Sunday, February 28, 2016

இன்னம்பூரான் பக்கம்: 2: கனம் கோர்ட்டார் அவர்களே![26]

இன்னம்பூரான் பக்கம்: 2: கனம் கோர்ட்டார் அவர்களே![26]

Monday, February 29, 2016, 5:09

பிரசுரம்: http://www.vallamai.com/?p=66709
இன்னம்பூரான்
27 02 2016
உரிமை போராட்டங்களில் உரிமையும் தாக்கப்படுவது ஒரு இயல்பான காட்சி. ஒரு உள்ளங்கை நெல்லிக்கனி உதாரணம்.

‘தன்னுடைய கோலை சுழுற்றுவதற்கு உமக்கு முழு உரிமை உண்டு, அது என் மூக்கை உடைக்கும் வரையில்.’
எனினும் கோலை சுழற்றுபவர்களுக்கும், சிதைந்த நாசிகளுக்கும் பஞ்சமில்லை!

மஹாலக்ஷ்மி பாவானி என்ற வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் மகளிர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில் கூறப்பட்ட தகவல், சர்வ வல்லமை படைத்த ஆண்டவனையும் உலுக்கி எடுத்து விடும். குஞ்சும் குளவானுமான வருடந்தோறும் இல்லத்தில் ‘கரு’ பணி செய்து வரும் பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும், அந்தந்த பஸ்களில் பள்ளி சென்று வரும் சிறுமிகளுக்கு நீலத்திரைப்படங்களை காண்பித்து, அவர்களை பாலின தொந்தரவு செய்கிறார்கள் என்றும் அத்தகைய வக்கிரங்களை சட்டரீதியாக தடுக்கவேண்டும் என்றார்.

Child pornography உலகெங்கும், அதுவும் இணையத்தில், பரவியிருந்தாலும், அநேக தேசங்களில் உடனடி தடையும் தண்டனையும் உண்டு. போர்ட்ஸ்மத் என்ற இங்கிலாந்து நகரில், ஒரு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனெரல் நீதிபதி. மேற்படி குற்றங்களுக்கு கடுந்தண்டனை விதிப்பார். ஒரு நாள் அவர் வீட்டில் சோதனை. ஆயிரக்கணக்கான நீலப்படங்கள். கையோடு கையாக கைது செய்து விட்டார்கள். அமெரிக்காவில், cybercrime police உடனேயே, கத்தியும் கபடாவுமாக வீட்டில் புகுந்து கைது செய்யக்கூடும். ஶ்ரீலங்காவில் வசித்து வந்த ஒரு பிரபல ஆங்கிலேய எழுத்தாளரை இங்கிலாந்து ராஜகுமாரன் (கிழம்!) வந்து பாராட்டுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஏன் தெரியுமா? அந்த பெரிசு Child pornographyயில் மூழ்கி ஞானஸ்நானம் செய்வதால். ஆனால் அவரை கைது செய்யவில்லை, பல வருடங்களாக. இந்தியாவில் இந்த வக்ரமான மனோவியாதி மிகவும் பரவலாக இருந்தாலும், தமிழனின் நாகரீகத்தில் ஒளிந்து கொண்டிருந்தாலும், சர்வம் மர்மமயம். இது ஒழிக.

எதற்கெடுத்தாலும் நாமும் கோர்ட்டாரை அணுகுகிறோம்; அவர்களும் மனமுவந்து தீர்வு அளிக்கிறார்கள். இந்த வக்ராதிபதிகளை தண்டிக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்திய கோர்ட்டார் மிகவும் மன உளைச்சல்களுக்கு ஆளாகி, இதை அசிங்கம், சமுதாயத்தின் நன்னெறிக்கும் அபாயம் என்று கூறினர். நீதிபதி மிஸ்ரா அவர்கள்,

‘…பேச்சுரிமையும், விட்டு விடுதலையும் கட்டுப்பாடற்றவை அல்ல. அரையணா சர்ச்சைகளும், கோர்ட்டின் எல்லை சர்ச்சைகளும் குறுக்குசால் ஓட்டக்கூடாது..’

என்று அச்சுறுத்தினார். மத்திய அரசு பொருத்தமான சட்டங்கள் இயற்றவேண்டும் என்ற நீதிபதிகள், அந்த அரசிடமிருந்து ஒரு விளக்கம் கேட்டு ஆணையிட்டனர். கவின்கலைக்கும், வக்கிரபுத்திக்கும் வித்தியாசம் உண்டு என்ற அவர்கள், அவற்றை பகுத்து அறிவது கடினம் என்றனர்.

படிப்பினை:

டாக்டர் தேவி ரஜப் அவர்கள் நாசகார பன்முகங்களை ஒழிப்பதில் கவனம் செலுத்தாமல், வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதால் இளைய சமுதாயம் மாபெரும் தவறு செய்கிறது; கடமையிலிருந்து நழுவி விடுகிறது; சமுதாய சீர்குலைப்பு தழைவிட்டு வளர்கிறது என்பதை எடுத்துரைத்து விட்டார். அதை நாம் ஊன்றி கவனித்து, நமது சம்பிரதாய சண்டைகளிலிருந்து (பாட்டியின் மொட்டை, பார்ப்பன துவேஷம் போன்ற சில்லறை மாஜி தாவாக்கள்: அதெல்லாம் செத்த பாம்பு, மேடம். Child pornography ஒரு கட்டுவிரியன்: அடுத்து வருவது கருநாகம். ) விடுதலை பெற்று ஆக்கப்பூர்வமான சமுதாய நிவாரணங்களுக்காக உழைக்க வேண்டும். சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான் என்பது கசப்பான உண்மை. சமுதாயத்தின் பின்னடைவை தடுத்தாட்கொண்டு முன்னேற்றங்களை கொணரவதும் சமுதாயம் தான் என்பது இனிப்பான உண்மை.
இனி உங்கள் பாடு.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://forrestduba475.files.wordpress.com/2011/02/child-pornography.jpg
உசாத்துணை:
© The Hindu


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment