Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: 15: நம்பினால் நம்புங்கள்

அம்மா சொல்படி ராஜூ: (‘நம்பினால் நம்புங்கள்’)) பகுதி 12: 31 10 2009

(ஸீ. ஈ. ஓ)

... உசிலம்பட்டியில் இருக்கும்போது தஞ்சாவூரிலிருந்து லட்டர் வந்தது. என்னவென்றால் என் நாத்தனார் எழுதி இருந்தார். என் மைத்துனர் வரதாச்சாரியார் தஞ்சாவூர் வீட்டை விற்கப்போவதாகவும்,71 பையன் இருவரையும் நான் வைத்துக் கொள்கிறேன் என்றும், நீ கொஞ்சநாள் ஆனதும் உன்னை வரும்படி எழுதுகிறேன் என்றும் லட்டர் என் புருஷனுக்கு வந்தது. 72 ஆனால் நாத்தனார் மூத்த பிள்ளைக்கு கல்யானம் ஆகிவிட்டது. வீடு வாங்கின பிறகு நீ வரலாம். நீ அது வரையில் உன் அண்ணா வீட்டில் இருக்கலாம் என்று வரதாச்சாரியார் எழுதிவிட்டார். பிறகு நாமு நாத்தனார் பிள்ளையை நாமு நாத்தனார் மைத்துனர் வீட்டில் கொண்டு விட்டார். பிறகு என் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு உசிலம்பட்டிக்கு நாத்தனார் வந்து ஒரு வருஷம் போல் இருந்தார். அப்போது என் பிள்ளை நான்காம் வகுப்பு படித்திருந்தான். அப்போது கல்கத்தா நாத்தனார் வந்திருந்தாள். ஆறாவது பிரஸவத்திற்கு அப்பா வீட்டிற்கு போகவேண்டாம் என்று இரண்டு நாத்தனார்களும் சொன்னார்கள். இது விஷயத்தை என் அப்பா வீட்டிற்கு தெரிவிக்கவில்லை. அந்த சமயம் இரண்டாவது யுத்தம் நடந்து கொண்டிருந்தது. எப்படியோ என் அம்மாவிற்கு தெரிந்து விட்டது. உடனே என் அம்மா வந்து அழைத்துப் போனாள். நான் என் ஐந்தாவது பையனை அழைத்துக்கொண்டு மற்ற குழந்தைகளை இரண்டு நாத்தனாரிடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு நான் காரைக்குடி போனேன். போய் பத்து நாள் ஆனதும் பெண் பிறந்தது. ஆறாவது பெண் பிறக்ககூடாது என்று சொல்லுவார்கள். ஆறாப்போகும் நீராய்ப் போனால் போகும் சொன்னார்கள். அதே போல் அந்த பெண் பிறந்து 13 நாளுக்குள் புதுக்கோட்டையிலிருந்து அத்தை வந்து என் அப்பாவிடம் கட்டாயம் உன் பேரனைத்தான் ஸ்ரீகாரம் எடுத்துக் கொள்ளப் போகிறேன் (என்று) சொல்லிவிட்டாள். உடனே என் அப்பா நாள் பார்த்து என்னுடைய மாமாவைப் போய் உசிலம்பட்டியிலிருந்து ரகுவை73 அழைத்து வரும்படி சொல்லி அவர் அழைத்து வந்து விட்டார். ஆனால் நாங்கள் யுத்த சமயத்தில் கிராமத்தில் தான் இருந்தாலும் சாப்பாடு அரிசியே கிடைக்காது. இந்த சமயத்தில் என் புருஷனுக்கும் லட்டர் போட்டு குழந்தை ரகுவை ஸ்ரீகாரம் கொடுக்க நல்லநாள் பார்த்து ஏற்பாடு செய்திருக்கிறேன். அவன் ஜாதகரீதியாக வேறு குடும்பத்தில் போவது நல்லது74 என்று ஜாதகத்தை சரியாகப் பார்த்து செய்கிறோம். நீங்கள் தான் இருந்து கொடுக்கவேண்டும். ருக்மணிக்குக் குழந்தை பிறந்து நாளாகததனால், நீங்கள் இருந்து கொடுப்பது நல்லது. உடனே புறப்பட்டு வரவும். மற்றவை நேரில் பேசிக்கொள்ளலாம் என்று லட்டர் போட்டு அவர் வந்து விட்டார். புதுக்கோட்டைக்குப் போய் குழந்தை பிறந்து கொடுப்பது போல் கொடுக்கும்போது என் அப்பா, அம்மா இவர்களுடன் இருந்து என் புருஷன் ஸ்ரீகாரம் அத்தைக்கு கொடுத்தும் பெயரும் திருமலாச்சாரி என்று நாமகரணம் வைத்தார்கள். எனக்கு விரை தானம் கொண்டு வந்து கொடுத்தார்கள். இது மாதிரி என் அப்பா இரண்டு பெண்கள் குடும்பத்தைப் பொறுப்பாகச் செய்வதால் சிலருக்கு என் அப்பா பேரில் கோபம். தவிற புதுக்கோட்டை அத்தைக்கு ஒரு நாத்தனார் இருந்தாள். அவள் தன் பேரனை ஸ்ரீகாரம் எடுத்துக்கும்படி தொந்தரவு செய்தாள். அத்தை மறுத்து விட்டு என் பிள்ளையை எடுத்துக்கொண்டதில் (என் அப்பா) கோபமாக என் அப்பாவை அடிக்கக் கூட வந்தார்கள். எல்லாவற்றையும் என் அப்பா பொறுத்துக்கொண்டார். அப்போதும் என் தம்பி ஆத்தில் தான் இருந்தான். அப்போது மூன்றாவது ஒரு பெண் பிறந்தது. ஆனால் ஸ்ரீகாரம் கொடுக்கும்போது என் பிள்ளை மூன்றாவது பிள்ளை. அவனுக்கு பத்து வயது. அவனை புதுக்கோட்டை அத்தை தானே வைத்துக் கொண்டு தம்புடு சார் ஸ்கூல்75 என்று ஒன்று இருந்தது. அதில் அவனை சேர்த்து விட்டாள். அவன் நான்காவது படித்தான். இப்படியிருக்கும்போது என் மாமனாருக்கு உங்க பேரனை ஸ்ரீகாரம் கொடுப்பதாக ஏற்பாடு செய்திருக்கிரது. நீங்கள் வந்து நடத்தி குழந்தையை ஆசீர்வாதம் செய்யும்படி என் அப்பா போட்டதற்கு அவர் வரவில்லை. அவருக்கு கோபம்? அதனால் ஸ்ரீகாரம் கொடுப்பதற்கு முன்னாடி என் மாமனார் என் புருஷனுக்கு லட்டர் என்னவென்றால் என் மாமியாருடைய அம்மா இருந்தாள். அவளுக்கு பிள்ளைகள் இருந்தும் அந்த பாட்டி இறக்கும் தறுவாயில் பிள்ளைகள் இல்லை. அதனால் அவருக்கு கருமம் செய்வதென்றால் மூத்தப்பெண்ணுடைய பிள்ளை தான் செய்யவேண்டும். அது விஷயத்திற்கு ஆண்டாளிடமிருந்து லட்டர் வரும். ஆனால் நீ அதைப்போய் செய்யவேண்டாம்? ஏனென்றால் சின்னிக்கும் ஆண்டாளுக்கும்76 தகராறு நடக்கிறது. அதனால் நீ அந்த கருமத்தை செய்யவேண்டாம் என்று எழுதிவிட்டார் என் மாமனார். ஆனால், தன் பேரனை ஸ்ரீகாரம் கொடுப்பதர்கு வரவில்லை. அதற்காக என் புருஷன் கவலைப்படவில்லை. .

71. போன வருடம் அந்த வீட்டை பார்க்கபோனேன். இப்போதைய இஸ்லாமிய வீட்டுக்காரர், வரதாச்சாரியார் அவர்களிடம் தான் கிரயம் செய்து வீட்டை வாங்கியதாக சொன்னார். என்னை வெகுவாக உபசரித்தார்.

72. அத்தைக்கு வந்த கடிதத்தின் நகல் என்று நினைக்கிறேன்.

73. என் தம்பி.; இப்போது அவன் இல்லை.

74. ‘நம்பினால் நம்புங்கள்’: கிரகங்களை ஏமாற்றுவது கடினமோ? முதல் ஐந்து குழந்தைகள் போய்விடுமோ என்று எங்கள் குடும்பம் தவித்த சோகக்கதையை சொல்லி மாளாது. அப்பா நிலைகுலைந்து போனார். அம்மா ஸ்த்திப்ரதிங்க்ஞையாக இருந்தாள், வாசகர்கள் விரும்பினால், விவரம் வரும். ஒளித்து மறைக்க ஒன்றுமில்லை. நீண்ட கதை.

75. மூன்று தலைமுறைக்கு ஆசிரியர் என்றால், குலபதி என்ற பட்டம். இவரும், புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் அவர்களும் நடத்திய நரஸிம்ஹ ஜயந்தி உலப் பிரிசித்தம். பாலையா ஸார் மற்றொரு குலபதி.. இவர்களின் மாணவர்கள் உலகம் எங்கும் உள்ளனர்.

76. என் பாட்டியின் சஹோதரிகள்.

(‘நம்பினால் நம்புங்கள்’)

No comments:

Post a Comment