Sunday, November 13, 2016

Life Certificate

Time for submission of Life Certificate extended up to 15th January 2017.
We suggested extension unto 31 Dec 2017. The above is Government's response within 24 hours.

Friday, November 11, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [1]



கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[1]

இன்னம்பூரான்
12 11 2016
சில நாட்களாக ஊடகங்களும் பூடகங்களும் மத்திய அரசு ரூ. 1000/- & ரூ. 500/- கரன்சி நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை பிறப்பித்த பின், ஓயாமல் செய்திகள்/ கருத்துக்கள்/ அபிப்ராயங்கள்/ சிக்கல்கள்/ தீர்வுகள் ஆகியவை பற்றி பறை சாற்றி வருகின்றன. நேற்று பிறந்த குழந்தை கூட குறை கூறுகிறது என்ற மிகையை யதார்த்தமாகக் கூறலாம்.

இந்த கனஜோர் நடவடிக்கையை வரவேற்கும் நான், சில தகவல் துணுக்குகளை மட்டும் ஓரோரு வரியில் இந்த மையத்தில் தருகிறேன்.

எல்லாம் பொது மன்றத்தில் வந்தவை தான் என்று உறுதி அளிக்கிறேன். தனித்தனியாக உசாத்துணை கொடுக்க இயலாது.

  1. 21/2 லக்ஷம் பொறும் போலி நோட்டுகளை கேந்திரபாராவிலிருந்து குர்தா ரோடு வந்த சுமித் குமார் துடு என்ற வாலிபன் வங்கியில் செலுத்தும்போது பிடிபட்டான். அவன் ஒரு தேசத்துரோகி கும்பலை சார்ந்தவன் என்று சொல்லவும் வேண்டுமா?
  2. மும்பையிலும், டில்லியிலும், வருமான வரி அதிகாரிகள் 12 ஹவாலா துரோகிகளையும், உண்ட வீட்டுக்கு துரோகம் செய்த ஆபரண வியாபாரிகளையும் துளைத்து எடுத்தார்கள் - ஏன்? அவர்கள் சட்டவிரோதமாக செல்லா நோட்டுகளை திரவியமாக்கினர்.
  3. கோவாப்பரேட்டிவ் வங்கிகளில் விதிகள் மீறப்பட்டன. அவர்கள் தலையிலும் கை.
  4. ஹவாலா திவாலானதால் வெளி நாட்டிலிருந்து வரி செலுத்தாமல், வங்கிக்கட்டணம் கட்டாமல் தாய்நாட்டுக்கு பல வருடங்களாக துரோகம் செய்த பாவிகள், தேள் கொட்டிய திருடர்கள் போல் தவிக்கின்றனர்
  5. அவர்களிடம் பெற்ற பணத்தை என் செய்வது என்று தெரியாமல், அரசியலர் ஆதரவுடன் பல வருடங்களாக மக்களை ஏமாற்றியவர்கள் சிக்கி வருகிறார்கள்.
  6. ஏழு வருடங்களாக தி.மு.க. ‘அற’ கட்டளை சொத்து வரி கட்டவில்லை. இன்றைய பாக்கி ரூ.72 லக்ஷம். வாத்தியார் நின்று கொண்டு.....
  7. டாஸ்மாக் கடைகளில் விற்பனை கடும் சரிவு. மது மயக்கம் நாடுவோர் மால்களில் க்ரெடிட் கார்டு கொடுத்து வாங்கி சரியலாம்.
  8. வாட்ஸ் அப்: திருவான்மியூர் குப்பை தொட்டியில் நோட்டுகள்! ~இது வதந்தியாம்.
  9. ஹிந்தி நடிகை பிபாஷா பாசு முட்டை வாங்க கடன் வாங்க நேரிட்டதால், ‘கொதிப்பு’ ~ செய்தி 
  10. திருமலை ஒம்மாச்சி சார்பில் அந்த கோயில் ‘அறங்காவலர்கள்’ செல்லா நோட்டுகளையும் உண்டியலில் பெற்றுக்கொள்கிறார்கள். யாத்திரீகர்களை என்றும் கவனிக்கும் அவர்கள் கனிவுடன் இரண்டாவது உண்டியல் பெட்டியையும் வைத்துள்ளார்கள். மோடி என்ன சொல்வார்? ஒம்மாச்சி என்ன நினைப்பார்?

அடக்கத்துடன்,
இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி: 
http://indianexpresstv.com/vvtimages/news-images/thumbs/tiger-information-center-is-across-the-country-நாடெங்கும்-அமைகிறது-புலிகள்-தகவல்-மையம்-07-08-16.jpg















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 8, 2016

துட்டும் நோட்டும்


துட்டும் நோட்டும்


ஆயிரம் ரூபாய்/ ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. அது நல்லது என்பது என் கருத்து.

அறுவை சிகிச்சை தேவையாகும்போது, களிம்பு உதவாது. ஓரிரு நாட்கள் பொது ஜனத்துக்கு சின்ன கஷ்டங்கள். என்னிடம் வாடகை வண்டிக்கு பணம் இல்லை, இன்று தமிழ் சந்திப்புக்கு செல்ல. அதை பெரிது படுத்தலாமா? பொடி நடையா போனால் போச்சு. நடப்பில் பாகிஸ்தான் கள்ளப்பணம் இருப்பது உமக்கு தெரியுமா? தென்னிந்தியர்களுக்கு போர் என்ன என்று தெரியாது. சொகுசு வாழ்க்கை. அதான் முணுமுணுப்பு.
அன்புடன்,
இன்னம்பூரான்
http://www.noolulagam.com/book_images/27804.jpg

Monday, November 7, 2016

உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

Innamburan S.Soundararajan

உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

Innamburan S.Soundararajan Mon, Nov 7, 2016 at 10:32 PM


உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

நாத்திகம் உட்பட எம்மதமும் சம்மதமே என்பதே எல்லா மதாபிமானங்களின், நாத்திகம் உட்பட, உள்ளுறை. அதாவது, நமது நம்பிக்கை பாட்டைகள் எத்தனை முரண் தெரிவித்தாலும், மனிதநேயம் அடி வாங்காது, காளை. இங்கிலாந்தில் பெரும்பாலாக மதாபிமானம் ( நாத்திகம் உட்பட) அன்றாட வாழ்க்கையில் இடம் பெறுவதில்லை. அதனால், மாதாகோயில்கள் விற்கப்படுவதை காணலாம். கோயில்களோ, மசூதிகளோ, மாதா கோயில்களோ மனிதர்கள் வீடு போல் வாழ உகந்தவை அல்ல. தெய்வங்கள் அங்கு வாழலாம். சில இடங்களில் சினிமா தியேட்டர் கட்டலாம். எனவே, யாதொரு விதமான பிரச்னைகள் இல்லாமல் அவை மசூதியாக/ குருத்வாராவாக, கிருஷ்ணன் கோயில்களாக மாறி விடுகின்றன. இதில் குற்றமே இல்லை. எனினும், குற்றம் இழைத்தன் விளைவாக ஒம்மாச்சிகள் எல்லா மதங்களிலும், நாத்திகத்திலும் ஓங்கி வள்ர்கின்றன. ஃபைஸாபாத்தில், ஒரு மசூதி அவ்வாறு கட்டப்பட்டது. இராமபிரான் வாயை திறக்கவில்லை. மசூதி  இந்து மத தீவிர அபிமானிகளால் இடிக்கப்பட்டது. பக்கத்து வீட்டில் இராமர். ஆனாலும் அங்கு மனிதநேயம் மறையவில்லை. அந்த ஊரில் ஒரு கனவின் நல்வரவாக ஒரு தென்னிந்திய ராமர் கோயில் உள்ளது. கனவை பற்றி சொன்னால்,இவ்விடம் 'பிலு பிலு' என்று சண்டை போடுபவர்கள் உளர். அவர்களை கண்டாலே, ஏன் காணாமல் கூட, எனக்கு அப்படி ஒரு அச்சம்!. மதவாத பிரச்னைக்கு பயந்து ஒரு வருடம் ராம நவமி உத்ஸவத்தை ரத்து செய்ய நினைத்தார்கள். ஆண்டாண்டு தோறும் புஷ்பம் கொண்டு தரும் இஸ்லாமிய நண்பர்கள், 'கவலையற்க' என்று ஆதரவும், பாதுகாப்பும் அளித்தனர். உத்ஸவமும் 'ஜாம் ஜாம்' என்று நடந்தது. 

ஆனாலும் அதருமமிகு சென்னையில் ஒரு நடுத்தெரு ராமசாமி கோயில் இருக்கிறது. திறந்தவெளி சிலை, சில அனுமார் கோயில்கள் மாதிரி. நேர்த்திக்கடன், ஜபம், தபம், யாகம், யஞ்கம், விளக்கு பூசை, மண்தரை சாப்பாடு, மொட்டை, பார்ப்பனர் கோயிலில் பார்ப்பன பூசாரியை வைத்து வடமொழி அர்ச்சனை என்றெல்லாம் இயங்கும் ராமசாமி பக்தர்கள், அந்த சிலாரூபத்தின் கல்வெட்டில் இருக்கும் 'கடவுளை நம்புவோன் முட்டாள்' என்ற வாசகத்தை ஸ்வீகரித்துக்கொண்டார்களோ அல்லது உள்ளுறை பொருட்டு அதை விட்டு வைத்திருக்கிறார்களோ? என்னவோ! நான் இரண்டாவது நிலைப்பாட்டை நம்புகிறேன். திரு. கருணாநிதியின் மகளிர் அவருக்காக, கோயிலுக்கு போனது கேட்டு, எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக்கொண்டேன்.


Friday, November 4, 2016

வம்பும் தும்பும் ~5





வம்பும் தும்பும் ~5

இன்னம்பூரான்
நவம்பர் 4, 2016

காலம் கெட்டுப்போச்சு. சுயம்புவாக புவனியெல்லாம் பவனி வரும் வம்பும் தும்பும் தேடினால் தான் கிடைக்கும் போல இருக்கிறது. காலையில் நாளிதழ் பிரிக்கவே, (படிக்கிறது அப்றம்) பயமாக இருக்கிறது. பக்கத்துக்குப் பக்கம் கொலை, வன்புணர்வு, கொள்ளை, இத்யாதி.

ஆனாலும், இந்த ‘ அடுத்த வீட்டுக்காரன் நெய்யே! என் பொண்டாட்டி கையே’ என்கிற கோட்பாடு இந்திய பொருளிருட்டல் விவகாரத்தில் பூதாகாரமாக வளைய வருகிறது.  அன்றைக்கு ஆடிட்டர் ஜெனெரல் ‘ஐயோ! அப்பா!’ என்று அடித்துக்கொண்ட போது கேள்வி முறையில்லை. ஓஎன் ஜிசி ஒரு அரசு நிறுவனம். நேரு காலத்தில் கே.டி. மாளவியா என்ற மந்திரி தான் இதனுடைய பிதாமஹன். பர்மா ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ என்ற மூன்று அமெரிக்க எண்ணை கம்பெனிகள் தான் இந்திய எண்ணை கிணறாளர்கள், ஊற்றிக்கெடுப்பவர்கள். அவர்களின் கொட்டத்தை அடக்கத்தான் ஓஎன்ஜிஸி. அவர்களின் எண்ணைக்கிணறுகளிலிருந்து பாய்ந்த எரிவாயுவை (As much as 11.122 billion cubic metres of ONGC gas had migrated from its Godavari-PML and KG-DWN-98/2 blocks to adjoining KG-D6 of RIL between April 1, 2009 and March 31, 2015. At prevailing prices, the gas was worth Rs 11,000 crore.)
ஸ்வாஹாஹா செய்த வகையில் ரிலையன்ஸ் இண்டெஸ்ட்ரீஸ் அரசுக்கு நியாயமாக கொடுக்கவேண்டியது $ 1.55 பிலியன் என்று கூறிய ஏ.பி.ஷா, கமிட்டி ஆகஸ்ட் 30 அன்று பிரகடனம் செய்தது. ஆகஸ்ட் போச்சு; செப்டம்பர் போச்சு; அக்டோபர் போச்சு. இன்று செய்தி வருகிறது. அந்த கமிட்டி இந்த ‘அப்பாவி’
பரிவர்த்தனையை அந்த தனியார் கம்பெனிக்கு நியாயமற்ற செல்வ வரவு என்கிறது. இல்லை என்று சொல்லமுடியாது என்றாலும், 2009லிருந்து வறண்டு போன கிணறாளும் ஓஎன் ஜீ.ஸி. என்ன தான் செய்து கொண்டிருந்தது?

வாலு தான் போச்சு! தும்பு என் செய்யும்? பார்க்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, October 30, 2016

சிவகாமியின் செல்வன் 21

சிவகாமியின் செல்வன் 21

Innamburan S.Soundararajan Sun, Oct 30, 2016 at 8:13 PM
சிவகாமியின் செல்வன் 21


இன்னம்பூரான்
அக்டோபர் 30, 2016
[சிவகாமியின் செல்வன் 20: இறுதி வரி
பிடிஎஃப் கோப்பில் முழு  அத்தியாயம்]


[காந்திஜி, ‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~தமிழ் லெக்சிகன்) என்ற சொல்லை வழக்கம் போல் நன்கு சிந்தித்த பின் தான் பயன்படுத்தினார்....] [பற்றிக் கொண்டது  என்னமோ தீப்பொறி !.]

“...இந்த காரணம், இந்திய அரசியல் உலகத்தின் சாபக்கேடான தீப்பொறி.” 


காமராஜரை பலி வாங்கிய அந்தத் தீப்பொறி தனியார் வணிகத்தின், என்றென்றும் பரவலாக காணப்படும் அரசியலில், மறைமுகமான நுழைவு. விடுதலைக்கு முன்பு ஜி.டி.பிர்லா காந்திஜியை தன் முதலீட்டாக பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்பவர்கள் உண்டு. 1990 களில் ஒரு பெரிய கருத்தரங்கத்தில், ஒரு மும்பை செல்வந்தர் டில்லி போலீஸ் கமிஷனரை ‘நாங்கள் அமர்த்தினோம்’ என்று என்னிடம் கூறினார். இத்தகைய ‘முதலையீடுகள்’ இந்தியாவில் மிகவும் அதிகரித்து விட்டன. அவற்றின் தந்திர, மந்திர, விசித்திர முதலையீட்டு தலையீடுகள் மக்களாட்சியை கேலி செய்கின்றன. பொது மக்களின் நலனை திருடுகின்றன. அரசியல் நிர்வாகத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் கைப்பற்றி, பகல் கொள்ளை அடிக்கின்றன. தொட்டது எல்லாம் மஞ்சம், அதிலும் லஞ்சம், வலிமை படைத்தவர்களிடம் தஞ்சம், மக்களுக்குப் பஞ்சம் என்று ஐம்பது வருடங்களாக சராசரி குடிமகனை ஏமாற்றி, பின்னர் அவனையும் அவளையும் தன் கைக்குள் போட்டு கொண்டு, அமுக்கி விடுகின்றன. சில தமிழ் ஏடுகள், பல வருடங்களாகவே, மக்கள் பிரதிநிதிகள், மந்திரிமார்கள், அவர்களின் மெய்காப்பாளர்கள், சுற்றம், பினாமி எல்லாம்  அத்து மீறீ சம்பாதிப்பது, கூத்தடிப்பதைப் பற்றி ஆணித்தரமாக எழுதி விடுகின்றன. இதற்கு எந்த கட்சியும் விலக்கு அல்ல.  

இந்த அமங்கலமான நிலை ஏற்பட்டது எப்படி என்பதை வரலாற்று நோக்கில் புரிந்து கொள்வது நலம் பயக்கும். 

‘வரலாற்றில் மறைக்கப்பட்ட / புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் ஒருநாள் தமக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள்’ என்ற பாபா அம்பேத்காரின் வாக்கு யாவரையும் பொருட்டுத் தான் அமைகிறது. அவருக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த மஹாத்மா பூலே அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள், பார்ப்பனர்கள் தான்.

சுருங்கச்சொல்லின் 1852லியே தொடங்கப்பட்டு, விரைவில் முடங்கிய சென்னை மக்கள் சங்கம், 1884ல் துவக்கப்பட்ட சென்னை மகாஜனசங்கம் ஆகியவை பிராமணரல்லாதோர் முன்னேற்றத்தை விரும்பின. பார்ப்பன விரோதம் துவங்கியது 1884ல், 133 வருடங்களுக்கு முன்னால். அரசு பதவிகளில் பார்ப்பனர்கள் அதிக இடம் பிடிப்பது தான், இந்த வெறுப்புக்குக் காரணம். நான் தணிக்கை இலாக்காவை சார்ந்தவன். எங்கள் IAAS நிர்வாக அமைப்பை  Indian Iyer & Iyengar Service என்று 1940 களில் கேலி செய்வது உண்டு. தற்காலம் அது நாங்கள் பெருமைப்பட வேண்டிய அல்லி ராஜ்யம் ஆகி விட்டது. 150 வருடங்களுக்கு மேல் எங்கள் துறையில் ஆளெடுப்பது தகுதி அடிப்படையில் மட்டுமே தான்.  1960 களில் எங்கள் இலாக்காவின் உபதலைவர், ஒரு தலித். அதற்கு முன்னும் பின் தங்கிய வகுப்பினரும் உண்டு, பெருபான்மை எனவோ, ஐயர் & ஐயங்கார். மற்று துறைகளில் இது தென்பட்டது. நீங்கள் எந்த ஒரு பாமரகீர்த்தி படித்தாலும், பட்டினி கிடந்து, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கந்தல் உடுத்தி, மாண்டோர் சவுண்டி கிரியைகள் செய்து, பெரும்பாலான பார்ப்பனர்கள் மைந்தர்களை படிக்க வைப்பார்கள். மகளிரை படிக்க வைப்பதில்லை. அது ஒரு சாபக்கேடு.  அந்த பாவத்தின் கர்மவினை தான், தகுதிக்கு தீ வைக்கப்பட்டது, குறிப்பாக 1967க்குப் பின்; அதனால், படிப்புக்கும், வேலை வாய்ப்புக்கும் விலக்கப்பட்ட பார்ப்பனர்கள் அமெரிக்கா செல்ல தொடங்கினர் என்று நினைக்கிறேன். தனியார் நிறுவனங்கள் அவர்களை அமர்த்திக்கொண்டன. சட்டநாத கரையாளர், நல்லக்கண்ணு பிள்ளை, சிவஷண்முகம் பிள்ளை போன்ற நசுக்கப்பட்ட இனத்தை சார்ந்த சான்றோர்கள் தகுதி அடிப்படையில் தான் முன்னுக்கு வந்தனர். இந்த பிராமண அல்லாதார் பிரிவினை வாதமும், அதை கைப்பற்றி, தந்தை பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் அமைத்த திராவிட இயக்கமும், அவரது முற்போக்குக் கருத்துக்களையும், சீரிய சிந்தனைகளையும், போற்றத்தக்க நாத்திக கோட்பாடுகளையும் தூர எறிந்து விட்டு, அவரது முரட்டு அணுகுமுறையை மட்டும் சுவீகரித்துக்கொண்டு, ‘ஹரே ராம! ஹரே கிருஷ்ண! ஹர! ஹர!’ என்று பஜனை செய்வதை அவருடைய காலத்திலேயே தொடங்கிய கிளை கட்சிகள், தங்களது தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக பிரசாரம் செய்வது கோயில், குளம், ஆத்திகம், பஜனை, பூஜை, நேர்த்திக்கடன்கள், சோதிடம், வஞ்சகமான ‘இந்த கல்லை வாங்கினால், லாட்டரி வாகை’ போன்ற மூட நம்பிக்கைகள் . நடை முறையும் அதே! அதே! 1960ல், காசிக்கயிறு, ஒளிந்து. இன்று பெரியவருக்கு உடல் நிலை சரியாக , கோயில்களில் பூஜை! பிரார்த்தனை, தொழுகை, சாமக்கிரியைகள், இத்யாதி. 

இத்தகைய முரண்கள் தோன்றாமல், மக்கள் நலனை மட்டுமே நாடி, தன் வாழ்க்கையையே உருப்படியான அரசாட்சி செய்த பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் அரசாட்சி காலகட்டத்தை எல்லாருமே ‘பொற்காலம்’ என்று வருணித்தார்கள். ‘காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர்... “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர் என்பதற்கு விடையும், அதிலிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதை பற்றிய கட்டுரை பகுதிகள், அடுத்த இரண்டு சுற்றுகளில் முடியும்.

சிவகாமியின் செல்வன் 20.pdf
89K 

Saturday, October 22, 2016

வம்பும் தும்பும் ~4


வம்பும் தும்பும் ~4


இன்னம்பூரான்
22 10 16

எல்லாரும் தவிச்சுப்போய்ட்டோம். நோ இண்டெர்னெட். நோ தொலை பேசி. ஒரு பாடா வந்தது. லாவம். வந்து வேறே சொல்லி விட்டுப்போனார்கள்.

அந்த காலத்தில் மஹா கனம் பொருந்திய சேஷைய்யா சாஸ்திரிகள் திருவிதாங்கூர் திவானாக இருந்த போது ஒரு பட்ஜெட் திட்டம் வந்தது, ஒரு ரோடு போட. திவான் அவர்கள் அதை நிராகரித்து எழுதினார், ‘ அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். ஐவேஜு இல்லாதத்துக்கு என்னத்தை செய்யலாம்?’.  அந்த மாதிரி ஐவேஜு இல்லாமல் தவிக்கிறது, லக்ஷ்மணபுரி நகரத்தின் கண்டோன்மெண்ட் பகுதி திட்டங்கள். எங்கே போச்சு ஐவேஜு? 

திருமதி ரீதா பஹுகுணா அவர்கள், தன் சகோதரரை கூட வியப்பில் ஆழ்த்தி, காங்க்ரஸிலிருந்து பிஜேபிக்கு ‘டபால்னு’ கூடு விட்டு கூடு தாவி விட்டார். உடனே ஜகதலபிரதாப வக்கீலைய்யா கபில் சைபால் அவர்கள் ‘அம்மா என் துட்டை எடுத்துக்கிட்டு ஓடிட்டாங்க.’ என்று பிரலாபித்தார். அதுவும் எப்டி? ரீதா பறந்து போகும் புள் என்று? தேவையா?இதை நான் லண்டன் கார்டியன் படிக்கும் போது  இந்த நிமிட நிகழ்வாகக் கண்டு, மேய தொடங்கினால், குட்டு வெளிப்படுகிறது. ரீதா மாமி பிஜேபி என்ற புக்ககம் வந்த உடனேயே, திரு.சைபாலுக்கும், கலெக்டர் சாஹிபுக்கும், அந்த ஐவேஜை சிறைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம் என்று எழுதியிருக்கிறார். ஆக மொத்தம், லக்ஷ்மணபுரி நகரத்தின் கண்டோன்மெண்ட் ‘எங்கே போச்சு ஐவேஜு? ‘ அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். ஐவேஜு இல்லாதத்துக்கு என்னத்தை செய்யலாம்?’ என்று அலறுகிறார்களாம்!
-#-
சித்திரத்துக்கு நன்றி; 





Tuesday, October 18, 2016

வம்பும் தும்பும் ~3





வம்பும் தும்பும் ~3

இன்னம்பூரான்
18 10 16

கொஞ்சம் ரசாபாசம் ஆயிடுமோ என்று கவலைப்பட்டேன். தற்காலம் தமிழ்க்குழுக்களில் எதிர்மறை வழிமுறை கோலோச்சுவதால், அச்சத்தின் மறு உருவாகிய நான் ‘நாலடியாரும், பெரியாரும், தமிழ்த்தென்றலும், குல்லுகப்பட்டரும்’ என்ற ஆய்வுக்கட்டுரையை கேம்பிரட்ஜ் பல்கலையின் அழைப்பிற்கிணங்க அனுப்புவதில் முனைந்து இருந்த பொது, வாசற்கதவை, அந்தக்காலத்து தீவட்டிக்கொள்ளைக்காரன் தட்டுவது போல் (இது நிஜமா நடந்ததின் மலரும் நினைவு.) ஒருவர் தட்டிய பராக்கிரமத்தில் அதுவே திறந்து கொண்டது. பார்த்த ஜாடையாக இருந்தாலும், ஆள் புரியவில்லை. கார்டு கொடுத்தார்: டணால் கிராம்பு. உலருவதற்காக என் அம்மா தூணில் சுற்றிய புடவையை அடித்துப்பிடித்துக்கொண்டு அவிழ்த்து, அப்பாவின் வாக்கிங் ஸ்டிக்கினால், மடிசஞ்சிக்குள் ஒளித்து வைத்தேன்.  இல்லாவிட்டால், அம்மா இது தீட்டு என்று கொளுத்தி விடுவாள்.   அந்தக்காலத்துப் பாப்பாத்தி. அவளுக்கு டணால் கிராம்பாரின் அருமை பெருமைகள் தெரியாது. மிலேச்சன். தள்ளுபடி அவ்ளவு தான்.

டணால் சுபாவம் உலக பிரசித்தம். அதனால் தான். ‘கொஞ்சம் உள்ள வந்துட்டுப்போங்கோ’ என்று கொஞ்சலும், கட்டளையுமாக உக்கிராண அறையிலிருந்து குரல் வரவே, நம்ம கிராம்பு கிட்ட சாக்குப்போக்கு சொல்லிவிட்டு, உள்ளே பிரவேசித்தேன். என்னடா பொம்மானாட்டிக் குரலாக இருக்கே என்று, டணால் கூடவே வந்துட்டான். வேறு வினை வேண்டாம். இவளும், சேலத்துப்பொண்ணா, கையில் கிடைத்த புழுதுணியால், வாயை   காபந்து செய்து கொண்டாள். கராட்டே  கப்ரியேல் சொல்லிக்கொடுத்தபடி துடுப்பை அடுப்பில் காய்ச்சினாள். தாலிக்கயிறுடன் முடிச்சுப்போட்ட வெள்ளித்தாயத்தைத் தொட்டுப்பார்த்துக்கொண்டாள். அதனுள்ளே நல்ல சாத்தூர் மொளகாய் பொடி.  இசைகேடாக, தொலைக்காட்சியில் ஒலித்தப் பாட்டு, ‘மாலையிட்டவன் போல் வாயில்...’ நான் டபக்னு அணைச்சுட்டேன். 

சொல்லி வச்ச மாதிரி, டெலிபோன் அலறியது. படி தாண்டா பத்தினியான அம்புலு, ஒரே தாவலில், டணால் எடுக்கும் முன், அதை எடுத்தவுடன், அவள் முகம் பத்தாயிரம் வோல்ட் எல்.இ.டி. விளக்குப்போல பிரகாசிக்கவே, எதோ அனர்த்தம் வரப்போறது என்று மேலும் கவலைப்பட்டேன்.

ஓவர்ஹேர்ட் சம்பாஷணை:

“ வாங்கோ! வாங்கோ! தாராளமா வாங்கோ ! உங்காத்து (கொஞ்சம் ஷை ஆனாள். என் கண்ணில் படாமல் போகுமான்னேன்!)  இவரையும் கூட்டிண்டு வாங்கோ! “

“ அவரை பிடிக்கமுடியாது. யார் பின்னாலையோ? ஹூம்!” பெருமூச்சு காதில் விழுந்தது. நம்மூர் நிரந்தர மாப்பிள்ளை ஒத்தனை நினைத்துக்கொண்டேன்.

அம்புலு போனை தள்ளிப்பிடித்துக்கொண்டு, என்னிடம்,

“நமக்கு லாட்டிரி கிடச்சமாதிரியாக்கும். ‘வதனமோ சந்திர பிம்பமோ’ போன்ற பிலஹரி  சந்திரலேகா மாமி டென்னஸியிலிருந்து பேசறா.  என்னமோ ட்ரோனாமே! அதோட  நம்ம குயில்சாமியின் இந்தியா ஸ்பேஸ் தயாரிப்பான அதி நவீன பாராசாரி ட்ரோனாத்தில் வந்து இறங்கராளாம் என்று சொல்லி வாயை மூடல்லே, கிராம்பு திறந்த போட்ட கதவு அப்படியே மல்லாக்கத் திறந்து கிடக்க, பிலஹரி மாமி வந்து நிக்கறா. எனக்கு கையும் ஓடலை; காலும் ஓடலை. அம்புலுவா பல்லவி ராவ் மாதிரி தக்கத்தையா என்று குதிக்கிறாள். கிராம்பு எதித்தாப்போல இருந்த சோஃபா மேலெ காலைப்போட்டுண்டான். பிலஹரி ஒக்காரக்கூடாது. அதான்.

உரையாடல்:

பி (பிலஹரி): நவம்பர் எட்டு வரட்டும். உன் குட்டு அவுட்டு.

ட (டணால்): சட்டுப்புட்டுன்னு சொல்றேன். கேளடி பிலஹரி!  செட்டு சேர்ப்பேன் நானே! இந்தியா சூபர் எனக்கு மெட்டு போட்டுத் தாளமும் ஜால்ராவும் அடிப்பாங்க. உனக்கு லொட்டு, லொசுக்கு.

பி: கூவாதே! கூவாதே! என் பகையே! வேட்டு வைக்கிறேன், நானுனக்கு.

ட: கோட்டுப்போட்டு வந்தேனே! அடுத்தாத்துப் பாட்டியே. உன் வேட்டை துட்டாக்கி...!

அ: (அம்புலு): இவாளை வெளிலே போகச்சொல்லுங்கோ. நான் தூங்கணும். 

அவள் தூங்க, நான் தூங்க, கிராம்பு ஓட, பிலஹரி துரத்த, என் கனவும் கலைந்தது.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

டிஸ்கி: சித்திரத்துக்கும் பாத்திரங்களுக்கும் ஒத்தடம்கொடுக்கவேண்டாம்.


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, October 12, 2016

வம்பும் தும்பும் ~2


வம்பும் தும்பும் ~2


இன்னம்பூரான்
12 10 16

டவர் டாக்கீஸ்ஸில் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி சினிமா நடக்குது. ராணியம்மாவுக்கு பன்னீர் தெளிக்கும் உபநடிகை (எக்ஸ்ட்ரா) வராங்க என்று வாய்வார்த்தையா சொன்னா போதும். கூட்டம் அலை மோதும். நம்ம நாயக்கரோட தேர்தல் ஊர்வலம் வரணும். காச்சு மூச்சுநு கத்தணும். சோறு போட்டு, போத்தலும் கொடுத்து வள்ளிசா பச்சை நோட்டு இரண்டு தாராராம்னா போதும், ரேக்ளா ரேஸ் மாதிரி ஓடி வருவாங்க. இலவச கட்டில் எடுத்துப்போக, வாகா போட்டிருக்காங்க என்று மோப்பம் பிடித்த சுடலைமுத்து நாப்பது ஊரு சனங்களை இழுத்துக்கொண்டு வருவான். கமிஷனும் அடிப்பான். கூட்டம் கூட்டுவதும், ஊரை வளைக்கிறதும் ஒரு கலை. ஒரு குரங்குக்குட்டி போதும். பசங்களை இழுக்க. தெருவோரம் ஒருவர் ஹிந்தியில் பிளக்க, சகபாடி தமிழில் தந்தியடித்து தாதுபுஷ்டி லேகியம் விற்றால் விடலைகள் கூடும். மறு நாள் வேறு நகரில், சகபாடிகள் ட்யூட்டி  மாறுவார்கள். மாதரசிகளை வைத்து களை கட்ட, நாலு புடவையை 101% தள்ளுபடி என்று கூவினால் போதும்.

இத்தனை உத்திகள் இருக்க, இந்த அன்றாட வாழ்க்கை நெறி அறியாத விஞ்ஞானிகள் அடித்தக் கூத்தைக் காண, மோடி மஸ்தானே வரவேண்டும். அவர் தான் விஞ்ஞானிகளிடம், இந்த ‘போனால் போகட்டும் போடா’ என்ற அசட்டு தைரியத்தை விடுங்கள் என்று சொன்னார். இனி செய்தி.

இமாலய பிராந்தியத்தில் எல்லை பாதுகாப்பு என்ற அதிமுக்கிய பணியை பாதுகாப்பு இலாக்காவின் விஞ்ஞான ஆய்வு கழகம் [DRDO]  செய்யக்கூடிய பணிகள் பற்றி போனவாரம் ஒரு மாநாடு நடந்தது. உத்தராகாண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில் நடந்தது. இது சைனா எல்லை அருகில் இருக்கிறதே என்ற அச்சத்தில் ராணுவ விஞ்ஞானிகள் டிம்கி கொடுத்தாங்களாம்.  அடாது மழை பெய்தாலும் விடாது ஆட்டம் நடை பெறும் என்ற ஆர்வத்தில் அந்த மையம் மாநாட்டை நடத்தி மகிழ்ந்தார்கள். வந்தவர்களில், பெரும்பாலோர் எடுபிடி ஆட்கள், வண்டி ஓட்டுனர், அங்காடி கையாட்கள், காண்டீன் சர்வர் சுந்தரங்கள், மெக்கானிக் வகையறா. எல்லை பாதுகாப்புப் பற்றிய உரை ஆற்றியவர் ஒரு காண்டீன் பொடியன். மாநாடு நடத்தியவர்களை மட்டும் குறை கூறுவது நியாயமில்லை. பல மையங்கள் எடுபிடி ஆட்கள், வண்டி ஓட்டுனர், அங்காடி கையாட்கள், காண்டீன் சர்வர் சுந்தரங்கள், மெக்கானிக் வகையறாவை தான் அரசு செலவில் அனுப்பினார்கள்.

எல்லை பாதுகாப்புப் பற்றிய உரை ஆற்றிய காண்டீன் பொடியன் என்ன அறிவுரைகள் அளித்தார் என்று சரியாக கூறுபவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது.
சித்திரத்துக்கு நன்றி:








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, October 11, 2016

வம்பும் தும்பும் ~1

வம்பும் தும்பும் ~1


இன்னம்பூரான்
11 10 16
விஜயதசமி

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. வண்ணாரப்பேட்டை ஜனார்த்தனன் அதற்கு விதி விலக்கு அல்ல. திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் கோஷா ஆஸ்பத்திரியில் பிருந்தா என்ற அவர் இல்லத்தரசி மகப்பேறு பொருட்டு அனுமதிக்கப்பட்டார். தாயும், சேயும் நலம். இருவரையும் பார்க்க வந்த புருஷன் ஜனார்த்தனனை காவலாளர் அனுமதிக்க மறுக்கவே, அவரும் தந்திரசாலியாக செயலாற்றினார். உடனுக்குடன் காசு கொடுத்து வாங்கிய பர்தாவை மாட்டிக்கொண்டு அன்ன நடை போட்டு பிருந்தா தரிசனம் முடித்து விட்டு வெளியே திரும்பும் போது வசமாக மாட்டிக்கொண்டார். எப்போது? செருப்பை மாட்டிக்கொள்ளும் போது ~ ஆண் காலணி! ஷெர்லாக் ஹோம்ஸா வேண்டும்? மாட்டிக்கொண்டார், இந்த துப்படிக்கா பட்டர். 

1950 களில் ஊருக்கு பெரியவர்கள் தேர்தல் விழிப்புணர்ச்சி விவாதம் நடத்திய போது மாட்டிக்கொண்ட துப்படிக்கா பட்டர் பெயர்: கோபால் ரெட்டி. கனகச்சிதமாக, ந்டை, உடை ஆடை பாவனைகள் கொண்ட அந்த காங்கிரஸ்க்காரர் ஒரு ஆன்டி-பெண்ணிய ஜோக் அடித்தார்: ‘ கோஷா போட்டுக்கொண்டு முதலில் வந்த பீகம் மற்றொரு பீகமாகவும் இரு தடவை  வந்து வாக்களித்தார்.' கரகோஷம் அந்த ஶ்ரீநிவாச சாஸ்திரி ஹாலின் கூரையை பிளந்தது. சாவதானமாக எழுந்த திருமதி. நல்லமுத்து ராமமூர்த்தி அவர்கள் வினவியது: “கோபால்!  அந்த நபர் ஆண் இல்லை என்று உமக்கு எப்படி தெரியும்?” ரெட்டிகாரு அசடு வழிந்தார். அவையில் சலனம், மவுனம்.

(தொடரும்)
-#-

பின்குறிப்பு: நண்பர்களர் பலர் பங்கேற்பார்கள். முதற்கண்ணாக திரு. மருமக்கத்தாயனார்  வருகை புரிவார்கள் என்று தம்பட்டம் அடித்தார்கள்.

சித்திரத்துக்கு நன்றி: ttp://3.bp.blogspot.com/-brMq307AgWw/Tbv7Wavb_BI/AAAAAAAAAfw/Pa_hJ_QMJ10/s1600/funnysinger.jpg

இன்னம்பூரான்