Showing posts with label ஆவின். Show all posts
Showing posts with label ஆவின். Show all posts

Saturday, July 18, 2015

அந்தோ பரிதாபம்!!! தொடர் [3] & [4]



அந்தோ பரிதாபம்!!! தொடர் [3]
இன்னம்பூரான்
ஜூலை 18, 2015

‘ஆவின்’ பாலில் கண்ட கண்ட இடங்களிலிருந்து எடுத்த தண்ணீர் கலந்த வைபோகமும், ஒரு அமைச்சர் வேலையிழந்த அலங்கோலமும் பழங்கதை. இன்றைய செய்தி: 

நங்கநல்லூர் லோகேஷ்வர் ராவ்  வாங்கிய ஆவின் பாலை காய்ச்சி அருந்திய சில நிமிடங்களிலேயே அவருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டதாம்; ஆவின் பால் வாங்கிய கடையிலும், ஆவின் நுகர்வோர் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்த அவருக்கு சரியான பதில் கிடைக்காததால், நேரடியாக ஆவின் நிறுவனத்தில் புகார் கூறியுள்ளார்.
அந்த பால் பாக்கெட்டுகள் சோழிங்கநல்லூர் கிளையிலிருந்து தயாரிக்கப்பட்டதால், உடனே அந்த கிளையிலிருந்து வந்த ஆவின் நிறுவன அலுவலர் பாலின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பியுள்ளார். இதேபோன்று, நங்கநல்லூர் பகுதியில் வாங்கிய பால் பாக்கெட்டில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதாக, மேலும் சிலரும் புகார் தெரிவித்துள்ளனர். ஆமாம்! மண்ணெண்னெய் காசு கொடுத்து வாங்கணுமே. இந்தக்கலப்படம் தாக்குப்பிடிக்குமோ!
-#-

அந்தோ பரிதாபம்!!! தொடர் [4]

டாஸ்மாக் வசனம்: குடி குடியை கெடுக்கும். அது குடியை கொளுத்தும் என்று இனி எழுதப்பட வேண்டும். ராமதுரை நடுத்தெரு வாசி-  நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலான்குளம் நடுத்தெரு. மனைவி முத்துலெட்சுமிக்கும் ஆறு வருடமாக, மதுமிதா, ஜெகதீஸ் என்ற இரு குழந்தைகள் பிறந்த பின்னும், நாட்தோறும் லடாய்.  தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த ராமதுரை மிடாக்குடியன்.  இதனால் அவர் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது குடித்து வந்தார். இதனால் ராமதுரையின் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ராமதுரை கடன் வாங்கியும் குடிக்க ஆரம்பித்தார். இதில் அவருக்கு ரூ.70 ஆயிரம் கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் முத்துலெட்சுமியிடம் வந்து பணத்தை திருப்பி கேட்டனர். இதுகுறித்து அவர் தனது கணவர் ராமதுரையிடம் கூறினார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. மாறாக, குடித்து விட்டு வந்து மனைவி-குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று சின்னகோவிலான் குளத்தில் உச்சிமா காளியம்மன் கோயில் விழா நடந்தது. ராமதுரை வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்தார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த அவரிடம் முத்துலெட்சுமி ஏன் குடித்து அழிக்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராமதுரை சாப்பிடாமல் வெளியே சென்று படுத்து விட்டார். வீட்டினுள் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகளும் படுத்து தூங்கினர். இரவு 11 மணிக்கு எழுந்த ராமதுரை சமையல் அறைக்கு சென்று மண்ணெணைய் கேனை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு சென்று விட்டார். உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் உயிருக்கு போராடி அலறினர். ஆனால் கோயில் திருவிழா நடந்ததால் அவரின் அலறல் சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிக்குள்ளேயே உடல் கருகி இறந்தனர். போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்த ராமதுரை சின்னகோவிலான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். குடிப்பழக்கம் குடும்பத்தையே அழித்துவிட்டது என அப்பகுதி மக்கள் வேதனைப்பட்டனர்.

-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, September 8, 2014

என்னத்தைச் சொல்ல! 3

என்னத்தைச் சொல்ல! 3

இன்னம்பூரான்
06 09  2014
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்:http://www.vallamai.com/?p=50274
பகை படையெடுக்கலாம். உள்ளிருந்தும் புகையலாம். ஏன்? பாலிலும் வரலாம். சூடான செய்தி: ஆவின் பாலில் இலவச குளிர்பானமாக வந்து அமைச்சர் தலையை காவு வாங்கலாம் ! வாங்கிடிச்சுண்ணு சில மணி நேரம் முன்னால் தினமலர் கூறியது. 
செய்தித்துகள் கூட்டம்:
 ‘மேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்... சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது...கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர்.இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது... தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன... பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் மார்க் ட்வைய்ன் சங்கேத மொழிகள் தான். நல்லவேளை, ‘பாலில் தண்ணீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறதாம். தண்ணீரில் பால் கலப்பதாகவும் கேள்விப்படுகிறோம். ஆவினம் ஆவின் மீது வழக்குத் தொடரப்போகிறதாம். தருமமிகு சென்னையின் மஹாலிங்க நகரில் வாந்தி பேதியாம். அதற்கு காரணம் பாலில் கலந்த சாக்கடை நீர் என்று சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாகக் கண்டித்த ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் காரணம் கூற அடக்கத்துடன் மறுத்து விட்டனவாம். வாம்! வாம்!’ என்று எந்த நாளிதழும் எழுதவில்லை.’ கற்பனை போதும்.
இந்த நாசகார வேலையில் எத்தனை பேர் எத்தனை வருடங்களாக ஈடுபட்டிருந்தனர்? அந்த காலத்தில் அரசியில் கல்லும் கிராமஃபோன் ஊசியும் கலப்பது உண்டு. தேயிலையில் குதிரைச்சாணி கலப்பதற்கே என்று இருந்த களவு தொழிற்சாலைகள் என்ன ஆயின? ஆகமொத்தம் மக்களுக்குத் தெரியாமலா இந்த கலவை நடந்திருக்கும்? 
இது எல்லாம் உள்ளிருந்து புகைச்சலா? என்னத்தைச் சொல்ல?
-#-

சித்திரத்துக்கு நன்றி:http://photos.thenews.com.pk/tasveer_images/2012-11-17/large/2_201211170304100202.jpg