Friday, August 1, 2014

சிரிச்சு மாளலெ! ~10

சிரிச்சு மாளலெ! ~10


இன்னம்பூரான்
01  08 2014

சமீபத்தில் அழகர் கோயில் போயிருந்த போது அங்கு வானர மேலாண்மையை கண்டு மகிழ்ந்தோம். ஓடோட, என் புத்திரி அவற்றை படம் பிடித்துக்கொண்டாள். அனுப்பவதில் தான் தொய்வு. அமெரிக்கா போன பிஸி தான். இன்றைய செய்தி ஒன்றை பார்த்து விட்டு என் கவலைகள் பறந்தோடின. தனியாக இருக்கும்போதே சிரித்துக்கொண்டிருக்கிறேன்! கொஞம் லூசு தான். என்ன பண்றது?

மஹா கனங்கள் - ராஹுலிலிருந்து மோடி வரை - வாழும் டில்லியில் ஸ்க்ரீச் என்று வானர இசை கேட்டால் அது மந்தியில்லை. கூலிக்கு  ‘ஸ்க்ரீச்சும்’ நரோத்தமர்கள் (சொல்லிப்பிட்டேன்; நான் யாரையும் குறிப்பிடவில்லை.) குரங்குகளை விரட்டுகிறார்களாம்! ஆனானப்பட்ட வெங்கையா நாயுடு அவர்கள் நேற்று ராஜ்ய சபையில் தாக்கல் செய்த அறிக்கை படி மனித வானரங்கள் வானர வானரங்களை அச்சுறுத்தி விரட்டுகிறார்களாம். நம்ம பனையூர் பேட்டைக்கு அருகில் வேங்கை புலி தரிசனம் கொடுத்ததால், பெருங்களத்தூருக்கு  பறந்தோடி வந்தேன். இங்கும் ஒன்று சுத்துகிறதாம். இனி, காலை 4.00 மணிக்கு உலாவ செல்லாமல் 4.01க்கு போகவேண்டும். கையில் ஒரு தடி வேறே. இதை விடுங்கள். யானை கூட்டங்கள் வந்து கந்து வட்டி வாங்கி நட்ட கரும்பு தண்டுகளை அபேஸ் செய்து விடுகிறதுகளாம். அவங்க பேட்டையில் அனாயசமாக, தரகர்களுக்கு அழுது விட்டு, குடித்தனம் போன விபசாயிகள் பட்டாஸ் வெடித்து அவற்றை துரத்த முனைகிறார்களாம். சாமி! டில்லிக்கு போங்க. நம்ம பெரிசுகள் அங்கே வானர விரட்டல் மன்னர்கள். சிலரை புலி வேஷம் போட்டுக்கொண்டு இங்கே வரச்சொல்லுங்கள். நான் காலாகாலத்தில் வாக் போக செளர்யமாக இருக்கும். ஆனை வேஷம் எப்டிப் போட்றது? நம்ம க்ரூப்லெ குண்ட்ன்ஸ் இல்லையே. எதற்கும் பிள்ளையாரப்பனை துணைக்குக் கூப்பிடவேண்டாம். அவர் அந்தப்பக்கம். உங்க கற்பனை யானையை தட்டி எழுப்புங்கள். பல தீர்வுகள் கிடைக்கும். சில பைத்தியக்கார பரிந்துரைகள்:
  1. ஆனைக்குட்டியை அபேஸ் பண்ணி கொண்டுவந்து விட்டு ப்ளேக்மைல் செய்யலாம்; அதற்குள் ஆனைக்குட்டி உம்மை மோதி மிதித்து விடும்.
  2. பட்டாஸ் வெடித்து விரட்டலாம். நம்ம இந்திய பட்ஜெட் மாதிரி புஸ்வாணமாக அது போய்விட்டால், கரும்பும் போச்சு, வீட்டுக்கூரையும் போச்சு.
  3. ‘கும்கி’ வைத்து விபீஷண சரணாகதி அடையச்சொல்லலாம். அந்த யானைக்கும் உருண்டை சாதம் கொடுக்க ஐவேஜி இருக்கா?
  4. நடக்ககூடிய ஒரு வழி: ஒரு எலிக்கு பயிற்சி கொடுத்து யானையின் காதில் புகுத சொல்லலாம். ஆனால் ஆனையுடன் எலியும் போய்விடும்! ஒரு எலிப்பட்டாளம் வளர்த்துக் கொள்க.
  5. கரடி வந்தா என்ன செய்வது? யான் அறியேன். மதஎசுஇந்திரனை கேட்டால், தீர்வு கிடைக்கலாம்.
-#-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, July 29, 2014

நெடுநல்வாடை 6 :பனையூர் நோட்ஸ் 6

பனையூர் நோட்ஸ் 6


இன்னம்பூரான்
29 06 2014

நெடுநல்வாடை  6
‘...பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில், குளிர்ச்சியான குருந்த மரக்கிளைகளின் குருத்துகளில் இருந்து மழைத்துளிகள் இடையறாது விழுந்து கொண்டேயிருந்தன...’
(தொடருகிறது)
புல்லின் மீது உறையும் பனித்துளி மிருதுவானது; மாசற்றது; மென்மையும் வெண்மையும் கலந்த ஒரு ரசவாதம். இயற்கையின் கவின்கலை. நெடுநல்வாடையின் மாக்கள் தெருவில் அலைந்து திரியும் காட்சிக்கு முன் சோலையின்பம் காண்போமே! மழைத்துளியின் படைப்புத் தானே இந்த சோலை.
நாம் குறுந்தொகையில் வரும் சோலைகளையும், கிட்கிந்தை மலை, பள்ளத்தாக்கு, கானகங்களில் ஏறி இறங்கி, ஆச்சாமரங்களையும், சந்தனமரங்களையும் பார்த்து மகிழ்ந்த ராமலக்ஷ்மணர்களையும், மஹாகவி பாரதி குயில்பாட்டு எழுதிய மாந்தோட்டத்தையும் (அது தற்போது இல்லையாம்.) ஏதோ தென்னகத்தில் எஞ்சியிருக்கும் தேக்கடி, முன்னார், வால்பாறை,முதுமலை, கபினி கானகங்களை நினைத்துக்கொள்ளலாம். என் பங்குக்கு, ஸிமிலிபால்,ஸாஸன்கிர், ராஜாஜி பார்க், கன்னா பார்க் போன்றவற்றை பற்றி சில வரிகள் எழுதுகிறேன்.
அஞ்சுவது அறியாது , அமர் துணை தழீஇ
நெஞ்சு நப்பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய,
மை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும்
சேய  அம்ம , இருவாம் இடையே
மாக் கடல் திரையின் முழங்கி , வலன் ஏர்பு
கோட்  புலி வழங்கும் சோலை

எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே 

- குறுந்தொகை பாடல் 237. பாலை தலைவன் கூற்று


கானகத்தே மவுனம் நிலவும் என்று தான் நகரவாசிகள் நம்புகிறார்கள். நீங்கள் ஐந்து நிமிடங்கள் கூட கானகத்தில் நின்றாலும், ஜீவன்களின் வாழ்வியலை கண்ணார காண்பீர்கள். ஒரு சத்தம், பல சத்தங்களின் கோரஸ் ஓயாமல் அல்லும் பகலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மவுனம் கூட ஒலிக்கும். அவற்றின் மிக்ஸ்-அப் தனை இனம் கண்டு பிரித்துப் பார்த்தால் நாம் புரிந்துகொள்ளக்கூடிய  பிராணிகளின் தற்காப்பு கலை அதிசயத்தை சொல்லி மாளாது. நல்ல பாம்பு சீறிக்கொண்டு வந்து எச்சரிக்கும். மேகமூட்டம் கண்டு மயில் ஆடும். மான்கள் அமைதியாக மேய்ந்தாலும், குரங்கு ‘புலி வருகிறது’ என்று அதற்கான பிரத்யேக ஒலி கொடுத்து எச்சரித்தால், மயிலாடுதற்கு மசியாமல் மான்கள் பாய்ந்தோடி விடும். வண்டினம் ஒலிப்பதில் எத்தனை ‘ச ரி க ம ப த நி ஸ ‘ சரளி வரிசை! 

பாலைத்தலைவனுக்கு சற்று தொலைவில் நிற்கும் தலைவியை தழுவ ஆசை. யாருக்குத்தான் இருக்காது? தடை யாதெனில், அது இடையே அடர்ந்து இருக்கும் புதர் மண்டிய காடு. அதை ‘கடல் திரையின் முழங்கி , வலன் ஏர்பு கோட்  புலி வழங்கும் சோலை.’ என்கிறார், புலவர். கோரஸ் சத்தம். புலி உலவும் சோலை. அஞ்சாமல்  இருக்க முடியுமா? அவர்களின் காதலுக்கு தொந்தரவு செய்யாமல், வேறு ஒரு சோலையும், நீரோடையையும் காண்போம்.

79. பாலை - தலைவி கூற்று 
கான யானை தோனயந் துண்ட 
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை 
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப் 
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் 
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச் 
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு 
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே. 
-குடவாயிற் கீரத்தனார். 

அலர் தூவுவது ஊராரின் இயல்பு. ஊரில் உள்ளவர்கள் கண்டபடி பேசி அவர்கள் வாரி இறைக்கும் அவதூறுக்கு பயந்தால் காதலும் காமமும் வெளிக்காட்ட முடியாமல் குறைந்து பின் மறைந்துவிடும். அதற்காக எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று கர்மமே(காமமே) கண்ணாக இருந்தால் அனைவர் முன்னிலையில் வெட்கித்தலைகுனியும் நிலையும் ஏற்பட்டுவிடக்கூடும். எப்படி பெரிய யானை தன் தும்பிக்கை கொண்டு முறித்த மரக்கிளை, நிலத்திலும் விழுந்து தொலையாமலும், மரத்திலும் ஒட்டாமலும் ஊசலாடுமோ- ... ெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ...’ - அப்படித்தான் அவர் நினைவால் வாடும் என் உடம்பும் உள்ளது தோழி..!
காதலையும் காமத்தையும் மறக்கவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் போன தன் நிலையை தோழிக்கு கூறுவதாக அமைந்த இந்த வரிகள்...
ஆலந்தூர் கிழார் என்ற புலவரால் எழுதப்பட்ட குறுந்தொகைப் பாடல்...

’பெளவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே
.’
குறுக்கே (குறுந்தொகை) புகுந்து நெடுக (நெடுநல்வாடை) வருகிறோம், தெருவில் திரியும் மக்களைப்போல !
தெருக்களில் சுற்றித்திரியும் மக்கள்
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
படலைக் கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண் துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர  (29 – 35)
அந்த பழமையான நகரத்தின் (மூதூர்) வீதிகள் ராஜபாட்டைகளாம்; அவை அகண்ட காவேரி போல நதியுருவம் கொண்டனவையாம். அங்குண்டாம் மாட மாளிகை, ஏழு மாடி உப்பரிகைகளாம். அவை வானுற உயர்ந்தவையாம். [கடும் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றால்] உடல் வலிமை பெற்று திடகாத்திரமான புஜங்களுடன் பூமாலை அணிந்த ஆணழகர்கள் மொந்தை மொந்தையாக தேறல் (கள்) அருந்தியபடி காலம் போக்கினார்களாம். நீங்கள் மொந்தை கள் பார்த்திருக்கிறீர்களோ, பருகியதை சொல்ல துணிவு இல்லாவிடினும்! ‘மது! ‘மது! ‘மது! சொல்லே அழகு. லாகிரியோ மயங்கிய அழகு. பருக, பருக, உன்மத்தம் ஏறுதடி. நிலை தடுமாறுதடி. நம்மில் அநேகருக்கு அமிதா பச்சனை தெரியும். மருமகப்பெண் கண்ணழகி ‘ஐஸ்’ ஐஸ்வர்யா ராய்யை தெரியும். எல்லாம் தொலைவிலிருந்து தான். ஆனால் அவருடைய தந்தை ஹரிவம்சராய் ஶ்ரீவத்ஸவா ’பச்சன்’ அவர்களை பற்றி சிலருக்குத்தான் தெரியும். அவர் ‘மதுஷாலா’ என்ற அற்புதமான கவிதையை படைத்தார். அதிலிருந்து முதல் இரண்டு பாக்கள்:
मधुशाला



मृदु भावों के अंगूरों की आज बना लाया हाला,
प्रियतम, अपने ही हाथों से आज पिलाऊँगा प्याला,
पहले भोग लगा लूँ तेरा फिर प्रसाद जग पाएगा,
सबसे पहले तेरा स्वागत करती मेरी मधुशाला।।१।

प्यास तुझे तो, विश्व तपाकर पूर्ण निकालूँगा हाला,
एक पाँव से साकी बनकर नाचूँगा लेकर प्याला,
जीवन की मधुता तो तेरे ऊपर कब का वार चुका,
आज निछावर कर दूँगा मैं तुझ पर जग की मधुशाला।।२।
அது மற்றொரு கவிதை. பார்க்கலாமா? 
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a4/Ara_macao_-_two_at_Lowry_Park_Zoo.jpg

Saturday, July 26, 2014

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழும் விருதுகளும் -

தமிழும் விருதுகளும் - தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

இன்னம்பூரான்
26 07 2014
விருது வழங்குவது சான்றோர்களின் பெயர்களுக்கு தண்டியலங்காரம் போல் அணி அணிவித்து அழகு பார்க்கும் நற்பண்பு. தமிழ்த் தென்றல் என்றால் திருவாரூர் கல்யாண சுந்தரனார் அவர்கள் (அவர் விருப்பபடி சாதிப் பெயர் இல்லை) மட்டுமே. பாவேந்தர் என்றால் பாரதிதாசன் அவர்கள் தான். சிலம்புச் செல்வர் என்றால் ம.பொ.சிவஞானம் அவர்கள். சொல்லின் செல்வர் என்றால் குழந்தை கூட அது ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களைக் குறிக்கும் என்று சொல்லும். அண்ணாதுரை அவர்களும் பேராசிரியர் மு.வரதராசனார் அவர்களும் நமது பெர்னாட்ஷாவாகப் போற்றப்பட்டனர். நகரத்தார் சமூகத்தில் யாருமே கொடை வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களைப் பெயர் சொல்லிக் குறிப்படுவதில்லை. ‘பார்-அட்-லா’ என்றால் அவர் மட்டுமே. ‘தமிழ்த் தாத்தா’ போன்ற ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையின் நோக்கம் அது அல்ல.
விருது என்று சொல்வதை விட, இவற்றை எல்லாம் அடைமொழி எனலாம். அரசாங்கம் வழங்குவதை ‘விருது’ என்பதே சாலத் தகும். மகாத்மா காந்திக்கு விருது கொடுத்தால் அது அரசுக்குத்தான் பெருமை சேர்க்கும். அந்த மாதிரி அமைவதும் உண்டு. மாறாக, ‘ராவ் பகதூர்’ ‘கான் பகதூர்’ போன்ற ஆங்கிலேய அரசின் சிபாரிசுகள் பொறுத்துக்கொள்ளப்பட்டனவே தவிர, பாராட்டப்படவில்லை. அந்த விருதுகள் விருதாவாகத்தான் கருதப்பட்டன. ‘சர்’ எனப்படும் கலோனிய ‘பாரத ரத்னா’ கூட, ‘மயிலை முனிபுங்கவர்’ எஸ். சுப்ரமணிய அய்யர், ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெருந்தகைகளால் உதறப்பட்டது. எனினும், ‘மயிலை முனிபுங்கவர்’, ‘குருதேவ்‘ போன்ற அடைமொழிகள் சாசுவதம் அடைந்தன. ஆக மொத்தம், அடைமொழிகளும் விருதுகளும் இறவாவரம் பெறுவது, மக்களின் ஆதரவைப் பொறுத்து அமையும். பீடிகை முற்றியது.
இந்தப் பின்னணியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் இன்று நமது முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘... சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இளங்கோவடிகள் விருதும் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்குத் தமிழ்ச் செம்மல் விருதும் வழங்கப்படும்...’ என்று அறிவித்து,’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ என்று தமிழரின் பழம் பெருமையைப் பற்றி புகழ்ந்து பேசும் புறப்பொருள் வெண்பா மாலையை முன்னிறுத்தி, ‘யாமறிந்த மொழிகளிலே’ நிகரற்ற தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதிலும், தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர்களைக் கௌரவிப்பதிலும் சிறப்பிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டதிற்குப் புகழாரம் சூட்டத்தான் வேண்டும்.
தமிழார்வலர்களுக்கு மகிழ்வும் நிறைவும் தரும் செய்தி இது; தமிழார்வம் கூட்டும் தன்மை உடையது. தற்காலம் வழங்கப்படும் விருதுகளை அதிகரித்து, தமிழ் மொழியின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்க விழைந்ததுடன் நிற்காமல் தன்னுடைய அணுகுமுறைக்கு இணங்க, செயலில் இறங்கிய முதல்வர் அவர்களை வாழ்த்தி, ஊக்கம் அளிப்பது நம் கடமை. உலகில் பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் இதை வரவேற்பர் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இதே அலைவரிசையில் தமிழுலகமும் சமுதாயமும் தமிழ் வளம் பெற, அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
என்னுடைய ஆய்வின் படி கலோனிய அரசு 18 / 19 நூற்றாண்டுகளில் செய்த தமிழ்ப் பணி, 1947க்குப் பிறகு தணிந்துவிட்டது. 18ஆம் நூற்றாண்டில் கலோனிய துரைத்தனத்தாரால் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ்ப் பாடப் புத்தகம் ஒன்று உளது. அத்துடன் ஒப்பியல் செய்தால், தற்காலப் பட்டப் படிப்பின் தரக் குறைவு, வெள்ளிடை மலை. தமிழை ஆட்சி மொழியாகக் கொணர்வது பற்றி, விடுதலை பெற்ற இந்தியாவில் பேச்சுத்தான் அதிகம். செயல்பாடு இன்று வரை இல்லை. 
1868ஆம் ஆண்டு கலோனிய அரசு தமிழில் ஆங்கிலேய கலெக்டருக்குத் தாசில்தார்களால் எழுதப்பட்ட மடல்களை ஐ.சி.எஸ். அதிகாரிகளுக்குப் பாடமாக அமைத்தது. இஸ்லாமிய தாசில்தார், வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். அந்தணராகிய அதிகாரி, உருதுச் சொற்களை இயல்பாகக் கையாளுகிறார். அந்த அளவுக்குச் சமன்படுத்தப்பட்ட தீவிரம், 1947க்குப் பிறகு காணக் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் தொலைநோக்குப் பார்வையில் 1940இலேயே அண்ணா அவர்கள் தமிழின் இறங்குமுகத்தைப் பற்றி மனவலியுடன் பேசியிருக்கிறார். அவருடைய தம்பிகள் அதைப் பொருட்படுத்தவில்லை என்று தான் தோற்றம் என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். 
வெப்துனியா மூலம் நம் முதல்வரிடம் நான் அவையடக்கத்துடன் முன்வைக்கும் வேண்டுகோள்: 
"தயை செய்து இன்றே தமிழை ஆட்சி மொழியாக அறிவித்து, குஜராத்தில் 1960களிலேயே குஜராத்தி ஆட்சி மொழியாக நிலவிய வகையில், அமலுக்குக் கொண்டு வாருங்கள். பள்ளி / கல்லூரிகளில் / பல்கலைக்கழகங்தமிழும் விருதுகளும் - தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்
களில் தமிழ்ப் படிப்பின் தரத்தை உயர்த்தி, தமிழ்ப் புலமையை வளர்க்கவும் பல நாடுகளில் வாழும் தமிழர் கூட்டத்தின் தணியா ஆர்வம் அளவில் அடங்காது. நாள்தோறும் உலக மேடையில் தமிழன்னை வணங்கப்படுகிறாள். எனவே அவர்களையும் தேர்வடம் பிடிக்க அழையுங்கள்."
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, July 24, 2014

கொலைகார பாவிகளா!

கொலைகார பாவிகளா!
இன்னம்பூரான்
24 07 2014 
அன்பின் ஶ்ரீவித்யா, தும்மா விஷ்ணு, ஸ்ருதி, சரத், வஹீத், ரஜியா, நீருடி வம்ஷி, சிந்தாலா திவ்யா, சிந்தாலா சரண், வித்யா, கோலா மஹேஷ், சிந்தாலா சுமன், மேலும் உங்கள் சகபாடிகள் எட்டு பேர்,
நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். மண்டை வெடித்து, மூளை சிதறி, கைகால் உடைந்து, குடல் பிதுங்கி, குருதி வெள்ளத்தில் மூழ்கி செத்துப் போய்விட்டீர்கள். ஆம். கொலை செய்து விட்டார்கள். நாசமா போற கைபேசியில் பேசிக்கொண்டே, உங்கள் பஸ்ஸை ஓடும் ரயிலில் தலை கொடுத்து, உம்மையெல்லாம் கொன்று குவித்து, தன்னையும் பலி கொடுத்தார் வண்டி ஓட்டுனர் பிக்ஷாபதி கவுட். அப்பனும் ஆத்தாளும் வவுத்திலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அமைச்சர்களும் அதிகாரிகள் படையெடுத்து வந்து பிலாக்கணம் பாடுவார்கள், மூக்கொலியால். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, பிலாக்கணம் பாடினாலும், நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். படுகாயம் அடைந்த 20 சகபாடிகளில் எல்லாரும் பிழைக்கவேண்டும் என்று தெய்வத்துடன் கலந்து விட்ட உங்களிடம் வரம் கேட்கிறோம். காலை பிடித்து கெஞ்சுகிறோம். பேச்சுக்கு சொன்னேன். உங்கள் கால்கள் தான் உடைந்து மூலைக்கு ஒன்று கிடக்கின்றனவே. உங்கள் பள்ளிக்கூடமாகிய தூப்ரான் காக்காத்தியா டெக்னோ பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள். குழந்தைகள் அழும். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அரசு ஓடி வந்து அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் காசு கொடுப்பார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். இதழ்களில் உரத்த குரலில் வாதம் புரிவார்கள். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். கனம் கோர்ட்டார் மன்றங்களில் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தடிக்கும் வழக்குக்கள் நடக்கும். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
நான் பச்சாதாபத்தினால் இதெல்லாம் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் உண்மை. கும்பகோணம் பள்ளியில் தீயில் பிஞ்சுகள் கருகி செத்துப்போய் பத்து வருஷம் ஆச்சு. உடனே தீ வைத்து உங்களையெல்லாம் கொளுத்தினாங்களே தவிர, கேசு நடக்குது. வாரத்துக்கு ஒரு ஆழ்கிணறு பலி. குழந்தைகளையும், பெண்களையும் கொல்லும் பாரத நாட்டில் ஈவிரக்கம் கிடையாது. கீழ்வெண்மணியில் உயிருடன் தீ மூட்டினார்களே. அசட்டை உண்டு.
நண்டேட்- செகந்திராபத் ரயில் ஏற்கனவே நான்கு மணி தாமதம். உங்கள் பஸ் ஓட்டுனரை கெஞ்சினீர்களே. கேட்டாரா? ரயிலை முந்தணும், காவு கொடுத்தாலும். அது தான் அவருடைய இலக்கோ? முந்திட்டார். ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உங்கள் பஸ் இழுத்துச்செல்லப்பட்டதாமே. என்னத்தைச் சொல்ல !
‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
இது மசியல்ல. உலர்ந்த உங்கள் குருதி.
சித்திரமும் வேண்டாம். மண்ணங்கட்டியும் வேண்டாம். அடுத்த அசட்டை கொலைக்களமும் நடக்கும் என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது.

-#-

Wednesday, July 23, 2014

பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:2




பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:2



இன்னம்பூரான்
24 07 2014

“... தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் மனோநல தலையீடுகளை (அதுவும் பெண்களை ‘ங’ போல் வளைய சொல்பவை) கண்டு அஞ்சுகிறேன். நமது மடலாடலிலும் அது தென்படுகிறது. மனோநலம் என்ற துறை சாமான்யமானது இல்லை...”. 

(தொடரும்)

புலன் பெயரும் நிலையில் உள்ள இந்த நீண்ட தொடர் ‘நான்’ என்ற சிந்தனையின்/குழப்பத்தின் வரத்துபோக்குக்களை முன் எடுத்து வைக்க முயலும். முதற்கண்ணாக, மனித இனத்தின் மன அழுத்தம் (depression) என்பதை பற்றி சில வரிகள். அது ஒரு அபூர்வமான மனோவியாதி அல்ல.
எந்த சமூகத்திலும் பத்தில் ஒரு பங்கு மக்கள் இத்தகைய பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்று சமீபகால (2013) பிரிட்டீஷ் ஆய்வு ஒன்று கூறுகிறது. முதற் பலிகடா வாழ்வின் தரம். அடுத்த படியாக சுற்று வட்டாரத்தில் உள்ள மற்றவர்களை ஏதோ ஒரு வகையிலாவது பாதிக்கிறது.  மேலும் ஒரு கொடுமை,  அதன் மறைமுகம். ‘நான்’ மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாதவன் (ள்) என்று தான் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு, anxiety என்று சொல்லப்படும் கவலை/வியாகூலம்/ விசாரம் மன அழுத்தம் என்ற வேடம் பூண்டு வருகிறது. ‘ஏக்கமும்’ (stress) பகுவேடதாரி. பத்து தலை ராவணனைப் போல மன அழுத்தமும், மன அமுக்கமும், கவலையும், ஏக்கமும் ஒன்று கூடி வந்தால், வேறு வினை வேண்டாம். அவை தனித்துத் தனித்து வந்தாலும், ‘மன அழுத்தம்’ ‘கவலையாகவும், ‘கவலை’ ஏக்கமும் ஆக வந்து  பாடாய் படுத்தலாம்.

இதையெல்லாம் மேலெழுந்தவாரியாக ‘நான்’ என்ற தனக்கே பூட்டிக்கொள்வது எளிது, Jerome.K.Jeromeயின் கற்பனயில் உதித்த Three men in a Boat போல! இங்கிலாந்தில் முப்பது சதவீத மக்கள் கவலைப்பட்டு, கவலைப்பட்டு மாய்ந்து போகிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஒன்று கெட ஒன்று என்ற சங்கிலித்தொடர் அபாயம் வேறு இருக்கிறது. ஏக்கம் கவலையாக மாறி அது மன அழுத்தமாக உருவெடுத்து , பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, கொம்பேறி மூக்கன் போல் ஏறி, ஆளைக் குலைத்து விடலாம். 

மனோநல ஆலோசகர் [Psychologist] வாயா வார்த்தையாக குணப்படுத்த முயலுவார்கள். மனோ வியாதியின் குறிகளை, கண்டறிந்தும், கேட்டறிந்தும், அலசியும் தீர்வு காண்பதில் இறங்குவார்கள். சில பயிற்சிகளையும் சொல்லிக்கொடுப்பார்கள். மனோநல வைத்தியரிடம் [Psychiatrist] செல்ல பரிந்துரையும் செய்யக்கூடும். இருவரும் கலந்தாலோசித்தும் நிவாரணம் தரலாம். தரமுயர்ந்த மருந்துகளும் உளன. உதாரணமாக Prozac என்ற மருந்து அதிகம் பேசப்படுகிறது. மற்றும் சில மருந்துகளை பற்றி சொல்ல தயங்குகிறேன். ஏனெனில் மனோநல வைத்தியரின் பரிந்துரை அத்தியாவசியம். இல்லாவிடின் பக்கவிளைவுகள் பாதிக்கலாம்.  மனோநல உள்ளுறை ஆலோசகர் [Therapist] இந்த வரிசையில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரிடம் பாதிக்கப்பட்ட நபர், குடும்ப நபர்கள் எல்லாருமே ஆலோசனைக்கு வரவழைக்கப்படுவார்கள். அது தொடர் நிகழ்வாக பல தடவை நடை பெறும். நேரம் பணவிரயமும் அதிகம். ஆனால், பக்க விளைவு இல்லாத வகையில் இதில் பூரண நிவாரணம் கண்டவர்கள் பலர். சொல்லப்போனால், மேல்நாடுகளில் மனோநல உள்ளுறை ஆலோசகரை , யாதொரு விதமான பாதிப்பு இல்லாதவர்கள் கூட அணுகுவது உண்டு. 

‘பெண்களை ‘ங’ போல் வளைய சொல்லும் தொல்லைக்காட்சிகள்/ இதழ்களில் உலவும் அத்தைப்பாட்டிகள் (agony aunts)/ அடுத்த வீட்டு அம்மாமி/ எதிர்வாடை எதிராஜ நாயுடு போன்றோர் விளைவிக்கும் அபாயம் பற்றி பிறகு பேசுவோம். ஏனெனில், இது ஒரு இரங்கல் மடல்.

இந்தியாவில் மனோநல உள்ளுறை ஆலோசகர்கள் மிகக்குறைவு. எல்லோரும் மனோநல நிபுணர்களாக உள்ள இந்த பாரதபூமியில் அவர்களுக்கு மவுசு இல்லை. சென்னையில்  Emma Gonsalves என்ற மனோநல உள்ளுறை ஆலோசகர் இருந்தார். தனது துறையில் வல்லுனாராக இருந்தவர். பணத்தாசை இல்லாமல் மன நிம்மதியுடன் இருந்து முன்னுதாரணமாக இருந்து திகழ்ந்தவர். செல்லப்பிராணிகளின் மீது ஆசை. அவருடைய பெர்ஸியன் பூனை மிகவும் அழகானவள்.  எனக்கு நண்பர். என் மகளுக்கு ஆசான். அண்மையில் அவர் (82) தன் அறையில் கழுத்து நெறிக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். முதலில் இயற்கை மரணம் என்றார்கள். பின்னர் வேலையாள் செய்தது என்றார்கள். அவரது குடியிருப்புக்கு சிறந்த பாதுகாப்பு. அப்படியும் கொலை விழுந்தது. உயில் சம்பந்தமாக உறவினர் கொலை செய்திருக்கலாம் என்ற செய்தியும் உலா வந்தது. இதோ படம்.
ஒரு நாள் அவருடைய நண்பர்கள் கூடி நீலாங்கரையில் அண்மையில் அஞசலி செலுத்தினார்கள். ஊடகமும் அவரை மறந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இதை பதிவு செய்கிறேன்.

-#-
சித்திரத்துக்கு நன்றி: காப்புரிமை ஹிந்து & ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, July 21, 2014

லேடீஸ் & லேடன்ஸ்,

லேடீஸ் & லேடன்ஸ்,


வாகை சூடினாரே! வாகைனா வாகை!
வாங்க அய்யா, அய்யா வாங்க.
மாலை போடுங்க நம்ம பசங்களுக்கு.
கோலம் போடுங்க லார்ட்ஸ்லெ.

இதெல்லாம் சில நிமிடங்களுக்கு முன்னால். 28 வருடத்திற்கு பிறகு இந்தியாவுக்கு லார்ட்ஸ்லெ வெற்றி

Wednesday, July 16, 2014

சிரிச்சு மாளலெ! ~9

சிரிச்சு மாளலெ! ~9

இன்னம்பூரான்
16 07 2014

மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் விறுவிறுப்பான பட்டிமன்றங்கள் நடக்கும்போது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி விமரிசிப்பார்கள். பத்து நாள் தாயாதி பகையை விட அதிகமாக விரோத ஃபில்ம் காட்டுவார்கள். காட்சி முடிந்த பின், தோள் மேல் தோள் போட்டுக்கொண்டு காண்டீனில் ஆட்டுசூப்பு பருக போய்விடுவார்கள். அம்மா உணவகத்தை விட அந்த பாக்கியசாலிகளுக்கு சோத்துக்கடை ரொம்ப மலிவு. இது அன்றாட காட்சி, அந்த காலத்தில். அதற்கும் முன்னாலே, சர் ஜெரெமி ரைஸ்மென்னும் சத்தியமூர்த்தியும் சொற்போர் நடத்திவிட்டு தேநீர் பருக ஜோடியாக. தற்காலம் மோடி ராகுலுக்குக் கைலாகு கொடுத்தாலும், மாநில சட்டசபையில் முகாலோபனம் கிடையாதாமே!

நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இத்தனைக்கும் நடுவில் அங்கே நகைச்சுவை மிளிரும். கட்சி பேதமில்லாமல் எல்லாரும் மகிழ்வார்கள். பிரச்னையை மறந்து திசை மாறி போய்விடுவார்கள். அந்த காலத்தில் பிலு மோடி என்றொரு எம்.பி. ஸ்வதந்திரா கட்சி.  கட்டிட கவின் கலை வல்லுனர். கொழுத்த செல்வந்தர். உடல்வாகும் அப்படியே. அவர் எழுந்து நின்றாலே, சபையில் களை கட்டும். ஒரு சமயம் பக்கத்து ஆசாமியுடன் நின்றுகொண்டு வம்பளந்து கொண்டிருந்தார்; முதுகு அக்ராசனரை நோக்கி. திரு.சீதாராம் கேசரி, அக்ராசனரிடம் இது தப்பு என்று புகார் கூறினார். அக்ராசனர் மோடிக்கு முன்னும் பின்னும் கிடையாது; அவர் உருண்டையான மனிதர் என்று கேலி செய்தார். அவர் அடிக்கிற ஜோக் அதற்கும் மேலாக, அதிரடியாக சிரிக்க வைக்கும். தன் படத்துக்கு கீழே; ‘நான் ஒரு அமெரிக்க உளவாளி கையாள்!’ என்று எழுதி வைத்திருந்தார். இந்திரா காந்திக்கு எதிராளியை கண்டால் ஆகாது. அதனால் இவரை அமெரிக்க உளவாளி என்றார். அந்த அபவாதத்தை இவர் இப்படி கேலி செய்தார். இந்திரா காந்தியும் இவரை மிஸாவில் கைது செய்தார்.

இதை எதுக்கு சொல்ல வரேன் என்றால், லோக்சபாவின் அதிகாரபூர்வமான இணையதளமும் ஜோக் அடிக்க ஆரம்பித்து விட்டது. கனம் பொருந்திய திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு ‘யுத்த யுக்தி வாகை சூடு சூழ்ச்சி மன்னன்’ என்று  (Strategy consultant!!!!) என்று விருது அளித்திருக்கிறது. அப்பாவி பையன், அவரு. தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்று தான் அவர் எழுதிக்கொடுத்திருக்கிறார்.
படு தோல்வி குற்றத்துக்காக, இப்டியா எள்ளல் செய்வது!
-#-
பி.கு: கலைஞர் அடித்த ஜோக்! வேணுமா?

சித்திரத்துக்கு நன்றி:http://humour.amulyam.com/images/humour/large/1308/312861.jpg

Monday, July 14, 2014

கன்னா பின்னா சொத்தும் கண்ணாமூச்சி ஆட்டமும்

கன்னா பின்னா சொத்தும் கண்ணாமூச்சி ஆட்டமும்



இன்னம்பூரான் 

திங்கள், 14 ஜூலை 2014 (17:15 IST): பிரசுரம்: 








ஒரு காலத்தில் பீ.ஜீ. கேர் என்ற முதல்வர் இருந்தார், மஹாராஷ்ட்ராவில். பொதுக் கணக்கு மன்றத்தில் தணிக்கை அறிக்கை விவாதிக்கப்படும்போது, ஊழல்கள் அலசப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளைத் தற்காலிக வேலை நீக்கம் செய்துவிடுவார். அந்த அளவுக்கு லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதில் அவருக்கு ஈடுபாடு இருந்தது.



அதே மாநிலத்தில் தற்காலம் நடப்பு என்ன? லஞ்சாதிபதிகளைப் பாதுகாப்பது வழக்கமாகிவிட்டது, அங்கே. ஆதர்ஷ் ஸ்கேமில் அரசியல்வாதிகள் காப்பாற்றப்பட்டனர். நீர்ப் பாசன இலாகாவின் முறைகேடுகளை மூடி மறைத்து விட்டார்கள். அண்மையில் வெளியான சேதி கேளும்.



கிருபாஷங்கர் சிங் என்ற மாஜி அமைச்சர் (மும்பை காங்கிரஸ் தலைமை வேறு) மீது கணக்கில் இல்லாச் சொத்து பத்து சேத்த விவகாரம். நான்கு வருடங்கள் முன்னால் சஞ்சய் திவாரி என்ற பொதுநலம் விரும்பி மேற்படி அமைச்சர், கன்னா பின்னா என்று 300 கோடி ரூபாய்க்கு முறைகேடாகச் சொத்து சேர்த்தார் என்று லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்குப் புகார் செய்தார். அந்தப் பிரிவும் கன காரியமாக, தம்மாத் தூண்டு தான் (11%: முப்பது கோடி) கணக்கில் வரவில்லை என்று சொல்லி மூடி மொழுகி விட்டார்கள்.



திரு.திவாரி லேசுபட்ட மனிதரல்ல. விடாக்கண்டன். பாம்பே உயர்நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்தார், ஆதாரங்களுடன். அந்த நீதிமன்றம் போலீஸை விசாரிக்க உத்தரவு இட்டது. மார்ச் 2012இல்  அவருடைய வீட்டில் சோதனை நடந்தது. அவரும் ப்ரெஷர் தாங்காமல் மும்பை காங்கிரஸ் தலைமையிலிருந்து ராஜிநாமா செய்தார்.



2012 வருடம் டிசம்பர் மாதத்தில், போலீஸ் கமிஷனர் தலைமை தாங்கிய குழுவும் அவரைக் குற்றம் சாட்டி கூண்டில் நிறுத்த அனுமதி கேட்டது. இந்த வழக்கில் அனுமதி தர வேண்டியவர், மாநில சட்டசபை தலைவர் (ஸ்பீக்கர்). அந்தப் பதவியில் இருக்கும் திலீப் வால்ஸே-பாட்டீல் என்பவர் அனுமதி தர மறுத்து விட்டார் என்பது தான் இன்றைய செய்தி. இத்தனைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தக்க சான்றுகளுடன் குற்றம் சாட்டி கூண்டில் நிறுத்த எவருடைய அனுமதியும் தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு கூறியுள்ளது.



கன்னா பின்னா சொத்து சேர்த்துவிட்டு, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது, இன்னும் எத்தனை நாளைக்கு?



இதில் மேலும் படிக்கவும் :

மஹாராஷ்ட்ரா

,

பீ.ஜீ. கேர்

,

கிருபாஷங்கர் சிங்

,

சஞ்சய் திவாரி

,

திலீப் வால்ஸே-பாட்டீல்

சித்திரம் பார்க்க வெப்துனியா இணைப்பை க்ளிக்கவும். நமக்கெல்லாம் கிடைக்காத பொருள்!

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, July 10, 2014

'புஸ்வாணம்' மத்திய பட்ஜெட் 2014 -15: ஓர் அலசல்

'புஸ்வாணம்' மத்திய பட்ஜெட் 2014 -15: ஓர் அலசல்
பிரசுரம்: http://tamil.webdunia.com/article/union-budget-2014-15/a-quick-review-of-union-budget-2014-15-114071000038_1.html(இன்னம்பூரான், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர்) 

pastedGraphic.pdf


“அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்; ஐவேஜி இல்லாத்துக்கு என்னத்தைச் செய்யலாம்?” - சர். அமராவதி சேஷையா சாஸ்திரிகள் (1828 –1903), திருவிதாங்கூர் / புதுக்கோட்டை சமஸ்தான திவான். நிகரற்ற நிர்வாகப் புனரமைப்புத் திறனாளி.
இன்று மத்திய அரசின் பட்ஜெட் 2014-15 ஐச் சமர்ப்பித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களின் பரிதாப நிலையை நூறாண்டுகளுக்கு முந்தைய மேற்படி வினா தயவு தாக்ஷிண்யமில்லாமல் பிரதிபலிக்கிறது. அவரே ‘சவால்’ என்று ஒத்துக்கொண்டு தான் சமாளிக்கிறார். மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி. ஜெட்லிக்கு எல்லாப் பக்கத்திலிருந்தும் இடி, அடி, உதை. 
காங்கிரஸ் கட்சி கூட்டணி கஜானாவைக் காலியாக விட்டுச் சென்றனர். மான்ய துஷ்பிரயோகம் மட்டுமில்லை; கஜானாவையே முழுங்கிய ஊழல்கள் கொள்ளையடித்தன. போதாக் குறையாக, தான்ய குதிரும் காலியாகிவிடுமோ என அச்சம் இருக்கிறது, வருண பகவானின் கருணை இருக்காது என்ற கணிப்பு இருப்பதால். நீரின்றி அமையாது உலகு. 
மூன்றாவதாக, ஈராக் சிக்கலின் எதிர்வினைகள் படாத பாடு படுத்தும். உலகமே ஒரு கிராமம் என்பதால், பன்முனைச் சிக்கல் தோன்றிய வண்ணம் இருக்கும், தற்காலிக முன்னேற்றம் நீடிக்காவிடின். அண்டை நாடுகள் பிரச்னை வேறு. மத்திய அரசின் சீர்திருத்தங்கள், ஆளுமையில் ஊறிப் போனவர்களைப் பாதிக்கும் என்பதால், உள்குத்து, தாக்குதல், கிருத்திரமம் எல்லாம் கைவரிசையைக் காட்டும். இத்தனைக்கும் நடுவில், தங்கமும் தன தான்யமும், தனி மனித ஐஸ்வர்யமும், நாட்டுச் செல்வக் களஞ்சியமும் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை திரு. ஜெட்லி இன்முகத்துடன் இந்திர ஜாலம் செய்து நிறைவேற்றியிருக்க வேண்டும், இந்த பட்ஜெட்டில்! 
1947இலிருந்து எல்லா இந்திய பட்ஜெட்களையும், திரு. நானி பால்கிவாலா அவர்களின் தயவால் புரிந்து, படித்து வந்த எனக்கு என்னமோ ஏமாற்றம் தான். ஒருகால், ஒரு நாள் முன்னால் அறிவிக்கப்படும் பொருளியல் ஆய்வறிக்கையின் துணிவு என் எதிர்பார்ப்பைக் கூட்டி விட்டதோ? அது பல நுட்பங்களை, காரண காரியங்களை, பழங்கதை, புதிய திட்டம், சால்ஜாப்புகள் ஆகியவற்றைக் குறிப்பால் உணர்த்தும். 
ஒரு சூசகம். ஊகங்களும், உண்மை நடப்புகளும் சாமர்த்தியமாகக் கூடி வரும். ஏற்கனவே வெப்துனியாவில் வெளிவந்துள்ள பட்ஜெட் செய்திகளை அரைத்த மாவாக மறுபடியும் பதியாமல், என் உடனடி கருத்துகளை மட்டும் கூறுகிறேன்.  சுங்க வரி பக்கம் போகவில்லை. ஏனெனில் GST (சீர்திருத்தப்பட்ட பொது வரி) விஷயத்தில் பட்ஜெட் தெளிவு தரவில்லை. பட்ஜெட் அனுபந்தங்களைப் படித்த பின் எழுதக்கூடியதை இத்தருணம் தவிர்ப்பது தான் நடுநிலைமை. அதைக் கடைபிடிக்கிறேன்.
என் உடனடி கருத்துகள்:
1. அரசின் கஜானா வரத்து 5.4% -5.9% வரை வளரும் என்றார் ஜெட்லி, நேற்றைய ஆய்வறிக்கையில். அதைத் திரு.ப.சி. வரவேற்றது குறிப்பிடத்தக்கது. அதற்கான சூத்திரத்தைப் பட்ஜெட்டில் எதிர்பார்த்தேன்; ஏமாந்து போனேன்.
2. தங்கத்துக்கு சுங்கம் குறையும். 10% -6%. அதனால் கடத்தல் கட்டுப்படும் என்று நேற்றே ராய்ட்டர் நிறுவனம் ஊகித்தது. அது பொய்த்துப் போனது. சைனாவுக்கு அடுத்த படியாக, இந்தியா தான் தங்கத்தை அதிக அளவு இறுக்குமதி செய்கிறது. தங்கம் வாங்கும் அளவுக்குச் செல்வம் முடக்கப்படும். அதனால் இன்றியமையாத வளர்ச்சிக்குத் துட்டு கிடைப்பது குறைந்து விடும். இது மைனஸ். 
இதற்கு எதிர்வினையாக முடக்கப்பட்ட ஐவேஜு அந்த அளவுக்குப் பணவீக்கம் அதிகரிப்பதைக் குறைத்திருக்க வேண்டும். போன நிதி ஆண்டில் அரசு செல்வ நிலையில் 20இல் ஒரு பங்கு இவ்வாறு முடக்கப்பட்டது: $54 பிலியன்:1017 டன். அது நடக்கவில்லையே. இப்படிப் போனால் அப்படி. அப்படிப் போனால் இப்படி! இந்தப் பிரச்னையை திரு.ஜெட்லி அணுகவேயில்லை.
3. அவரது உரையை உன்னிப்பாகக் கவனித்துக்கேட்டேன். எனக்கு என்னமோ கவலையுடன் திருமதி. இந்திரா காந்தியின் ‘கரீபி ஹடோ’ (ஏழ்மையை விரட்டு) முழக்கங்கள் தான் நினைவுக்கு வந்தன. காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி, வேளாண் துறைக்குப் பல முக்கிய திட்டங்கள், தேசிய அளவில் வேளாண் சந்தைகள், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம், மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி, நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி, பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி போன்றவை அறிவிப்புகளாக தென்பட்டனவையே தவிர, திட்டமிட்டு வரையறைகள் வகுத்த பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளாகத் தென்படவில்லை. இந்த வைராக்யமெல்லாம் காற்றோடு போய்விடுமோ என்ற அச்சம் எழுகிறது.
4. ஏன்? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வரவு செலவில் துண்டு விழுவதைச் சமாளிப்பது, செல்வம் கூட்டுவது, கடன் அடைப்பது ஆகியவற்றைப் பற்றி அவர் ஆற்றிய உரையில் தெளிவு காண முடியவில்லை.
5. பட்ஜெட் என்றால் எல்லாரும் வருமான வரி பற்றித் தான் முதலில் கவனிப்பார்கள். சம்பளம் / ஓய்வூதியம் வாங்குபவர்கள் தான் வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறார்கள். அதன் பொருட்டு, ஒரு காலத்தில் சிறிய சலுகை ஒன்று இருந்தது. அதை ஆவலுடன் மத்திய வர்க்கம் எதிர்பார்த்தது. ஏமாந்து போனார்கள். பசு மாட்டைக் கறக்காமல் விடுவாரோ, ஜெட்லி?
6. தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சமாகவும் / முதியோர்களுக்கு ரூ. 3 லட்சமாகவும் உயர்த்தியது பேருக்குத் தான். டோகனிஸம். இது ஒரு கண்துடைப்பு தான். சேமிப்புக்கான சலுகையை ரூ.1.5 லட்சமாக உயர்த்தியது, பொருளியலை அசட்டை செய்வது. நியாயமாக அதை ரூ.3 லட்சம் என்று நிர்ணயித்திருந்தால், அரசுக்கும் பல செலவுகளுக்கு முதலீடு கிடைத்திருக்கும். தனி மனிதனும் ஆதாயம் பெற்றிருப்பான். அதுவும் போச்சு. கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரங்களால் கணிசமான சலுகை கிடைக்கவில்லை.
7. பல கோடி வருமானத்துக்கும், சில லட்ச வருமானத்துக்கும் ஒரே விகிதத்தில் வரி. இது தகுமோ? ஒரு 40% ஸ்லாப் வரவேண்டும். நான் ஒரு சிறிய முன்னேற்றமாவது எதிர்பார்த்தேன். கிட்டவில்லை. அம்பானியும் அம்பி மாமாவும் ஒரே விகிதாச்சாரத்தில் வரி கட்டுகிறார்கள்! 
8. சுருங்கச் சொல்லின், முக்கியமாக மும்முனை மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன - பொருளியல் சிக்கல்களை, அரைவேக்காடாக தனித் தனியாக அலசாமல், பொதுவான, முழுமையான அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்றது ஆய்வறிக்கை. அடுத்தபடியாக, தரகர்களை விலக்கி, வேளாண்மைக்கும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய்க்கும் ஆதாரமான நவீன சந்தை அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்ற ஆய்வறிக்கையிலும் விவரம் போதாது; பட்ஜெட்டும் மூடி மெழுகி விட்டது. 
9. எல்லா விதமான நிலக்கரிக்கான சுங்கவரி ஒன்றே என்று அவர் 12:57 மணியில் சொன்னது எனக்குத் தூக்கி வாரி போட்டது. பின்னணி கொஞ்சம் கூட கூறப்படவில்லை.

10. பல வருடங்களாகப் பேசப்படும் நேரடி வரித் திட்டம் (Direct Tax code) பற்றி, மேலும் பேசப்படும் என்கிறார்!
ஆக மொத்தம் எனக்கு ஏமாற்றம் தான். இந்த ஏமாற்றத்தைப் போக்க, மேலும் ஆக்கப் பூர்வமான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com

Wednesday, July 9, 2014

புல்லட் ரயில்வே பட்ஜெட் - ஒரு 'சட்புட்' அலசல்












புல்லட் ரயில்வே பட்ஜெட் - ஒரு 'சட்புட்' அலசல்

pastedGraphic.pdf
இன்னம்பூரான் 
புதன், 9 ஜூலை 2014 (13:27 IST)

pastedGraphic_1.pdf
pastedGraphic_2.pdf


யானை வரும் பின்னே. மணியோசை வரும் முன்னே என்பது போல ரயில்வே பட்ஜெட், மத்திய அரசின் வருடாந்திர பட்ஜெட்டின் முள்ளுப் பெருக்கிச் சாமி. வைணவ கோயிலொழுக்குப்படி பெருமாளை எழுந்தருளிப் பண்ணி உலா வரும் முன், சேனை முதலி ஓட்டமும் நடையுமாக பாதையைச் சீர்ப்படுத்துவார். அம்மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட் ஸ்டேஷன் வருவதற்கு முன்னாலேயே, பாதி வழியில் நின்றுவிட்டது. ஜூலை 8, 2014 அன்று புதிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் பற்றியும், புதிய ரயில்களையும் பற்றியும் வந்துள்ள விவரமான செய்திகளை மீள்பதிவு செய்யப் போவதில்லை. 

இந்திய ரயில்வேயின் வரலாறு போற்றத்தக்கது. பாடப் புத்தகங்களில் ஆங்கிலேயக் காலனி அரசு ராணுவ வரத்துப் போக்குக்காக ரயில்வே அமைத்தனர் என்று சொல்லப்பட்டது அரைகுறை உண்மை. பஞ்சம் ஏற்பட்டபோது உணவுப் பொருட்களைப் பெருமளவில் அனுப்பவும், வணிகம் செழிப்புடன் வளரவும், மக்களின் யாத்திரைகள் அதிகரிக்கவும், அதனால் இன பேதம் தணிந்து, கலாச்சாரப் பரிமாற்றம் நடந்ததிலும் ரயில்வேக்குப் பெரும் பங்கு உண்டு. 

கட்டை வண்டி போல மரக்கட்டை கதவுகள் கொண்ட நத்தை வேக பாஸெஞ்செர் வண்டிகளையும், உலகளாவிய துர்நாற்றக் கழிப்பறைகளையும், மாயவரம் டிகிரி காஃபியையும், விஜயவாடா ஆம்சத்தா (மாம்பழச்சாறு கற்றை), லோனாவாலா சிக்கியையும், பாடியாலா லஸ்ஸியையும் (நீர் மோர்), பதான்க்கோட் பரோட்டாவையும் நான் சுவைத்த பின்னரும், உயிரோடு இருக்கிறேன்! சில நாடுகளில் ரயில்வே பயணம் செய்திருக்கிறேன். மூன்று ரயில்வே மாவட்டங்களில் (Zonal Railways) பணி புரிந்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் இப்போது கை கொடுக்கின்றன. நன்றி: இந்திய ரயில்வே.

முதலில் ஒரு ரயில்வே ஜோக்: 

தென்னிந்திய ரயில்வேயின் ஒலவக்கோட்டுப் பகுதி என்று வைத்துக்கொள்ளுங்கள். நடந்தது என்னமோ மேற்கத்திய ரயில்வேயில். அதற்கு மேல் சொன்னால் வம்பு! 

இளமை வேகம்; திருமணமான அறுபது நாட்களுக்குள்; மோகம். உதவிப் பொறியாளர். ரயில் பாதையில் அத்வானமான காட்டின் நடுவில் ஒரு ரயில்வே பங்களா. ரயில் நிற்காது. அதனால், ட்ராலி வண்டியில் தம்பதி ஜாலி டூர்! பங்களாவைக் காணோம்! திரும்பி வந்து மேலாளரிடம் ‘பொய்க் கணக்கு’ என்று புகார். அவருடைய பதிலைக் கேட்பீர்களாக: 

‘அப்பனே! என்னை கேட்காமல் நீ ஏன் போனாய்? கட்டியதாகக் கணக்கு எழுதினவன் நான். உடனே, அது பாழாக இடிந்துவிட்டதால் அழிக்க வேண்டும்’ என்று திட்டம் கொடு’.  

எப்படி? இது ரயில்வேக்காரர்கள் தங்களுக்குள் கேலி செய்துகொள்வது.

உண்மையில், மற்ற துறைகளை விட ரயில்வேயில் நாணயம் அதிகம்; லாவண்யம் குறைவு. ஆனால், போன வருடம் காங்கிரஸ் கட்சி ரயில்வே அமைச்சரகத்தில் 1942 ரயில்வே கழிப்பறை துர்நாற்றம். தலைமை முதல் அடியாள் வரை ரயில்வே போர்டில் லஞ்ச வாவண்யம். அமைச்சரின் பெயர் அடிபட்டது. ராஜிநாமா செய்து தப்பிவிட்டார். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ தான் அநாகரீகமாக, அசிங்கமாக, இன்றைய ரயில்வே அமைச்சரின் பெயர்ப் பலகையைப் பிடுங்கி எடுத்து மிதித்தார். வெட்கக்கேடு! சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்று விடுமா? என்ன? ஆனாலும், மறைமுகமான லஞ்சம், வீணடிப்பில் ஆதாயம், அபாரச் சலுகைகள், அறுசுவை உண்டி எல்லாம் ரயில்வேயின் பிதுரார்ஜித சொத்துகள்! எல்லாம் அளவோடு இருக்கும், அந்தக் காலத்தில்!

இந்தப் பின்னணியில் புல்லட் ரயில்வே பட்ஜெட் அலசல்:

1. லஞ்சத்தை ஒடுக்கும் வகையில் அறிவிப்பு இல்லை; ஆனால், எல்லாம் வெளிப்படையாக இருக்கும் என்றது பட்ஜெட். இது போதாது.

2. நேருவின் சோஷலிஸம் வந்த போது தனியார் மயம் காசு செலவழிக்கத் தயாராக இல்லை. ஏகப்பட்ட திரவியம் வேண்டியிருந்தது: உதாரணம்: ரூர்க்கேலா எஃகு உற்பத்தி சாலை. அப்போது அரசு வாரியங்கள் / கம்பெனிகள் தலையெடுத்தன. இப்போது, தனியார் கை இங்கும், எங்கும் ஓங்கி உலகை அளக்கின்றன: உதாரணம்: அம்பானி.  ஸ்விஸ் வங்கிகளிலும் கோடிக்கணக்காகத் துட்டு! இந்தப் பின்னணியில் ரயில்வே பட்ஜெட் தனியார் / அன்னிய முதலீடு நாடுவது சரியே. ஆனால், கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு கண்காணிக்க வேண்டும். தணிக்கைத் துறைக்கு வழி விட வேண்டும். 2ஜி, நிலக்கரி, கச்சா எண்ணெய் ஜாம்பவான்கள் ஜொள்ளு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!

3. புல்லட் ரயில் வகையறா நல்வரவு. பயிற்சி, பாதுகாப்பு, மராமத்து ஆகியவற்றில் முழுக் கவனம் தேவை.

4. பங்குச் சந்தை சிங்கியடித்ததைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அது தனி உலகம்.

5. கணினி மய ஏற்பாடுகள் கன ஜோர்.

6. பிரதமர் சொன்ன மாதிரி இது மக்கள் நலம் நாடும் பட்ஜெட். அதனால் தான் தமிழ்நாட்டு முதல்வரும், கருணாநிதியும் (ஓரளவு!) வரவேற்பு கூறியிருக்கிறார்கள். மற்ற புகார்கள் எல்லாம் சென்னை பாஷையில் ‘வேலைக்கு ஆவாது!’.

7. நாடாளுமன்றத்தில் அமளி செய்தது, சில எதிர்க் கட்சிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு. 

இன்னும் பேசிக்கொண்டே போகலாம். அவசியமானது மட்டுமே இடம் பெறுகிறது. அடுத்து 'சட்புட்' சடுதியில் பாயும் மத்திய பட்ஜெட்டைப் பார்க்கலாமா?

===================
ஒரு பின்னுரை:

வெப்துனியா தளத்தில் நாம் யாவரும் விழிப்புணர்வுடன் அறிந்துகொள்ள வேண்டிய பல துறைகளைச் சார்ந்த தகவல்கள் / செய்திகள் / வரலாற்றுச் சம்பவங்கள் / கருத்துக் களம் பற்றித் திறனாய்வு / விமரிசனம் செய்ய தருணம் கிட்டியதைப் பற்றிய என் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தத் தொடர், எல்லா விஷயங்களையும் நடுவுநிலையிலிருந்து, ஆக்கப்பூர்வமாக, விழிப்புணர்ச்சியை இலக்கு வைத்து அமையும். மக்கள் நலம், நீதிமன்றத்தார், கண்காணிப்பு, சமுதாயத்தின்/ அரசியலின் ராஜ பாட்டைகள், திக்குத் தவறிய ஒற்றையடிச் சந்துகள், குறுக்குப் பாதைகள், தணிக்கையின் தன்மையும், பயன்பாடும், மேலாண்மை, தன்னார்வம், ஐ ஏ எஸ் படிப்பு, மற்றும் பல எல்லாமே கலந்து வரும், வாசகர் விருப்பப்படி. கணகணப்பு இருக்கும்; ஆனால் புண்படுத்தாது. வெப்துனியாவில் பண்புடன் வரும் பின்னூட்டங்களும், மாற்றுக் கருத்துகளும், அளவளாவுதலும் நல்வரவே. பதில் அளிக்கப்படும்.

- இன்னம்பூரான்
===================

pastedGraphic_3.pdf

இதில் மேலும் படிக்கவும் :