Friday, April 15, 2016

சமையல் குறிப்புக்கள் & அனுபவம் புதிது!

சமையல் குறிப்புக்கள் &
அனுபவம் புதிது!

இன்னம்பூரான்
07042016
முன்னுரை

சமையல் ஒரு உயிர்மை, கவின்கலை; அறிவியல், அன்றாட அனுபவம், ருசிகரம், வாழ்க்கைப்பாடம் என்று சொல்வது மிகையாகாது. உணவு இல்லையெனில் வயிறு காயும். உடல் மெலியும். உயிர் பிரியும். பிரிந்த உயிர் திரும்ப வாராது என்பதால் தான் ஒளவைப்பாட்டி ஆண்டாண்டு அழுது புரளவேண்டாம் என்று அறிவுரைத்தாள்.  இது வாழ்க்கைப்பாடம். 

நீவிர் உண்டு களிக்க. அதற்கு சமையல் கலை அறிக.

அந்தணர்களின் உலகில், புகுந்த அகத்தில் பெண்ணுக்கு சமையல் தேர்வு நடக்கும். தயை என்பதை சற்றும் அறியாத இரட்டை வீடு ‘இரண்டாங்கெட்டான்’ ரங்காப்பாட்டி ( அது காரணப்பெயர். அந்த காலத்தில் ரங்காப்பாட்டி மாமியாக இருந்த போது, அவளும், சக்களத்தியும்... சரி விடுங்க. பிரச்னை வரும். சர்ச்சை வளரும். பிச்சு உதறி விடுவார்கள், இந்தக்காலத்துப் பெண்ணரசிகள்... வேண்டாம்...] நடத்துவாள். மணமகன் ராஜூ மாடியறையில் பகற்கனவில் ஆழ்ந்திருப்பான். அவனுக்கு நடக்கப்போகும் கொடுமையை அறிய வாய்ப்பில்லை. சற்றே மிகைப்படுத்தப்பட்ட உண்மை என்பதால், எல்லாம் உண்மைப்பெயர்கள். இது சத்தியம், சத்தியம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.  மணமகளின் பெயர், வசந்தா. அத்தையின் பெயர்  [அந்தணர்கள் மாமியார் என்பார்களாம்]. ருக்மணி. ரங்காப்பாட்டி பீடு நடை போட்டு, முட்டாக்கை இழுத்துக்கொண்டு, யானையின் கண்கள் போன்ற சிறு கண்களை இடுக்கிக்கொண்டு வருவதைக்கண்டு, அஞ்சி நடுங்கினாள், ருக்மணி. ஆதுரத்துடன் மருமகப்பெண்ணை அணைத்தவாறு, அவள், ‘இரட்டை வீடு ‘இரண்டாங்கெட்டான்’ ரங்காப்பாட்டி வரா. அவள் ஒரு துக்குரி. சாக்கிரதை’ என்றாள். (அத்தை நல்லவர் தான். ஆனால் அசல் பாப்பாத்தி, பேச்சுத்தமிழில்). இனி உரையாடலை தூய தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறேன். 'துக்குரி' தனித்தமிழ் தான்.

ஒரு உரையாடல்.

இ இ. ர. பா: (வசந்தாவின் அடர்ந்த கூந்தலை சற்றே இழுத்தவாறு) ‘பார்த்தேன். கொள்ளை அழகு. வெள்ளைக்காரி மாதிரி சோப்பு. சிறு வயது. அடர்ந்த கூந்தல். அது திருப்பதியிலிருந்து வாங்கி வந்த சவுரியோ என்று ஐயம். இழுத்துப்பார்த்தேன். இது அலங்காரமில்லை. அசலே. ராஜு அதிர்ஷ்டசாலி (தமிழ் என்ன?).

மூக்கில் மணந்தது போல், இது கேட்டு இறங்கி வந்த ராஜு: ‘பாட்டி! அவள் கூந்தலில் எனக்கு என்ன பாக்கியம்? நான் நினைப்பதெல்லாம்......

அவசரப்பட்டு, இ.இ. ர. பா. ‘உன்னை யார் இங்கே வரச்சொன்னார்கள்? நீ உத்தியோகம் செய். இவள் சமையல் செய்வாள். போய் உன் வேலையை பார். இந்தா குட்டி!, நீ என்னிடம் வா. எல்லாம் சொல்லி தருகிறேன்.

ராஜு நகரவரை காத்திருந்த இ.இ. ர. பா. வசந்தாவுக்கு வலிக்கிற அளவுக்கு அவள் கூந்தலைக் கோதியவாறு: ‘ஆமாம்! தெரியாமல் தான் கேட்கிறேன். உன்னுடைய அம்மா, அசங்காமல், கசங்காமல் வந்து விட்டுப்போனாளே, அவளுக்கு சமையல் தெரியுமா?’ [உள்குத்து கவனித்தீர்களோ! வசந்தாவின் அம்மாவின் புடவையில் ஜரிகை அதிகம். அதனால் பொறாமை, இந்த நார்ப்பட்டு நாயகிக்கு].

அத்தை ருக்மணியின் கண்ணசைவை கண்டு கொள்ளாத அறியாப்பெண் வசந்தா:
‘இல்லை, பாட்டி. எங்களகத்தில் பரிசாரகர் (தவசிப்பிள்ளை) உளர். ஆனால், அம்மா, மனது வைத்தால், அற்புதமாக சமையல் செய்வாள்’.

இ.இ. ர. பா. ‘நான் அதை கேட்கவில்லைடீ. ஆமாம். என்னை பார்த்தால் பாட்டி மாதிரியாகவா இருக்கிறது? நீ இந்தக்காலத்துப் பெண். காலேஜுக்கு போனவளாமே. அதான் இத்தனை துக்குரியாக இருக்கிறாய்.’.

( வசந்தா கண்ணீர் மல்க, மிரண்ட மானைப்போல அத்தையை பார்க்க, அத்தை ருக்மணி நிற்கதியாக நின்றாள்.)

1955
அடுத்து வருவது ‘சமையல் செய்து பார்’ படலம்.

இ.இ. ர. பா. ‘குழந்தாய்! (குழந்தைக்குக் குலை நடுங்குகிறது). உனக்கு சமையல் சற்றளாவது தெரியுமா? அல்லது அவன் தான், பாவம்!. அரிசி களைந்து, மாசு வடித்து, உலையேற்றி, அடுப்பூதி, கண் கசக்கி, சோற்றை வடித்து, இலையில் இடவேண்டுமா? அவன் ஆண்மகன். கையை சுட்டுக்கொள்வான். ஐஏஎஸ் படித்து விட்டு, அடுப்பாங்கரை உத்யோகமா? ‘ இப்படி அடுக்கிக்கொண்டே போகிறாள், அந்த மாபாவி. வசந்தா அழ, ருக்மணி கையைப்பிசைய, இடம், பொருள், ஏவல், தெரியாமல், தந்தை சீனிவாசன் வந்து ஒரு கோப்பைக்காப்பிக்கு ஆணையிடுகிறார்.
இது தான் சாக்கு என்று, காப்பிக்கலக்க வந்த ருக்மணியை, நாக்கைத்த் துருத்தி, அடக்கி விட்டு, தேனொழுக மொழிகிறாள், இந்த இ.இ. ர. பா.

இ.இ.ர.பா. பெண்ணே! உன் பெயர் என்ன வசந்தாவா? அது என்ன சினிமாக்காரி பெயர் மாதிரி! வசந்தசேனா என்று சினிமா வந்தது, தெரியுமோ? எமதுகத்து ‘பாவிப்பிராமணன்’ (அகமுடையான்), இரண்டாவது காட்சிக்கு போய் வந்து விட்டு என் உயிரை...’ சரி! சரி! அது எதற்கு உனக்கு? என்ன கண் கொட்டாமல், இந்த பிரலாபத்தை எல்லாம் கேட்கிறாய்? அசடு. ராஜு நல்ல பையன்.’
ருக்மணியும், வசந்தாவும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டுகிறார்கள் (தெலையாட்றதுகள்).

இ.இ.ர.பா. ‘அம்மா, அந்த மதராஸ் காலேஜ் படித்த பெண்ணே! உன்னுடைய மாமனாருக்கு செரிமான பிரச்னை. மாங்கொட்டை கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் பருப்புத்துவையல் அரைத்து என் வீட்டுக்குக் கொண்டு வா. மார்க் போடுகிறேன்.’
(ஆரவாரத்துடன், ஒரு ஆழாக்கு காப்பித்தூள் மல்லைய்யா கடனாக எடுத்துக்கொண்டு போகிறாள்).
நுட்பம் யாதெனில், எப்படி வயிற்று வலியால் துடிப்பது போல் பாசாங்கு செய்ய முடியுமோ அந்த மாதிரி, பருப்புத்துவையல் எப்படி அரைத்தாலும், குற்றம் காண இயலும். சில மதிப்பீடுகள்:
  1. இப்படி வெழுமூனாக (தமிழ் என்ன?) அரைத்தால், அது சாணி மாதிரி.
  2. என்னது இது? காப்பிப்பொடி மாதிரி கர கர என்று இருக்கிறது?
  3. அம்மா, ருக்கு! ஒரு டம்ளர் கொணருக. உங்கள் வீட்டு மருமகள் பருப்புத்துவையல் செய்துள்ளாள்; அருந்தத்தான் வேண்டும்!
  4. என்ன துவையைல், இது? மூக்குப்பொடி மாதிரி?
அந்த சமயம் பார்த்து இறங்கி வந்த ராஜு, ‘ பாட்டி! பாட்டி! நீங்கள் மூக்குப்பொடி போடுவீர்களா?
( இ.இ.ர.பா. விரலை சொடுக்கிக்கொண்டு வாசற்படி தாண்டி, மறைகிறார்.
[துரித கதியில், வசந்தா நளபாகினி ஆனாள். அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும், அவள் தான் ஆசான்].

1995 [ஐம்பது ஆண்டுகள் கடந்து]
அடுத்து வருவது ராஜூவின் சமையல் துணிச்சல் படலம்.
எங்கள் சங்கத்தில் மாதாமாதம் சோற்றுக்கடை, பட்டிமன்றம், வதந்தி நிலையம், சக்தி மசாலா எல்லாம் உண்டு. பிரபலங்கள் வந்து, திரவியம் நாடுவது, காப்பீடு குழப்பம், தண்டகருமாந்திரம் என்று பற்பல அரிய விஷயங்களை பற்றி உரை ஓதுவார்கள். எனக்கும் இயல்பான உறக்கம் கிடைக்கும். ஒரு தடவை ராஜு ‘சமையல் உத்திகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற விழைந்தான். உள்கை காரியதரிசி ஆவன செய்தான்.
அவன் உரை:
“ யாவருக்கும் வணக்கம். சட்புட் என்று தாளிப்பு உளுத்தம்பருப்பைப்போல் சொல்லி முடிக்கிறேன். வசந்தா பெண்ணிய கான்ஃபெரன்ஸ், இதே ஓட்டலில், போய் இருக்கிறாள். வருவதற்கு முன்:
  1. ‘நெய்யில் தாளித்தால் நறுமணம்;
  2. தண்ணீரில் தாளிக்கலாம், எண்ணை விலக்க. ஆனால் அதை சூடு செய்யவேண்டும்;
  3. உளுத்தம்பருப்பு பொன்னிறமானவுடன் மிளகாயை கிள்ளிப்போடவும்;
  4. புளியை வென்னீரில் ஊறவைத்து, பிழிந்தால் புளியஞ்சாறு அதிகம் கிட்டும்;
  5. வெண்டைக்காய் துண்டங்களை சற்றே தயிர் தடவி பொரித்தால், ‘மொற மொற’;
  6. இட்லி மாவில் நாலொருபாகம் பூசணி பத்தையை அரைத்து விட்டால், மல்லிகைப்பூ இட்லி உத்தரவாதம்;
  7. இட்லி வேகவேண்டும்; தோசை ‘சொய்ங்.; உப்புமா கிளறவேண்டும்;
  8. வெங்காயம் உரிக்கும்போது கண்களை கட்டிக்கொள்ளலாம்;
  9. புளியோதரைக்கு நல்லெண்ணைய்; அவியலுக்கு தேங்காய் எண்ணைய்; வடைக்கு கடலை எண்ணைய்; மீனுக்கு கடுகெண்ணைய்.
  10. பாலில் வெந்தியம் போட்டபின் தயிர் துவைத்தால், நீரழிவு கட்டுப்படும்;
  11. புதினா போட்டுத் தயிர் துவைத்தால், செரிமானத்துக்கு உதவும்.
  12. கல்லைக்கரைத்து, உப்பிட்டு...
இந்த காலகட்டத்தில் வசந்தா வந்து விட்டாள் என்பதை கண்டுகொள்ளாமல், கூடியிருந்த குடும்பத்தலைவிகளின் கேள்விகளை அசால்ட்டா ஃபீல்ட் செய்தான், ராஜு.( இதற்கு தமிழ் என்ன?).
‘சட்’ என்று மேடை ஏறிய வசந்தாவை  கணவனை கடையேற்றியதற்குக் கை தட்டி வரவேற்றார்கள் பெண்ணினம். ஆண்வர்க்கம் முறைத்துக்கொண்டு கிடந்தது.
கையமர்த்தி, மீனாள் போல் கண்ணசைத்து வசந்தா செப்பியது கேளும், மாந்தர்காள்!
‘இந்த மனிதர் என்றாவது சமையலறைக்குள் தலையை காட்டினாரா? என்று வினவுக. அவர் சொல்வது எல்லாம் புருடா (தமிழ் என்ன?) என்றாள். அடுத்த ஹால் ஆசாமி ஒருவர் வந்து, ‘கொஞ்சம் மெதுவாக’ என்று கோபத்தில் உரக்கக்கத்தினார். அப்படி அப்ளாஸ் நம்மாத்து அம்மாமிக்கு!.

ஏப்ரல் 7, 2016
[ மேலும் இருபது ஆண்டுகள் கடந்து]
அடுத்து வருவது ராஜூவின் இன்றைய சமையல்  படலம்
சில நாட்களாக வெயில் தாங்காமல், ராஜுவே காலை/ மத்திய உணவு குறைத்து நடுவில் ‘சுயம்பாகம்’ (சொந்த சமையல்).
இப்போது மிகுந்த அதிகப்படி விலையில் நாணும் பெண்ணைப்போல் வளையும், ருசிக்கும் வெள்ளரிப்பிஞ்சு கிடைக்கிறது. விலை அதிகம்.கிலோ ரூ.130. 
வெள்ளரிப்பிஞ்சு     - 5 கண்டதுண்டமாய்.
தக்காளி           - 4  கண்டதுண்டமாய்.

கொய்யா            - 2 கண்டதுண்டமாய்.

ஆப்பிள்    - 1 கண்டதுண்டமாய்.

மாதுளைமுத்துக்கள் - 187
கமலா ஆரஞ்சு   - சில சொளைகளை பிழிந்து
இஞ்சி              -சிறிது அரைத்து
உப்பு, மிளகுத்தூள், பெருமாள் தீர்த்தப்பொடி, தூவி
புதினா இலைகளை அறுத்துத்தூவி

இறுக்குமதி செய்யப்பட்ட விதைக்கொத்து, ஏலக்காய், வவங்கைப்பட்டை வகையறா சேர்த்து,

எல்லாவற்றையும் பல குலுக்கல்கள், குலுக்கி, அண்டை வீட்டுக்கு எடுத்துச்செல்கிறான். அவரும் அவனும் கதைத்துக்கொண்டே சுவைக்கிறார்கள். பொருத்தமான உணவு + என்கிறார், டாக்டர். அதற்குள் அடுத்த வீட்டு பெண் வந்திருந்தார். ருசி பார்த்து விட்டு கொஞ்சம் வாங்கிக்கொண்டு போனார். ராஜு காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: https://s-media-cache-ak0.pinimg.com/236x/f0/96/4d/f0964dbd6f4bd8b6d85d9adf118cd914.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, April 13, 2016

மொழியின் வரலாறு



தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை வரவேற்பாக பிரசுரித்த சிறப்பு மலரில் வந்துள்ள என் கட்டுரை, இது.


மொழியின் வரலாறு

இன்னம்பூரான்
ஏப்ரல் 9, 2016

தகவல்/கருத்து பரிமாற்றம் மனிதனின் நிகரற்ற திறமை என்பது ஒரு மாயை. எறும்புகள் அணி வகுத்து செல்லும் போது, நின்று பேசி விட்டு செல்கின்றன. பூனையும் நாயும் நமக்கு உற்ற தோழர்கள்; பாப்பி என்ற பூனை என்னை காலையில் 4 மணிக்கு எழுப்பி தின்பண்டம் கேட்பாள். டிஃபன் என்ற நாய் வீட்டுக்கு எஜமானனாக பீடு நடை போட்டாலும், நூறு ஆணைகளில் ஒன்றைச் சொன்னால் உடனடியாக பணிந்து இயங்குவான். ராணுவ நாய்கள் தியாகச்சுடர்கள். கிளியும் மைனாவும் திருப்பிச்சொல்லி நம்மை மகிழ்விக்கின்றன. விகடன் ஆசிரியர் அமரர் பாலசுப்ரமணியன் என்னை தனது பறவைப்பண்ணைக்கு அழைத்து சென்ற போது இரு ஈமு பறவைகள் அவருக்கு மெய்காப்பாளராயின. ஒரு கிளி அவர் வந்து கொஞ்சும் வரை, ‘பாலூ’ ‘பாலூ’ என்று கூவித்தீர்த்து விட்டது. சிங்கத்தையும் புலியையும் நன்கு பயிற்சிக்கு உட்படுத்தமுடியும். யானைக்கு வடமொழி புரியும் என்று மணக்குளத்து விநாயகர் கோயில் யானையின் பாகன் செய்து காண்பித்தார். அறுபது வருடங்களுக்கு முன்னால் இலங்கை பிரதமர் லண்டன் மிருக கண்காட்சி மையத்து யானையுடன் நீண்ட நேரம் பேசி, எல்லாரையும் அசத்தினார். பீடிகை முற்றிற்று.

c. 484–425 BC

தொல்காப்பியம் தொன்மை வாய்ந்த தமிழரின் வாழ்வியல் இலக்கணம். ‘என்மனார்’ என்ற தொல்காப்பிய அடக்கம் மிகுந்த சொல், அதற்கும் தொன்மையான தமிழ் மொழி படைப்புகளை கூறுகிறது. காலத்தின் பரிமாணத்தில் அத்துடன் ஒப்புமை உடையது எனலாம், ஹெரொடோட்டஸ் என்ற கிரேக்க அறிஞர் மூலம் சுமாராக 2500 ஆண்டுகளுக்கு முன்னால்கிடைத்த  ஒரு தகவலும், ஆராய்ச்சியும், முடிபும். முதலில் மூன்று வினாக்கள்:


  1. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ காலகட்டத்தில், மொழியில் புலமை, பெற்றபோதே கிடைத்ததா? பின்னர் பெறப்பட்டதா?;
  2. மொழி இயற்கையின் வரமென்றால், ஏன் பற்பல மொழிகள்?:
  3. பிறந்தவுடன் குழவியை கண்காணாதத் தேசத்திற்கு அனுப்பி தனிமையில் விட்டு விட்டால், அது பழகப்போகும் மொழி யாது?. 

ஹெரொடோட்டஸ் எகிப்தில் ( தமிழாக்கம் அருமையாக அமைந்திருப்பதை நோக்கவும்.) பயணம் செய்யும் போது, சாம்திக் ("Psamṯik") என்ற அரசன் மொழியின் மூலாதாரத்தை அறிய, இரு குழந்தைகளை ஒரு இடையனிடம் கொடுத்து, அவர்களிடம் யாரும் பேசக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை போட்டு விட்டாராம். ஆனாலும் அவர்களுக்கு அன்னமிட்டு சிரத்தையுடன் கவனித்து, அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு, முதற்சொல் அமைந்த விதத்தை தெரிவிக்கவேண்டுமெனெ ஆணை. ஒரு மழலை "βεκὸς" என்று கூவினானாம். மற்றொரு மொழியில் அது ரொட்டியை சுட்டும். அந்த மொழி தான் ஆதிமொழி என்று  சாம்திக் அறிவித்து விட்டானாம். ஆதாரம் இல்லாத கதை தான். ஆனால், ஹெரொடோட்டஸ் சொன்ன செய்தியல்லவா!  அப்படியிருந்தாலும் அவர் கூறிய ஆரூடம் பலித்தது எனலாம். என்ன தான் சொன்னாலும் மேன்மக்கள் மேன்மக்களே. 

1769 AD

பற்பல நூற்றாண்டுகள் கழிந்த பின் வந்த ஒரு ஆய்வை நோக்குவோம்.
கிட்டத்தட்ட 250 வருடங்கள் முன்னால் பெர்லின் அறிவியல் மையம், சில வினாக்களை எழுப்பி, ஒரு போட்டி வைத்தார்கள்: வினாக்கள்:
  1. மனித இனம் தன்னுடைய இயல்பான போக்கில் இயங்கி ஒரு மொழியை உருவாக்க முடியுமா? 
  2. அது சாத்தியம் என்றால், அவர்கள் கையாளப்போகும் உத்திகள் யாவை? 
  3. மேற்படி வினாக்களுக்கு, ஆய்வின் அடிப்படையில் விடை அளிக்கவேண்டும்.
வாகை சூடிய கொட்ஃப்ரிட் ஹெர்டர் என்பர் ‘மொழியின் மூலம்’ என்ற கட்டுரையில்  மனிதன் விலங்கினத்தை சார்ந்தவர் தான். அதனால் அவனிடம் மொழியறிவு ஏற்கனவே இருந்தது தான் என்றார். 170 வருடங்கள் கழிந்த பின் ‘மொழியை பெற்ற பேறுப் பற்றி அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தேறும் என்பதை அந்த அறிவியல் மன்றமே எதிர்ப்பார்த்து இருக்கமுடியுமா என்பது வியப்புக்குரிய கேள்விக்குறி தான்.


1937
டாக்டர் ரிச்சர்ட் ஆல்பெர்த் வில்சன் ‘மொழி பிறந்த வரலாறு’ [1937] என்ற நூலை எழுதினார். சிறிய நூல் தான்; ஆனால், இருபது வருட ஆய்வின் பயன். தன்னுடைய நூல்  புறவெளிக்கும் [Space] காலதேவனுக்கும்  [Time]  உள்ள உறவு பற்றி அமைந்தது என்றார். அவர் என்னமோ பெரிய கை அல்ல. காலாவட்டத்தில் அந்த நூலுக்கு சமாதி வைத்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத விந்தை நிகழ்ந்தது. நாடகத்துறையிலும், இலக்கிய விமர்சனத்திலும், சமத்துவ பிரச்சாரத்திலும் உலகப்புகழ் பெற்ற பெர்னாட் ஷா இந்த நூலை பரிந்துரை செய்ததுமில்லாமல், நீண்டதொரு முகவுரையும் அளித்தார். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின. மொழியின் பிறப்பும், அது புறவெளிக்கும் காலதேவனுக்கும்  உள்ள உறவின் அரும்தவப்பேறு என்ற கருத்து, கடுகு சிறுத்தது ஆனாலும் காரம் போகாது என்பது போல, ஒரு நவீனத்துவமாக அமைந்து விடுகிறது என்பதை எல்லா மொழிகளிலும் காணலாம்.

தமிழில், தொன்மை வாய்ந்த பரிபாடலில்:
நிலனும், நீடிய இமயமும், நீ. 
அதனால், 
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என, 
அன்னோர் யாம் இவண் காணாமையின், 
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55 

மன்னுயிர் முதல்வனை ஆதலின், 
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே! 
நின் ஒக்கும் புகழ் நிழலவை; 
பொன் ஒக்கும் உடையவை; 
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60 

1979

ஹெரொடோட்டஸ்ஸின் ஆரூடம் நிக்கராகுவேயில் பலித்தது. காது கேளாத சிறார்களின் பள்ளிகளில் அவர்களுக்கு மொழியின் பயன் கிடைக்கவேண்டி செய்த முயற்சிகள் வியர்த்தமாயின. அமெரிக்காவிலிருந்து 1986ல் வரவழைக்கப்பட்ட நிபுணர் ஜூடி கெகல் கண்டு கேட்டு அனுபவித்த வியப்புக்குறிய விஷயம்: அந்த குழந்தைகள், பெரியவர்களின் பாடங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, தாங்களே உருவாக்கிய மொழியில் பேசிக்கொண்டார்கள், இயல்பாகவே. ஆசிரிய பெருமக்களுக்குத் தான் அது புரியவில்லை. தற்காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொடுத்தது பல நூல்களாக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான சிறார்களுக்கு உதவுகிறது.

இந்த கட்டுரையின் இலக்கு ஆய்வுக்குறிய விதங்களில் எல்லாமொழிகளின் வரலாறு அமைகிறது, அதில் ஏற்படுத்தப்படாமல் ஏற்படும் விந்தைகள் தான் நமக்கு தாரகமந்திரங்களாக அமைகின்றன என்ற கருத்தை மற்றவர்கள் அலச வேண்டும் என்ற ஆர்வமமே.
-#-




சித்திரத்துக்கு நன்றி: http://biblelight.net/tower-painting-parliament.jpg

Wednesday, April 6, 2016

இன்னம்பூரான் சரடு 4

இன்னம்பூரான் சரடு 4


பொதுவுடமைக்காரர்களும், முதலாளித்துவத்தினரும் ஒருவரை ஒருவர் சாடுவதற்கு ஜோக்கடிப்பார்கள். அவற்றில் சில அறுவைஜோக்குக்களாக அமையும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு விமானங்கள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக [சென்னை தமிழில் 'கண்டிப்பாக) தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு படகுகள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக  தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு ஹெலிகாப்டர்கள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு படகுகள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக  தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! மன்னிக்க வேண்டும். என்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை தர இயலாது. 

சர்தார்ஜி ஜோக்குக்கள் மாதிரி, இத்தகைய ஜோக்குக்களில் பொய் மிகைப்படுத்தப்படலாம் அல்லது நிதர்சனம் தலையை நீட்டலாம். நம்பூதிரிபாத், பி.ராமமூர்த்தி, உமாநாத் போன்ற இந்திய கம்யூனிஸ்ட்கள் சொத்தையும், வரவையும் கட்சிக்கிக் கொடுத்து விட்டு, அவர்கள் கொடுக்கும் குறைந்த ஊதியத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஜீவா அவர்கள் அதைக்கூட வாங்கிக்கொள்ளவில்லை. தற்கால ரஷியாவின் அழகு பனாமா கண்ணாடியில் பிரதிபலிப்பு.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, April 5, 2016

தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்! இன்னம்பூரான் சரடு 3

இன்னம்பூரான் சரடு 3

தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்!
தோஸ்த்! வஸ்தாத் ! உஸ்தாத் !

நான் சுல்தான் கீ பப்டி என்ற ஊரில் ராஜ்யபரிபாலனம் [அசிஸ்டெண்ட் கலைக்டர்] செய்து கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாததால் ரொம்ப அவஸ்தைப்பட்டேன். லக்டி என்றால் விறகு. லட்கி என்றால் பொண்ணு. விறகு வாங்கினதில் ஒரு தாவா, ஓட்டல் ஓனருக்கும், விறகு மண்டி ஓனருக்கும். அதற்கு நியாயமான தீர்வு வழங்கினேன். ஆனால், எல்லாரும் கொள்ளைச்சிரிப்பு. லக்டீ கீ பதிலாக லட்கீ வாங்கி விற்கறதாக நான் எழுதிய அனுமார் வால் தீர்ப்பு அபத்தமாக இருந்தது. ஊர் சிரிச்சுப்போச்சு.  அந்த மாதிரி தான் பஹூ என்றால் மருமகப்பெண். பஹீ என்றால் வரவு செலவுக்கணக்குப்புஸ்தகம். பஹூவை பஹீ என்று கூப்பிட்டு விட்டு, அவள் ஒரு குரல் கூக்குரலெடுத்து அழுத பின் தான் , அந்த விவாகரத்துக் கேஸே வாபஸ் வாங்கப்பட்டது. குரங்கைப்பிடிக்கப்போய் அது பிள்ளையார் பிடித்தக் கதையாகி விட்டது என்று சிலாகித்தார்கள்.  இது நிற்க.

அங்கு உருதுவுக்கு செல்வாக்கு என்பதால், ஜனாப் ஜலாலுதீன் சாஹேப் ‘தோஸ்த்’ ஆன எனக்கு ‘உஸ்தாத்’ ஆனார். அவர் பக்கத்து மைதானத்தில் குஸ்தி அக்காடா வைத்திருந்த ‘வஸ்தாத்’ சோம்தத் அகர்வாலை பற்றி ஒரு லோக்கல் கதை சொன்னார். அதான், ‘தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்!’.

இந்த ரகசிய என்கெளண்டர் போலீஸ் வேலைக்கு மூன்று பேரும் விண்ணப்பம் செய்தனராம். காலியிடம் ஒன்று மட்டுமே.

டெஸ்ட்:

என் நிழலாகிய தோஸ்திடம் ஒரு துப்பாக்கியை கொடுத்து, ‘அந்த அறையில் உன் மனைவி/கணவன் இருக்கிறார். சுட்டுக்கொன்று விட்டு வா.’ தோஸ்த் அழுத வண்ணம் திரும்பி வந்து ‘சுட கை வரவில்லை.’ என்றார். அவர் நிராகரிக்கப்பட்டார். அடுத்து வந்த உஸ்தாத்துக்கும் இதே அதோகதி! வஸ்தாத்தோ வாகை சூடினார். அது எப்டி?

அவர் அந்த அறையில் நுழைந்தவுடன், சரமாரியாக குண்டுகள் வெடித்தன. பின்னர், கைக்கலப்பு சண்டைக்கான அறிகுறிகள், சத்தம், கூச்சல், அழுகை, முனகல், மவுனம். அவர் வெளியில் வந்து புகாரித்தார். ‘என்னது இது? நீங்கள் துப்பாக்கியில் வெத்துவேட்டு வைத்திருப்பதை சொல்லவேண்டாமா? சுட்றேன். சுட்றேன். நோ எஃபெக்ட். அப்றம் அடிச்சுக்கொன்னேன்.’ அவருக்கு உடனே கை மேல் வேலை.

இந்த காலத்தில் எல்லா வேலைகளிலும் ஆண் பெண் சமானம். மூவரில் யாரு யாரு எந்த பால்? ஏன்?
உடனே பதில் போடுவதாக செல்வன் சொன்னார். பேலியோ டையட் துணிவு. 
கமான் செல்வன்.
இன்னம்பூரான்
ஏப்ரல் 5, 2016

Monday, April 4, 2016

பால் மாறினாலும் சொல் மாறாதே! சொல் மாறாதே, பால் மாறினாலும்!

பால் மாறினாலும் சொல் மாறாதே! சொல் மாறாதே, பால் மாறினாலும்!

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. பல்லென்னவோ சொல்லுக்கு உறுதி. மாணிக்கவேலு முதலியார் உள்ளூரில் பெரிய புள்ளி. மாவட்டத்தில் சற்றே சிறிய புள்ளி. மாநிலத்தில் சின்ன புள்ளி. பாரத நாட்டில் தம்மாத்தூண்டு புள்ளி. அவரு ஒரு நாள் தன்னுடைய மாருதி காரில் மாருத துல்ய வேகமாக, செங்கல்பட்டிலிருந்து தருமமிகு சென்னைக்கு செல்லும் போது, மாமாண்டூரில் ஹெட் கான்ஸ்டபிள் முனுசாமி விசிலடித்து நிறுத்தி, பேரையும், ஊரையும் எழுதிக்கொண்டு ரெஜிஸ்ட்ரேஷன் புக்கை வாங்கிப்பார்த்தார். ‘ஐயா இங்கே 60 கிலோமீட்டதில் தான் ஓட்டலாம்னு ரூலு. நீங்க 61 கிலோமீட்டரில் ஓட்றீங்க. கண்ணுக்குக் கண்ணாடிப் போட்டு ஓட்டணும்னு போட்றிக்கு. போட்டுக்கில்லை. பிடி சாபம்’  என்று சலானித்தார். முதலியார் கிளம்பச்ச சம்சாரம் கொடுத்த தாம்பூலத்தைத் துப்பாமல், இது வரை தப்பி வந்தார். ஆகவே, ‘நான் காண்டேக்ஷ்ஷ்...’ என்றவுடன், ‘சாமி! இது எலெக்ஷன் டைம். நாங்க வணங்காமுடியா இயங்கலாம். நீங்க எந்த மந்திரி தந்திரி காண்டேக்ட் சொன்னாலும், நாங்க டோண்ட் கேர், இன்னம்பூரானைப்போல, என்றார்.
முதலியார் பாவம் சொத்து இருந்தததால், ஷோக்குக்கு காண்டேக்ட் கண்ணாடி...
சரி விடுங்க. வேந்தன் வந்தா பேசிக்கலாம்.
இன்னம்பூரான்
04 04 2016
சித்திரத்துக்கு நன்றி: 

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, April 3, 2016

லோ! லோ!




லோ! லோ!
இந்த ஆனானப்பட்ட ஆங்கிலம் ஆளாளுக்கு வெவ்வேறு பொருள் கொடுத்து ஆலாய் படுத்துகிறது ஐயாமார்களே! அம்மாமார்களே!

இனி இங்க்லீஷ்  அப்பொத்தான் புரியும்.

Two American soldiers were traveling in an overcrowded London bus, standing. Within earshot, two ladies were talking about getting down in the next stop. 

One GI said to the other: Hi! When the ladies rise, we shall pinch their seats’

Perturbed, the ladies got down at the very next stop, to save their skin.

Comment Please.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, April 1, 2016

'உம்'

'உம்'

ராமுவும் சோமுவும் பள்ளித்தோழர்கள். கணினி மன்றத்திலும் தான். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு
விண்ணப்பித்தார். ஒரே பரிக்ஷை. அதே கேள்விகள். பால்யபருவத்திலிருந்து ஒரே மார்க் வாங்கி கின்னஸ் ரிக்கார்ட்
படைத்த இந்த இளஞர்கள் இங்கும் அப்டியே. வியப்பில் ஆழ்ந்த அதிகாரி, இரண்டு பேருக்கு இடம் காலியில்லை. ஒரு பத்து வினாத்தொடர். பத்து நிமிடங்களில் பதில் என்று பந்தயம் வைத்தார். ஒரே மார்க். சோமுவுக்குத்தான் வேலை கொடுத்தார். ராமு கொஷ்யண்ட். நியாயமான பதில் அளித்தார். அது என்ன, நண்பர்களே?

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


-----------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 2, 2016

தொல்காப்பியம் கற்றுக்கொள்ள:

1. விடையில்லையெனினும் தேர்வு. ஐந்தாவது வினாவுக்கு, 'எனக்கு தெரியாது' என்று சோமுவும், 'எனக்கும் தெரியாது' என்று ராமுவும் எழுத, ராமுவுக்கு வேலை கிடைக்கவில்லை.
2. எதிர்பாராத டெவலப்மெண்ட்: தொல்காப்பியம் கற்று, மறக்காமல் இருக்கப்பாடம்;

எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறை
முற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம் என்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே
நூல்: தொல்காப்பியம் (சொல்லதிகாரம், இடையியல்)
பாடியவர்: தொல்காப்பியர்
’உம்’ என்ற சொல் எட்டு விதமாகப் பயன்படுகிறது:
1. எச்சம் : மீதமிருப்பதைச் சொல்லும்போது
உதாரணம் : அங்கே மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன
2. சிறப்பு : ஒரு விஷயத்தைச் சிறப்பித்துச் சொல்லும்போது
உதாரணம் : கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்
3. ஐயம் : இதுவா அதுவா என்று நிச்சயமில்லாமல் சந்தேகத்துடன் ஒருவரைப்பற்றிச் சொல்லும்போது
உதாரணம் : இவரும் நன்றாகவே பாடுவார் என்று நினைக்கிறேன்
4. எதிர்மறை : ஒன்றைச் சொல்லி அதற்கு எதிர்மறையான இன்னொன்றைப் புரியவைக்கும்போது
உதாரணம் : இவன் அவ்வப்போது படிப்பதும் உண்டு (அப்படியானால், பல நேரங்கள் படிக்காமல் இருப்பதுதான் வழக்கம் என்று அர்த்தம்)
5. முற்று : முழுமையைச் சொல்லும்போது
உதாரணம்: பதினெட்டுப் பட்டிக்கும் இவர்தான் நாட்டாமை
6. எண் : எண்ணிக்கையைச் சொல்லும்போது
உதாரணம்: தமிழிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் இவர் சரளமாகப் பேசுவார்
7. தெரிநிலை : ஆராய்ந்து சொல்லும்போது
உதாரணம்: இது பாம்பாகவும் இருக்கலாம், வெறும் கயிறாகவும் இருக்கலாம்
8. ஆக்கம் : ஒன்றின் விளைவாக இன்னொன்று ஏற்படும்போது / ஆக்கப்படும்போது
உதாரணம்: நான் பாடும் பாடல் நன்றாக உள்ளதா?
உபயம்: என்.சொக்கன்
ராமுவின் 'உம்' இந்த எட்டில் எது?
இன்னம்பூரான்

மோடி, தாடி



ஆஹான்னானாம்! இப்போ தான் ஒபாமோவுடன் செல்ஃபிண்ட நமது மதிப்புக்குரிய பிரதமர் மோடியின் தாடியை கண்டு பரவசமடைந்தேன்.
ஓஹோன்னானாம்! என்னே களை! கொண்டேன் தாடி மோஹம்! முடியழகும் ஜோர், ஆலின் ஆல் அழகு ராஜா எம்.கே.டி. போல.
நிஜம்மா சொல்றேன். இத்தனை பேர் இருக்கங்களே. அவருடைய தாடி அட்வைஸர் யாரு?
மோடிக்கும் அவருடைய ஜோடி தாடிக்கும் என் கனிவு வாழ்த்துக்கள்.

Image Credit & Copyright & Thanks: http://images.indianexpress.com/2016/04/44cdf76ea989ce10940f6a7067009b0d-1mn.jpg?w=600



இன்னம்பூரான்

Thursday, March 31, 2016

இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚 🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.


இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚
🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.

நடு நிசி. அமாவாசை இருட்டு. லேசான தூறல். ஆனால், கீத்து மின்னல் டால் அடிக்கிறது. இடி டமாரம் அடிக்குது. தொலைவிலிருந்து ஆந்தையின் அலறல் என் கூடாராத்தின் நூல் ஜன்னலை தாக்குகிறது. ஒரு காட்டுப்பூனை மிரட்டு மியாவுடன் என் மார்பை மிதித்துவிட்டு, அந்த ஜன்னல் வழியாக ஓடி விடுகிறது. எங்கிருந்தோ வந்த ஒரு புலியின் உறுமல் கேட்டு, என் இரத்த அழுத்தம் உச்சகட்டத்தில் தாண்டவம் ஆடியது. இத்தனைக்கும், கட்டாயத்தின் மீது நான் இந்த கானகத்தில் நுழையவில்லை. தன்னிச்சையாப் போனேனா, பச்சை பச்சையா வாந்தி. பக்கத்தில் சிகெரட் பிடித்துக் கொண்டு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர் பொம்மி ரெட்டிகாரு, சிரித்துக்கொண்டே ஒரு சிகெரட்டை நீட்டினார். ‘நீரு பீடி உறிஞ்சினா சரிக ஆயுடும்’ என்று சொன்னார். அவரை சுட்டுக்கொல்லலாம் போல நம்கு ஃபீலிங். ஆனால் துப்பாக்கி அவர் கிட்டெல்ல இருக்கு. போதாக்குறைக்கு, ‘ஏன் நடுங்கி சாகிறீர்கள்? செம்மரக்கட்டைக்காட்டிலே, நாகேஸ்வர ராவ் பார்க் மாதிரியா இருக்கும்? கொலையாளிகள் நடமாடும் பிராந்தியம் ஐயா! நீ இன்னா நனச்சுக்குணு வந்தீக என்று சென்னை கொச்சையையும், மலையாளி கொச்சையையும் கலந்து அடிச்சு விட்டார். அவர் சென்னையில் ட்ரெய்னிங் வந்திருந்தாராம். களக்காடு காட்டிலேயும்  வால்பாறையிலும் ப்ராக்டிக்கலாம். யாரு கேட்டா இதெல்லாம்? 

சமாச்சாரம் இது தான். ஓய்வு பெற்ற உயரதிகாரிகளுக்கு அப்பப்பொ தாக்கீது வரும். தணிக்கைத்துறையின் தணியா வேகம் தொடரில் நான் எழுதிய ரசவாதம் என்றை கட்டுரையை சீஃப் செக்ரட்ரீ சுதாகரன் ஐ ஏ எஸ் சந்திரபாபு ரெட்டிகாருவிடம் காண்பித்தாராம். தமிழ்நாட்டு பசங்க வந்து ரெட் சாண்டர்ஸ் வெட்டிக்கிணு போராங்க. அந்த கவர்னமெண்டோ கூவுது. நீரு இந்த இன்னம்பூரானை இங்கு கைபற்றப்பட்ட ரெட் சாண்டர்ஸ் துண்டங்களை ஏலம் போடச்சே, ஸ்பாட் விஜிலன்ஸ் ஆபீஸராக போடலாமே. அப்றம் ஆடிட்காரன் தொந்தரவு இருக்காதுல்லெ.  அவருக்கு ஒரு திருப்பதி ஏகாந்த சேவை, ஏழு லட்டு, ஒரு சால்வை, இரண்டு லக்ஷ ரூபாய் கேஷ்,  மெல்லிசா ஒரு தங்க மோதிரம் கொடுக்கலாம். முன்னாலேயே சொல்லிடுங்க. அந்த ஆளு ரொம்ப கறாரு என்று கியாதி என்றாராம். லட்டு தின்ன கசுக்குமா என்ன? சரி என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் பாருங்கோ, ‘விநாச காலே, விபரீத புத்தி’ என்பார்கள். ‘சுதாகர்! உனக்கு என்னை பற்றி நன்றாகவேத் தெரியும். காட்லெ போய் இந்த வெட்ற சங்கதியெல்லாம் பார்த்தால் தான், என்னால் வேலையை எடுத்துக்கொள்வதை பற்றி முடிவு கூறமுடியும்.’ என்று திட்டவட்டமாக சொல்லி விட்டு, அவர் வரச்சேயே மணி ஏழு. சோத்தைக் கொட்டிக்கிட்டே பேசினோமா!, காண்ட்ராக்ட் பேசி முடிக்க சீ.எம். கிட்டப்போய் கேளு’ என்று அசால்ட்டா சொல்லி விட்டு தலையை சாச்சேன், பதினொன்று மணி வாக்கில். துர்சொப்பனம் ஒன்று கண்டேன். ‘போகாதே! போகாதே! என் கணவா!’ என்ற நல்ல தங்காள் பாட்டின் மெட்டில்,

‘போகாதே ! போகாதே! இன்னம்பூரா!
சாகாதே! சாகாதே! சித்தூர் காட்டில்.
ஆகாது! ஆகாது! இந்த கூலி படையெடுப்பு!
சாகரத்தில் தள்ளப்படுவாய், அசட்டு கிழமே!

இப்டி ஒரு பாட்டை பாடிக்கொண்டு வந்தது, பள்ளிக்கரணை கொள்ளிவாய் பிசாசு!
நான் ஓவென்று அலறி மணியை பாக்றேன்.
மணி: 0.001 ஏ.எம் ஏப்ரல் 1, 2016.
இன்னம்பூரான்


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, March 27, 2016

இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3‘சாதிப்பெயர்…’


இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3
  1. Monday, March 28, 2016, 5:30
  1. Featuredஇலக்கியம் 3. பிரசுரம் http://www.vallamai.com/?p=67489
‘சாதிப்பெயர்…’
இன்னம்பூரான்
25 03 2016

சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பதையும், அதை எடுத்துரைப்பதையும், அவ்வாறு எழுத்துப்பழகுவதையும் பண்பற்றதாகவும், அநாகரீகமாகவும் கருதும் காலகட்டமிது. அந்த கருத்து தமிழ்நாட்டில் அதிகமாக உலவதும் கண்கூடு. பந்துலுவும், ரெட்டியும், நாயுடுவும் ஆந்திராவில் சகஜமாக நடமாடுகிறார்கள். அண்டை கேரளாவில், மேனனும், நாயரும், பணிக்கரும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஏன்? நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தாரே? சாதிப்பெயரை விலக்காத கம்யூனிஸ்ட்! கன்னடதேசத்திலோ, ராவுஜியும், அய்யாவும், வடநாட்டிலோ சதுர்வேதியும் , திரிவேதியும், த்விவேதியும், சக்சேனாவும், மோடியும், காந்தியும் படேலும், அரோராவுமாக பற்பல ‘சாதியை சுட்டும்’ துணைப்பெயர்களில்லா ஆளில்லை, நேரு உட்பட. இஸ்லாமியர் என்றால், தமிழ்நாட்டில் இல்லாத ராவுத்தர், மரைக்காயர், லப்பைகளா?

இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் ஆங்கிலேய கலோனிய ஆட்சியை எதிர்த்துப்போராடிய காலகட்டத்தில், தமிழ் நாட்டில் ‘முதலியார்’ நாயக்கர்’ ‘நாயுடு’ என்ற சாதிப்பெயர்கள் மரியாதையுடன் எடுத்துரைக்கப்பட்டன. அவர்கள் திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும், வரதராஜுலு நாயுடுவும் ஆவார்கள். திரு.வி.க. அவர்கள் தன் பெயரை ‘கல்யாண சுந்தரம்’ என்று எழுதினாலும், வீட்டில் அவர் ‘சின்ன முதலியார்’ தான்; மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தான் பெரிய முதலியார். என் தந்தையும், நண்பர்களும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.

‘உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார்.’
இதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சகஜ நிலையில் போக்குவரத்து இருந்து வந்தது. ‘நான் ஒரு சூத்திரன்’ என்று எழுதியவர் தன்னை சட்டநாத கரையாளர் என்று தான் அறிவித்துக்கொண்டார். நீதிக்கட்சித்தலைவர்கள் சாதிப்பெயரை அழித்துக்கொள்ளவில்லை – டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டி.
திராவிட கட்சிகள் தலையெடுத்து ஆட்சிக்கு வந்த பின் ஐயங்கார் தெரு ‘தெரு’ ஆனது; சோமசுந்தர முதலியார் தெரு ‘சோமசுந்தரம் தெரு’ ஆனது; இது எல்லாம், ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ரெட் ஹெர்ரிங். தமிழில் பாசாங்கு. திசையை இப்படியெல்லாம் திருப்பி, இன்று வரை சாதி அடிப்படையில் மட்டுமே தேர்தலுக்கு ஆள் பிடிக்கிறார்கள், அந்த திராவிடக்கட்சிகள். இதெற்கெல்லாம் கேள்வி முறை கிடையாதா? எத்தனை வருடங்கள் நாம் ஏமாந்த சோணகிரியாக இருப்போம்?

நிகழ்காலத்துக்கு வருவோம்.
  • சங்கர்-கெளசல்யா ஜோடியை கலைக்க இருவரையும் பயங்கரமாகத் தாக்கி, சங்கரை கொன்ற மேல்சாதி கண்டது என்ன? – சிறை சென்றதும், பெற்ற பெண்ணை அனாதையாக்கியதும், தன் குடும்பத்தின் மேல் சேற்றை வாரி போட்டுக்கொண்டது தான்

– இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அப்பனின் ஆத்திரம் மட்டும் தானா?

  • ‘வெட்டி சாய்க்கிறார்கள்…சுற்றி நின்றவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பதறி விலகுகிறார்கள்‘

-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? இல்லை தமிழர்களின் பாழாய்ப்போன பயந்தாங்குளி குணமா?
கெளசல்யாவின் அப்பனும், மாமனும் மிரட்டியிருக்கிறார்கள்.. இரண்டு மாதம் முன்னால் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த தம்பதி கொலை பயம் பற்றி புகார் செய்தார்கள். ஆனால் போலீஸ் புகாரை வாங்கவில்லை.
-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அல்லது போலீசின் அராஜகமா? அவர்களை சட்டம் அணுகுமா?
  • சட்டத்தை மட்டம் தட்டியவர்கள் யார்? இத்தகைய படுகொலைகளை தடுக்க எண்ணி ஒரு கோடி பெண்கள் அக்காலத்து அமைச்சர். ப.சிதம்பரத்திடம் ஒரு மனு கொடுத்தார்கள். தோழர்.பிருந்தா காரட்டும், தேசீய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் பரிந்துரைத்தனர். என்ன நடந்தது? உரித்த வாழைப்பழமாக சட்ட ஆணையம் ‘Prohibition of Unlawful Assembly Interference with freedom of Matrimonial alliance’ என்ற சட்டவரைவை அளிக்க, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அலசி ஒரு மசோதாவை மாநிலங்களின் கருத்து கேட்க, அனுப்பி வைத்தது, காருண்யம் பொழிந்த ப.சி. யை உள்ளடக்கிய மத்திய அரசு.
  • -இது பெரிய சமூகத்தின் சாதி வெறியா? பிரச்சனையை மறைத்து வைக்கும் சூழ்ச்சியா? ஏன் இந்த தட்டாமாலை?
  • கருணாகரமான [தவறாக நினைக்க வேண்டாம்! ‘எல்லாம் ஒரு குட்டையில் அழுகிய மட்டை தான் – காமராசர்’.] தமிழ் நாட்டு அரசு 23 03 2016 வரை மவுனம் -இது சின்ன/பெரிய சமூகத்தின் சாதி வெறியா? இல்லை அரசு கொள்கையா?

வரிந்து, வரிந்து பக்கம் பக்கமாக சாதிவெறி பற்றி எழுதும் நண்பர்கள் ஏன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் Vicarious pleasure என்பார்கள். தமிழில் ‘சொல்லி மகிழ்வது’ எனலாமோ? எனக்கு இரண்டு மொழியும் தெரியாது.

இணைய பெருமக்களே! நமக்குள் பேசி பயனில்லை.களத்தில் இறங்குங்கள். சமயம் பார்த்து விண்ணப்பிக்கிறேன். என்னால் ஆனதை செய்து வருகிறேன். அது மற்றவர்களின் ப்ரைவசியை பாதிக்கக்கூடாது என்பதால், இப்போதைக்கு முற்றுப்புள்ளி.
-#-
நன்றி: ஆனந்த விகடன்: 23 03 2016
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com