மேற்கண்ட கட்டுரையை யொட்டி
பிரம்மஶ்ரீ மு. ராகவையங்காரவர்களுக்கு
எழுதிய லிகிதம்.
இந்தியா ஆபீஸ்.
பிராட்வே, மதராஸ்.
18th October 1907
அநேக நமஸ்காரம்.
ஒவ்வொரு காலத்துச் சோம்பர் மிகுதியாலும், முன்னொரு காலத்தே முயற்சி மிகுதியாலும், தங்களைப்போன்ற பெரியோர்களுக்கு அடிக்கடி கடிதங்களெழுதிப் புனிதத்தன்மை பெறுவதற்கு அவகாசமிலாதவனாக இருக்கின்றேன்.
சென்ற முறை வெளி வந்த “செந்தமிழ்” பத்திரிகையிலே தாங்கள் எழுதியிருக்கும் “வீரத்தாய்மார்கள்” என்ற அற்புத உரையைக் கண்டு மகிழ்ச்சிபூத்து அம் மகிழ்ச்சியைத் தமக்கு அறிவுக்கும் பொருட்டாக இக்கடிதம் எழுதலானேன்.
தங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும். தங்கள் பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் “ஸ்வதேசபக்தி” என்ற புது நெருப்பிற்குத் தான் நான் வணக்கம் செய்கிறேன்.
“காலச் சக்கரம் சுழல்கிறது” என்ற அவ்வுபந்நியாசத்தின் இறுதியிலே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம்! காலச்சக்கரம் சுழலவே செய்கின்றது; அச்சுழற்சியிலே, சிறுமைச்சேற்ரில் ஆழ்ந்து கிடந்த ‘நீச பாரதம்’ போய் ‘மஹாபாரதம்’ பிறக்கும் தறுவாய் வந்து விட்டது.
‘தாழ்நிலை’ என்ற இருளில் மூழ்கிக் கிடக்கும் பாரதவாஸிகளுக்கு மஹாபாரதம்’ காட்டத் தோன்றிருக்கும் சோதிகளிலே தமது நெஞ்சிற் பிறக்கும் நெருப்பொன்றாகும். அதற்கு வணக்கம் செய்கிறேன். அது வளர்க. ஓம்!
ஸி.சுப்ரமண்ய பாரதி.
குறிப்பு:- ஶ்ரீ அழகிய சிங்கப் பெருமாளையங்கார் (பச்சையப்பன் காலேஜ்) அவர்களும் அவர் தம்பி ஶ்ரீ.கிருஷ்ணமாசாரியாரும் தங்களுக்கு ஸாஷ்டாங்க வணக்கம் கூறும்படி என்னிடம் கற்பித்தார்கள்.
-#-
என் குறிப்பு: இந்தியாவில் இதழியல் அச்சாவதற்கு தடையாக நின்றது, கலோனிய அரசின் தடை. ஒரு நூற்றாண்டு கழிந்து போயிற்று. என்னுடைய இதழியல் ஆய்வுக்கட்டுரையை தேடி, அது உகந்தவாறு இருந்தால், அனுப்புகிறேன். ‘செந்தமிழும்’. ‘இந்தியாவும் இதழ்கள்.
என்னுடைய ஆதங்கம்: இருள் இன்றும் முழுதும் நீங்கவில்லை.
இன்னம்பூரான்
12 09 2015