Wednesday, July 16, 2014

சிரிச்சு மாளலெ! ~9

சிரிச்சு மாளலெ! ~9

இன்னம்பூரான்
16 07 2014

மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் விறுவிறுப்பான பட்டிமன்றங்கள் நடக்கும்போது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி விமரிசிப்பார்கள். பத்து நாள் தாயாதி பகையை விட அதிகமாக விரோத ஃபில்ம் காட்டுவார்கள். காட்சி முடிந்த பின், தோள் மேல் தோள் போட்டுக்கொண்டு காண்டீனில் ஆட்டுசூப்பு பருக போய்விடுவார்கள். அம்மா உணவகத்தை விட அந்த பாக்கியசாலிகளுக்கு சோத்துக்கடை ரொம்ப மலிவு. இது அன்றாட காட்சி, அந்த காலத்தில். அதற்கும் முன்னாலே, சர் ஜெரெமி ரைஸ்மென்னும் சத்தியமூர்த்தியும் சொற்போர் நடத்திவிட்டு தேநீர் பருக ஜோடியாக. தற்காலம் மோடி ராகுலுக்குக் கைலாகு கொடுத்தாலும், மாநில சட்டசபையில் முகாலோபனம் கிடையாதாமே!

நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இத்தனைக்கும் நடுவில் அங்கே நகைச்சுவை மிளிரும். கட்சி பேதமில்லாமல் எல்லாரும் மகிழ்வார்கள். பிரச்னையை மறந்து திசை மாறி போய்விடுவார்கள். அந்த காலத்தில் பிலு மோடி என்றொரு எம்.பி. ஸ்வதந்திரா கட்சி.  கட்டிட கவின் கலை வல்லுனர். கொழுத்த செல்வந்தர். உடல்வாகும் அப்படியே. அவர் எழுந்து நின்றாலே, சபையில் களை கட்டும். ஒரு சமயம் பக்கத்து ஆசாமியுடன் நின்றுகொண்டு வம்பளந்து கொண்டிருந்தார்; முதுகு அக்ராசனரை நோக்கி. திரு.சீதாராம் கேசரி, அக்ராசனரிடம் இது தப்பு என்று புகார் கூறினார். அக்ராசனர் மோடிக்கு முன்னும் பின்னும் கிடையாது; அவர் உருண்டையான மனிதர் என்று கேலி செய்தார். அவர் அடிக்கிற ஜோக் அதற்கும் மேலாக, அதிரடியாக சிரிக்க வைக்கும். தன் படத்துக்கு கீழே; ‘நான் ஒரு அமெரிக்க உளவாளி கையாள்!’ என்று எழுதி வைத்திருந்தார். இந்திரா காந்திக்கு எதிராளியை கண்டால் ஆகாது. அதனால் இவரை அமெரிக்க உளவாளி என்றார். அந்த அபவாதத்தை இவர் இப்படி கேலி செய்தார். இந்திரா காந்தியும் இவரை மிஸாவில் கைது செய்தார்.

இதை எதுக்கு சொல்ல வரேன் என்றால், லோக்சபாவின் அதிகாரபூர்வமான இணையதளமும் ஜோக் அடிக்க ஆரம்பித்து விட்டது. கனம் பொருந்திய திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு ‘யுத்த யுக்தி வாகை சூடு சூழ்ச்சி மன்னன்’ என்று  (Strategy consultant!!!!) என்று விருது அளித்திருக்கிறது. அப்பாவி பையன், அவரு. தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்று தான் அவர் எழுதிக்கொடுத்திருக்கிறார்.
படு தோல்வி குற்றத்துக்காக, இப்டியா எள்ளல் செய்வது!
-#-
பி.கு: கலைஞர் அடித்த ஜோக்! வேணுமா?

சித்திரத்துக்கு நன்றி:http://humour.amulyam.com/images/humour/large/1308/312861.jpg

Monday, July 14, 2014

கன்னா பின்னா சொத்தும் கண்ணாமூச்சி ஆட்டமும்

கன்னா பின்னா சொத்தும் கண்ணாமூச்சி ஆட்டமும்



இன்னம்பூரான் 

திங்கள், 14 ஜூலை 2014 (17:15 IST): பிரசுரம்: 








ஒரு காலத்தில் பீ.ஜீ. கேர் என்ற முதல்வர் இருந்தார், மஹாராஷ்ட்ராவில். பொதுக் கணக்கு மன்றத்தில் தணிக்கை அறிக்கை விவாதிக்கப்படும்போது, ஊழல்கள் அலசப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளைத் தற்காலிக வேலை நீக்கம் செய்துவிடுவார். அந்த அளவுக்கு லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதில் அவருக்கு ஈடுபாடு இருந்தது.



அதே மாநிலத்தில் தற்காலம் நடப்பு என்ன? லஞ்சாதிபதிகளைப் பாதுகாப்பது வழக்கமாகிவிட்டது, அங்கே. ஆதர்ஷ் ஸ்கேமில் அரசியல்வாதிகள் காப்பாற்றப்பட்டனர். நீர்ப் பாசன இலாகாவின் முறைகேடுகளை மூடி மறைத்து விட்டார்கள். அண்மையில் வெளியான சேதி கேளும்.



கிருபாஷங்கர் சிங் என்ற மாஜி அமைச்சர் (மும்பை காங்கிரஸ் தலைமை வேறு) மீது கணக்கில் இல்லாச் சொத்து பத்து சேத்த விவகாரம். நான்கு வருடங்கள் முன்னால் சஞ்சய் திவாரி என்ற பொதுநலம் விரும்பி மேற்படி அமைச்சர், கன்னா பின்னா என்று 300 கோடி ரூபாய்க்கு முறைகேடாகச் சொத்து சேர்த்தார் என்று லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்குப் புகார் செய்தார். அந்தப் பிரிவும் கன காரியமாக, தம்மாத் தூண்டு தான் (11%: முப்பது கோடி) கணக்கில் வரவில்லை என்று சொல்லி மூடி மொழுகி விட்டார்கள்.



திரு.திவாரி லேசுபட்ட மனிதரல்ல. விடாக்கண்டன். பாம்பே உயர்நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்தார், ஆதாரங்களுடன். அந்த நீதிமன்றம் போலீஸை விசாரிக்க உத்தரவு இட்டது. மார்ச் 2012இல்  அவருடைய வீட்டில் சோதனை நடந்தது. அவரும் ப்ரெஷர் தாங்காமல் மும்பை காங்கிரஸ் தலைமையிலிருந்து ராஜிநாமா செய்தார்.



2012 வருடம் டிசம்பர் மாதத்தில், போலீஸ் கமிஷனர் தலைமை தாங்கிய குழுவும் அவரைக் குற்றம் சாட்டி கூண்டில் நிறுத்த அனுமதி கேட்டது. இந்த வழக்கில் அனுமதி தர வேண்டியவர், மாநில சட்டசபை தலைவர் (ஸ்பீக்கர்). அந்தப் பதவியில் இருக்கும் திலீப் வால்ஸே-பாட்டீல் என்பவர் அனுமதி தர மறுத்து விட்டார் என்பது தான் இன்றைய செய்தி. இத்தனைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தக்க சான்றுகளுடன் குற்றம் சாட்டி கூண்டில் நிறுத்த எவருடைய அனுமதியும் தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு கூறியுள்ளது.



கன்னா பின்னா சொத்து சேர்த்துவிட்டு, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது, இன்னும் எத்தனை நாளைக்கு?



இதில் மேலும் படிக்கவும் :

மஹாராஷ்ட்ரா

,

பீ.ஜீ. கேர்

,

கிருபாஷங்கர் சிங்

,

சஞ்சய் திவாரி

,

திலீப் வால்ஸே-பாட்டீல்

சித்திரம் பார்க்க வெப்துனியா இணைப்பை க்ளிக்கவும். நமக்கெல்லாம் கிடைக்காத பொருள்!

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, July 10, 2014

'புஸ்வாணம்' மத்திய பட்ஜெட் 2014 -15: ஓர் அலசல்

'புஸ்வாணம்' மத்திய பட்ஜெட் 2014 -15: ஓர் அலசல்
பிரசுரம்: http://tamil.webdunia.com/article/union-budget-2014-15/a-quick-review-of-union-budget-2014-15-114071000038_1.html(இன்னம்பூரான், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர்) 

pastedGraphic.pdf


“அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்; ஐவேஜி இல்லாத்துக்கு என்னத்தைச் செய்யலாம்?” - சர். அமராவதி சேஷையா சாஸ்திரிகள் (1828 –1903), திருவிதாங்கூர் / புதுக்கோட்டை சமஸ்தான திவான். நிகரற்ற நிர்வாகப் புனரமைப்புத் திறனாளி.
இன்று மத்திய அரசின் பட்ஜெட் 2014-15 ஐச் சமர்ப்பித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களின் பரிதாப நிலையை நூறாண்டுகளுக்கு முந்தைய மேற்படி வினா தயவு தாக்ஷிண்யமில்லாமல் பிரதிபலிக்கிறது. அவரே ‘சவால்’ என்று ஒத்துக்கொண்டு தான் சமாளிக்கிறார். மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி. ஜெட்லிக்கு எல்லாப் பக்கத்திலிருந்தும் இடி, அடி, உதை. 
காங்கிரஸ் கட்சி கூட்டணி கஜானாவைக் காலியாக விட்டுச் சென்றனர். மான்ய துஷ்பிரயோகம் மட்டுமில்லை; கஜானாவையே முழுங்கிய ஊழல்கள் கொள்ளையடித்தன. போதாக் குறையாக, தான்ய குதிரும் காலியாகிவிடுமோ என அச்சம் இருக்கிறது, வருண பகவானின் கருணை இருக்காது என்ற கணிப்பு இருப்பதால். நீரின்றி அமையாது உலகு. 
மூன்றாவதாக, ஈராக் சிக்கலின் எதிர்வினைகள் படாத பாடு படுத்தும். உலகமே ஒரு கிராமம் என்பதால், பன்முனைச் சிக்கல் தோன்றிய வண்ணம் இருக்கும், தற்காலிக முன்னேற்றம் நீடிக்காவிடின். அண்டை நாடுகள் பிரச்னை வேறு. மத்திய அரசின் சீர்திருத்தங்கள், ஆளுமையில் ஊறிப் போனவர்களைப் பாதிக்கும் என்பதால், உள்குத்து, தாக்குதல், கிருத்திரமம் எல்லாம் கைவரிசையைக் காட்டும். இத்தனைக்கும் நடுவில், தங்கமும் தன தான்யமும், தனி மனித ஐஸ்வர்யமும், நாட்டுச் செல்வக் களஞ்சியமும் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை திரு. ஜெட்லி இன்முகத்துடன் இந்திர ஜாலம் செய்து நிறைவேற்றியிருக்க வேண்டும், இந்த பட்ஜெட்டில்! 
1947இலிருந்து எல்லா இந்திய பட்ஜெட்களையும், திரு. நானி பால்கிவாலா அவர்களின் தயவால் புரிந்து, படித்து வந்த எனக்கு என்னமோ ஏமாற்றம் தான். ஒருகால், ஒரு நாள் முன்னால் அறிவிக்கப்படும் பொருளியல் ஆய்வறிக்கையின் துணிவு என் எதிர்பார்ப்பைக் கூட்டி விட்டதோ? அது பல நுட்பங்களை, காரண காரியங்களை, பழங்கதை, புதிய திட்டம், சால்ஜாப்புகள் ஆகியவற்றைக் குறிப்பால் உணர்த்தும். 
ஒரு சூசகம். ஊகங்களும், உண்மை நடப்புகளும் சாமர்த்தியமாகக் கூடி வரும். ஏற்கனவே வெப்துனியாவில் வெளிவந்துள்ள பட்ஜெட் செய்திகளை அரைத்த மாவாக மறுபடியும் பதியாமல், என் உடனடி கருத்துகளை மட்டும் கூறுகிறேன்.  சுங்க வரி பக்கம் போகவில்லை. ஏனெனில் GST (சீர்திருத்தப்பட்ட பொது வரி) விஷயத்தில் பட்ஜெட் தெளிவு தரவில்லை. பட்ஜெட் அனுபந்தங்களைப் படித்த பின் எழுதக்கூடியதை இத்தருணம் தவிர்ப்பது தான் நடுநிலைமை. அதைக் கடைபிடிக்கிறேன்.
என் உடனடி கருத்துகள்:
1. அரசின் கஜானா வரத்து 5.4% -5.9% வரை வளரும் என்றார் ஜெட்லி, நேற்றைய ஆய்வறிக்கையில். அதைத் திரு.ப.சி. வரவேற்றது குறிப்பிடத்தக்கது. அதற்கான சூத்திரத்தைப் பட்ஜெட்டில் எதிர்பார்த்தேன்; ஏமாந்து போனேன்.
2. தங்கத்துக்கு சுங்கம் குறையும். 10% -6%. அதனால் கடத்தல் கட்டுப்படும் என்று நேற்றே ராய்ட்டர் நிறுவனம் ஊகித்தது. அது பொய்த்துப் போனது. சைனாவுக்கு அடுத்த படியாக, இந்தியா தான் தங்கத்தை அதிக அளவு இறுக்குமதி செய்கிறது. தங்கம் வாங்கும் அளவுக்குச் செல்வம் முடக்கப்படும். அதனால் இன்றியமையாத வளர்ச்சிக்குத் துட்டு கிடைப்பது குறைந்து விடும். இது மைனஸ். 
இதற்கு எதிர்வினையாக முடக்கப்பட்ட ஐவேஜு அந்த அளவுக்குப் பணவீக்கம் அதிகரிப்பதைக் குறைத்திருக்க வேண்டும். போன நிதி ஆண்டில் அரசு செல்வ நிலையில் 20இல் ஒரு பங்கு இவ்வாறு முடக்கப்பட்டது: $54 பிலியன்:1017 டன். அது நடக்கவில்லையே. இப்படிப் போனால் அப்படி. அப்படிப் போனால் இப்படி! இந்தப் பிரச்னையை திரு.ஜெட்லி அணுகவேயில்லை.
3. அவரது உரையை உன்னிப்பாகக் கவனித்துக்கேட்டேன். எனக்கு என்னமோ கவலையுடன் திருமதி. இந்திரா காந்தியின் ‘கரீபி ஹடோ’ (ஏழ்மையை விரட்டு) முழக்கங்கள் தான் நினைவுக்கு வந்தன. காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி, வேளாண் துறைக்குப் பல முக்கிய திட்டங்கள், தேசிய அளவில் வேளாண் சந்தைகள், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம், மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி, நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி, பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி போன்றவை அறிவிப்புகளாக தென்பட்டனவையே தவிர, திட்டமிட்டு வரையறைகள் வகுத்த பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளாகத் தென்படவில்லை. இந்த வைராக்யமெல்லாம் காற்றோடு போய்விடுமோ என்ற அச்சம் எழுகிறது.
4. ஏன்? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வரவு செலவில் துண்டு விழுவதைச் சமாளிப்பது, செல்வம் கூட்டுவது, கடன் அடைப்பது ஆகியவற்றைப் பற்றி அவர் ஆற்றிய உரையில் தெளிவு காண முடியவில்லை.
5. பட்ஜெட் என்றால் எல்லாரும் வருமான வரி பற்றித் தான் முதலில் கவனிப்பார்கள். சம்பளம் / ஓய்வூதியம் வாங்குபவர்கள் தான் வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறார்கள். அதன் பொருட்டு, ஒரு காலத்தில் சிறிய சலுகை ஒன்று இருந்தது. அதை ஆவலுடன் மத்திய வர்க்கம் எதிர்பார்த்தது. ஏமாந்து போனார்கள். பசு மாட்டைக் கறக்காமல் விடுவாரோ, ஜெட்லி?
6. தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சமாகவும் / முதியோர்களுக்கு ரூ. 3 லட்சமாகவும் உயர்த்தியது பேருக்குத் தான். டோகனிஸம். இது ஒரு கண்துடைப்பு தான். சேமிப்புக்கான சலுகையை ரூ.1.5 லட்சமாக உயர்த்தியது, பொருளியலை அசட்டை செய்வது. நியாயமாக அதை ரூ.3 லட்சம் என்று நிர்ணயித்திருந்தால், அரசுக்கும் பல செலவுகளுக்கு முதலீடு கிடைத்திருக்கும். தனி மனிதனும் ஆதாயம் பெற்றிருப்பான். அதுவும் போச்சு. கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரங்களால் கணிசமான சலுகை கிடைக்கவில்லை.
7. பல கோடி வருமானத்துக்கும், சில லட்ச வருமானத்துக்கும் ஒரே விகிதத்தில் வரி. இது தகுமோ? ஒரு 40% ஸ்லாப் வரவேண்டும். நான் ஒரு சிறிய முன்னேற்றமாவது எதிர்பார்த்தேன். கிட்டவில்லை. அம்பானியும் அம்பி மாமாவும் ஒரே விகிதாச்சாரத்தில் வரி கட்டுகிறார்கள்! 
8. சுருங்கச் சொல்லின், முக்கியமாக மும்முனை மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன - பொருளியல் சிக்கல்களை, அரைவேக்காடாக தனித் தனியாக அலசாமல், பொதுவான, முழுமையான அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்றது ஆய்வறிக்கை. அடுத்தபடியாக, தரகர்களை விலக்கி, வேளாண்மைக்கும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய்க்கும் ஆதாரமான நவீன சந்தை அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்ற ஆய்வறிக்கையிலும் விவரம் போதாது; பட்ஜெட்டும் மூடி மெழுகி விட்டது. 
9. எல்லா விதமான நிலக்கரிக்கான சுங்கவரி ஒன்றே என்று அவர் 12:57 மணியில் சொன்னது எனக்குத் தூக்கி வாரி போட்டது. பின்னணி கொஞ்சம் கூட கூறப்படவில்லை.

10. பல வருடங்களாகப் பேசப்படும் நேரடி வரித் திட்டம் (Direct Tax code) பற்றி, மேலும் பேசப்படும் என்கிறார்!
ஆக மொத்தம் எனக்கு ஏமாற்றம் தான். இந்த ஏமாற்றத்தைப் போக்க, மேலும் ஆக்கப் பூர்வமான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com

Wednesday, July 9, 2014

புல்லட் ரயில்வே பட்ஜெட் - ஒரு 'சட்புட்' அலசல்












புல்லட் ரயில்வே பட்ஜெட் - ஒரு 'சட்புட்' அலசல்

pastedGraphic.pdf
இன்னம்பூரான் 
புதன், 9 ஜூலை 2014 (13:27 IST)

pastedGraphic_1.pdf
pastedGraphic_2.pdf


யானை வரும் பின்னே. மணியோசை வரும் முன்னே என்பது போல ரயில்வே பட்ஜெட், மத்திய அரசின் வருடாந்திர பட்ஜெட்டின் முள்ளுப் பெருக்கிச் சாமி. வைணவ கோயிலொழுக்குப்படி பெருமாளை எழுந்தருளிப் பண்ணி உலா வரும் முன், சேனை முதலி ஓட்டமும் நடையுமாக பாதையைச் சீர்ப்படுத்துவார். அம்மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட் ஸ்டேஷன் வருவதற்கு முன்னாலேயே, பாதி வழியில் நின்றுவிட்டது. ஜூலை 8, 2014 அன்று புதிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் பற்றியும், புதிய ரயில்களையும் பற்றியும் வந்துள்ள விவரமான செய்திகளை மீள்பதிவு செய்யப் போவதில்லை. 

இந்திய ரயில்வேயின் வரலாறு போற்றத்தக்கது. பாடப் புத்தகங்களில் ஆங்கிலேயக் காலனி அரசு ராணுவ வரத்துப் போக்குக்காக ரயில்வே அமைத்தனர் என்று சொல்லப்பட்டது அரைகுறை உண்மை. பஞ்சம் ஏற்பட்டபோது உணவுப் பொருட்களைப் பெருமளவில் அனுப்பவும், வணிகம் செழிப்புடன் வளரவும், மக்களின் யாத்திரைகள் அதிகரிக்கவும், அதனால் இன பேதம் தணிந்து, கலாச்சாரப் பரிமாற்றம் நடந்ததிலும் ரயில்வேக்குப் பெரும் பங்கு உண்டு. 

கட்டை வண்டி போல மரக்கட்டை கதவுகள் கொண்ட நத்தை வேக பாஸெஞ்செர் வண்டிகளையும், உலகளாவிய துர்நாற்றக் கழிப்பறைகளையும், மாயவரம் டிகிரி காஃபியையும், விஜயவாடா ஆம்சத்தா (மாம்பழச்சாறு கற்றை), லோனாவாலா சிக்கியையும், பாடியாலா லஸ்ஸியையும் (நீர் மோர்), பதான்க்கோட் பரோட்டாவையும் நான் சுவைத்த பின்னரும், உயிரோடு இருக்கிறேன்! சில நாடுகளில் ரயில்வே பயணம் செய்திருக்கிறேன். மூன்று ரயில்வே மாவட்டங்களில் (Zonal Railways) பணி புரிந்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் இப்போது கை கொடுக்கின்றன. நன்றி: இந்திய ரயில்வே.

முதலில் ஒரு ரயில்வே ஜோக்: 

தென்னிந்திய ரயில்வேயின் ஒலவக்கோட்டுப் பகுதி என்று வைத்துக்கொள்ளுங்கள். நடந்தது என்னமோ மேற்கத்திய ரயில்வேயில். அதற்கு மேல் சொன்னால் வம்பு! 

இளமை வேகம்; திருமணமான அறுபது நாட்களுக்குள்; மோகம். உதவிப் பொறியாளர். ரயில் பாதையில் அத்வானமான காட்டின் நடுவில் ஒரு ரயில்வே பங்களா. ரயில் நிற்காது. அதனால், ட்ராலி வண்டியில் தம்பதி ஜாலி டூர்! பங்களாவைக் காணோம்! திரும்பி வந்து மேலாளரிடம் ‘பொய்க் கணக்கு’ என்று புகார். அவருடைய பதிலைக் கேட்பீர்களாக: 

‘அப்பனே! என்னை கேட்காமல் நீ ஏன் போனாய்? கட்டியதாகக் கணக்கு எழுதினவன் நான். உடனே, அது பாழாக இடிந்துவிட்டதால் அழிக்க வேண்டும்’ என்று திட்டம் கொடு’.  

எப்படி? இது ரயில்வேக்காரர்கள் தங்களுக்குள் கேலி செய்துகொள்வது.

உண்மையில், மற்ற துறைகளை விட ரயில்வேயில் நாணயம் அதிகம்; லாவண்யம் குறைவு. ஆனால், போன வருடம் காங்கிரஸ் கட்சி ரயில்வே அமைச்சரகத்தில் 1942 ரயில்வே கழிப்பறை துர்நாற்றம். தலைமை முதல் அடியாள் வரை ரயில்வே போர்டில் லஞ்ச வாவண்யம். அமைச்சரின் பெயர் அடிபட்டது. ராஜிநாமா செய்து தப்பிவிட்டார். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ தான் அநாகரீகமாக, அசிங்கமாக, இன்றைய ரயில்வே அமைச்சரின் பெயர்ப் பலகையைப் பிடுங்கி எடுத்து மிதித்தார். வெட்கக்கேடு! சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்று விடுமா? என்ன? ஆனாலும், மறைமுகமான லஞ்சம், வீணடிப்பில் ஆதாயம், அபாரச் சலுகைகள், அறுசுவை உண்டி எல்லாம் ரயில்வேயின் பிதுரார்ஜித சொத்துகள்! எல்லாம் அளவோடு இருக்கும், அந்தக் காலத்தில்!

இந்தப் பின்னணியில் புல்லட் ரயில்வே பட்ஜெட் அலசல்:

1. லஞ்சத்தை ஒடுக்கும் வகையில் அறிவிப்பு இல்லை; ஆனால், எல்லாம் வெளிப்படையாக இருக்கும் என்றது பட்ஜெட். இது போதாது.

2. நேருவின் சோஷலிஸம் வந்த போது தனியார் மயம் காசு செலவழிக்கத் தயாராக இல்லை. ஏகப்பட்ட திரவியம் வேண்டியிருந்தது: உதாரணம்: ரூர்க்கேலா எஃகு உற்பத்தி சாலை. அப்போது அரசு வாரியங்கள் / கம்பெனிகள் தலையெடுத்தன. இப்போது, தனியார் கை இங்கும், எங்கும் ஓங்கி உலகை அளக்கின்றன: உதாரணம்: அம்பானி.  ஸ்விஸ் வங்கிகளிலும் கோடிக்கணக்காகத் துட்டு! இந்தப் பின்னணியில் ரயில்வே பட்ஜெட் தனியார் / அன்னிய முதலீடு நாடுவது சரியே. ஆனால், கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு கண்காணிக்க வேண்டும். தணிக்கைத் துறைக்கு வழி விட வேண்டும். 2ஜி, நிலக்கரி, கச்சா எண்ணெய் ஜாம்பவான்கள் ஜொள்ளு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!

3. புல்லட் ரயில் வகையறா நல்வரவு. பயிற்சி, பாதுகாப்பு, மராமத்து ஆகியவற்றில் முழுக் கவனம் தேவை.

4. பங்குச் சந்தை சிங்கியடித்ததைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அது தனி உலகம்.

5. கணினி மய ஏற்பாடுகள் கன ஜோர்.

6. பிரதமர் சொன்ன மாதிரி இது மக்கள் நலம் நாடும் பட்ஜெட். அதனால் தான் தமிழ்நாட்டு முதல்வரும், கருணாநிதியும் (ஓரளவு!) வரவேற்பு கூறியிருக்கிறார்கள். மற்ற புகார்கள் எல்லாம் சென்னை பாஷையில் ‘வேலைக்கு ஆவாது!’.

7. நாடாளுமன்றத்தில் அமளி செய்தது, சில எதிர்க் கட்சிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு. 

இன்னும் பேசிக்கொண்டே போகலாம். அவசியமானது மட்டுமே இடம் பெறுகிறது. அடுத்து 'சட்புட்' சடுதியில் பாயும் மத்திய பட்ஜெட்டைப் பார்க்கலாமா?

===================
ஒரு பின்னுரை:

வெப்துனியா தளத்தில் நாம் யாவரும் விழிப்புணர்வுடன் அறிந்துகொள்ள வேண்டிய பல துறைகளைச் சார்ந்த தகவல்கள் / செய்திகள் / வரலாற்றுச் சம்பவங்கள் / கருத்துக் களம் பற்றித் திறனாய்வு / விமரிசனம் செய்ய தருணம் கிட்டியதைப் பற்றிய என் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தத் தொடர், எல்லா விஷயங்களையும் நடுவுநிலையிலிருந்து, ஆக்கப்பூர்வமாக, விழிப்புணர்ச்சியை இலக்கு வைத்து அமையும். மக்கள் நலம், நீதிமன்றத்தார், கண்காணிப்பு, சமுதாயத்தின்/ அரசியலின் ராஜ பாட்டைகள், திக்குத் தவறிய ஒற்றையடிச் சந்துகள், குறுக்குப் பாதைகள், தணிக்கையின் தன்மையும், பயன்பாடும், மேலாண்மை, தன்னார்வம், ஐ ஏ எஸ் படிப்பு, மற்றும் பல எல்லாமே கலந்து வரும், வாசகர் விருப்பப்படி. கணகணப்பு இருக்கும்; ஆனால் புண்படுத்தாது. வெப்துனியாவில் பண்புடன் வரும் பின்னூட்டங்களும், மாற்றுக் கருத்துகளும், அளவளாவுதலும் நல்வரவே. பதில் அளிக்கப்படும்.

- இன்னம்பூரான்
===================

pastedGraphic_3.pdf

இதில் மேலும் படிக்கவும் :  


Tuesday, July 8, 2014

ராஜு விமோசனம்

ராஜு விமோசனம்
இன்னம்பூரான்
ஜூலை 8 ,2014
ஜூலை 2 அன்று 50 வருடங்களாக பாழாப்போன மனிதனால் நாள்தோறும் கொடுமைப்படுத்தப்பட்ட ராஜூவின் விமோசனம் நிறைவேறியது; அவர் அழுதார். சங்கிலி விலங்கு, கூர் ஆயுதத்தால் சதை கிழிய, பட்டினி; எடுப்பது பிச்சை.  அதை பிடுங்கி தின்பது பாகன்/சொந்தம் கொண்டாடும் படு பாவி. அவன் ராஜுவை கண்டபடி அடிப்பான்; மீட்டது, Wildlife SOS [founded 1955]. இதை ஆவணபடுத்தியது The Huffington Post என்ற பிரபல அமெரிக்கன் வலைப்பூ. விமோசனத்தின் மகிழ்ச்சியில் ராஜு அழுதது கண்டோர் மனதை உருக்கியது. நீங்கள் படங்களையும், வீடியோவையும் அவசியம் பார்க்கவேண்டும்.  
இன்று படித்த மற்றொரு செய்தி, தமிழ்நாட்டில் யானை கொலை செய்யப்பட்டது.
*
For 50 years, Raju the elephant was abused, held shackled in spiked chains and forced to live off scraps from passing tourists. All that changed when he was rescued last weekend by wildlife conservationists who said the animal cried when he was finally set free.
Wildlife SOS, a group established in 1995 to protect endangered wildlife in India, set out to rescue Raju on the night of July 2. Raju is around 50 years old and was likely captured as a baby and bought and sold many times over the course of his life. He was forced to work as a begging elephant in Allahabad. His legs were bound in spiked chains that made walking difficult and left him with chronic wounds. He was also beaten.
Wildlife SOS found out about Raju's story through India's Forestry Commission. When the group attempted to rescue Raju on the night of July 2 in the Uttar Pradesh region of India, his owner and mahout -- an individual who rides elephants -- apparently attempted to dismantle the effort with a standoff, Nikki Sharp, the executive director of Wildlife SOS-USA, told The Huffington Post Monday.
Raju's captors layered tighter chains on him and attempted to confuse him by shouting commands, but their efforts proved futile. A team of 10 veterinarians and experts from Wildlife SOS along with 20 Forestry Commission officers and two policemen managed to rescue the abused elephant, according to the Mirror, a British tabloid.
“Raju was in chains 24 hours a day, an act of ­intolerable cruelty. The team were astounded to see tears roll down his face during the rescue," Pooja Binepal, a spokesman for Wildlife SOS, said, per the Mirror. "It was incredibly emotional. We knew in our hearts he realized he was being freed. Elephants are majestic and highly intelligent animals. We can only imagine what torture the past half a century has been for him."
Sharp echoed Binepal's statement while speaking with HuffPost.
"They [the rescue team] went in to rescue him and they [his captors] had bound him up so tightly that he was in a lot of pain," she said. "The vet and our team came with fruits and just started speaking softly to him and to reassure him that we were there to help, and it was at that time that tears flooded down his face. The founder of Wildlife SOS, who was there are the time of the rescue, said .... that really caught him off guard. They've done a lot of elephant rescues and the fact the the tears were just coming down ... he was weeping. It was an emotional moment and everyone was more motivated to get him on the truck and to safety."
Raju was taken to the Elephant Conservation and Care Centre in Mathura. On July 4, the same day Americans celebrated their independence, Raju took his first steps of freedom. Sharp said he is doing "fabulously." The Wildlife SOS team is prepared to help make Raju comfortable in his new life and to rehabilitate him by treating his physical wounds and introducing him to other elephants at the center.
Elephants can live up to 70 years. Sharp says they hope Raju has another 10 years or more ahead of him.

Sunday, June 29, 2014

“நான்” ஒரு விளையாட்டுப்பிள்ளையா?


இன்னம்பூரான்.
Monday, June 30, 2014, 5:29

இந்த மனசு ஆகப்பட்டது லோகசஞ்சாரம் செய்தபடியே இருக்கிறது, நாரத முனி போல. பிரபஞ்சம் முழுதும் இந்த சஞ்சாரம். நாரதரின் பூமாலைகளைப் போல சிந்தனை சூழல் அதற்கு அலங்காரம். சிந்தனையை ‘நல்லதொரு வீணையில்’ எஸ். பாலசந்தர் போல் ரீங்காரித்தால், அந்த ஒலியும் இசையும்  தத்துவம் பேசும் என்பதால், நாரத வீணை பொருத்தமான உவமை. தனம்மாள், ஏமனி, சிட்டிபாபு, காயத்ரி ஆகியோரை விட்டு விட்டு எஸ். பாலசந்தரை உவமை செய்வானேன் என்பர், சிலர். அவர் ‘நான் ஒரு விளையாட்டுப்பிள்ளையாக…’ தனக்குத்தானே குருவாக இருந்து, வீணை கற்றுக்கொண்டவர் என்பதால், அவரொரு உவமையானார். நாரதரின் இசைக்கருவியை ‘ஏக்தாரா’ எனப்படும் தம்புரு என்பர், சிலர். அதனால் காரியம் கெட்டுப்போகவில்லை. அதனுடைய கருமமே தப்புத்தாளத்தைத் தவிர்ப்பதே. மனது விகாரம் (தப்புத்தாளம்) அடைவதை நாம் அன்றாடம் காண்கிறோம். அது நீக்கப்படவேண்டும். உவமை இங்கும் பொருத்தமாக அமைகிறது.
இந்தத் தொடரை வல்லமை இதழில் எழுதத் தூண்டியது ஒரு நூல்: Dainton,B (2014) Self: London: Penguin.
அது பிரசுரம் ஆனதே ஏப்ரல் 24, 2014. ‘Self’ என்ற சொல்லை, இப்போதைக்கு ‘விளையாட்டுப்பிள்ளையாகிய நான்’ என்று மொழியாக்கம் செய்கிறேன். பிறகு நீயோ, நானோ அதை மாற்றிக்கொள்ளலாம். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக இருக்கும் டைய்ண்டன் உம்முடைய ‘நான்’ என்பது என்ன, அதனுடைய போக்குவரத்தை கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கிவிட்டு, அது உமது உடலுக்கு வெளியே இயங்கக்கூடும் என்று குண்டு போட்டதல்லாமல், அப்பவும் அதை கண்காணிக்கமுடியும் என்கிறார். (புத்தகம் இன்னும் கைக்கு வரவில்லை. அதற்குள் என்னுடைய ‘நான்’ அவசரப்படுகிறது!). உள்ளுறை மனதை (“core self”) பற்றி அவர் அலசுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே ‘உவமப் பொருளின் உற்றது உணரும் தெளிமருங்கு உளவே திறத்து இயலான’ (தொல்காப்பியம் 1241) என்று உள்ளுறை உவமத்தை குறிப்பிட்டு, அதை உய்த்துணரவேண்டும் என்று தொல்காப்பியர் கூறியது நோக்கற்பாலது. உய்த்துணர மனம் வேண்டுமே. இங்கு இரு பொருள்: 1. விருப்பமிருந்தால் தான் உய்த்துணர முயல்வோம். 2. உய்த்துணரும் ஆற்றல் அந்த உள்ளுறை மனதுக்குத்தான் (“core self”) உண்டு. இந்த ‘இருபொருள்’ வியாக்யானமே ஒரு சிக்கல். ஆற்றலிருந்தால், விருப்பம் தானே கைகட்டி வரும்; ஆற்றல் இல்லையேல் விருப்பம் கை கூடி வராது. அதற்கு பிறகு வருவோம். அலசும் நூல்களுக்கு பஞ்சமில்லை.
தீடீரென்று  உழலும் இந்த மனதை நாடியதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. நம்மில் எவருக்கும் எல்லா காலகட்டங்களிலும் மனது ‘ஸ்திதபிரதிஞ்னனாக’ மாறாமல் இருந்தது இல்லை. போதாக்குறைக்கு, எல்லாரும் இன்னாட்டு மன்னர் என்ற வகையில் எல்லோரும் மனோநல நிபுணர்கள்! (‘உளவியல்’ என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் மனோநல தலையீடுகளை (அதுவும் பெண்களை ‘ங’ போல் வளைய சொல்பவை) கண்டு அஞ்சுகிறேன். மனோநலம் என்ற துறை சாமான்யமானது இல்லை. மற்ற துறைகளைப்போல அதிலும் வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அது மட்டுமல்ல. குறைந்தது மூன்று வகை நிபுணர்கள் – மனோநல ஆலோசகர் [Psychologist], மனோநல வைத்தியர் [Psychiatrist], மனோநல உள்ளுறை ஆலோசகர் [Therapist]. இந்த நுட்பங்களை அறியாமல் உளவியல் களவியல் நடைபெறுவது மனத்தை வருத்தும் பாதகமான நிகழ்வுகள்.
தத்துவம் போல் ‘நான்’ எனப்படுவோர்க்கு உதவுவது எதுவும் இல்லை, அது பித்து போல் மாயத்தோற்றம் அளித்தாலும்.
‘நான்’ என்பது முழுபரிமாணத்தில் இயங்குவதை ‘அவனே’ அறிவான். அஃறிணையான மரத்தில் பட்டைச்சத்து மட்டும் உள்ளது. விலங்கினத்துக்கு பிரஞ்ஞை என்ற நினவாற்றல் உண்டு. ‘நான்’ என்பது மனிதனுக்கு மேலும் விளங்கும்; ஏனெனில் அவனுக்கு புத்திக்கூர்மை உண்டு. அவன் நாளையைப் பற்றி அறிவான். உலகை அறிவான்; எது உலகில்லை என்றும் புரிந்து கொள்வான். நிலையாமையிலிருந்து அவன் இறவா வரம் தேடுவான்.. விலங்கினத்துக்கு பசியும் தாகமும் மட்டுமே தெரியும். ஆனால் மனிதனோ ஆழ்கடல். உலகுக்கு அவனே எஜமானன். அவன் தான் எதை அடைந்தாலும் அத்துடன் நிற்காமல், அதன் எல்லையைக் கடக்க விரும்புவான்.
சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டதை ஆங்கிலமாக்கி, அதை எளிய தமிழாக்கம் செய்யும் போது, நுட்பங்கள் மறைந்து போய்விடலாம். இப்போதைக்கு, நூலில் உள்ள ஆங்கில மொழியாக்கம் இங்கே: எல்லாரும் சேர்ந்து நுட்பங்களைத் தேடுவோமே.
He who knows more and more clearly the self obtains fuller being. In plants and trees sap only is seen, in animals conciousness. The self is more and more clear in man for he is most endowed with intelligence. He knows tomorrow, he knows the world and what is not the world.  By the mortal, he desires the immortal, being thus endowed.  As for animals , hunger and thirst comprise their knowledge. But  this man is the sea, he is above all the world. Whatever he reaches, he desires to go beyond it. ‘Aitareya Aranyaka II.1.3
-
Radhakrishnan.S. (1953) The Principal Upanishads: London: George  Allen & Unwin P.91
இன்னம்பூரான்
27 06 2014


பதிப்பு: http://www.vallamai.com/?p=47437

Friday, June 27, 2014

சொட்டு மருந்து! [1]

சொட்டு மருந்து!

இன்னம்பூரான்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=47260
Evening-Tamil-News-Paper_96997797490
சிறு துளி பெருவெள்ளம். இதுவும் அதுவுமாக சட்டம், தணிக்கை, விழுப்புணர்ச்சி, ஆலோசனை நேரம் போன்ற தகவல்களை தொகுத்தும், அவிழ்த்தும், சங்கிலித்தொடராகவும், தனிமொழியாகவும், அவ்வப்பொழுது சிறு துளிகள், உஜாலா சொட்டு நீலம் போல் இங்கே காட்சி தருகின்றன. அவற்றால் ஏற்படும் பிரகாசமோ, பெருவெள்ளமோ, உமது பாடு.
உலகமெங்கும் வினாடி தோறும் பற்பல நிகழ்வுகள்.
சில வியக்க வைக்கின்றன; மீனா ஐஏஎஸ் பாஸ் செய்து விட்டார். இத்தனைக்கும் அவர் தன் கையால் பரிக்ஷை எழுதவில்லை. ஆள் வைத்து எழுதினார். படித்தது மற்றவர்கள். அதை உள்வாங்கியது, அவர். செவிவாய் செய்திகளை அவர் ஜீரணம் செய்த விந்தை சாகசம் பற்றி கேட்கும்போது, நமது மனம் பாகாய் உருகி விடுகிறது. சர்வ வல்லமை புகழ் ஆண்டவனே! உனக்கு கண் இல்லையா? உங்களுக்கு ஹெலென் கெல்லரை பற்றியும், வேத் மேஹ்த்தா பற்றியும் தெரியுமோ?  ஆம். மீனாவும், அந்த சாதனையாளர்களைப்போல, கண்பார்வை இழந்தவர். நேர் காணலில் அவரளித்த பதில்கள் பொன் வாக்கு.  வாருங்கள். அவரை வாழ்த்துவோம்.
“பெண்புத்தி பின்புத்தி”,”ஏழை சொல் அம்பலம் ஏறாது.” “இஸ்லாமில் பெண்களுக்கு மதிப்பில்லை.” இது போன்ற குப்பைகளை அகற்றுங்கள் என்கிறார், சுல்தானா பேகம். ஷிமோகா-வாழ் பெண்ணரசியான இவர், சிசேரியன் அறுவை சிகிச்சையில் திருமகனை பெற்றவர். மயக்கம் தெளிந்தவுடனேயே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போய்விட்டார். இடது கையில் ஐ வி.திரவம், ஊசி மூலம். வலது கை பிடித்தது, பேனாவை. உறுதுணை: வாடகை வண்டி ஓட்டுனராகிய கணவர், அஹ்மத். மகவை பார்த்துக்கொண்டது அம்மாவும், மாமியாரும். வசதி செய்து கொடுத்தவர்கள், தேர்வு மைய அதிகாரிகள். என் மகன் கூட ஆஸ்பத்திரியிலிருந்து போய் தான், முதல் வருட டாக்டர் பரிக்ஷை எழுதினான். மூன்றாவது மாடியில் பரிக்ஷை. இவனுக்கு தனி அறை, கீழே. எழுதும் விரல் ஒரு விபத்தில் நசுங்கியும் ஐ.ஏ.எஸ். எழுதிய எனக்கு ஒரு உதவியும் கிட்டவில்லை. எழுத்து கோணா மாணா என்று மார்க் குறைத்திருப்பார்கள்!அது அந்த காலம்.
ஒரு மடலாடலில் படைப்பாற்றல் பேசப்பட்டது. ஒரு எட்டு வயது சிறுவனின் அபாரமான படைப்பு. ஆம். சிந்தனை ஒரு கொடுப்பினை. அதை விட பெரியது கற்பனை. கற்பனை இல்லையேல், இலக்கியம், கலை, அழகு, சுவை, மொழி எல்லாமே சூன்யம். முருகன் என்ற பெரிய கயிறை பற்றியும், வள்ளி என்ற சிறிய கயிறை பற்றியும் எழுதிய மகா கவி பாரதியார், வாயு தேவனையும், தன்னையும் முன்னிறுத்தி, ஒரு காதல் அமர காவியம் படைத்து விட்டார். கற்பனை வளத்தைப் பேணாத கல்வி, ஏட்டுச்சுரைக்காய்.
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி. நுகர்வோர்கள் அந்த ரகம். அவர்களை துரும்பாக மதிப்பவர்கள் பெரிய மைனரும், சின்ன மைனரும். ஆனால், இந்த நுகர்வோர் நீதி மன்றங்கள் மடியில் கை வைத்து நாடி பார்க்கிறார்கள்; நாட் அல்வேஸ் என்றாலும். ‘force majeure’ என்ற லத்தீன் சொல்லுக்கு பொருள்: கடவுள் துணை? இல்லை. கடவுள் துணை இல்லை. கடவுள் செய்த தீவினை -உதாரணம்: சுனாமி.
வேளாண்மை செய்ய சென்ற ‘ரூம் பாட்ச்சா’ அறுந்து கிடந்த மின்கயிறு தாக்கி மரணம்: செப்டம்பர் 4 , 2009. அவரது மனைவியும், மகன்களும், விபத்தின் காரணம் மின்வாரியத்தின் பரிமாரிப்பு கடமை தவறுதல் என்று குற்றம் சாட்டி, ரூ.6 லக்ஷம் நஷ்டஈடு கேட்டார்கள். ‘சே! சே! அதெல்லாம் ஆண்டவன் தீவினை என்று சொல்லி, ‘போடா பொக்கை’ என்று உதறி விட்டனர், மின் வாரியம். ‘டெக்னிகல்’ என்று சொல்லப்பட்ட மண்ணாங்கட்டி வாதங்களை தீர விசாரணைக்குப் பின் நிராகரித்த சென்னை உச்ச நீதி மன்றம் சொன்னது:
‘அறுந்த மின்கயிறு அடித்த ஷாக் என்பதை மின் வாரியம் ஒத்துக்கொண்டதும், பின்னர் செய்த சீரமைப்பும் ஆவணங்களில் உள்ளன. ஒம்மாச்சியை குற்றம் சொல்லாதே. ரூ 5 லக்ஷம் நஷ்ட ஈடு.’
தர்மமிகு சென்னையில் நூற்றுக்கணக்கான இடங்களில் மின்கயிறுகள் தாறுமாறாக  தொங்கலாட்டம் போடுகின்றன. மாநிலம்/ தேசம் முச்சூடும் அதே. யாராவது சாகுவதற்கு முன், விழிப்புணர்ச்சி இயக்கம் நடத்துங்கள்.
மற்றொரு இளிச்சவாயன். திரு. எஸ். நாகராஜன்,”மேக் மை ட்ரிப்” என்ற சுற்றுலா கம்பெனியிடம் ரூ.90.000/- கட்டி, குடும்ப சுற்றுலாவுக்கு பதிவு செய்தார். சிலருக்கு வீஸா கிடைக்காததால், ரத்து செய்ய கோரினார். ஒரு மாதமே இருக்கும் காலகட்டத்தில் ரத்து செய்தால், ஒரு காசு கூடக்கிடைக்காது என்று போட்ட கண்டிஷனை காட்டி, ‘போடா பொக்கை’ என்று விட்டார்கள். அந்த கண்டிஷனே தப்பு என்று அந்த தன்னிச்சை கண்டிஷனையே நிராகரித்து, ரூ. 90,000/- + நஷ்ட ஈடு ரூ.7,000/- திரு.நாகராஜனிடம் கொடுக்கும்படி ஆணையிட்டது. You must always read the fine print.
வீராதி வீரன்! சூராதி சூரன்! யாரு? ஆர்.கே.சத்பதி, ராணுவ மைய விஞ்ஞானி (DRDO). அய்யா ஹைதராபாத் போன இடத்திலெ, ஒரு கலாட்டா.  போறாத காலம். போறப்போக்கில், ஓடிப்போன இளைஞன், இவரை கத்தியால் குத்தி விட்டான்.  ரத்த மயம். வலி பொறுக்காவிடினும், மனம் தளராமல், தானே நடந்து சென்று போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னால், ‘மஞ்சள் பத்திரிகை’ புகழ் லக்ஷ்மீகாந்தன் மாம்பலம் சாரங்கபாணி தெருவில் ரிக்க்ஷாவில் வரும் போது, ஒருவன் வயிற்றில் குத்த, ஒரு கையால் குடலை அமுக்கிக்கொண்டு, ஒரு கையால் குத்தியவனை பிடித்துக்கொண்டு, போலீஸிடம் போனதாக, படித்த ஞாபகம். பாடபேதம் இருக்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://www.tamilmurasu.co.in/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_96997797490.jpg

Wednesday, June 25, 2014

பனையூர் நோட்ஸ் 5:நெடுநல்வாடை 5

பனையூர் நோட்ஸ் 5


இன்னம்பூரான்
25 06 2013

நெடுநல்வாடை  5
ஐயகோ! என்ன குளிரடா! மலையை உறைய வைக்கும் போல் இருக்கிறதே...
(தொடருகிறது)
மழையும், மலையும், குளிரும் ஐம்பூதங்களை நமக்கு நினவு படுத்தின. அவையாவன: விண்வெளி, காற்று, தீ, நீர், மண். விண்வெளி என்ற ஆகாசகோட்டை நம் கற்பனைக்கெட்டாத அளவு பெரியது. 
விண்டுரைக்க, அறிய, அரியதாய் 
     விரிந்த வான வெளியென நின்றனை. 
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை 
     அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணுவணு வாக்கினால் 
     வருவ தெத்தனை அத்தனை யோசனை, 
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

(மகாசக்தி வாழ்த்து - 1: மஹாகவி பாரதியார்)
நாம் வாழும் பூமண்டலம் தான் விண்வெளியில் உயர்ந்தது என்ற பத்தாம்பசலி தற்பெருமை சுக்குநூறாக உடைந்து விட்டது. அது பிரபஞ்சத்தின் ஒரு சிறுதுளியே என்று மேற்கத்திய விஞ்ஞானம் அறிந்து கொள்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரியபட்டர், வராஹமிஹிரர், பாஸ்கராச்சாரியார் போன்ற இந்திய விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் துல்லியமாக கணித்து வைத்துள்ளனர். தற்காலம்  விண்வெளிப்பயணம், ஏவுகணை உந்துகை, ஏன் விண்வெளிக் குடியேற்றம் வரை, ஏதோ பக்கத்துப் பேட்டை போக்குவரத்தைப்போல பேசப்படுகிறது. க்யூராசிடி என்ற நவீன விண்கோள் கிரகத்தில் இறங்கி இரண்டு வருஷக்குடித்தனம் செய்யப்போகிறது. இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடுமோ!
வாயு தேவன் தென்றலாகவும் வருவான்; அனுமனையும், பீமனையும் பெற்ற அந்த பலசாலி தந்தை புயலாகவும் வீசுவான்;தென்றலாகவும் வந்து மகிழ்வூட்டுவான்; ஆடை கலைப்பான். முகத்திலே மிருதுவாக மேய்ந்து புன்னகை தருவிப்பான்; பாவையின் தோகையை ஊடுருவி கூந்தலை அலக்கழித்து ராஸலீலை செய்திடுவான்.  மேகத்தை விரட்டுவான். பாவேந்தர் பாரதி தாசன் ‘தென்றல்’ என்ற கவிதையில் சொல்வதைப்போல:


மென்காற்றும் வன்காற்றும்
அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 14
.......
உன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்!
பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 17

தென்றலின் குறும்பு
உலைத்தீயை ஊது கின்றாய்; உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை! 18
****
அக்னி தேவன் என்று பூஜிக்கப்படும் ‘தீ’ யை பற்றி மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதியதை மீள்பதிவு செய்கிறேன்.
தேவன் வந்தான்!
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒலி!
எங்கிருந்தோ ஒலிக்கிறது! 
எதிரொலியும் மென்மையாக!
வேதம். ரிக்வேதம். 
ப்ரபஞ்சம் ஜனித்தது. 
வேத அத்யனனம் தொடர்கிறது. 
ஒளி!
என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
சாமகிரியைகள் எல்லாம் புதியவை. மங்கலமானவை. சாஸ்த்ரோக்தம்.
எடுத்து வைத்து விட்டேன், குருநாதா!
யாகசாலைக்குக் கோலம் போட்டுவிட்டேன். 
செம்மண் கரையோரங்கள். வெள்ளைக்கோலங்கள், பிராணநாதா!
புஷ்பமாலைகள் வகைக்கு ஒன்று, தொடுத்துக் கோர்த்து அடுக்கியிருக்கிறேன், அப்பா!
முக்கனிகளும் கொணர்ந்தேன், தந்தையே! கூடை கூடையாக.
ஸ்வாமி! நாங்கள் தான் அண்டை, அயல். அணிகள் பல கொணர்ந்தோம்; ஆபரணக்குவியல் பார்த்தீரோ! நவரத்னங்கள் கொட்டிக்கிடப்பதைக் கண்டீரோ! எல்லாம் சமர்ப்பணம்.
சிஷ்யா! அக்னிதேவன் வந்தாரே. முகமன் கூறினாயோ?
ஸ்வாமி! கடைந்துகொண்டு இருக்கிறோம். 
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
எழுந்தருளவேண்டும், ஐயனே! 
நன்நிமித்தத்தீயே வருக. 
தெய்வத்திருமகனே வருக.
அன்னை ‘ஸ்வாஹா’ வந்திருக்கிறாளோ!
இருவரும் ஆசனத்தில் அமருக. 
அலங்காரங்கள், ஜோடனை, ஷோடசோபசாரங்கள், முகஸ்துதி, சாஷ்டாங்க நமஸ்காரம்.
அக்னிதேவனுக்கு அதீதப் ப்ரீதீ! சிஷ்யா! மறுபடியும் எல்லாரும் தண்டனிடுவோம்.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒரு பொறி பிறந்தது. 
பிறகு பறந்தது. 
தீ மூண்டது.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
கொழுந்து விட்டு எரிந்தது.
ஸ்வாஹா: ஸ்வாஹா: ஸ்வாஹா: ஆஹூதி! பூர்ணாஹூதி! 
அக்னிதேவன் ஸ்வீகரித்துக்கொண்டார். 
அக்னி தழுவ, தழுவ, முனகும் சப்தங்கள். 
மற்றபடி நிசப்தம்.
எனக்கு பசிக்கிறது.
அம்மா! அப்பாவுக்கு பசிக்கிறதாம்.
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!
அடுப்பில் உனக்கு வாசம். வா! சடுதியில் வா! அவருக்கு பசி தாங்காது.
போஜனம்! தாம்பூலம்! அடுப்பில் பூனை! கணகணப்பும் உன் நல்வரவே!
என்ன அங்கே ஹீனக்குரல்! 
அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார், தந்தையே!
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஸ்வாமி! ரக்ஷிக்கணும். 
அப்படியெல்லாம் பேசக்கூடாது. யான் சாமான்யன்.
ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை. 
எஜமானன் வந்தார். என் அன்னை...
தெரியுமே! அதனால் தான் அக்னி தேவன் யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார் போலும்!
ஈஷ்வரோ ரக்ஷது!
சாயுங்காலம்! 
சூர்யன் முழுதும் அஸ்தமிக்கவில்லை.
சந்திரோதய வேளை.
இருட்டவில்லை. மங்கிவிட்டது.
ஸ்வாமி! அடியேன் உங்கள் அகத்துக்கு எதிர்த்த வாடை.
சாகரம் சென்று வருகிறீர்களா?
ஆம் ஸ்வாமி! அக்னிதேவன் வந்தார்.
ஆற, அமர தழுவினார், என் அன்னையை.
உன் அன்னை அங்கு செல்லவே இல்லை, அப்பனே!
ஆம்! ஸ்வாமி! இல்லை, ஸ்வாமி!
அக்னி! பிறகு ஜலம்! இனி நான் என் அம்மாவை காண முடியாது. 
அவள் உன்னுள் என்றும் வாழ்வாள். உனக்கும் நித்யவாஸ ப்ராப்தம்.
अग्नि॒म् ई॑ळे पुरो॒हि॑तं यज्ञ॒स्य॑ देव॒म् ऋत्वि॒ज॑म् । होता॑रं रत्नधा॒त॑मम् ॥
ஒலி!
எங்கிருந்தோ ஒலிக்கிறது! 
எதிரொலியும் மென்மையாக!
வேதம். ரிக்வேதம். 
ப்ரபஞ்சம் ஜனித்தது. 
வேத அத்யனனம் தொடர்கிறது. 
ஒளி!
என்னே பிரகாசம்! சூர்யனின் தகிக்கும் சூடு! சந்திரனின் குளிர்ந்த நிலவு!
அக்னிதேவனே! சுஸ்வாகதம்! நல்வரவு! வா! சடுதியில் வா!

(இன்னம்பூரான்
 02 07 2011)
நீரின் இன்றியமையாதை அது ‘அமிழ்தம்’ என்று சுருங்கச்சொல்லி தெளிவாக விளங்க வைத்து விட்டார், திருவள்ளுவர். 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று...நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.’ [குறள் 11 & 20]

தாய்மண்ணை தொட்டு வணங்குவது உலக மரபு. இன்னம்பூரில் நானும் செய்கிறேன். பிரதமர் மோடியும் செய்தார். போப்பாண்டவரும் செய்தார். 

‘நீர் எனும் பூதத்திலிருந்து தோண்றிய பூமி எனும் சட பூதத்தில், தன் சுய தன்மையான மணமும், நீரின் சுவையும், நெருப்பின் வடிவத்தையும், காற்றின் தொடு உணர்வு (ஸ்பர்சம்), ஆகாயத்தின் ஒலி ஆகிய ஐந்து தன்மைகளை கொண்டுள்ளது.னே முதன்மை.’ என்று பஞ்சஈகரணத்தில் விளைவுகளை ஆராய்ந்து எழுதிய ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்துத் துறவி சுவாமி சதானந்தர் கூறுகிறார்.

மழை பெய்தால் உயிர் துளிர்க்கும்; மலரும்; காய்க்கும்; கனி தரும்; தேனீ மொய்க்கும்; மகரந்தம் பரவும்; விதை ஊன்றும்; மறுபடியும் உயிர் துளிர்க்கும்; மலரும்; காய்க்கும்; கனி தரும்; தேனீ மொய்க்கும்; மகரந்தம் பரவும்; விதை ஊன்றும். இறைவா! என்னே உன் கருணை ! 

சுற்றி வளைத்து நெடுநல்வாடைக்கு வருகிறோம். உரை நச்சினார்க்கினியார்; சுவடிகளை பரிசோதித்துப் பதிவு செய்தது, தமிழ் தாத்தா உ வே சா.

மழைக்காலச் செழிப்பு
புன் கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்
பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண் மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப
அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு
தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க  (13 – 28)

பாடலுக்கு
சொற்பொருள் விளக்கம்
                புன்கொடி முசுண்டை - மென்மையான முசுண்டைக்கொடி, பொதிப்புற வான்பூ - பருத்த வெண்ணிறப் பூ, பொன்போல் பீரமொடு - பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு, புதல் புதல் - புதர்கள் தொறும், மலர - மலர்ந்திருக்க, பைங்காற் கொக்கின் - பசுங்காலையுடைய கொக்கின், மென்பறை - மென்மையான சிறகு, தொழுதி - கூட்டம், இருங்களி பரந்த - கரிய வண்டல் மணலில் பரந்து, ஈர வெண்மனல் - ஈரமான வெண்மணலில், செவ்வரி நாரையொடு - சிவந்த வரிகளையுடைய நாரைகளோடு, எவ்வாயும் கவர - எந்தெந்த இடங்களில் மீன்கள் கிடைக்கின்றதோ  அங்கு நின்று மீன்களைக் கரவ, கயல் அறல் எதிர - மீன்கள் நீரினை எதிர்த்து வர, கடும்புனல் - வேகமாக வந்த நீரின் ஓட்டம், சாஅய் - தளர்ந்து, பெயல் - மழை, உலந்து - நீங்கிய, எழுந்த - எழுந்த, பொங்கல் வெண்மழை - மிகுதியான வேண்மேகம், அகல் இரு விசும்புன் - அகன்ற பெரிய வானத்தில், துவலை கற்ப - மழைத்துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாக (தூவிக்கொண்டிருந்தன).
                அங்கண் - அவ்விடத்தில், அகல் வயல் - அகன்ற வயல்களில், ஆர் பெயல் - நிறைவாக மழை, கலித்து - செழித்து; வளர்ந்த, வண் தோட்டு - வளப்பமான கதிர்த் தாளினை உடைய, நெல்லின் - நெல்லின், வருகதிர் வணங்க - விளைந்த கதிர் வணங்கி நிற்க, முழுமுதற் கமுகின் - நன்கு செழித்து வளர்ந்த பாக்கு மரத்தின், மணி உறழ் - நீல மணி போன்ற, எருத்தின் - கழுத்துப் பகுதியில், கொழு மடல் - செழித்து வளர்ந்துள்ள மடல்களில், அவிழ்ந்த - காய்த்துள்ள, குழுஉக்கொள் பெருங்குலை - கூட்டமாக இருக்கும் பெரிய பாக்குக் குலைகள், நுண்நீர் - உள்ளிருக்கும் நீர் வற்றி, தெவிள வீங்கி - திரண்டு புடைத்து, புடை திரண்டு - பக்கங்களில் பருத்து, தெண்நீர் - தெளிந்த நீரினையுடைய, பசுங்காய் - பசுமையான காய், சேறு கொள முற்ற - இனிமையான காய்களாக முற்ற, நளிகொள் - செறிந்து விளங்கும், சிமைய - மலையுச்சியில், விரவுமலர் - பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கம், வியன்கா - அகன்ற சோலையில், குளிர்கொள் சினைய - குளிர்ச்சியான மரக்கிளைகளில், குருஉத் துளி - குருத்துக்களில் மழைத்துளி, தூங்க - இடையறாது விழுந்து கொண்டிருக்க,
கருத்துரை
மென்மையான முசுண்டைக் கொடியின் பருத்த வெண்ணிறப் பூக்கள், பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு புதர்கள் தோறும் மலர்ந்திருந்தன.  பசுங்கால்களையும் மென்மையான சிறகினையும் கொண்ட கொக்கின் கூட்டங்கள், கருநிற வண்டல் மணல் பரவிக் கிடக்கும் ஈரமான வெண்மணலில் செவ்வரி படர்ந்த நாரைகளோடு நின்று கொண்டிருந்தன.  அவை மழைநீரின் பெருக்குத் தளர்ந்தவுடன் அந்நீரில் எதிர்த்து வரும் மீன்களை எந்தெந்த இடங்களிலிருந்து கவர முடியுமோ அங்கே நின்று கொண்டு கவர்ந்தன.  மழை நீங்கிய அகன்ற வானத்தில் எழுந்த வெண்மேகம் மழைத்துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாகத் தூவிக் கொண்டேயிருந்தன.
                அகன்ற வயல்களில் நிறைவாக மழை பெய்ததினால், செழித்து வளர்ந்த வளப்பமான தாளினையுடைய நெற்கதிர்கள் முற்றி வணங்கி நின்றன.  நன்கு செழித்து வளர்ந்த பருத்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப் பகுதியிலுள்ள மடல்களில் காய்ந்திருக்கும் பாக்குக் குலைகளின் உள்ளிருக்கும் நீர் வற்றி பருத்தும், பசுமையான காய் இனிமையான காய்களாக முற்றின. மலை உச்சியில் பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில், குளிர்ச்சியான குருந்த மரக்கிளைகளின் குருத்துகளில் இருந்து மழைத்துளிகள் இடையறாது விழுந்து கொண்டேயிருந்தன.
=#-
சித்திரத்துக்கு நன்றி:  http://hdfons.com/wp-content/uploads/2013/01/Rain-Drops-Wallpaper-1.jpg