தி கூட கிடையாது. ஆனா, சீட்டு தான் பாஸ்போர்ட். டாக்டர் பிரணாதார்த்திஹரன் எல்.எம்.பி. அந்தக்காலத்து மனுஷன். வைஷ்ணவாளை கண்டா கொஞ்சம் பிடிக்காது. அவ்வளவு தான். அத்தான் பட்டை நாமம். டாக்டர் பட்டை விபூதி. மாட்டிக்கொண்டது ஊர் மனுஷா. சின்ன ஊர்னாலும், ஆஸ்பத்திரி தம்மாத்தூண்டு. மார்கழி வந்தா போறும், எல்லாம் மூக்கை சிந்தும். 

போர்ட்: காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை;
வாட்ச்மேன்: தினோம் 81/2 மணிக்குள்ளார திறப்பேங்க.
கிச்சாமி அத்தான் 9 மணிக்கும், டாக்டர் 10 மணிக்கும் வருவாஹ. 
இரண்டு பேரும் பேசிக்கொண்டதாக லோக்கல் ஃபண்ட் ஆஸ்பத்திரி வரலாற்றில் பதிவு இல்லை.
[இந்த இண்டெர்வல் ஒரு மணி நேரம் போது, எங்களுக்கு அத்தானை கவிழ்க்க. பின்ன என்னங்க? பூவரசாவது இவா வீட்டு வாசெல்ல. கொடுக்கப்புளி மரம் தள்ளி தானே இருக்கிறது. பறிக்கணும் கல்லாலடித்தால், மனுஷன் மூர்க்கத்தனமா வந்து கூச்சல் போடுவாரு.]

கூட்டம் நெட்டி முறிச்சுடும், டாக்டர் வருவதிற்கு முன்னாலே. பூஜை, புனஸ்காரம் எல்லாம் நடக்கும்; அத்தான் முறைச்சிண்டு மெகாபாட்டில்களுக்கு, பின்னால். டாக்டர் வலகை, இடகை ஆசாமி. இரண்டுப்பக்கமும், மாற்றி மாற்றி, நாடி பார்ப்பார்; நாக்கை பார்ப்பார். மின்னல் வேகத்தில், ஜலதோஷம். காய்ச்சல், இழுப்பு, காசநோய், புற்று நோய் எல்லாத்துக்கும் டயக்னஸிஸ்; கலர் மிக்ஸர் 1/2/3/4. அத்தான் கொடுப்பது 4/2/3/1 என்று அமையலாம். இத்தனை குளறுபடி நடுவிலே, ஊர்க்காரா அதிகமா செத்துப்போகவில்லை என்றால், தெய்வத்தில் அருள் தான் காரணம்.
அந்த 9 மணிக்கும், டாக்டர் 10 மணிக்கும் நடுவில் உள்ள இண்டெர்வலை பற்றி சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும் போல இருக்கு. பட்டப்பா, சீனு, கதிரு, லச்சுமி, வாசு, நான் ஆகிய குழுமம் ஒரு கட்சி; தனியா, திராணியில்லாமல் எங்களுடன் போராட ஒரே ஆளு, கிச்சாமி அத்தான். ஸ்கூல் பக்கத்திலே தான் ஆஸ்பத்திரி. வேறு வினை வேண்டாம்! 

உரையாடல் 1: காலை 9 10:
சீனு: ‘அத்தான்! லச்சுமி பூவெல்லாம் எடுத்துண்டு ஓட்றா.’
அத்தான் நோ ரிப்ளை.
வாசு: டேய்! அத்தான் வாய் நிறைய கலர் மிக்ஸர் டோய்! எனக்கும் அத்தான், ப்ளீஸ்.
[இது பரமரகஸ்யம். அத்தானோட டாஸ்மெக் இங்க தான். தினம் அடிப்பார். மெகாபாட்டில் எல்லாம் தண்ணி ரொப்பிடுவார். ]
அத்தான்: ‘ போங்கடா, காலிப்பசங்களா. டாக்டர்ட்டெ சொல்லிடுவேன்.’ [வாசு ரோஸ் கலர் மிக்ஸர் அடிச்சுட்டான், அதுக்குள்ளே.]
கதிர்: [ கதிரும் ஒரு பிரகிருதி தான். பாப்பாரக்கூட்டத்திலே ஒரே, என்பி. (நாந்பிராஹ்மின்: அந்தக்காலத்து வார்த்தை. No harm intended. அவன் சொற்களில் இல்லாத தெளிவு தொல்காப்பியத்தில் இல்லை.] ‘ கிச்சாமி, இன்னா பேச்சு பேச்றே, மேன். [கிச்சாமி நெளிகிறார் இந்த frontal attackலெ.] நீயும் டாக்டரும் பேசிக்கிணா மழை பெய்யுமே. எனக்கு அந்த பச்சை மிக்ஸர் கொடு - எடுத்து கொட்டிக்கிறான். 
அப்ப பார்த்து பட்டப்பா கொடுக்காப்புளி அடிக்க அனுமதி வாங்கறான். டாக்டர் வந்துட்டார். கப்சிப்.

உரையாடல் 2: காலை 10 10:
டா: ‘என்னாது இது, மருந்து வாசனை?’
அத்தான்: [முணுமுணுப்பு] ‘ஆஸ்பத்திரியில் கர்தப வாசனையா இருக்கும்.’
டாக்டருக்கு பாம்புச்செவி: ‘ டேய்! பட்டப்பா! நானும் கர்தபவாசனையைத்தான் நாசூக்கா சொன்னேன். ஐயங்கார் குளிச்சிட்டுத்தான் வந்தாறான்னு கேளு. அது சரி. நீ இங்கே எதுக்கு வந்தே? ஸ்கூலுக்குப் போ.
கதிர்: கிச்சாமி அத்தான்! பட்டப்பா கொடுக்காப்புளி அடிக்கச்ச, உங்காத்து ஜன்னல் கண்ணாடியை உடச்சுட்டான். ஓட்றான்.

கிச்சாமி வீட்டுக்கு ஓட, டாக்டர் பிரணாதார்த்திஹரன் எல்.எம்.பி. காலி மெகாபாட்டில்களை கண்டு புலம்ப, ஆஸ்பத்திரி மூடப்பட்டது. 
‘ஸர்வே லோகா சுகினோ பவந்து’
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இன்னம்பூரான்
31 12 2010

*

நாலு நாளா கிச்சாமி அத்தான், யார் கண்ணிலும் படாமல், 'மப்' லே இருக்காப்லே. மறுபடியும் சொல்லுடான்னு திருவுள்ளம்.
அதான்.
*

கோபுலு படங்கள் எல்லாம் கண்ணெதிரே வருதே??? 
கீ
*

நல்ல காமெடியான காரக்டர்தான்...........நன்றாயிருக்கிறது ஐயா.
இது ஒரு மீள்பதிவு, நீங்கள் கேட்டதாலெ.

இன்னம்பூரான்
27 11 2014


Monday, November 24, 2014

என்னத்தைச் சொல்ல! – 6: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 6


ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 6


என்னத்தைச் சொல்ல! – 6
Monday, November 24, 2014, 6:36



–இன்னம்பூரான்.
வாலு போச்சு! கத்தி வந்தது




பாலில் தண்ணீர் கலந்தார்கள். அதை மாதக்கணக்காகக் கச்சிதமாகவே செய்தார்கள். மனசாக்ஷியை அடகு வைத்தார்கள். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை லஞ்சாபரணங்கள்.
அதற்கு முன்னால், செங்குன்றத்திலியோ, கருங்குளத்திலியோ, குதிரை சாணம் கலந்த தேயிலை சக்கைப் போடு போட்டது. சாயா குடிக்க எனக்கு பயம். அதற்கு முன்னாலே, அரிசியில் கல் கலந்தார்கள். இந்த மாபாவிகள் சுண்டைக்காயை கல்யாணபரங்கி என்று கூட விற்றுவிடுவார்கள். அல்லது, சில வருடம் முன் சொல்லப்பட்டப்படி கலப்பட மருந்துகளையும் காலாவதி மருந்துகளையும் விற்று கொலை செய்தார்கள். மஞ்சள்பொடி தான் க்ளோரோமைசிட்டீன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைய கலப்படம்: நெய்க்கு வந்த சோதனை. இரண்டு வருஷம் முன்னால் திருநெல்வேலியில் நடந்தது. இப்போது அதருமமிகு சென்னையின் சந்தைக்கடை தி.நகரில் கண்ணம்மா பேட்டை. அங்கு சுடுகாடுகள் இரண்டு உள்ளன. ஒன்றில் இறந்தவர்களுக்குக் கொள்ளி வைப்பார்கள். மற்றொன்று முத்துரங்கன் தெருவில் இருப்பதாக ஹிந்து இதழில் இன்று செய்தி. ஊரை சொன்னவங்க பேரை சொல்லாமல் விட்டுட்டாங்க. அந்த தெரு கடைக்காரன் நம்மை எல்லாம் உயிரோடு கொளுத்தும் இனம். அவனிடமிருந்து பிடித்த ஏழு டன் நெய்யில், நிறம் மாற்றிகள், டால்டா, பாம் ஆயில் போன்றவை 90%. மேலே தடவிய நெய் 10%. இதில் தான் நான் வாங்கி சாப்பிட்ட தீபாவளி மருந்து கூட. இப்ப புரியுது, ஏன் என் வயிறு கொதித்தது என்று. இந்த அழகில் கறுப்புப் பணாதிபதிகளைப் போல பினாமி விலாசங்கள். எல்லாம் பொய். வியாபாரம் அண்ணா நகரில் கொடி கட்டிப் பறந்தது. ஒரு சமாச்சாரம் புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரி அயோக்யன் என்றாலும், கலந்தது, பொய் சீட்டு டப்பாவில் ஒட்டியது, சில்லறை வியாபாரம் எல்லாரும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே. அவர்களால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே.
என்னத்தைச் சொல்ல !
வாலு போச்சு!
கத்தி வந்தது !
இன்னம்பூரான்

-#-
சித்திரத்துக்கு நன்றி: மாலைமுரசு



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com