Sunday, November 10, 2013

வாகை சூடினாரே, மன்னர் வாகை சூடினாரே!அன்றொரு நாள்: நவம்பர் 10



அன்றொரு நாள்: நவம்பர் 10 வாகை சூடினாரே, மன்னர் வாகை சூடினாரே!
Innamburan Innamburan 10 November 2011 17:42


அன்றொரு நாள்: நவம்பர் 10
வாகை சூடினாரே, மன்னர் வாகை சூடினாரே!
போர்க்களம் என்றாலே வரலாறு படைக்கப்படுகிறது என்பது திண்ணம். ராமாயணத்தில் யுத்த காண்டம். மஹாபாரத குருக்ஷேத்ரத்தில் கீதோபதேசம். பிரதாப்கட் போரில், பாரத பூமியின் வீறு கொண்டெழுந்த அவதார புருஷனொருவன், நவம்பர் 10, 1659 அன்று தேசாபிமானத்தின் கண்மலர் திறந்தான் என்றால், அது மிகையன்று. மலையெலி ஒன்றை சிம்மத்தை வீழ்த்தியது என்றால், அது பொருத்தமான உவமையே. வீரமாமுனிவர் ‘தேம்பாவணியில்’ நேரில் கண்டதை போல், ‘பெரிய குன்றமோ பேயதோ பூதமோ வேதோவுரிய தொன்றிலா வுருவினை’க்கொண்டகோலியாத் என்ற இராக்கதனுக்கும் கடவுளை நகைப்பவேட்டலால் விளி விழுங்கிய கயவன்’ யாரென்று முழங்கிய தாவீது என்ற தெய்வாம்சம் பொருந்திய சிறுவனுக்கும் நடந்த சண்டையில், தாவீது வெற்றி பெற்றதை வருணிப்பார். நமது கதாநாயகனுக்கு முற்றும் பொருந்தும் உவமை அது. இருதரப்பும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. உள்நாட்டுப்போர் என்றாலும், இந்த யுத்தம் தேசாபிமானத்திற்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே நடந்தது, பவானி அம்மனின் அருளும், நற்றன்னை ஜீஜிபாயின் அரவணைப்பும், குரு சமர்த்த ராமதாஸ் அவர்களின் ஆசியும் பெற்ற சத்ரபதி சிவாஜி மஹராஜ் மராட்டா பிராந்தியத்தில் முகலாய சாம்ராஜ்யத்தையும், அதனுடைய குறுநிலமன்னர்களையும் கருவேலமுள்ளென குத்திக்கிழித்தார். மொகலாயப்படை என்றால் சொகுசும், படோடாபமும், சோத்துக்கடையும், இல்லறமும், களவியலும் கூடி, ஆங்காங்கே டேரா போட்டுக்கொண்டு, ஆடி அசைந்து வரும். சிவாஜியின் மின்னல் படையோ, சத்துமாவு முடிச்சுடன், விரைந்து செல்லும் புரவிப்படை. நதிகளிலிருந்து சத்துமாவுடன் நீர் சேர்த்து உணவு. பெண்களை தொடக்கூடாது என்று விதி. எதிரியை முன்னால் போகவிட்டு, பின்னால் வரும் சோத்துக்கடையில் கை வைத்தால், அறுசுவை உணவு. இப்படியாக, இரு தரப்பும் இயங்கும் தருணத்தில், சிவாஜியின் சகோதரரை வஞ்சகமாகக் கொன்ற பீஜப்பூர் தளபதி அஃப்ஸல்கான் தலைமையில், அடில்ஷாஹி தர்பார், ஒரு படையை அனுப்ப, அவனும் சிவாஜிக்கு வலை விரிக்கவேண்டி, துல்ஜாப்பூர் கோயிலை உடைத்தான். பண்டர்பூர் விட்டலர் கோயிலை தாக்க விரைந்தான். சிவாஜியின் முகாம்: பிரதாப்கட் கோட்டை. மின்னல் தாக்குதல்களுக்கு செல்ல உகந்த இடம். வலிமை மிகுந்த கானோஜி ஜேதே, சிவாஜி பக்கம் சாய்வார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவருடைய தலைமையில் சிவாஜியின் படைகள், அஃப்ஸல்கானின் 1500 துப்பாக்கி வீரர்களை துவம்சம் செய்தனர். அஃப்ஸல்கானின் தளபதி மூசேகானை திடீர்தாக்குதல் செய்து விரட்டியடித்தனர். சிவாஜியின் தளபதி மோரோபந்த் அஃப்ஸல்கானின் பீரங்கிப்படையை மின்னல் தாக்குதலில் செயலிழக்கச்செய்தான். அவர்கள் நம்பியது பீரங்கிப்படை. அது புஸ்வாணப்படையாக மாறவே, அஃப்ஸல்கானின் வீரர்கள் வீரமிழந்தனர். கையோடு கையாக, சிவாஜியின் தளபதி ரகோ ஆத்ே ரேயின் புரவிப்படை, அஃப்ஸல்கானின் புரவிப்படையை மின்னல் தாக்குதலில் நாசமாக்கியது. அஃப்ஸல்கானும் சாமான்யப்பட்டவன் அன்று. படை குண்டு. நடமாட்டமே மந்தம். ஓட்டமாவது! ஆட்டமாவது! அவ்வளவு தான். இருந்தும் பக்கத்தில் இருந்த ‘வாய்’ கிராமத்தில் ஒரு படை ரிஸர்வில் வைத்து இருந்தான். அங்கு ஓடினர், தப்பிய தம்பிரான்கள். வழி மறிக்கப்பட்டு, தோற்றுப்போயினர். மிஞ்சியவர்கள் பீஜாப்பூர் நோக்கி ஓட, துரத்திய சிவாஜியின் படைகள் 23 அடில்ஷாஹி கோட்டைகளை கைப்பற்றின. கோல்ஹாப்பூரின் அடில்ஷா கிலேதார், தானே முன்வந்து சாவியை கொடுத்து சரணடைந்தார்.
புள்ளி விவரம்: அடில்ஷாஹி ராணுவம் இழந்தது 5000 வீரர்கள், 65 களிறுகள், 4000 குதிரைகள், 1200 ஒட்டகங்கள், மூன்று லக்ஷம் பெறுமான நகை, நட்டுகள், ஒரு லக்ஷம் பணம், துணிமணி, கூடாரங்கள். 3000 வீரர்கள் படுகாயம். மற்றவர்கள் தலை குனிந்து வீடு திரும்பினர்.
நீங்கள் கேட்கவிரும்பும் கதை சொல்கிறேன். சிவாஜி சமாதான தூது அனுப்பினார். அவரும் அஃப்ஸல்கானும் பிரதாப்கட்டில் ஒரு ஷாமியானாவுக்கு அடியில் சந்தித்தனர். நிராயுதபாணி என்ற நிபந்தனையில் இருவருக்கும் நம்பிக்கையில்லை. அஃப்ஸல்கான் ஒரு கட்டாரியை ஒளித்து வைத்திருந்தான். சிவாஜி ‘புலிநகம்’ என்ற ஆயுதத்தை ஒளித்து வைத்திருந்தார். கவசமும் அணிந்திருந்தார். ஏழு அடி உயரமான அஃப்ஸல்கான் சிவாஜியை முதுகில் குத்த, அவருடைய கவசம் காப்பாற்றியது. அவரோ, ஒரு கிழித்தலில், அவனுடைய குடலை உருவினார். அஃப்ஸல்கானின் மெய்காப்பாளர் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி சிவாஜியை காயப்படுத்தினார். மற்றொரு மெய்காப்பாளர் சயீத் பண்டாவும் சிவாஜியை தாக்கினார்.சிவாஜியின் மெய்காப்பாளர் ஜீவா மஹலா அவனை வெட்டிப்போட்டார். அஃப்ஸல்கானும் மாவீரன். தன் குடலை அமுக்கிக்கொண்டு பல்லக்கில் ஏறி வெளியேறினான். அவனை தப்பவிடாமல் சாம்பாஜி கவிஜி கொண்டால்கர் பாய்ந்து சென்று அவனுடைய சிரம் கொய்தார். பழி வாங்கும் படலங்கள் நிறைவேறும்போதே, சிவாஜியின் ஆணைப்படி பீரங்கிகள் வெடித்தன. கானகத்தில் ஒளிந்திருந்த மராட்டா காலாட்படைக்கு அது ஒரு சங்கேதம். அவர்கள் உடனே அடில்ஷாவின் ராணுவதளங்களை தாக்கத்தொடங்கின.
இரண்டு பாயிண்ட்: 
1.ஹிந்து-முஸ்லீம் காழ்ப்புணர்ச்சி தலை தூக்கவில்லை. இரு தரப்பிலும் இரு மதத்தினரும் இருந்தனர். அஃப்ஸல்கானின் மெய்காப்பாளர் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி. சிவாஜியின் மெய்க்காப்பாளர் சித்தி இப்ராஹீம். 
  1. உள்நாட்டு போராயினும், இந்தியாவின் முதல் தேசாபிமான யுத்தம் பிரதாப்கட் போர்: நவம்பர் 10,1659.
இன்னம்பூரான்
10 11 2011
india00094.jpg

உசாத்துணை:

No comments:

Post a Comment