Showing posts with label 17. Show all posts
Showing posts with label 17. Show all posts

Thursday, September 22, 2016

சிவகாமியின் செல்வன் 17

சிவகாமியின் செல்வன் 17

இன்னம்பூரான்

22 09 2016

காந்திஜியின் ஹரிஜன் பதிவு ஒரு பெரிய கலவரத்தையே ஏற்படுத்தி விட்டது. ராஜாஜி மீது அவர் வைத்திருந்த மதிப்பு யாவரும் அறிந்ததே. ஆனால், அவர் மேடையில் அருகில் அமர்ந்திருந்த காமராஜரை இவ்வாறு மறைமுகமாக கண்டித்த விதம் வியப்பையும், திகைப்பையும், எதிர்ப்பையும் சந்தித்தது.
ஹிந்து நாளிதழுக்கு 15/16-2-1946 அளித்த பேட்டியில் காமராஜர்,

" காந்திஜியின் கட்டுரைக்ககு பிறகு பார்லிமெண்ட் போர்டிலிருந்து ராஜிநாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை.ஏனெனில், இந்த கருத்துப்போர் பார்லிமெண்ட் போர்டின் செயல் பொருட்டு எழுந்தது. நேற்று அதன் கூட்டம் கூடியது. காந்திஜியின் கட்டுரையை நாம் கவனித்து செயல்படவேண்டும் என்பதால், அந்த கூட்டத்தை ஒத்திப் போட்டேன். எனக்கு அந்த கட்டுரை ஒரு ஷாக். தமிழ் நாட்டு காங்கிரசின் தலைவன், நான்.அதன் விதிமுறை படி தான், நான் செயற்குழுவை நியமித்தேன். எனவே, காந்திஜி கூறியது என்னை பற்றி தான். அவருக்கு மரியாதை செலுத்திய நான், சென்னையிலும், தமிழ் நாடு சுற்றுப்பயணத்திலும் அவருக்குக் கூப்பிடு தூரத்தில் தான் இருந்தேன்.செயற்குழு அங்கத்தினர்களும் அப்படித்தான் இருந்தனர். காந்திஜி எங்கள் ஒருவரிடமும் காங்கிரஸ் விவகாரங்களை பற்றி பிரஸ்தாபிக்கவில்லை என்பது எனக்கு மனவலியை அளிக்கிறது. 'கும்பல்' என்ற சொல்லை அவர் பிரயோகம் செய்தது என்னை மிகவும் பாதித்தது. என்னுடைய செயற்குழுவும் நானும் விடுதலை போராட்டத்துக்கு உற்ற வழியாக மட்டுமே இந்த பார்லிமெண்ட் போர்ட் வழிமுறையை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நான் சிறையிலிருந்து விடுபட்ட பின், என்னுடைய அணுகுமுறையை பற்றி பல மேடைகளில் பேசியிருக்கிறேன். எனக்கு பதவி ஆசை இல்லை.

ராஜாஜி மீது பொதுஜன கிளர்ச்சிக்குக் காரணம், அவருடைய பாகிஸ்தான் பற்றிய தீர்மானமும் , ராஜிநாமாவும், காங்கிரஸ் கட்சியிலும் பொது மக்களிடமும் ஏற்படுத்திய எதிர்வினை தான்.காந்திஜியின் கட்டுரைக்கு பிறகு பார்லிமெண்ட் போர்டிலிருந்து ராஜிநாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. திருவாளர்கள் டி.எஸ்.அவினாசிலிங்கம், என்.முத்துரங்க முதலியார், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், திருமதி.ருக்மணி லக்ஷ்மிபதி ஆகீயோரும் என்னுடன் வெளியேறுவதாக இருந்தாலும், தேர்தல் பணிகளுக்கு சொற்ப நாட்கள் மட்டுமே இருப்பதால், ஒட்டுமொத்தமான ராஜிநாமா உதவாது என்பதால், அவர்களை ராஜிநாமா செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு சம்மதித்த அவர்களுக்கு என் நன்றி. என்னை பின்பற்றி வெளியேற அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

நான் வெளியேறத்தான் வேண்டும். வேறு வழியில்லை. இருபது வருடங்களாக, அண்ணல் காந்தி எனக்கு தலைவர். அவரை பின்பற்றுவதிலும், அவர் மீது எனக்கு உள்ள அசையாத நம்பிக்கையும் மாறாதவை. அவருக்கு மனவலி கொடுத்தது நான் தான் என்பதால்,நான் இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. இங்கும், மத்திய குழுவாலும் எடுக்கப்பட்ட பார்லிமைண்ட் குழுவின் தீர்மானங்கள் என்னை கட்டுப்படுத்தும். முழுமனதுடன் அவற்றை நிறைவேற்றுவேன்."