Showing posts with label 1932. Show all posts
Showing posts with label 1932. Show all posts

Monday, April 15, 2019

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [4] ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ ?

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [4]
 ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ ?

இன்னம்பூரான்
ஏப்ரல் 12, 2019
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=91513


திரு.வி.க. அவர்களின் தன்னடக்கம், புலனடக்கம், ஒழுங்கு, சிந்தனை ஒழுக்கம், வாய்மை, நாட்டுப்பற்று, திறந்த மனம், சமுதாய சீர்திருத்த மனப்பான்மை, பெண்மைக்கு மதிப்பு ஆகிய நற்பண்புகளின் மேன்மை அவருடைய படைப்புகளிலும், சொற்பொழிவுகளிலும் புலப்படுகிறது. 

தற்காலம் எல்லாம் தேர்தல் மயம். கொள்கை, கோட்பாடு, கருத்து அடிக்களம் ஆகியவை தகர்க்கப்பட்டு, சுய முன்னேற்றம், ‘கெலித்தால் காசு; இல்லாவிடின் நீயே தூசு’ என்ற பேராசை, வாரிசு வரிசை கட்ட, கட்சி கேலிக்காட்சியானாலும்’ என்ற உள்குத்து, துட்டு விநியோகம், கூடாநட்பு ஆகியவை பொது மக்களை வாட்டும் தருணத்தில்,  ‘இன்று திரு.வி.க. இருந்தால்?’ என்ற ஆதங்கம் வருவது இயல்பே.

துறையூரில் ஆகஸ்ட் 6, 1932 அன்று தமிழ் மாணாக்கர் மகாநாட்டில் அவரது சொற்பொழிவு அருமையாக, பொருத்தமாக  அமைந்து இருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. 

சோழநாடு, உடலோம்பல், கல்வி, தமிழர் யார்?, சீர்திருத்தம் ஆகியவற்றை பற்றி அவர் அங்கு பகர்ந்து கொண்ட சிந்தனைகள் தற்கால சங்கடமான நிலைமையில் நாட்டுப்பற்று உள்ளவர்களின் மனதை தொடும். ஒருகால் அவர்கள் வாக்களிக்கும்போது அவரது நற்பண்புகள் கண் முன் தோன்றி, மனசாட்சிப்படி வாக்களிக்க தூண்டலாம். அவரது உரை நீண்டது. பொது மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, சில சிந்தனை துளிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உடனுக்குடன், தற்கால அவல நிலை பற்றி அவருடைய சிந்தனை எவ்வாறு அமையும் என்பதையும் எண்ணிப்பார்ப்போமாக.
சோழநாடு: “...சோழ நாடு தொன்மை வாய்ந்தது. மாண்புடையது. நாகரிகத்தில் முதிர்ந்தது...சோழ நாட்டுப் பழம்பெரும் கோயில்கள் ஓவியக்காட்சிகள் வழங்குதல் வெள்ளிடை மலை...”. 

- நாம் அன்றாடம் கோயில் கொள்ளைகளை பற்றி படிக்கிறோம். அயல் நாட்டுக்கு நமது புராதன கலைப்பொருட்கள் திருட்டுத்தனமாக அனுப்பபடுகின்றன. ஒரு காலகட்டத்தில் திரு. உத்தாண்டராமபிள்ளை அவர்கள் கோயில் துறைத்தலைவராக இருந்தார். அவர் ஆத்திகர். இசகு பிசகாகக்கூட தவறுகள் நடக்காது. நாத்திகப்பிரசாரம் செய்து கொண்டு மறைவில் ஆத்திக வாழ்க்கை நடந்து வந்தவர்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, நாத்திகர்கள் கோயில் அறங்காவலர்களாக ஆன பின், கோயில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோயில் நிலம் ஆக்ரமிக்கப்பட்டது. சிலைகள் திருடப்பட்டன. இந்த இழிசெயலில் ஆத்திக வேடம் போட்டவர்களும் ஈடுபட்டனர். சோழநாட்டு நாகரிகம் அழித்து வரப்படுகிறது. இவ்வாறு தான் திரு.வி.க. அவர்களின் வ்யாகூலம் அமையலாம்.

உடலோம்பல்: “...உடல் நலன் வேண்டற்பாலது. கிளர் ஈரலும், தடைபடாக் குருதியோட்டமும், எஃகு நரம்பும், ஏக்கழுத்தும், பீடு நடையும் உடையவர்களாக மாணவர்கள் திகழ்தல் வேண்டும்...மாணாக்கர் பார்வைக்கு இனியவராயிருத்தல் வேண்டும்.

- தற்காலம், அதுவும் கல்வித்தந்தைகள், திரை கடல் ஓடாமலே. திரவியம் தேடியதாலும், அரசுப்பள்ளிகள் பட்ஜெட் போதாமலும், அக்கறையின்மையாலும் தவிப்பதாலும், மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கூட கிடைப்பதில்லை. உடலோம்பல் எட்டாக்கணியாகவிடும் என்ற தோற்றம் எங்கும் தென்படுகிறது.

கல்வி: “...‘இளமையில் கல்’...எம்மொழியிலும் கல்வி பயிலவேண்டும்...முதல்முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலவேண்டும்...கலைகள் யாவும் தாய்மொழி வழி அறிவுறுத்தப்பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுங்காலமாகும்...”.

தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுவதற்கு பல்லாண்டுகள் பிடிக்கலாம். மற்றொரு தொடரில் [கஷ்டோபனிஷத்] தமிழ் படும்பாட்டை சான்றுகளுடன் எழுதியிருக்கிறேன். கலோனிய அரசுக்குப் பிறகு தமிழுக்கு இறங்குமுகம் தான். ஐயா முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கச்சேரியில் தமிழ் வலம் வந்தது. கலெக்டருக்குத் தாசில்தார் தமிழில் தான் கடுதாசி எழுதினார். ஐ.சி.எஸ். அதிகாரிகள் தமிழின் தொன்மை குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். திண்ணைப்பள்ளிக்கூடத்துக்கு மதிப்பு இருந்தது. பள்ளி நிலை தமிழ் பாடபுத்தகங்கள் தற்கால முதுநிலை பாடம் அளவுக்கு உயர் நிலை. தற்காலம் எங்கும் ஆங்கிலம் தான் பீடுநடை போடுகிறது. திராவிடக்கட்சிகள் தமிழின் வளர்ச்சிப்பொருட்டு இட்ட சட்டங்கள் கட்டத்திற்குள் உறங்குகின்றன. எல்லாம் உதட்டளவு தமிழன்பு. அவ்வளவு தான்.
இது கண்டு திரு.வி.க. அவர்கலின் மனம் வெம்பி இருந்திருக்கும். 

தமிழர் யார்?:  “...தமிழர் தொன்மை வாய்ந்தவர்...பழந்தூய தமிழர் வழி வந்த தமிழரும், இடையே குடி புகுந்து சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும். கலப்பு என்பது இயற்கை...கலப்பால் வளர்ச்சியே உண்டு...இவருள் சைவரிருக்கலாம். வைணவரிருக்கலாம். அருகரிருக்கலாம். புத்தரிருக்கலாம். கிறிஸ்தவரிருக்கலாம். இஸ்லாமியரிருக்கலாம். ஆத்திகரிருக்கலாம். நாத்திகரிருக்கலாம். இவரனைவரும் தமிழர் என்பதை மறக்கலாகாது...தூய ஆரியராதல், தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்...பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப்பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது... வடமொழி பாரதநாட்டுக்குரிய பொது மொழி..தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர் தமிழைப் பயிலாமலும், தமிழ்த்தாய்க்கு சேவை செய்யாமலும் இருக்கின்றாரில்லை. முன்னாள்தொட்டு அவரும் தமிழ்த்தாயின் சேய்களாக நின்றே தமிழ்த்தொண்டாற்றி வருகிறார்...தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் தமிழராகப் பார்க்கும் நெஞ்சம் மாணாக்கர்கள் பால் அரும்பி மலர்வதாக.”

= இதை படிக்கும்போதே மனம் கலங்குகிறது. நெஞ்சம் பதைபதைக்கிறது. காங்கிரஸ் அரசும் சரி, திராவிடக்கட்சிகளும் சரி, மற்ற சாதிக்கட்சிகளும் சரி, அரசும் சரி, தேர்தலுக்கு சாதி மத பேதம் அடித்தளம். பிரசாரத்தில் சாதி ஒழிப்போம் என்று சொல்லும்போதே, சாதிப்பேயின் உலா அதில் உள்ளடங்கி இருக்கிறது. எறும்பை நசுக்கப் பாறாங்கல் எடுப்பது போல், சிறுபான்மையாராகிய பிராமண மீது எய்யப்பட்ட துவேஷத்தில், வன்முறையும், தீய செயல்களும் வளர்ந்தன, ஒற்றுமை குலைந்தது. கல்வி அளிப்பதில் ஆற்றலுக்கு இடமில்லை. ‘வாலும் போச்சு; கத்தியும் வரவில்லை..‘என்ற படி தமிழ் தள்ளுபடி; இந்தி ஒழிக; ஆங்கிலம் அண்டலாகாது என்றால், அடி வாங்குவது மாணாக்கர்கள் தாம்; அவர்களின் பெற்றோர்களும் தான். ஒரு வேண்டுகோள் எல்லாரும் திரு.வி.க. அவர்களின் ஆழ்ந்த சிந்தனையை புரிது கொள்ள முயலுங்கள். நல்லது பிறக்கலாம்.

சீர்திருத்தம்: “...அஃறிணை உலகம் பெரிதும் சீர்திருத்தத்தை விரும்புவதில்லை...தீண்டாமை மனத்தைத் துறந்து வாழ்வு நடாத்துங்கள்...தியானம் வேண்டற்பாலது...”.

என்னத்தைச்சொல்ல? திரு.வி.க. அவர்களின் பொன்வாக்கு [1932] ஒன்று” 
“ ‘ஒழுங்கு ஊராகும் என்பது பழமொழி. ஐரோப்போயரது வாழ்வில் ஒழுங்கு என்பது ஊடுருவிப்பாய்ந்து நிற்கிறது. அவர்தம் ஒழுங்கு ஊரையும் ஆள்கிறது. உலகத்தையும் ஆள்கிறது.”

பின்குறிப்பு 1: திரு.வி.க. ஒரு சிந்தனை மனிதர். அவரின் சொந்த வாழ்வின் அடித்தளத்தில் உள்ள ஆழ்மனதை புரிந்து கொண்ட ஒரே மனிதர், திரு. ஈ.வே.ரா. அவர்கள். அந்த உருக்கமான நிகழ்வு உரிய காலத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.

பின்குறிப்பு 2: மற்றவற்றை பார்க்கும் முன், அடுத்த பதிவில் அந்த 
“பேய்ப்பழம்” பழுத்த அட்டூழியத்தையும் பார்த்து விடுவோம்.
-#-

















இன்னம்பூரான்






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, April 26, 2014

தமிழர் யார்


தமிழர் யார்?

தமிழர் என்றால் யார். அவர் கொண்டிருந்த பண்பு நலன்கள் என்பன பற்றி முதலில் ஒரு டெஃபினிஷன் தந்து அதனோடு இத்தகைய கேள்வியை வைத்தால் இந்த தேடல் சரியான வகையில் செல்லும் என்பது என் எண்ணம்.
~ மின் தமிழ் நண்பர்

~ இது பற்றி துறையூர் சொற்பொழிவில்,'தமிழர் யார்?' என்ற தலைப்பில் திரு.விக. சில கருத்துக்களை கூறினார். அவையாவன:
1. தமிழ் தொன்மை வாய்த்தது. தமிழரின் வாய்மையை ஒரு எல்லைக்குள் அடக்குவது இயலாத காரியம்;
2. நந்தமிழின் மெல்லோசை வெளிப்படை. மொழியோசையின் வளர்ச்சியிம் பால பருவமிது; தமிழ்மொழியின் தொன்மைக்கு அதன் இயலும், இதுவும் சான்றுகள்;
3. மூவாயிரம் ஆண்டுகளுக்கு தொன்மையான தொல்காப்பியம் பல திறக்கருத்துக்களை உள்ளடக்கியது. அது வேதகாலத்துக்கும் முந்தியது என்று நச்சினார்க்கினியாரின் கூற்று. அது, தனக்கும் முந்திய படைப்புகளை குறிப்பிடுகிறது;
4. தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும், ஒலிநுட்பம், ஒலி திரிந்து எழுத்தாதல், அளபடை, திணை, ஆகுபெயர், அன்மொழித்தொகை, அகம், புறம், அவற்றுக்குள்ள தொடர்பு, அரசு, போர்முறை, காதல் நுட்பம், உள் நிகழ்ச்சி, மெய்ப்பாடு, இறைச்சி, கூர்தல் முதலியவை கையாளும் திறன் வியக்கத்தக்கது. அது தொன்மையை சுட்டுகிறது; தமிழன் கை குறி, ஒலிக்குறி முதலியவற்றை புரிந்து கொண்டு, எழுத்து, சொல், பொருள் என்று மொழியை செப்பனிட்டு வளம் படுத்தியதற்கு ஆயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கலாம். தமிழனின் தொன்மைக்கு வேறு விரிவுரை தேவையில்லை;
5. தூய தமிழ் என்பது ஒரு மாயை (அய்யா மறைமலை அடிகளாரின் மாணாக்கர்.). இனக்கலப்பு என்பது இயற்கை வரலாறு குடி புகந்து நிலைத்தவர்களை தமிழினத்தில் இணைத்துக்கொண்டதும், அவர்கள் இணைந்து கொண்டதையும் கூறுகிறது. எனவே,அவர்களின் பழக்க வழக்கங்களையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. உலகில் எவ்வினமும் கலப்பற்றதாக இல்லை என்பது கருதற்பாலது. கலப்பால் வளர்ச்சியே உண்டு;
6. தமிழை தாய்மொழியாக கொண்டவர்களும், குடி புகந்து நிலைத்தவர்களும், அவர்களின் இனம், மதம், யாதாயினும், தமிழரே. தமிழ்நாட்டாரின் சமய கொள்கைகளின் வேற்றுமை இதற்கு ஒரு பொருட்டல்ல;
7. ஆரியர்/தமிழர் பிரிவு விதண்டாவாதம். தூய ஆரியராதல், தூய தமிழாரதல் தற்காலம் இல்லை என்று வற்புறுத்தும் அய்யா அவர்கள் இந்த பிரிவினை வாதத்தையும், அதன் பகைமையையும் கண்டிக்கிறார்கள்;
8. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பூசல், வடமொழி தென்மொழி பிணக்கு எல்லாம் திருவிளையாடல். வடமொழி பாரத நாட்டுக்கு பொது மொழி; தமிழ் நாட்டு பார்ப்பனர்களின் தமிழ் தொண்டு போற்றத்தக்கது;
9. தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும், தமிழராகப்பார்க்கும் நெஞ்சம் அரும்பி மலர்வதாக, என்று அய்யா அவர்கள் 1932 ல் அறிவுரை அளித்தார். எண்பது வருடங்கள் கழித்து விடை தேடிக்கொண்டிருக்கிறோம்!
அன்புடன்,
இன்னம்பூரான்
26 04 2014
Image Credit: http://nerudal.com/images/2009/10/worldtamilsangam.JPG