Thursday, November 28, 2013

தேசமில்லா நேசம்!


அப்டேட் 29 11 2013
ஸுபாஷிணியின் வினாவுக்கு பிறகு கிடைத்த விடை:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களாகிய மிஜோராம், மணிப்பூர் ஆகிய இடங்களிலிருந்து கி.மு. எட்டாம் நூற்றாண்டிலியே தாயகத்திலிருந்து அசிரியர்களால் விரட்டப்பட்டு வந்ததாக சொல்லிக்கொள்ளும் பழங்குடி யூதர்கள், ஐந்து வருட போராட்டத்துக்குப் பின் இஸ்ரேலுக்கு குடியேறிய செய்தி ஹஃப்பிங்க்டன் போஸ்ட் (24 12 2012) அன்று வந்தது. மேலதிக விவரங்களும், பொருத்தமான விழியம் காண:
இன்னம்பூரான்


அன்றொரு நாள்: நவம்பர் 29 தேசமில்லா நேசம்!
4 messages

Innamburan Innamburan 29 November 2011 17:16


அன்றொரு நாள்: நவம்பர் 29
தேசமில்லா நேசம்!
கொச்சினில் இருக்கும் 1568ல் கட்டப்பட்ட யூதர்களின் தேவாலயத்தை பராமரிக்க ஆட்களில்லை, பல குடும்பங்கள் கூண்டோடு இஸ்ரேலுக்கு ஏகியதால். உலகெங்கும் பரவி வாழும் யூதர்களின் இனம் பழமை வாய்ந்தது. ஆற்றலால் ஆளுமையும், ஒதுங்கி/ ஒதுக்கப்பட்டு வாழ்வதல், பலவீனமும்  வாய்த்த மெனாரிட்டி. பல நூற்றாண்டுகளாக, ‘இல்லாத நாட்டின்’ மீது அபார பற்று. நவம்பர் 29, 1947ல் ஐ,நா.பொது மன்றம் இயற்றிய தீர்மானம் 181னின் வருகையாக,‘எரெஸ் இஸ்ரேல்’ (The Land of Israel:ஹூப்ரூ: אֶרֶץ יִשְׂרָאֵל‎‎ ʼÉreṣ Yiśrāʼēl, Eretz Yisrael) எனப்படும் புதியதொரு நாடு உயிர்ப்பிக்கப்பட்டது. உடன் பிறந்தவை பாலஸ்தீனம் என்ற அரேபிய நாடும், ஐநா ஆளுமைக்கு உட்பட்ட நோஞ்சான்: ஜெருசலம் நகராட்சியும். இது ஏவல்.
ஆங்கிலேய கலோனிய ஆட்சிக்கு உட்பட்டு, அரேபியர்கள் வாழ்ந்த பாலஸ்தீனம் என்ற புனித பூமி (யூதர்களுக்கும், கிருத்துவர்களுக்கும், இஸ்லாமியருக்கும்) தான் இடம். ஆனால்,வரலாறு ஒரு குறிப்பிட்ட தினத்தில் துவங்குவதில்லை. மங்கிப்போன எழுத்தில் மறந்தவையும், மறைத்தவையும், நிழலும், நிஜமும், முரணும் இருக்கும். பால்ஃபோர் பிரகடனம் 1917ல் பிரிட்டன் யூதர் நாடு இது என்று சொன்னதும், அதே சமயம் அரேபியர்களுடன் அவர்களின் உரிமைக்குரலுக்கு சம்மதம் தெரிவித்து மடலாடியது முரணா? அல்லது ராஜதந்திரமா? என்ற விவாதம் இன்னும் ஓயவில்லை. ஆக மொத்தம் மத்தியஸ்த வானரமான பிரிட்டீஷ் கலோனிய ஆளுமை நிறுவப்பட்டது. 1922 சர்வ தேச அமைப்பு ( லீக் ஆப் நேஷன்ஸ்) அதை ஏற்றுக்கொண்டது. 1947ல் ஐ,நா.பொது மன்றம் இயற்றிய தீர்மானம் 181னின் படி அது கலைக்கப்படவேண்டும். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். ஆனால், இந்த விஷயத்தில் அபார ஒற்றுமை. இந்தியா அரேபிய நாடுகளுடன் ஈஷிக்கொள்ளும் ‘நன்னடத்தையில்’ இருந்ததால், இந்த தீர்மானத்தை எதிர்த்துக் கேலிக்கு உள்ளானது. ஆனால், யூதரினம் இந்தியாவுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது; விஜயலக்ஷ்மி பண்டிட்டை மிரட்டியது என்ற நேருவின் குற்றச்சாட்டையும் பதிக்கத்தான் வேண்டும். ராஜ தந்திர கலோனிய பிரிட்டன் வாக்களிக்கவில்லை. அத்தனை நடு நிலைமை! அந்த நோஞ்சான் ஜெருசலெம் நகராட்சிக்கும் ஒத்துப்போகவில்லை.  இது பொருள்.
மேற்படி தீர்மானம் தேவருலகத்தில் ஜனித்ததோ? என்று ஒரு ஐயம். சிக்கல் மயமான ராஜ தந்திர/மந்திர சூழலில், ஏகப்பட்ட தாதிகள் வலம் வர, பிரசவமான இந்த தீர்மானம் பரம்பரை வைரிகளான யூதர்களும் அரேபியர்களும் ஒரு கூட்டு பொருளியல் திட்டமும், மத உரிமைகளையும், சிறுபான்மை உரிமை பாதுகாப்பு திட்டமும், இணைந்து, ஒருமுகமாக, ஒப்பேற்ற வேண்டும் என்று பிரகடனித்தது! இந்த தீர்மானத்தின் படி பிரிட்டன் ஜாகை காலி செய்த தினம், மே 14/15 1948 நடு நிசி. மே 15 1948 இஸ்ரேல் சுப ஜனனம். இந்த தீர்மானத்தை எதிர்த்த அரேபிய நாடுகள் இஸ்ரேல் மீது அன்றே படையெடுத்தன. இந்த விரோதம் நவம்பர் 19, 2011 வரை ‘அவள் ஒரு தொடர் கதை’யாக நீண்டு வருகிறது. அப்பப்போ அணைத்துக்கொண்டு நோபெல் பரிசு அடிச்சதும் உண்டு.
இது பாதி கதை. இப்பவே அலுத்துப்போயிருக்கும், வாசகர்களுக்கு. அதை மதித்து, பின் பாதிக்கதையை மே 15, 2012 அன்று எழுதலாமா? என்று ரோசனை.
இன்னம்பூரான்
29 11 2011
"The birth of Israel is one of those epoch-making events in history, ...

உசாத்துணை:

Geetha Sambasivam 29 November 2011 20:28

எழுதுங்க, எழுதுங்க, உடனே எழுதினாலும் படிக்கக் காத்திருக்கோம்.  இதிலே தெரியாத விஷயம்னு இல்லைனாலும் படிக்கச் சுவாரசியம். ரொம்ப ஆழமாத் தெரியாது. முடிவு காண முடியாப் பிரச்னைகளில் ஒன்று.  என்றாலும் இஸ்ரேலின் தீரத்தைப் பாராட்ட வேண்டும்.  சென்னையில் இருக்கையில் ஒரு சினிமா பார்க்க நேர்ந்தது.  ஹிட்லர் கிட்டே இருந்து தப்பிச் செல்ல முயலும் யூதர்கள் பற்றி.   ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைக்கிறாப் போல் மனிதர்களை அடைப்பது குறித்துக் காட்டினார்கள்.  பல நாட்கள் அதன் தாக்கம் மறையவே இல்லை. :(( 


2011/11/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 29
தேசமில்லா நேசம்

Subashini Tremmel 2 December 2011 22:32


இந்தப் பதிவை வாசித்தபோது ஒரு கேள்வி மனதில் தோன்றியது. யூதர்கள் இந்தியாவுக்கு எந்தக் காலகட்டத்தில் வந்தவர்கள்.. இவர்கள் கத்தோலிக்க மதத்தை பரப்ப வந்த ஜெர்மானிய டச்சு பாதிரிமார்கள் குழுவில் இருந்திருக்க வாய்ப்பில்லை.. எந்த நாட்டிலிருந்து இந்தியா வந்து கொச்சின் பகுதியில் சினாகோக் கட்டியிருப்பார்கள்.. என்ற கேள்வி தோன்ற விக்கி பீடியாவில் தேடினேன்..  சுவாரசியமான தகவல்கள்.. கிங் சாலமன் காலத்திலேயே இந்தியா வந்திருப்பதைக் குறிப்பிடுகிறது..


ரோசனை ஏன்.. தொடரலாமே :-)

சுபா

Subashini Tremmel 2 December 2011 22:37


திருமதி.கீதா,

இங்கே உள்ளூர் திரைப்படங்கள் சில .. மிக தத்ரூபமாக இருக்கும் படங்களைப் பார்த்து வேதனையில் மலைத்துப் போயிருக்கிறேன்.  ஜெர்மனி மாத்திரம் அல்ல.. போலந்து லித்துவானிய போன்ற நாடுகளிலும் யூதர்களுக்கு எதிரான கொடூர செயல்கள் நடந்தேறின.

Sam Bourne என்ற இங்கிலாந்து செய்தியாளர் ஒருவரது நாவல் The Final Reckoning .. வாய்ப்பு அமைந்தால் வாசித்துப் பாருங்கள். எனது ஒரு பயணக் கட்டுரையிலும் இந்த நாவலைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.. என் மனதை மிகவும் பாதித்த அதே சமயம் விருவிருப்பான நாவல்களில் ஒன்று.

சுபா

No comments:

Post a Comment