Tuesday, November 22, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [3]



கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[3]

இன்னம்பூரான்
22 11 2016

  1. கற்பிழந்த நோட்டுகளின் எண்ணிக்கை: 22 பிலியன்;வைத்திருந்த 1.3. பில்லியன் மக்கள். வங்கிக்கிளைகள் 1.3 லக்ஷம். உலகில் இத்தனை பெரிய திட்டம் எங்குமே எடுத்து கொள்ளப்படவில்லை.
  2. பாகிஸ்தானாவது இந்தியாவுக்கு கள்ள கரன்சி நோட்டு அனுப்பவதாவது! இந்த மோடி இப்படி ஒரு சால்ஜாப்பு சொல்லி மாஜி கரன்சி நோட்டுக்களை களை இழக்க செய்து விட்டார், இதோ பார். அந்த கள்ளப்பண கணக்கு வழக்கு; அது சொற்பம் என்றெல்லாம்  வாதாடி, இந்தியாவின் மேலாண்மைக்கு விளையக்கூடிய ஆபத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று ஒரு கட்சி இருக்கிறது. அவர்கள் கவனிக்க மறுக்கும் நிகழ்வுகளில் சில; ஆறு வருடங்களுக்கு முன்னால் (24 12 1999) காட்மாண்டு-கந்தஹார் விமானம் ஹைஜேக் செய்தவர்களுக்கு, துப்பாக்கி, குண்டு, கத்தி ஆகியவற்றை கொடுத்தவன் ஜியா அன்சாரி என்ற பாகிஸ்தான் தூதரக ஊழியன். அந்த ஆபீஸ் முதன்மை காரியதரிசி அன்சாரியிடம் இந்திய கள்ளப்பணம் வாங்கிய சபூர் நேபால் போலீசால் கைது செய்யப்பட்டான். ஒரு ரைய்டில் ஒரு கோடி ரூபாய் கள்ளப்பணம் கைப்பற்றப்பட்டது.  நேபால் கண்காணிப்பு தீவிரமானவுடன் பங்களா தேஷ் அவர்களின் உறைவிடமானது. அங்கு ஆட்சி மாறியபின் தாய்லாண்ட், மியான்மார் ஆகியவை, அவர்களிம் பாசறையாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் இரண்டாம் பக்ஷம் தான். எப்படியாவது இந்தியாவின் வலிமையை குறைக்கவேண்டும் என்பது தான் அவர்கள் இலக்கு. இன்றல்ல; நேற்று அல்ல. எப்போதுமே. பாகிஸ்தானில் அடித்த மாஜி கரன்சி  பயங்கரவாதிகளுக்கு வெல்லம் மாதிரி. தெரிந்தே பாகிஸ்தான் கள்ள நோட்டுகளை உலவ விடுவது, நமது நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களே.
  3. ‘நான் செய்ததலில் தப்பு இருந்திருக்கலாம்; தப்பிதம் இல்லை என்று கொக்கரிக்கிறார், சுபாஷ் தேஷ்முக். அவர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பி.ஜே. பி. அமைச்சர். அவருடைய கம்பெனி ஒன்றின் வாஹனத்தில் பிடிபட்டது ரூ. 91.5 லக்ஷம் மாஜி கரன்சி நோட்டுகள். கம்பெனி ஊழியர்களுக்கு சம்பளம் என்ற இந்த அமைச்சரின் வாதம் வேடிக்கையாக இருக்கிறது. அவரிடமிருந்து நம்பகத்தனமான பதில் வரவில்லை. மேலும் ஒரு செய்தி. அமைச்சர்கள் முழு நேர வணிகம், தொழில், பணி எல்லாம் செய்வார்கள், இந்தியாவின், எல்லா மாநிலங்களிலும். 
  1. தமிழ் நாட்டில் ஹிந்தி மொழிக்கு என்ன தான் எதிர்ப்பு இருந்தாலும், பினாமி (அநாமதேயம்) புழக்கத்திலிருக்கிறது; அநேகருக்கு அது தொட்டில் பழக்கம். அது இந்தியா முழுதும் பரவியிருப்பது கங்கை கொண்டான் போல, தெற்கிலிருந்து வடக்கே பயணித்தது என்போருமுண்டு. அகத்தியரின் கமண்டலநீர் போல அங்கிருந்து இங்கே வந்தது என்போரும் உண்டு. எது எப்படியோ, ஜார்க்கண்டு கிரிதி: மாநிலத்து கிராமம் ஒன்றில் ஒரு தெருவோர வெற்றிலைப்பாக்குக்கடை வைத்திருக்கும் பப்புக்குமார் திவாரிக்குக் கனஹதாரா வரன் கிடைத்ததா அல்லது அவருக்கு யாரோ குழி தோண்டுகிறார்களோ? தெரியவில்லை. தடாலடியாக, அவருடைய வங்கிக்கணக்கில் சேமிப்பு ரூ. 9.99 கோடியாக எகிறியிருக்கிறது. கணக்கு தப்பா அல்லது குறி வைத்து யாரோ கோடீஸ்வரன் அவரை தற்காலிக கோடீஸ்வரனாக்கி, கற்பிழந்த கரன்சி நோட்டுகளை ... சரி விடுங்க, சாமி.
  2. ஜி.ஜனார்த்தன் ரெட்டிகாரு கர்நாடாக மாநிலத்தில் பிஜேபி ஆண்ட போது ஓங்கி, உலகளந்து உச்சாணிக்கிளையிலிருந்து ஆட்டம் போட்ட மாஜி அமைச்சர். மெகா அளவில் தாதுப்பொருள் சுரண்டி கோடி கோடியாக சுருட்டியவர். உச்ச நீதி மன்றத்தால் சட்டவிரோத சுரண்டலுக்குத் தண்டிக்கப்பட்டவர். சொந்த ஊரான பல்லாரியில் காலெடுத்து வைக்கக்கூடாது என்று கோர்ட்டார் ஆணை. பொண்ணுக்கு கல்யாணம் செய்ய ஜாமீனில் வெளிவந்த அவர் பற்பல கோடிகள் செலவழித்து தாம் தூன் என்று படோடாபமாக அந்த கல்யாணத்தை நடத்தி வைத்தார். பிஜேபி பெருந்தலைகள் ஆஜர். நரசிம்ஹமூர்த்தி என்ற சராசரி மனிதன் இத்தனை கோடிகள் எங்கிருந்து வந்தது என்று கேட்டு வேட்டு வைக்கவே, பத்து வருமானவரி அதிகாரிகள் பல்லாரியில் டேரா போட்டு இவரை குடைந்ததாக செய்தி. இந்த செய்தியை கசிந்து விட்டு அவரை விட்டு விடுவார்களா அல்லது மோடியின் கோட்பாடு படி டின் கட்டுவார்களா? மக்கள் தான் கவனிக்கவேண்டும்.
[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:












இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment