Friday, April 17, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1,2,3,




"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1, 2, 3, 

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’[அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை ‘முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

உனது நாமகரணம்

எமது தேசத்தை பாரதமாதா என்று விளித்து, வணங்குவது சாலத்தகும். பாரதம், இந்தியா, ஹிந்துஸ்தான் என்ற பெயர்களை தாங்கும் தீபகற்பம் ஒரு தெய்வத்திரு. மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ‘மன்னும் இமயமலை/ இன்நறு நீர் கங்கை/ உபநிடநூல்/ பாரத வீரர்/ நாரத கானம்/ பூரண ஞானம்...’ எல்லாமே பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே; 
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!’  என்று என்றோ 

தீர்க்கதரிசனம் தந்துருளினாரல்லவா! அதன் தொடர்பாக, நானும் 

பாரதமாதா என் அன்னை, அவளே இந்தியத் தாய் என்று 
தொழுது வணங்குகிறேன்.
(தொடரும்)

2 comments:

  1. I know this if off topic but I'm looking into starting my own weblog
    and was curious what all is required to get set up?
    I'm assuming having a blog like yours would cost a pretty penny?
    I'm not very internet savvy so I'm not 100% sure.
    Any recommendations or advice would be greatly appreciated.
    Thanks

    ReplyDelete
  2. Can I simply say what a relief to discover someone that genuinely understands what
    they are discussing on the internet. You definitely
    know how to bring a problem to light and make it
    important. More and more people ought to read this and understand this side of
    the story. I can't believe you are not more popular since you surely possess the
    gift.

    ReplyDelete