Friday, May 19, 2017

தமிழ் சமுதாயம் 2067 [1]





தமிழ் சமுதாயம் 2067 [1]


இன்னம்பூரான்
14 05 2017
பிரசுரம் : http://www.vallamai.com/?p=76999

தமிழகம் என்பது தரணி முழுதும் பரவியுள்ள தமிழர் உலகம். தமிழ் நாடு என்பது திருவேங்கட மலையை வட எல்லையாகவும், மூன்று கடல்களை மற்ற மூன்று எல்லைகளாகவும் கொண்ட பிராந்தியம். தமிழ் தமிழர்களின் தாய்மொழி. எனவே, தமிழ் சமுதாயத்தை உலகளாவிய மக்கள் கூட்டமாகவும் , தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் மட்டுமே என்று இரு கோணங்களில் காணமுடியும். டாக்டர் சுபாஷிணி தமிழர் என்பதில் ஐயமில்லை. அவர் தமிழ் நாட்டில் பிறக்கவும் இல்லை; அங்கு வசிக்கவும் இல்லை. தமிழின் மேலாண்மையை உணர்ந்த மதுரையில் வாழும் டாக்டர் பாண்டியராஜா, தமிழ் மொழிக்கே தன்னை அர்ப்பணித்த தமிழர் என்பதில் ஐயமில்லை. 
சூழ்நிலை பொருட்டு தமிழே அறியாத தமிழர்களும் உண்டு. பல இடங்களில், அவர்களின் தமிழார்வத்தை காண்கிறேன். மற்ற நாடுகளிலிருந்து வந்து தமிழராக மாறி விட்டவர்களும் உண்டு.

நம்மிடம் மொழி பற்று இருப்பது நியாயம் தான். மொழி வெறி தான் கூடாது. தமிழர் என்ற இனப்பற்று இல்லாவிடின், நாம் தாய்மொழியை இழந்துவிடுவோம். அதுவே இனவெறியாக மாறினால், நம்மையும் கூட இழந்து விடுகிறோம். சுருங்கச்சொல்லின், பற்றுக்கோல் வழி நடத்தும். வெறியாட்டம்  வழியை மறிக்கும். இந்த தொடரின் மைய கருத்து இது தான். 

தமிழகம் தமிழரை பற்றியும், தமிழ்நாட்டை பற்றியும் அன்றாடம் நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளவேண்டும், விழிப்புணர்ச்சியுடன் நுட்பங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டும். அவ்வப்பொழுது தமிழ் நாட்டுக்கு பல வகைகளில் உதவவேண்டும். தமிழ் நாட்டுமக்களுக்கு தற்காலம் நன்றாக அமையவில்லை. ஆட்சியில் பல இன்னல்கள். செங்கோலாட்சியை தவறவிடுவதில், மக்கள் மிகுந்த ஈடுபாடுடன் செயல் பட்டுள்ளனர், ஐம்பது வருடங்களாக, படிப்படியாக சல்லிக்காசிலிருந்து பல கோடி ரூபாய் வரை. நாட்டிலும், உலகிலும் நமக்கு நல்ல பெயர் இல்லை. இங்கே என்ன என்ன தடுமாற்றங்களும், குழப்பங்களும் நடக்குமோ என்று மற்றோர் கவனித்து வருகிறார்கள். எல்லா துறைகளிலும் தலை குனிவு. முதற்கண்ணாக தமிழ் மொழியை பேணுவதில் செயல்படாத ஆணைகளும், தீர்மானங்களும். அதற்கு காரணம் உதட்டசைவை காரியத்தில் காட்டாத நடப்பு. அத்தகைய போலி வாழ்க்கையை எங்கும் காண்கிறோம். போலி மருத்துவர்களை சமுதாயம் காப்பாற்றுகிறது. கலப்படம் செய்பவர்கள் - பாலுடன் நீர், நீருடன் மாசு, மாசு கலந்த காற்று. ஐம்பூதங்களையும் கலங்க அடிக்கும் மனித பிசாசு, நமது சமுதாயத்தில், நம் கண் முன் அட்டூழியங்கள் செய்தவாறு, பீடு நடை போடுகிறான். கல்வித்துறையில் காலூன்றிய பணமுதலைகள், ‘படிப்பு தான் முக்கியம்’ என்று வாழ்ந்த மக்களை, பல ஊழல்களில் இழுத்து வைத்து, கல்வி என்ற சொல்லையே அவமதித்து விட்டனர். இத்தகைய சிலந்தி பின்னலில் தன்னை மாட்டிக்கொண்ட தமிழ் சமுதாயம் ஐம்பது வருடங்களுக்கு பிறகு எப்படி இருக்கும் என்ற வினா எழுவது இயல்பே. இப்படியே எழுதி கொண்டு போனால், அது எத்தனை தேவையான வினா என்பதை தெரிந்தும், வாசகர்களில் சிலர்  ஓடி விடலாம் என்ற அச்சத்தில் ஒரு நற்செய்தியை பற்றி குறுக்கு சால் ஓட்டிவிட்டு, அடுத்த தொடரில், பின்னூட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தொடருவோமாக.

நற்செய்தி: 
ஶ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தின் அருகில் உள்ள கோபால ஐயங்கார் மெஸ் மிகவும் பிரபலம். திரு.கோபாலன் கல்லாபெட்டி மேஜை மீது மிகவும் புனிதமாக கருதி வைத்திருப்பது இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகள் (இன்று கலைக்டர் மார்க்கட்டில் அதற்கு மவுசு அதிகம்!); அத்துடன் ஜனாப் பாஹவுதீந் கபியா பேகம் நிழற்படங்கள். ஐம்பது வருடங்கள் முன்னால், மதுரை காஜிமார் தெரு இஸ்லாமியருக்கு இவர்கள் குடும்பம் நெருக்கம், இரு வீட்டு குழந்தைகளும் இரு வீட்டிலும் வளர்ந்தனர். அத்தகைய பாசம், மதவெறி இல்லாத, மதப்பற்றை விடாமல் போற்றி வந்த மதநல்லிணக்கம் திரும்ப வரவேண்டும். முழுவிவரம் 16 05 2017 தேதியிட்ட தி இந்து இதழில் கிடைக்கும்.

என் சிறுவயதில் அண்டை வீடு தலைமை ஆசிரியர் யாகூப் கான். பொதுக்கிணறு. அவருடைய மகள் நம் வீட்டு சமைலறையிலிருந்து சுவாதீனமாக வாப்பாவிற்கு ரசம் எடுத்துச்செல்வாள். இது நடந்தது அறுபது வருடங்கள் முன்னால். அண்மையில் பாண்டிச்சேரியில் தமிழாய்வு செய்து வரும் முனைவர் விஜயவேணுகோபால் என்னிடம் எங்கள் தலைமை ஆசிரியர் யாகூப் கான் என்று பெருமிதமாக கூறிய போது, நான் அவருக்கு சீனியர் என்றறிந்து, இருவரும் எங்கள் ஆசானை போற்றினோம்.

மத நல்லிணக்கம் எல்லா நல்லிணக்கங்களுக்கும் அடிதளம். தமிழ் சமுதாயத்தில் தற்காலம் சகிப்புத்தன்மை குறைவு. காழ்ப்புணர்ச்சி வெள்ளம். சாதிப்பிரிவினை அரசியலை ஆண்டு வருகிறது. சாதி பேதம் எங்கும் தென்படுகிறது. 2067ல் நாம் எப்படி இருப்போம்? முன்னோட்டம் என்னவாக இருக்கும்? பின்னடைவு என்னவாக இருக்கும்?
(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி:







Tuesday, May 9, 2017

கோப்புக்கூட்டல் [2]




கோப்புக்கூட்டல் [2]


பிரசுரம்: http://www.vallamai.com/?p=76773
ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

இன்றைய கோப்பு: [2]

பொது நலம் மக்களாட்சியின் இலக்கு. மக்களாட்சியை நடத்தும் நிர்வாகத்தில் சட்டசபை, நிர்வாகம், நீதி மன்றம் ஆகியவை இடம் பெறுகின்றன. திராவிட ஆட்சிகள் தலையெடுக்கும் முன் கலோனிய அரசிலும், காங்கிரஸ் அரசிலும் லஞ்சம் இருக்கத்தான் இருந்தது. ஆனால்,அரை நூற்றாண்டுக்கு முன் மாமூல், கிம்பளம் ஆகியவை கூட சொற்பமாகவே இருந்தன.மக்கள் ஆதரவும், அரசு போஷாக்கும் கிடையாது. கடந்த ஐம்பது வருடங்களில் மக்களும் முறைகேடுகள் செய்வதில், மாநில அரசின் ஆசியுடன் பழக்க வழக்கமாக ஈடுபடத்தொடங்கினர். திருமங்கலம் சூத்திரம் என்று அறியப்பட்ட லஞ்ச லாவண்யம், மக்களை வளைத்துப்போட்டு, தமிழினத்தையே கயவர் கூட்டமாக்கியது, ஆர்.கே. நகர் அவலம் யாவரும் அறிந்ததே. சர்க்காரியா அறிக்கை நம்மை தலை குனியவைத்து பல்லாண்டுகள் ஆயின.

வீடு, மனை விவகாரங்கள்.வில்லங்கங்களில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில், கோயில் சொத்தை அபகரிப்பதில் நாம் நிகரற்றவர் என்று மார் தட்டிக்கொள்கிறோம்!. 

அதருமமிகு சென்னையில் பெரும்பாலான கட்டிடங்கள் விதிகளை மீறியவை. இது மக்களின் கைங்கர்யம்.

செப்டம்பர் 9,2016 லிருந்து மார்ச் 28, 2017 வரை அங்கீகாரம் பெறாத மனைகளும், விவசாய நிலங்களும், உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் 9,760 பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2581 வேலூரிலும், 2434 மதுரையிலும், 1412 சென்னையிலும். பிராது என்னவோ 4 லக்ஷம் பதிவுகள் கோர்ட்டாரை மதிக்காமல் செய்யப்பட்டுள்ளன என்று சொல்கிறது.

நாம் எப்போது நம்மை காப்பாற்றிக்கொள்வோம்?

இன்னம்பூரான்


சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








Sunday, May 7, 2017

The School & The Seagull

Dear Friends,
You may like to read the 12th article and others of this Link.
http://www.confluence.mobi/blog/confluence-may-2017-issue/
Innamburan

Thursday, April 13, 2017

நித்யாபரணங்காதை


நித்யாபரணங்காதை
சிந்தை குளிர வரமளிப்பாள் சித்ரா நித்யா!


இன்னம்பூரான்
ஹேவிளம்பி புத்தாண்டு தினம்
14 04 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=76330#respond

உங்களுக்கெல்லாம் தெரியாமா, தெரியாதா/? என்று எனக்குத் தெரியாது. கோட்டையூரில், நித்யா, நித்யான்னு ஒரு பொண்ணு இருக்கா. நித்தம் நித்தம் சமத்தா இருப்பதால் தான் அந்த பெயர் வைத்தோம் என்று அப்பங்காரன் சொன்னாங்க. அம்மாக்காரி அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவ நிமிஷத்துக்கு, நிமிஷம் சமத்து என்றாள்; ஒரு புன்னகை உதிர்த்தாள். எனக்கு புரிஞ்சு போச்சு, ரண்டு பேரும் பொய் சொல்றாங்கன்னு. அப்புச்சிக்கும் ஆச்சிக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு; தாத்தாவுக்கு அவளொரு ப்ளாட்டினம் குஞ்சு. பின்ன என்னங்க? உள்ளதை உள்ளப்படி சொல்லுவோம். 

ஆதவன் உதிப்பதற்கு முன்னாலே, காஃபி எடுத்து வருவாள்; கூடவே காஃபி டிக்காக்ஷனையும் எடுத்து வந்து, அதிலேலிருந்து சிக்கனமாக இரண்டு சொட்டுப்போட்டு, நுறைவரவரைக்கும் ஆற்றிப்படைத்து, இது உங்க ‘இன்னம்பூரான் காஃபி என்று புன்னகைத்துக்கொடுப்பாள். நாம டவராவை கீழே வைக்கறத்துக்குள்ளே, காணாமல் போயிருப்பா. ‘என்னது இது? என்று கேக்கறதுக்கு முன்னாலே, அந்த குட்டி ஓடிப்போயிருப்பாள். சிரிப்பு மட்டும் தான் கேக்குமையா, சிவனாரே. அப்றம் அந்தி மங்கினப்பிறகு தான் நித்யா தரிசனம். நீ ஏன் மீட்டிங்குக்கு வரலை? அறுசுவை உண்டிக்கு வரல்லை? என்று கேட்டால், ஆஃபீஸ்லெ ஏழு மீட்டிங்க், ஐயா. ஆக மொத்தம் ஒம்பது கிளிப்பிள்ளைகள் மாதிரி, அந்தகாலத்து ஹெச்.எம்.வி.கிராமஃபோன் மாதிரி, அத்தையும் இத்தையும் திருப்பி,திருப்பி சொல்லுதாக. நானும் நோட்ஸ் எடுத்தேன் என்று சால்ஜாப்பு கட்றா. என்னத்தை சொல்ல, போங்கள்! மின் தமிழ் வாசாலகர்களை நினைத்துக்கொண்டேன்.

மின் தமிழிலே, ‘எக்ஸ்ட்ரா’ வாத்தியார் ‘வினை தீர்க்கிறேன்’ பேர்வழியாகிய சொனா வீனா அவர்கள். அவுக வீட்லே திண்டியா சாப்ட்டு விட்டு, இப்டி பேசினால் தப்பு என்ன? வினை தீர்த்தான் தம்பதி வினை தீர்ப்பதுமில்லாமல், மூட்டை கட்டி மச்சுலெ போட்றுவாக. 

 ‘என்ன குட்டி என்று சொல்கிறீர்கள்? கல்கியும், பிரியமான தாத்தா பாட்டி தான் அப்படி கூப்புடுவாக. அதெல்லாம் மின் தமிழுக்கு ஒவ்வாமை’ என்று சவுண்டு கொடுத்தால், நாலு கிலுகிலுப்பை சத்தம் வரும். ‘ஐயா! குட்டி = பொடியன் + . அடுத்தபடி நந்திகேஸ்வரர் சொல்லுவார், ‘அவ எங்க மின்னாள் கொடுத்த வரம்.’. பெத்தெடுத்த நாகேஸ்வரி, ‘எங்க அப்பா வச்ச பேருங்க.’ என்று சொல்லுவதற்கு முன், மின் தமிழ் சேசாத்திரி போல பேச்சை மாத்திடுவாக. அவருக்கு, இதான் சாக்கு என்று ஆறுதல் அளிக்கிறோம். நம்ம மின் தமிழிலே, எல்லா மொழிக்கும் தடாலடியா ‘வாதம், பேதம்,  வாதபேதம்,மீதம் எல்லாம் பீடு நடை போடும் போதும்,  வைஷ்ணவ சான்றோன் ந.சுப்பு ரெட்டியார் அவர்கள், வேறொரு இடம், பொருள், ஏவல் பொருட்டு கூறியதெல்லாம் வரும். ஆனா ஒண்ணு. சுந்தர் பிச்சை கிட்டேயிருந்து ஒரு தனி மடல் வந்ததுங்க. ‘இன்னிக்கு நாங்க போட்ட படம் பாத்தீங்களா?’ என்று கேட்டார். நான் மையமாக, ‘நல்லாயிருந்தது, சுந்தர்.’ என்றேன். உன்னை உய்விக்கும் பொருட்டு ‘பச்சை’, ‘நீலம்’ கலர்கள நீக்கிட்டோம் என்றார். அவருக்கு நன்றி கூறியது சன்னமாத்தான் கேட்டது. ஏன்னா? ஆயிரமாயிரம் குல்லாக்கள் களையப்பட்டு எறிந்து விட்டது, ஒரு குல்லா இமயமாக எழுந்து நின்றது. எழுப்பிய சத்தம் அப்டிங்க. டில்லிலெ ‘வாய்வாழி எலிகளையெல்லாம்’ ஓட்ற சத்தம், வானை பிளந்தது. பாத்தீங்களா?  அவர் ஆரை சொல்றீக? என்று கேட்டார். ‘எல்லாம் உங்க பிராந்தியம் தான் தம்பி. கணினி பெண்மணிகள் எல்லாம் அங்கிட்டுதானே என்ற நான், கூகில் மேப் காட்டவில்லை. மட்டுறுத்திடுவாங்களோ என்ற பீதி. ஒண்ணு சொல்ல வந்தா எழுத்து, அதுவாகவே, எங்கெங்கும் ஓடுகிறது! இது நிற்க. 

நம்ம  நித்யாவுக்கு விமரிசையாக திருமணம் நடந்தது. ‘சந்தோஷமா’ ஒரு பொடியன். அடுத்தது பொண்ணா பொறந்திருக்கணும். புவனேஸ்வரி என்று நாமம் சூடியிருக்கலாம். பொடியனா போச்சா. சர்வேஸ்வரன் ஆனான். நல்ல பசங்க. மாப்பிள்ளை விவரமான ஆளு. இப்பவே பசங்களுக்கு பேலியோ டயட், செல்வபெருந்தகையே. குமுதம் வாங்கி படிப்பாங்கா. இளந்தாரியாக ஆனபிறகு பசங்க படத்தையெல்லாம் பாக்கட்டும். அது வரை வம்பை விலைக்கு வாங்கவேண்டாம் என்று காசிஶ்ரீ அவர்கள் கோந்து வாங்கி அதையெல்லாம் ஒட்டி வருகிறார் (நானும், அவரும் பாத்தப்பறம் தான்). 

அதிசயமாக ஒன்று நடந்தது. ‘அறிவியலகு’ க்கு அப்பாற்பட்டது.  ஒரு சிசு ஜனனம், அவங்க வீட்டில். சர்வேஸ்வரினின் அருள் என்று எல்லாரும் வியந்து சந்தோஷப்பட்டார்கள். கின்னஸ் ரிக்கார்ட்லெ போட்லாங்க. பிறக்கச்சயே அவனுக்கு 83 வயசு. ஆனா, எஜமானியம்மா எங்க அப்பா வந்த மாதிரி தான் இருக்கு என்கிறார்கள்.

வழக்கம் போல், இறுதி உரை, இன்னம்பூரானது. என் வாழ்க்கையிலேயே மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொடுத்த நிகழ்வு எது என்று சேர்மன் மாணிக்கவாசகர் பள்ளி மாணவர்கள் கேட்டால், இதை தான் சொல்லுவேன்.

ஒரு குறிப்பு: ‘வரவு பத்தணா! செலவு எட்டணா!’

-#-

சித்திரத்துக்கு நன்றி:


வணக்கம் ஐயா.
பெருமாளே 83 வயதுப் பிள்ளையாய் எங்கள் வீட்டில் பிறந்த பேறு யாருங்கு எங்கே கிடைக்கும் !
நித்தமும் எழுந்தவுடன் வந்து 'எப்படி என் மேக்கப்' என்று கேட்டபது 3 வயதுப் பேரனும் 83 வயதுப் பெருமாளும்.
குட்டி என்றால் தங்கள் பேத்தி என்பாக்கியம் என்பாள்.
பொடியன் என்றால் என் பேரன் சொன்னவரைப் பொடிப்பொடி ஆக்கிவிடுவான்.
நாங்கள் பெற்ற வரம் இது.  வரத்தை எந்த அறிவியல் அலகு கொண்டு அளப்பது ? என்பதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.
ஒரு குறிப்பு: உண்டியல் பணத்தை ஆடிட்டர்  கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது தெரிந்திருத்தால் ஒருவர் எத்தனை உண்டியல்கள் வைத்திருப்பார்கள் என்பது தெரிந்திருக்கும்.

























Monday, April 3, 2017

நாளொரு பக்கம்: 6: 2017



நாளொரு பக்கம்: 6: 2017

-இன்னம்பூரான்
பிரசுரம்: http://www.vallamai.com/?p=76071&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+Vallamai+%28Vallamai%29


innam

नभसो भूषणं चन्द्र:
नारीणां भूषणं पति: |
पृथिव्या भूषणं राजा
विद्या सर्वस्य भूषणं ||

நப⁴ஸோ பூ⁴ஷணம்ʼ சந்த்³ர:
நாரீணாம்ʼ பூ⁴ஷணம்ʼ பதி: |
ப்ருʼதி²வ்யா பூ⁴ஷணம்ʼ ராஜா
வித்³யா ஸர்வஸ்ய பூ⁴ஷணம்ʼ ||
சொல்லுக்கு அலங்காரம்/அணி சேர்ப்பதைப் பற்றி தமிழிலும், சம்ஸ்க்ருதத்திலும்  தண்டியலங்காரம் என்ற இலக்கணநூல் உளது. உவமைதான் எல்லா அலங்காரங்களுக்கும் மூலாதாரம் என்க.  மேற்படி கவிதையில் நிலாவொளி விண்ணுக்கு அழகு அளிக்கிறது என்றும், கணவன் பெண்களுக்கு அழகு தருபவன் என்றும், நாட்டுக்கு அரசன்தான் பூஷணம் (அலங்காரம்) என்றும், எல்லோருக்கும் கல்வி அழகு என்றும் கூறப்பட்டது. அதனால் தான் கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.
***
சித்திரத்துக்கு நன்றி:







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, April 1, 2017

நாளொரு பக்கம்: 4: 2017



நாளொரு பக்கம்: 4: 2017

-இன்னம்பூரான்மார்ச் 29, 2017
பிரசுரம்:http://www.vallamai.com/?p=75960

innam4
நான்மணிக்கடிகை: 66
திரியழல் காணில் தொழுப விறகின்
எரியழல் காணின் இகழ்ப – ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டும் உலகு.
ஆண்டவன் சன்னதியில் சுடர் விட்டு எரியும் திரியுடன் பிரகாசிக்கும் விளக்கைக் கண்டவுடன் கை கூப்பித் தொழுவார்கள். திருமடைப்பள்ளியில் அடுப்பில் சமைக்க உதவும் விறகு கொழுந்து விட்டு எரிந்தாலும் அதை மதியார், மக்கள். அதே மாதிரி, ஒரே வீட்டில் மூத்தது மோழையாகவோ, கோழையாகவோ, அறிவிலியாகவோ இருந்து விட்டால், அதே வீட்டில் இளைய மகன் கல்விமானாகவும், தலைவனுக்குரிய பண்புள்ளவனாகவும் இருந்து விட்டால், அவனுக்குத் தான் மதிப்பு.
***
சித்திரத்துக்கு நன்றி:
http://eluthu.com/images/poemimages/f24/zjsoe_247061.jpg







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, March 29, 2017

நாளொரு பக்கம் 2 2017

நாளொரு பக்கம் 2 2017
-இன்னம்பூரான்
innam

மார்ச் 27, 2017
'History is a novel whose author is the people.' – Alfred de Vigny, poet, playwright, and novelist (27 Mar 1797-1863)
கவிஞர் Alfred de Vigny அவர்களின் 220வது ஜன்மதினம் இன்று. அவரை முன்வைத்து எழுத நேர்ந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன்.
ராஜாராணி கதைகளில் கைசரக்கு அதிகம் இருக்கும்; ஏனெனில் புகழ்ச்சி, தற்புகழ்ச்சி, முகஸ்துதி, மர்மங்கள் ஒளிந்து விளையாடுவது எல்லாம் சிம்மாசனத்தில் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பதுமைகள். வரலாற்றின் பக்கங்களை முன்னும் பின்னுமாக பலமுறைப் புரட்டினாலும், பாமரகீர்த்தி காணக்கிடைப்பதில்லை. சரித்திரத்தில் வளைய வரும் மாந்தர்களில், விவசாயி, சக்கிலியன், தீவட்டிதூக்கி, தேசாந்திரி, தச்சன், கொல்லன், கடைக்காரன், தொழிலாளி போன்றோர் இருந்ததில்லை என்று தோற்றம். அப்படியிருந்தால், சக்கரவர்த்தித் திருமகன்கள் யாரை ஆண்டனராம்? சிலருக்குத் தவறு கண்டுபிடிக்காவிட்டால் உறக்கம் வராது. ஏன், சங்கத்தமிழில் இரவலர்களும், புரவலர்களும் வருகிறார்களே என்பார்கள். ஆடிப்பாடி மெய்கீர்த்தி இசைத்து ஆனையும், தேரும் ஆக, ரத்னமாலையும், முத்தங்கியும் பரிசிலாகப் பெறும் இசைவாணர்கள் மட்டும் தரணி வாழும் மாந்தர்கள் அல்ல. அதனால் தான், நாம் எல்லாரும் தற்காலத்து பாமரகீர்த்திகளை இயற்ற வேண்டும்.  மூன்று உதாரணங்கள் தருகிறேன்.
மு.ராகவ ஐயங்கார் என்ற தமிழ் அறிஞர் தமிழாய்வு என்ற துறைக்கு வித்திட்டவர். அவர் வாழ்ந்த காலம் (1878-1960) அண்மையில்தான். அவருடைய தமிழ்த்தொண்டு வியக்கும் அளவு பெரிது. தற்காலம் இணைய தளம் மூலம் அத்தகைய சான்றோர்களின் கீர்த்தி பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும் என்றாலும், ஷேக்ஸ்பியரை கரதலை பாடம் செய்தவர்களில், இவரை அறிந்து கொண்டவர் சொற்பம். இருவரையும் அறியாதவர்கள், பலர்.
நடிகர் ரஜனிகாந்தையும், நடிகர் ஜோதிகாவையும் பற்றி யாவும் அறிந்த பலருக்கு சத்யஜித் ராய், பிருத்விராஜ் கபூர் யார் என்று தெரியாது. உங்களுக்கு தெரியுமானால், நல்லது. உங்களை உயர்திரு பாமரர் என்பேன்.
மகவுகளின் படிப்புதான் முக்கியம் என்று ‘தியாகபூமி’ பெற்றோர்களை நான் அறிவேன். அவர்களின் பாமரகீர்த்தி மற்றவர்களுக்கு படிப்பினை அல்லவோ?
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, March 28, 2017

நாளொரு பக்கம்: 3: 2017

நாளொரு பக்கம்: 3: 2017

இன்னம்பூரான்
மார்ச் 28, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=75884

பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதை கதை சொல்லி இலக்கியங்களில் முதன்மை வகிக்கிறது என்று அந்த காலத்து பெரிசுகள் சொல்லிக்கொள்வார்கள். அந்த விக்ரமாதித்யனின் அண்ணனாக கருதப்படும் ராஜரிஷி பர்த்ருஹரி உஜ்ஜெய்ன் சமஸ்தானத்தின் அரசர், அறிவாளிகளின் தலைவர், துறவு பூண்ட மாமனிதர். அவருடைய நீதிசதகம், வைராக்யசதகம், சிருங்கார சதகம் ஆகியவை புகழ் வாய்ந்தவை. ஒரு மாதிரி, இங்கே.

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसमप्यस्थिकम्
श्वा लब्ध्वा पारितोषमेति न तु तत्तस्य क्षुधः शान्तये ।
सिंहो जम्बुकमङ्कमागतमपि त्यक्त्वा निहन्ति द्विपम्
सर्वः कृच्छ्रगतोऽपि वाञ्छति जनः सत्त्वानुरूपं फलम् ॥
- नीतिशतकम्


தனக்கு கிடைத்த எலும்புத்துண்டில் கொஞ்சம் கூட மாமிசபசை இல்லாவிடினும், கிடைத்ததை உண்டு, பசி தணியாவிடினும், மனநிறைவு கொள்ளும்,நாய். கண்ணில் பட்ட நரியை கண்டும் காணாமல், யானையை வேட்டையாடும் சிங்கம். தன்னால் முடிந்தவரை நன்றாகவே இயங்கி பலனை அடைய எல்லாரும் முயல்வார்கள்.

எட்டாதாயினும் கிட்டாது என்றோ/ சீ! சீ! இந்த பழம் புளிக்கும் என்றோ/ போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றோ பெரும்பாலோர் இருப்பதில்லை. 

#
சித்திரத்துக்கு நன்றி:
https://s-media-cache-ak0.pinimg.com/736x/f3/2a/c8/f32ac84414a4944737b611976086fb9d.jpg

Monday, March 27, 2017

நாளொரு பக்கம்: 1: 2017

நாளொரு பக்கம்: 1: 2017 

Monday, March 27, 2017, 5:26

இன்னம்பூரான்
மார்ச் 26, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=75829

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
ai
ஓதாம லொருநாளும் இருக்க *வேண்டாம் 
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் 
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் 
போகாத இடந்தனிலே போக வேண்டாம் 
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் 
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் 
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே [1]
அன்றாடம் படித்து வருவது நலம் பயக்கும்.
‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்று உதட்டளவில் நாட்தோறும் ஓதும் பலர், இதன் மூலம்   விளம்பி நாகனார் இயற்றிய  நான்மணிக்கடிகையிலிருந்து என்று அறிந்து இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.
பொல்லாங்கு என்ற சொல் தீய சொற்கலை விட கொடியவை. தவிர்ப்பது நலம். அன்னையை மறக்கவே கூடாது. நமது வாழ்வின் ஆதார ஸ்ருதி அவளல்லவோ! துஷ்டனை கண்டால் தூரவிலகு என்கிறார், உலகநாதர். அது எளிதல்ல. ஆனாலும் அறிவுரை அபாரமானது தான். செல்லத்தகாத இடங்களுக்கு போகாதே என்கிறார். செல்லத்தகாத இடங்கள் இல்லை என்பது என்று எனகு தோன்றுகிறது. விலைமாதுகள் வசிக்கும் இடங்கள், குஷ்டரோகி வசிக்கம் இடங்கள் கூட செல்லத்தகாதவை என்பார்கள். ஆனல், அவர்களுக்கு உதவ அங்கு போகத்தானே வேண்டும். கவனித்து செயல்படு என்பது உலகநாதரின் அறிவுரை. ‘புறம்’ பேசுவதை பரவலாகக் காண்கிறோம். ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. வாழ்நெறியின் அருமையான அறிவுரைகளை தெளிவாக உரைத்த நூலாசிரியர் வள்ளி மணாளனை துதித்து, தன் நான்மணிக்கடிகையை துவக்குகிறார். யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய பளிங்குநீர் தமிழ்.
-#-

சித்திரத்துக்கு நன்றி:

Thursday, March 16, 2017

படவாகினி

படவாகினி

இன்னம்பூரான்
15 03 2017
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=75554

உங்களுக்கு ‘சிவமயம்’ வில்வநாத குருக்களை தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த காலத்தில், துக்ளக்கின் ‘எங்கே பிராமணன்?’ என்ற சர்ச்சைக்குரிய நூல் வெளியாகி விடவில்லை என்றாலும், குருக்கள் மாமாவை பார்த்தால் போதும்; எல்லாம் விளங்கிவிடும். பஞ்சகச்சம் பரமானந்தம் என்று, பட்டை வீபூதியை பரம ஒளஷதமாக அணிந்து, தங்கப்பூண் போட்ட ருத்ராக்ஷமாலை மார்பில் துலங்க, திண்ணையில் உட்கார்ந்து விட்டாரென்றால், ஊர் முழுதும் ‘டுங்க்ருங்சரணே’ பீதி பரவும். அவரோ சுகஜீவி. 

பத்தமடை, சேர்மாதேவி, வீரவநல்லூர் மாதிரியான போன்ற தலங்களில், ஆலயங்கள், வழிபாடுகள், குருக்கள் வாழ்நெறி ஆகியவை நிறைந்திருக்கும். வானமாமலை, ஶ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி ஆகிய வைணவ தலங்களுக்கு சென்றால், மாட்டு வண்டிக்காரன் கூட நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிக்கொண்டே வண்டி ஓட்டுவான். மாடும் தலையாட்டிக்கொண்டே செல்லும். தார்க்கோல் போடவேண்டிய அவசியமில்லை.  அருகே உள்ள நாசரேத் என்ற ஊரில் ஏசு கிருஸ்து பிரார்த்தனையும், ஆங்காங்கே அமைந்துள்ள மசூதிகளின் அதிகாலை உரத்த குரல் அரபி தொழுகையும் தடை படாது. 1647ல் கட்டப்பட்ட பொட்டல் புதூர் தர்காவில் இந்துக்களின் சாயலை ஒத்த வழிபாடு. கந்தூரி திருவிழாவில் எல்லா மதத்தினரும் கலந்து கொள்வார்கள். இனபேதம், மதபேதம், பேதபேதம் எல்லாம் உண்டு; ஆனால், இல்லை. அப்படி ஒருவிதமான இணக்கமான வாழ்க்கைப்படகு. தற்காலம் போல் வெறித்தனம் கிடையாது. நாத்திகம் பேசிக்கொண்டே நேர்த்திக்கடன் செய்வது கிடையாது. வரட்டு சம்பிரதாயம் கிடையாது. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறேன். இது என்ன திருநெல்வேலி ஜில்லா சொக்கிப்பீடியாவா என்ன? இது நிற்க.

குருக்களோட அப்பாவோட கீர்த்தி தான் வம்சத்துக்கே கவசமாக இருந்தது. சிவாச்சாரியார் ‘மங்களம் மாமா’ ( அவர் ரொம்பப் பெரியவர்; பெயர் தெரியாது.) அற்புதமா, மனப்பூர்வமாக அர்ச்சனை செய்வார். சாயரக்ஷை அவருடைய பிரவசனத்துக்கு, வண்டிக்கட்டிண்டு கல்லிடைக்குறிச்சி பெரிய பண்ணை வருவார். ஆனால், ஏகபுத்திரன் ஆன ‘வில்லுவை’ சம்ரக்ஷணை செய்ய அவருக்கு நேரம் இல்லை. ஆகவே ‘வில்லு’ எனப்படும் வில்வநாத குருக்கள் ஒரு நிரக்ஷரகுக்ஷி. ஆனால் அதிகம் படித்த மேதாவி என்று மிதப்பு! காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி வைங்கோ என்று ஊருக்கு உபதேசி வைத்தியோட அட்வைஸ். சங்கீத மேளகர்த்தா ஸ்ரீ சேர்மாதேவி சுப்ரமண்ய சாஸ்திரிகள் வம்சத்தில் வந்த குந்தளாம்பிகை தான் ‘வில்லுக்கு’ வந்து வாய்த்தாள். வாய்துடுக்கு.  மாமி போனபிறகு தனித்து விடப்பட்ட முதியவர் மங்களம் மாமாவை உதாசீனம் பண்ணி, அவரை ‘உண்டு இல்லை’ என்று செய்து விட்டாள். அவரும், ஏற்கனவே சாந்தஸ்வரூபி, விட்டேற்றியாக, கோவிலே கதி என்று இருந்து விட்டார். 

சுகஜீவி ‘வில்லும்’ ‘பளார்! பளார்’ குந்தளாவும் நடத்திய இல்லறத்தில் புழு, பூச்சி ஒன்றும் வரவில்லையே என்று இருவரும் அங்கலாய்த்தாலும், காலாகாலத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தன. காலம் நிற்கிறதா என்ன? வயதாக ஆக, ‘வில்லுக்கு’ பிடிவாதம் ஏறியது. குந்தளாம்பிகையின் கொம்மாளம் எல்லை மீறிப்போயிற்று. வேலை வெட்டி இல்லாமல் இருந்த ‘ஜபர்தஸ்து’ மணிக்கு (தலைமகன்) அத்தை பெண் மீனாக்ஷியை கல்யாணம் செய்து வைத்தது, ‘வில்லுக்கு’ அவ்வளவாக சம்மதம் இல்லை. ஆனால் குடும்பநிலை அப்படி. இரண்டு பக்கமும் நல்ல பணம். அது பிரியக்கூடாது என்பது குந்தளாவின் அரசியல் சாஸனம். ஆச்சுப்போச்சு கல்யாணம் என்றாலும் பத்து வருஷம் ஆனபிறகும் குஞ்சும் கிடையாது; குளவானும் கிடையாது; ஹோப்பும் கிடையாது. பழி வாங்கிறதற்கு அகப்பட்டுக்கொண்டாள், இரண்டாவது மாட்டுப்பெண், சுந்தரி. நல்ல இடம். இரண்டாவது பிள்ளை மாதவன் தான் வீட்டுக்குத் தூண். நல்ல உத்யோகம். கைநிறைய சம்பளம். கொடுக்கிற மனசு. 
சுந்தரியும் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள் தான். அப்பா சுந்தரராமன், வீரவநல்லூரில் நல்ல பெயர் வாங்கின கவர்ன்மெண்ட் டாக்டர். ஆந்திராவுக்கு மாற்றி விடவே, வேலையை உதறி விட்டு, அங்கேயே ப்ராக்டீஸ். செல்வாக்கு. பங்கமில்லா வருமானம். ஏழைப்பங்காளன் என்பதால் சொத்து. சொதந்திரம் என்று சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும், சீரான வாழ்க்கை. பெரிய பையன் சங்கரன் ஒரு மாதிரி. கண்ட இடங்களில் பணத்தைக்கட்டி, படிச்சேன் என்று பேர் பண்ணி ஐஏஎஸ் எழுதினான். இண்டெர்வ்யூவில் பிச்சுண்டுடுத்து. அவாள்ளாம் இனம் காண்றதிலெ கெட்டி. இவனுடைய கோழைத்தனத்தைக் கண்டு கொண்டார்கள். பாசாகவில்லை. நாடு தப்பியது. எல்லார் மீதும் இவனுக்கு கோபம். நாட்தோறும் அப்பாவோட சண்டை. பணம் கறப்பான். பொறுப்பு நில். இதையெல்லாம் பார்த்த அடுத்தவன் ஆம்படையாளை கூட்டிக்கொண்டு அயல் தேசம் போய்விட்டான். நூல் அறுந்தது.

இந்த கூட்டுக்குடும்பத்து சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டது, மாதவனும் சுந்தரியும் தான். இத்தனைக்கும் வரதக்ஷிணை பேரம் நடத்திய குந்தளாவுக்கு, தன் ஒரே பெண் சுந்தரியின் நலன் கருதி, டாக்டர் சுந்தரராமன் வளைந்து கொடுத்தார். வில் மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருந்தபோது, குந்தளா கையில் பத்தாயிரம் ரூபாய் சொளையா அழுத்தினார். ஐந்து கிலோ வெள்ளி, வைரத்தோடு, கணிசமா ஆறு பவுனுக்கு ஆபரணங்கள், காஸ்ட்லி பட்டுப்புடவைகள் இத்யாதி. தடபுடலா கல்யாணம். ஆனால், சுந்தரி வீட்டுக்கு சேர்த்தி இல்லை. எல்லாரிடம், கூசாமல், இவளுடைய அப்பா ஒன்றுமே தரவில்லை என்று அங்கலாய்ப்பாள், குந்தளா. 

குடித்தனம் எல்லாம் தடித்தனம் தான். வந்த சீர் எது என்ன என்று மாதவனுக்கே தெரியாதபடி, எல்லா நகையும் பூட்டி வைத்துக்கொண்டு, சுந்தரியை மஞ்சக்கயிறுடன் தான் வளைய விட்டாள். அந்த காலத்து வீடா? புருஷன் பொண்டாட்டி பேசிக்கொள்ளக்கூட வாய்ப்பு கிடையாது. பணங்காய்ச்சி மரம் மாதவன் செலவில் தான் குடித்தனம், சின்னவர்கள் படிப்பு எல்லாம். முறைப்பொண்ணை கல்யாணம் செய்து கொண்ட மணிக்கு நோ வாரிசு, கொடுக்க ஒன்றும் இல்லை என்றாலும். படிப்பும் இல்லை; வேலையும் இல்லை. அவனொரு விருதா. 

ஒரு நாள் சுந்தரிக்கு கொஞ்சம் பூசினமாதிரி இருந்தது. கழுகுக்கண்ணா! குந்தளா தொளைத்து எடுத்து விட்டாள். அழுதுகொண்டே, சுந்தரி தன் அபிலாஷையை சொன்னாள். தொலைந்தது. பெரிய மாட்டுப்பெண் இப்படி இருக்கும்போது, உனக்கு இது ஒரு கேடா என்றாள். சிலபேருடைய சாபம் பலிக்கும். கலியுகம் அல்லவா. கருச்சிதைவு ஆகி விட்டது. குந்தளா பாயசம் வச்சு சாப்பிட்டாளாம். என்னை வந்து யார் கேட்டார்கள்? கேட்டால், சொல்லியிருப்பேன், “ குந்தளா மாமி. நீங்க தாடகை அவதாரமோ, சூர்ப்பனகை அவதாரமோ, பூதகி அவதாரமோ! யார் கண்டா? பெரிய மாட்டுப்பெண்ணுக்கு பதினாறு பிறந்த பின், அடுத்தவனுக்கு கல்யாணம் செய்திருக்கலாமே. உங்கள் அழிச்சாட்டியம் இந்த  அருள்மிகு வில்வநாதேஸ்வரனுக்கே பொறுக்காது.’ என்று.

கதை நீண்டுண்டு போறது. மறுபக்கமும் சொல்லவேண்டும். பிறந்த வீட்டில் சுந்தரிக்கு சலுகை குறைந்து வருகிறது. எல்லா பணம் உனக்குத்தான் செலவாச்சு என்று சங்கரன் அவளை உதறி விட்டுட்டான். ‘வில்’லுக்கு டயாபிடீஸ். எல்லா செலவும் மாதவன் தலையில். ஏதோ நல்ல காலம். மாதவனும், சுந்தரியும் உயிருக்கு உயிராக ஒருவரை நேசித்தார்கள். ஆனாலும், மாதவனுக்கு டெஸ்ட் செய்து கொள்ள இஷ்டமில்லை. அம்மாக்காரி விவாகரத்து வரை கொண்டு போய்விடுவாள். வில் தலையாட்டும் என்ற பயம். எனக்கு அது சரியாக படவில்லை. என்னை மாதவன் ஆலோசனை கேட்கவில்லையே. திடீரென்று ஒரு நாள் போய்விட்டார். இப்போது சுந்தரிக்கு துணை பெருமாள் தான். ஏதோ புத்திசாலித்தனமோ கொஞ்சம் வைத்து விட்டு போய்விட்டார், மஹானுபாவன். அதை பிடுங்க ஆயிரம் பேர். எல்லாம் சொந்தக்காரர்கள் தான்.

நேற்று சுந்தரி என்னிடம் கேட்டாள். எச்சக்கையால் காக்காய் ஓட்டாதே. உள்ளதை காபந்து செய்து கொள். என்றேன்.
என்னமோ போங்கோ சார்! கூட்டுக்குடும்பத்தில் உழைத்து சம்பாதிக்கிற பையன் உழவு மாடு. அவனுடைய பார்யாள் கறவை மாடு. அவாளோட இளமை காணாமல் போனது. அவர்களுக்கு வயது காலத்திலே, நிர்க்கதி. என்ன வேண்டிக்கிடக்கு, இந்த கூட்டுக்குடும்பம், நல்ல பையனை கூட்டுகிற விளக்குமாறாக வைத்துக்கொண்டு.

எனக்கு தெரியும், ‘படவாகினி’ என்றால் என்ன என்று கேட்பீர்கள். அது ஒரு வட்டார மொழி. பொருள்: குந்தளா குணாதிசயமுள்ள பெண்மணிகள்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்