Thursday, March 31, 2016

இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚 🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.


இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚
🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.

நடு நிசி. அமாவாசை இருட்டு. லேசான தூறல். ஆனால், கீத்து மின்னல் டால் அடிக்கிறது. இடி டமாரம் அடிக்குது. தொலைவிலிருந்து ஆந்தையின் அலறல் என் கூடாராத்தின் நூல் ஜன்னலை தாக்குகிறது. ஒரு காட்டுப்பூனை மிரட்டு மியாவுடன் என் மார்பை மிதித்துவிட்டு, அந்த ஜன்னல் வழியாக ஓடி விடுகிறது. எங்கிருந்தோ வந்த ஒரு புலியின் உறுமல் கேட்டு, என் இரத்த அழுத்தம் உச்சகட்டத்தில் தாண்டவம் ஆடியது. இத்தனைக்கும், கட்டாயத்தின் மீது நான் இந்த கானகத்தில் நுழையவில்லை. தன்னிச்சையாப் போனேனா, பச்சை பச்சையா வாந்தி. பக்கத்தில் சிகெரட் பிடித்துக் கொண்டு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர் பொம்மி ரெட்டிகாரு, சிரித்துக்கொண்டே ஒரு சிகெரட்டை நீட்டினார். ‘நீரு பீடி உறிஞ்சினா சரிக ஆயுடும்’ என்று சொன்னார். அவரை சுட்டுக்கொல்லலாம் போல நம்கு ஃபீலிங். ஆனால் துப்பாக்கி அவர் கிட்டெல்ல இருக்கு. போதாக்குறைக்கு, ‘ஏன் நடுங்கி சாகிறீர்கள்? செம்மரக்கட்டைக்காட்டிலே, நாகேஸ்வர ராவ் பார்க் மாதிரியா இருக்கும்? கொலையாளிகள் நடமாடும் பிராந்தியம் ஐயா! நீ இன்னா நனச்சுக்குணு வந்தீக என்று சென்னை கொச்சையையும், மலையாளி கொச்சையையும் கலந்து அடிச்சு விட்டார். அவர் சென்னையில் ட்ரெய்னிங் வந்திருந்தாராம். களக்காடு காட்டிலேயும்  வால்பாறையிலும் ப்ராக்டிக்கலாம். யாரு கேட்டா இதெல்லாம்? 

சமாச்சாரம் இது தான். ஓய்வு பெற்ற உயரதிகாரிகளுக்கு அப்பப்பொ தாக்கீது வரும். தணிக்கைத்துறையின் தணியா வேகம் தொடரில் நான் எழுதிய ரசவாதம் என்றை கட்டுரையை சீஃப் செக்ரட்ரீ சுதாகரன் ஐ ஏ எஸ் சந்திரபாபு ரெட்டிகாருவிடம் காண்பித்தாராம். தமிழ்நாட்டு பசங்க வந்து ரெட் சாண்டர்ஸ் வெட்டிக்கிணு போராங்க. அந்த கவர்னமெண்டோ கூவுது. நீரு இந்த இன்னம்பூரானை இங்கு கைபற்றப்பட்ட ரெட் சாண்டர்ஸ் துண்டங்களை ஏலம் போடச்சே, ஸ்பாட் விஜிலன்ஸ் ஆபீஸராக போடலாமே. அப்றம் ஆடிட்காரன் தொந்தரவு இருக்காதுல்லெ.  அவருக்கு ஒரு திருப்பதி ஏகாந்த சேவை, ஏழு லட்டு, ஒரு சால்வை, இரண்டு லக்ஷ ரூபாய் கேஷ்,  மெல்லிசா ஒரு தங்க மோதிரம் கொடுக்கலாம். முன்னாலேயே சொல்லிடுங்க. அந்த ஆளு ரொம்ப கறாரு என்று கியாதி என்றாராம். லட்டு தின்ன கசுக்குமா என்ன? சரி என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் பாருங்கோ, ‘விநாச காலே, விபரீத புத்தி’ என்பார்கள். ‘சுதாகர்! உனக்கு என்னை பற்றி நன்றாகவேத் தெரியும். காட்லெ போய் இந்த வெட்ற சங்கதியெல்லாம் பார்த்தால் தான், என்னால் வேலையை எடுத்துக்கொள்வதை பற்றி முடிவு கூறமுடியும்.’ என்று திட்டவட்டமாக சொல்லி விட்டு, அவர் வரச்சேயே மணி ஏழு. சோத்தைக் கொட்டிக்கிட்டே பேசினோமா!, காண்ட்ராக்ட் பேசி முடிக்க சீ.எம். கிட்டப்போய் கேளு’ என்று அசால்ட்டா சொல்லி விட்டு தலையை சாச்சேன், பதினொன்று மணி வாக்கில். துர்சொப்பனம் ஒன்று கண்டேன். ‘போகாதே! போகாதே! என் கணவா!’ என்ற நல்ல தங்காள் பாட்டின் மெட்டில்,

‘போகாதே ! போகாதே! இன்னம்பூரா!
சாகாதே! சாகாதே! சித்தூர் காட்டில்.
ஆகாது! ஆகாது! இந்த கூலி படையெடுப்பு!
சாகரத்தில் தள்ளப்படுவாய், அசட்டு கிழமே!

இப்டி ஒரு பாட்டை பாடிக்கொண்டு வந்தது, பள்ளிக்கரணை கொள்ளிவாய் பிசாசு!
நான் ஓவென்று அலறி மணியை பாக்றேன்.
மணி: 0.001 ஏ.எம் ஏப்ரல் 1, 2016.
இன்னம்பூரான்


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment