Showing posts with label காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370. Show all posts
Showing posts with label காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370. Show all posts

Wednesday, June 4, 2014

[4] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370

[4] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370

இன்னம்பூரான்
04 06 2014
(தொடரும்)...[3]...
தஞ்சாவூரான் திரு. என்.கோபாலசாமி அய்யங்கார், மூடி மெழுகாமல் உகந்த பதில் அளித்தார். அது என்ன?

அவருடைய பதிலை கூறுவதற்கு முன்னால், எல்லா துறைகளிலும் புகுந்து தீர்வு காணும் பொறுப்பு உள்ள அமைச்சர்-Minister without Portfolio - என்றால் என்ன என்பதை விளக்க வேண்டும். அது ஒரு அருமையான ஏற்பாடு. அத்தகைய அமைச்சர் பிரதமருக்கு அடுத்தபடி எனலாம். அல்லது சமமானவர் என்று கூட சொல்லலாம். அல்லது பிரதமரின் பிரதிபலிப்பு என்றும் சொல்லலாம். எல்லா துறையிலும் தலையிட்டு தன் கருத்தை/ தீர்வை பதிவு செய்யும் உரிமை அவருக்கு உண்டு. அத்தகைய பதவி வகித்தவர்களில் ராஜாஜியையும், திரு. என்.கோபாலசாமி அய்யங்காரையும் குறிப்பிடலாம். அப்படி ஒருவர் இருந்திருந்தால், 2ஜி விவகாரம் கருவிலேயே தடை செய்யப்பட்டிருக்கும். இனி திரு. என்.கோபாலசாமி அய்யங்காரின் பதிலுக்கு வருவோம்.

‘... இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களை போல் அல்லாமல், காஷ்மீர், விடுதலை பெற்ற இந்தியாவுடன் இணைவதற்கு தயாரான நிலைமையில் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும், ஜம்மு காஷ்மீர் பொருட்டு போர் களத்தில் இறங்கிவிட்ட தருணம். ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஒரு அசாதாரண சூழல் உருவாகிவிட்டது; நாட்டின் சில பகுதிகள்  புரட்சியாளர்/ விரோதம் பாராட்டும் நாடு ஆகியோரின் கையில் இருக்கிறது. ஐ.நா.வின் தலையீடு மற்றொரு சிக்கல். காஷ்மீரின் உள்நாட்டு பிரச்னையை தீர்த்தால் அந்த சிக்கலை அவிழ்க்கமுடியும். எப்படியும் ஜம்மு & காஷ்மீர் அரசியல் சாஸன மன்றம் மூலமாக மக்கள் கருத்து தான் தீர்மானிக்கவ வேண்டிய முடிவு, இது. ஏனெனில், அமைதி நிலவும் போது மக்கள் எடுக்கும் முடிவை மதிக்க வேண்டும். சுருங்கச்சொல்லின், ஹரிசிங்கின் ஆபத்சஹாய உடன்படிக்கையை கூடிய சீக்கிரம் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது...’.

நேருவுக்கும், படேலுக்கும் சம்மதமான அறிவிப்பு தான், இது. சர்தார் படேல் ஷரத்து 370 ஐ எதிர்க்கவில்லை. நேரு காஷ்மீரை ஒரு அழகிய பெண் என்றார். ரொமாண்டிக் நோஷன். சர்தாரோ உள்ளதை உள்ளபடி பார்த்து, வெளிப்படையாக இதை ஆதரித்தார்; இந்த ‘திரிசங்கு நரகாசுரர்களை’ அடக்கி ஆண்ட சர்தார் தடாலடி பிரிவினை வாதிகளுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. நேருவின் அனுமதியுடன் ஷேக் அப்துல்லா, மிர்ஜா அஃப்ஜல் பெக், மெளலானா மஸூடி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியதற்கு சர்தாரின் சம்மதம் இருந்தது. இத்தனைக்கும் பல கோணங்களில் அவருடையை அவநம்பிக்கையும், அதனுடைய பிரதிபலிப்பும் கண்கூடு. ஒரு காலகட்டத்தில் ஷேக் அப்துல்லாவுக்கும், திரு. என்.கோபாலசாமி அய்யங்காருக்கும் அபிப்ராய பேதம் அதிகரிக்க, திரு. என்.கோபாலசாமி அய்யங்கார் அரசியல் சாஸன அசெம்ப்ளியிலிருந்து ராஜிநாமா செய்யும் அளவுக்கு அபிப்ராய பேதம் வலுத்தது.

(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி:http://www.indiaelections.co.in/wp-content/uploads/2009/11/shiekh_abdullah.jpg

பி.கு. ஷரத்து 370 எல்லா மாநிலங்களுக்கும் வேண்டும் என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டை அது குலைத்து இருக்கும் என்பது என் கருத்து. இன்று தெலிங்கானா பிறந்த கதையை பாருங்கள். தேசீயம் என்பதற்கு இரு முனைகள் உண்டு.

Sunday, June 1, 2014

[3] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370

[3] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370


இன்னம்பூரான்
02 06 2014

‘சொன்னால் விரோதம்’ என்று வாளாவிருந்தனர், உள்ளுறை அறிந்த காங்கிரஸ்காரர்கள் கூட. ஒரு நிகழ்வு. பாம்பேயிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த நான், அகஸ்மாத்தாக திரும்பிப்பார்த்தேன். எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகமாக, இரு போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அரசியல் கைதியாக அமர்ந்திருந்தார், ஷேக் அப்துல்லா சாஹேப். மரியாதை நிமித்தம் கையாட்டினேன். மலர்ந்த முகத்துடன், அவரும். ஒரு போலீஸ் அதிகாரி வந்து என்னை குடைந்து எடுத்து விட்டார். தான் மதித்த நண்பனை கைது செய்யும்படி நேரு உத்தரவு இட வேண்டியிருந்தது. பிறகு மன்றாட வேண்டி இருந்தது. படேலின் அணுகுமுறை வேறு: அவருக்கு ஷேக் அப்துல்லாவின் நிறம் மாறும் குணம் பிடிக்கவில்லை. ஷரத்து 370ன் சிற்பியும், நிபுணத்துவத்தின் சிகரமும் ஆன என்.கோபாலஸ்வாமி அய்யங்கார் அவர்களுக்கு படேல் எழுதினார்,’ பல்டியடிக்க விரும்பும் போதெல்லாம் ஷேக் சாஹேப் தான் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையை முன்வைப்பார்.’!
1953ம் வருடம் காஷ்மீருக்குள் அனுமதியில்லாமல் இந்தியர் நுழையமுடியாது. (1981/82 சில உட்பகுதிகளுக்கு செல்ல, நான் அதை பெறவேண்டியிருந்தது! ) இந்த தடையை மீறிய தேசபக்தரும், ஹிந்து மஹா சபை தலைவரும் ஆன திரு. ஷ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி கைது செய்யப்பட்டார். மருந்துகள் சரிவர கொடுக்கப்படவில்லை. மரணம் அடைந்தார். அவரோ புருஷோத்தமன். தந்தையோ மஹாபுருஷன் அஷுடோஷ் முக்கர்ஜி. அண்ணனோ தலைமை நீதிபதி ராம்பிரசாத் முக்கர்ஜி. சவ ஊர்வலம் அஷுடோஷ் முக்கர்ஜி ரோடு வழியாக, ஷ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி ரோடு வழியாக மயானம் அடைந்தது. லக்ஷோபலக்ஷம் மக்கள் அஞ்சலி செலுத்தினர். ஊரோ இந்தியாவின் பெரிய நகரம், கல்கத்தா. வீதிகளோ ராஜபாட்டைகள். அவற்றின் பெயர், இவருடைய குடும்பம் சார்ந்தது. அந்த படத்தைப் பார்த்து என் மனம் நொந்தது இன்னும் நினைவில் உளது. அவருடைய அன்னை நேருவுக்கு கடிதம் எழுதினார், ‘My son was killed. I charge you with complicity in that murder.’: ‘என் மகன் கொல்லப்பட்டான். அந்த கொலையின் உள்கை நீ.’. எனக்கு தெரிந்தவரை நேரு அதற்கு பதில் போடவில்லை.
1981/82ல் நான் காஷ்மீர் போனபோது ஒரு அயல்நாட்டில் இருப்பதாக உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் துப்பாக்கி போலீஸ். மாடமாளிகைகளும், மாடமாளிகை ஓடங்களும், குடிசைகளும், ஏதோ ஒரு ஒத்துழைப்பில், கலந்து வாழ்ந்தன. காஷ்மீரவாசிகள் ஒருவராவது தன்னை இந்தியராக கருதவில்லை. ஆங்கிலேய காலனித்துவம் போல இந்திய தொப்புள்கொடியை அவர்கள் பாவித்தனர். ஷரத்து 370 கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு இந்த நிலை! ஷஷ்டியப்தபூர்த்தி காலகட்டத்தில், சலுகைகளை அனுபவித்த யாம், ஷரத்து ரத்து ஆகலாம் என்ற பேச்சு எழுந்தாலே, இந்தியாவை விட்டு விலகிவிடுவோம் என்று ஒமர் அப்துல்லா பயமுறுத்துகிறார். பேஷ்!
இது பற்றி நன்கு ஆராய்ந்து, ஆஸ்ட் ரேலியாவின் மெல்போர்ன்/ இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் ஆன அமிதாப் மட்டு (‘மட்டு’ காஷ்மீரத்தில் பாபுலர் பெயர்.) ஐந்து வினாக்களை எழுப்பி, நிஜத்துக்கும், கற்பனைக்கும் இது விஷயமாக உள்ள வித்தியாசத்தை அலசியிருக்கிறார். 
அந்த வினாக்களை புரிந்து கொள்ள ஒரு சின்ன வரலாற்று தகவல் தொகுப்பு:
  1. ஷரத்து 370ன் தேவை என்ன? என்று மெளலானா ஹஸ்ரத் மோஹினி அக்டோபர் 17, 1949ல் அரசியல் சாஸன மன்றத்தில் கேட்டார். பதில் அளித்த அரசியல் ஞானியும்,  காஷ்மீரத்து மாஜி திவானும், அந்த ஷரத்தை எழுதியவரும் ஆனவரும். எல்லா துறைகளிலும் புகுந்து தீர்வு காணும் பொறுப்பு உள்ள (மோடி தர்பாரில் அத்தகைய அமைச்சர்-Minister without Portfolio - இருக்கவேண்டும்.) தஞ்சாவூரான் திரு. என்.கோபாலசாமி அய்யங்கார், மூடி மெழுகாமல் உகந்த பதில் அளித்தார். அது என்ன?
(தொடரும்) 

சித்திரத்துக்கு நன்றி: http://kashmirvoice.org/wp-content/uploads/Gopalaswami-Ayyangar.jpg

[2] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~

காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[2]


இன்னம்பூரான்
01 06 2014

1947ல் காஷ்மீரில் நடந்தது என்ன? லெப்டினண்ட் ஜெனெரல் ஶ்ரீ ராஜராஜஸ்வர் மஹாராஜாதி ராஜா ஶ்ரீ ஸர் ஹரிசிங் இந்தர் மஹீந்தர் பகதூர் ‘ப்ளா ப்ளா’ கலோனிய அரசின் விசுவாசி. எட்டு வயதில் கர்ஜான் பிரபுவின் கெளரவ எடுபிடியாக அமர்ந்து, 20 வயதில் காஷ்மீர் தளபதியாக (நம்மூர் ஸ்டாலின் மாதிரியில்லை; சீருடை, மெடல் எல்லாம் உண்டு!) பதவி உயர்த்தப்பட்டு, சொகுசு வாழ்க்கை அனுபவித்தவர். அவருக்கு காங்க்ரஸ்ஸும் பிடிக்காது; முஸ்லீம் லீக்கும் பிடிக்காது. சர்தார் படேலின் சமஸ்தான அணுகுமுறையும் பிடிக்காது. தன்னை மட்டும் பிடிக்கும். இழுபறி ‘ராஜதந்திரம்’ செய்து வந்தார். அக்டோபர் 1947ல் பாகிஸ்தான் ராணுவ உந்தலுடன் பாகிஸ்தானிய புஷ்டூன் பழங்குடி மக்கள் + காஷ்மீர் மீது படையெடுத்தார்கள். அவர்கள் அன்று லபக்கிய பகுதிகள் இன்றும் அவர்கள் கையில். தொடை நடுங்கிய ஹரி சிங் இந்தியாவிடம் ராணுவ உதவி நாடினார்.‘சரி தான். இந்தியாவுடன் சேரப்போவதாக உடன்படிக்கைப் போட்டால் தானே, அது முடியும் என்றார், மவுண்ட்பேட்டன். வேறு வழியில்லை என்று அக்டோபர் 26, 1947 அன்று தன்னுடைய நாட்டை ((including Jammu, Kashmir, Northern Areas, Ladakh, Trans-Karakoram Tract and Aksai Chin) அதில் கையொப்பமிட்ட ஹரி சிங்குக்கு மறுநாளே அளித்த பதிலில் மவுண்ட்பேட்டன் பிரபு எழுதிய முக்கிய வாசகம்: ‘படையெடுத்தவர்களை விரட்டி அடித்து, சகஜ நிலை திரும்பிய பின், மக்கள் கருத்தறிந்து செயல்படவும். இது எமது அரசின் விருப்பம்’. அதற்கிணங்க இந்திய அரசும் மக்களிடம் கருத்தறியும் தேர்தல் நடத்த தயார் என்றது. மற்ற எல்லா ஸமஸ்தானாதிபதிகளிடம் போடாத வழுக்கு மரம் இங்கே. அதனால் காஷ்மீருக்கு ஒரு திரிசங்கு நரக வாழ்க்கை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பகை. சென்னை செண்ட்றல் நிகழ்வு வரை பயங்கரவாதிகள் தாக்கம். நாம் இந்திய அரசை வசை பாடுவதற்கு இல்லை. சர்தார் படேலின் தீர்க்கதரிசனத்துக்கு முட்டுக்கட்டை போட்ட ஹரிசிங்குக்கு தேசாபிமானமும் இல்லை. சுய அபிமானமும் இல்லை. தீர ஆலோசித்துத் தான் ஒருமித்த கருத்துடன் நேருவும் படேலும் இயங்கினர். அவர்களின் அறிவுரை படி, படி இறங்கினார், ஹரி சிங், திருமகனார் கரன் சிங்கை படியேற்றிவிட்டு. கரன் சிங் தங்கமான மனிதர். ஆன்மீகவாதி, காங்கிரஸ் விசுவாசி. ஆனால், காஷ்மீர் விஷயத்தில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த தொடரில் ஒரு ஆவணத்தை இணைத்து, இந்த உடன்படிக்கை ஆவணம் காணாமல் போன கதையை சொல்லி, இப்போதைக்கு நிறுத்தி, பிறகு தொடருகிறேன். ஷரத்து 370 ஐ இத்தனை விவரம் சொல்லாமல், ‘ஏனோ தானோ’ என்று விவரித்தால். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்றமாதிரி! அதான்...
தொடரும்

சித்திரத்துக்கு நன்றி:http://aim4u.ch/wp-content/uploads/2014/04/imagesGRWM55QQ-150x150.jpg

பல உசாத்துணைகளில் படிக்க வேண்டிய ஒன்று: http://www.hindu.com/op/2005/09/18/stories/2005091800161400.htm