Showing posts with label Kingsley Martin. Show all posts
Showing posts with label Kingsley Martin. Show all posts

Saturday, May 31, 2014

காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[1] : மோடி தர்பார்: 5

மோடி தர்பார்: 5

இன்னம்பூரான்
31 05 2014
காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[1]




கல்பட்டார் ஷரத்து 370 ன் வரலாறு கேட்கிறார். அது பற்றி இன்றைய ஹிந்து இதழில் எழுப்பப்பட்ட சில வினாக்கள், மாதிரிக்கு. எப்படி எப்படி ஆளுக்கொரு கேள்வியாகவும், அபிப்ராயமும், வரலாறறியா தர்க்கமுமாக, ஷரத்து 370 அடிபடுகிறது என்பதை முகாந்திரமாக வைத்து, கருத்துக்கூற. இந்திய திசைமாற்று கலையின் அபத்தம் அறிய வேண்டி, ஒரு தொடராகவே, இதை பதிவு செய்கிறேன். அதனால் உபதலைப்பாகை: காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[1.]
காஷ்மீரம் என்ற மாநிலத்தை இந்தியாவின் தலைப்பாகை எனலாம். ஆனால் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் மட்டும் அல்லாமல், தலையையும் கொய்து எடுத்துக்கொண்டு போகும். அந்த மாதிரியான அரசியல் பூகோளம். இந்த தலைப்பாகை பாகிஸ்தானுக்கும் பொருத்தம். அதனால் தான் தலைப்பகை. ஜம்மு (பெரும்பாலும் ஹிந்து மத ‘பண்டிட்’ இனம்), காஷ்மீர் (பெரும்பாலும் முகம்மதியர்), லடாக் (பெரும்பாலும் திபெத் சார்ந்த பெளதம்) என்ற மூன்று பிராந்தியங்கள் தான் காஷ்மீர் ராஜாங்கம்/‘சுல்தனத்’/ஸ்பெஷல் மாநிலம். 1946/27ல் சுயநலவாதியும், பெண்பித்துப் பிடித்து அலைந்தவனும், பயந்தாம்கொள்ளியுமான மஹாராஜா ஹரிசிங் செய்த குழப்பங்களே, இன்று வரை இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. 1925ல் என்று நினைக்கிறேன். பாரிசில் போட்ட கொம்மாளமும், ஒரு பெண்ணின் சகவாசமும், ஹரிசிங்கை ஒரு ப்ளேக்மைலரின் (தமிழில் என்ன?) கையில் சிக்கி, கோடிக்கணக்கான அரசு பணத்தைத் தொலைக்க நேரிட்டது. அந்த கதை பெரிசு. சொன்னால் மட்டுறுத்தல் செய்து விடுவார்கள். இந்த ஆசாமியின் குணாதிசயம் சொன்னேன். அவ்ளவு தான்.
இனி வினாக்கள்:
  1. பஞ்சாப் முதல்வர் பாதல்: எல்லா கட்சிகளையும் கட்டியணைத்து, செய்க. - அவருக்கென்ன ? சொல்வார்.
  2. ஆனானப்பட்ட சஷி தரூர் & மற்ற காங்கிரஸ் அனுதாபிகள்: எதற்கு வம்பு. அடுப்படிலெ உறங்கும் பூனை தூங்கட்டுமே. என்னே ஸென்சிட்டிவ் சமாச்சாரம்! வெங்கலக்கடையில் ஆனை புகரலாமோ! -உமக்கு என்ன சாரே! அன்னிக்கும் பொறுப்பு இல்லை. இன்னிக்கும் அதே!
  3. திரு பட்: ஶ்ரீநகரிலிருந்து: ஜம்மு & காஷ்மீரில் வசிக்காதவர்க்ள் தான் கருத்து அளிக்கிறார்கள். இந்த பிராந்திய கலாச்சாரத்துக்கும் வரலாற்றுக்கும் நம் அரசியல் சாஸனம் நிறுவிய பாலம் அல்லவோ, இது! - ஆமாம், பட். காஷ்மீரத்துக்கு மட்டுமா இந்த சலுகை. தமிழ்நாட்டுக்கும், பீஹாருக்கும் கொடுத்தால் என்ன?
  4. ஜனாப் நதீம்: பெங்களூரு: மைனாரிட்டி மீது மெஜாரிட்டி தன் கருத்தைத் திணிக்கலாமா? ஆர அமர காஷ்மீரத்துக்கு உள்ளது உள்ளபடி, அவர்கள் தயார் ஆகும் வரை காத்திருக்கலாமே! - ஜனாப்! 60 வருடமாக என்ன ஆச்சு? காசு, பணம், பாஞ்சு பாஞ்சு நல்லுதவி, ஒளிந்து உதவி, ராணுவ உதவி, வீர மரணம் எல்லாம் ஆச்சு. இன்னும் 500 வருடங்கள் வரை அப்துல்லா வாரிசு யதேச்சதிகாரமா?
  5. திரு. யாரகல்: பீஜப்பூர்: தேசீயமும், தனித்துவமும் உணர்ச்சி பூர்வமானவை. ஷரத்து 370 அதை காஷ்மீரத்துக்குக்  கொடுத்தால், இருந்து விட்டுப்போகட்டுமே. - நல்ல வாய்ஜாலமையா, இது. நம் சிவகங்கை மாவட்டம் இதை கேட்டால், அங்கும் ஷரத்து 370 கொடுக்கலாமா? அப்படியானால், இந்தியாவின் தேசீயமும், தனித்துவமும், குப்பையிலா!
  6. அபீத் பாபா_ காஷ்மீர். டில்லி முரண்டு பிடிப்பதால், லாபம் இல்லை. காஷ்மீர் சட்டசபையின் முன்னுமதியுடன், ஸ்பெஷல் மீட்டிங்க் போட்டு கேட்கவேண்டும். ஆமாம். சொல்லிப்போட்டேன்.- ஹூம்! ‘கிழிந்தது கிருஷ்ணகிரி’ என்று சொன்னால் பொல்லாப்பு!
  7. வர்மா: சிம்லா: இந்த ஷரத்து காஷ்மீர் மக்களுக்கு உதவி செய்ததா? இதன் அரசியல் பரிமாணங்கள் என்ன? இது பற்றிய சர்ச்சைகள் மதசார்பின்மை, தேசீயம், சமத்துவம், யோக்யதை எல்லாவற்றையும் கேலி செய்கிறது. நாடாளுமன்றம், இந்த ஷரத்தை மாற்றியமைக்கும் உரிமை உள்ளது. - வர்மா சார்! நீங்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். எமக்கும் அதே கதி.
  8. அம்பாடே, பூனே: நாடாளுமன்றம், இந்த ஷரத்தை மாற்றியமைக்கும் உரிமை உள்ளது என்றாலும் கனம் கோர்ட்டார் என்ன சொல்வாங்களோ? - பாயிண்ட் மேட், சார்.
ஒரு பழங்கதை: 1947 டிசம்பர் என்று நினைவு: இந்தியாவின் நண்பர் கிங்க்ஸ்லி மார்ட்டின் காந்திஜியிடம் காஷ்மீர் பற்றி பேசினார்.
மா: அய்யா! ஏன் இந்த காஷ்மீர் பூசல். பிடிங்கினது ஆதாயம் என்று பாகிஸ்தான் ஆசாத் காஷ்மீரை வைத்துக்கொள்ளட்டும். சமாதானமும், அமைதியும், நட்பும் நிலவட்டும். (அதாவது தலைப்பாகை இருவருக்கும், அரசியல் பூகோள ரீதியில். உவமை இனி பொருந்தாது.)
கா: நீ வெறும் இதழாளன். உனக்கு என்ன அரசியல் தெரியும்?
சற்றே மெளனம்:
கா: நீ சொல்வதில் பாயிண்ட் இருக்கிறது. மவுண்ட்பேட்டனும், ராஜாஜியும் இப்படித்தான் சொன்னார்கள்.
ஏற்கனவே நீஈ..ண்டு விட்டது. 1947ல் காஷ்மீரில் நடந்தது என்ன?
(தொடரும்)