Friday, October 11, 2013

பிரமலை கள்ளர்:அன்றொரு நாள்: அக்டோபர் 12:I


அன்றொரு நாள்: அக்டோபர் 12:I

Innamburan Innamburan Wed, Oct 12, 2011 at 6:13 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 12:I
I. பாமர வரலாற்றில் ஒரு சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை பாரபக்ஷமற்றி, ஒரு நடுவு நிலையிலிருந்து உன்னித்து கவனித்தோமானால்,  ஆழப்புதைந்திருக்கும்/ புதைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் புதிய படிப்பினைகளை தரலாம். அதற்கு ஆய்வுகள் முக்கியம். நினைவலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவையே. ஒரு சோதனை முயற்சி, இங்கே. பிரமலை கள்ளர் சமுதாயம் தமிழ் நாட்டில் தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில், பல உட்பிரிவுகளில், நெடுங்காலமாக, தனித்தும், பெரிய சமுதாயத்துடன் இணைந்தும் வாழ்ந்து வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில், செக்கானூரணியில் 4-5 வயதுகளிலும், உசிலம்பட்டியில் 9-13 வயதுகளிலும் வசித்ததும், கள்ளர்களுக்கு என்று நடத்தப்பட்ட பள்ளியில் ஓரிரு பிராமண மாணவர்களில் ஒருவனாக இருந்து படித்ததும், என் தந்தை அந்த சமுதாயப்பணியில், ஒரு அரசு உத்யோகஸ்தனாக, இருந்ததும், நினைவில் இருப்பதாலும், பிற்காலம் இன்று வரை அவர்களை பற்றி விருப்பத்துடன் படிப்பதாலும், இன்று பிரமலை கள்ளர்களை பற்றி ~ இரு பகுதிகளில். 
இந்தியாவில் தலைமுறை தலைமுறையாகத் திருடுபவர்கள் என்று பிரிட்டீஷாரால் சூடு போடப்பட்ட சமுதாயங்களில், இது ஒன்று. அதனால், தலை குனிவு; நாள் தோறும், ஆண்மக்கள் கிராமத்தில் இரவு தங்கவேண்டும். ஆஜர் என்று நேரடி சாட்சியம் தரவேண்டும் என்ற கெடுபிடிகள்: இதன் பின்னணியாகிய கிரிமினல் பழங்குடிகள் கட்டுப்பாடு சட்டம் (Criminal Tribes Act 1871) அமலுக்கு வந்த தினம்: அக்டோபர் 12, 1871. விடுதலை வந்த பின் மாஜி கிரிமினல் பழங்குடிகள் (denotified tribes) என்ற நாமகரணத்தால், அவர்கள் பெரிய சமுதாயத்துடன் கலந்து விடமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டனர் அதனால் தான் ‘Habitual Offenders Act 1952 ‘ (மட்டமான தலைப்பு.) அமலுக்கு வந்தது என்று நான் நினைக்கிறேன். அவற்றில் 192 பழங்குடி சமுதாயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பிறகு என் கருத்தை சொல்கிறேன்.
கள்ளர் பிரான்கள்: அவர்களின் சொத்து மானம் பார்த்த பூமி. அளவு கடந்த ரோஷம். அதற்கு ஒரு படி மேல், சினம். அதற்கும் ஒரு படி மேல், நகைச்சுவை. யாராவது ஒரு பிரமுகரை பழி வாங்கவேண்டுமானால், கட்டிலோடு அவரை லாகவமாகக் கடத்தி, 20-30 மைல் தொலைவு கடத்தி, ‘தொப்’ என்று கிடத்திவிடுவார்கள். தூங்கினவன் எழுந்திருக்க மாட்டான். அத்தனை லாகவம். ஆட்டுமந்தைகள், இவர்கள் கூப்பிட்டால் வந்து விடும். அத்தனை வசீகரம்!. போலீஸ் போனால் பிரயோஜனமில்லை. ராவோடு ராவாக, கிராமமே விருந்துண்டு, தோல்களை வேறு கிராமத்தில் புதைத்து விடுவார்கள். ஒரு கதை: திருமலை நாயக்கன் ராஜாவுடன் ஒரு கள்ளர் தலைவர் பந்தயம். ராணியை முடியை பின்னிக்கொள்ளாமல் இன்று படுத்துக்கொள்ளச்சொல்லுங்கள். பிறகு பாருங்கள். ராவோடு ராவாக, ஒரு உடும்பின் வாலை பிடித்து மலையேறி ராணியின் முடியை இவர் பின்னிவிட்டதாகச் சொல்வார்கள்.
பள்ளி நினைவுகள்: செக்கானூரணி: த்ரீ ரிங்க் சர்க்கஸ் மாதிரி ஒரே அறையில்/ஹாலில்/திண்னையில்/ மரத்தடியில் (எல்லா வர்ணனையும் தகும்!) ஐந்து வகுப்புகள், ஒரே ஆசிரியை, கூச்சல், பாடம், ஆட்டம், பாட்டம், விளையாட்டு, வானரம், நாய், பூனை, வரத்துப்போக்கு. நான் ஏதோ உயர்பிறவியாக நடமாடியதும், நினைவில் உள்ளது. லீலா டீச்சர் 25 வருடங்களுக்கு பிறகு வந்த போது, நான் விஷமக்காரன் என்று கேலி செய்தார். சமத்துவம் இருந்ததை உணர்த்தினார். 
பள்ளி நினைவுகள்: உசிலம்பட்டி: கள்ளர் இன மாணவர்களுக்கான ஜில்லா போர்ட் பள்ளியில் இனபேதம் துளிக்கூட இல்லை. அவர்களுக்கு, உணவு, ஆடை, தங்குமிடம், கல்வி இலவசம். தாமதமாக பள்ளியில் சேருவதால், எனக்கும் மற்றவர்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம். பள்ளியில் சுதந்திரதாகம் வலுத்து இருந்தது. ‘...ஜூனியர் வகுப்பில் இருந்தாலும், என்னை அந்த பிரமலை கள்ளர் மாணவர்கள் தலைவனாக, ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்று, இன்னும் புரியவில்லை. ஹெட்மாஸ்டர் யாகூப்கான், அண்டைவீடு; அவருக்கு நான் செல்லப்பிள்ளை. கண்டும் காணாது போய் விடுவார். அன்றாடம், காலைப்பிரார்த்தனைப்பாடல், முதல் நாள் தான், தேர்ந்தெடுப்போம். ஒரு நாள், என் முடிவின் படி, ‘வந்தே மாதரம்’ பாடினான், ஒச்சத்தேவன். ஹெட் மாஸ்டர் ஆட்சேபிக்கவில்லை; அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார், தற்காலிகமாக. அவரிடத்திற்கு வந்த அப்பாவின் நண்பர் சிவசுப்ரமணிய ஐயரை, அவர் வீட்டுக்கு வந்து கெஞ்சிய பிறகும், நாங்கள் எதிர்த்தோம்; பள்ளியில் முதல் முறையாக, ஸ்ட்ரைக் செய்தோம், யாகூப் கான் அவர்களை பதவியில் அமர்த்தும் வரை. எனக்கு டி.ஸி. கொடுக்கவேண்டும் என்ற ஆணையைப் புறக்கணித்தார். இது எல்லாம் தினத்தூது என்ற இதழில் வந்ததாகச் சொல்வார்கள்...’மாணவர்களாகிய நாங்கள் கெடுபிடிகளால் கட்டிப்போடப்படவில்லை. 
என் பாடு வேறு:அம்மா எழுதியது:’...இத்தனை வருஷத்துக்குள் இரண்டாவது யுத்தம் நடக்கும்போது என் பெரிய பிள்ளை காங்கிரஸ் கஷ்ஷி(ட்சி)யில் சேர்ந்து ஸ்கூலில் மீட்டிங் நடத்தினான். பிறகு ஊர்வலம் வந்தார்கள். அப்போது மீட்டிங் பேசினதால், இவன் ஊர்வலம் வர ஏற்பாடு இவன் தான் செய்தான் என்று என் பிள்ளையை அரஸ்டு செய்வதாகச் சொன்னார்கள், அதற்குள் டீ எஸ் பீ  கியாம்பு உசிலம்பட்டி வந்திருந்தார். அவர் உடனே என் புருஷனை வரும்படி எங்கள் வீட்டிற்கு என் புருஷனுக்குத் துணையாக வேளப்பன் என்று ஒரு போலீஸ்கார கான்ஸ்டபிள் இருந்தான். சென்னை பீ சூப்ரண்டு அவனை அனுப்பினார், வீட்டுக்கு. அப்போ உடனே என் புருஷன் டீ எஸ் பீ அவர்களைப் போய் பார்த்தார், அவர் உன் பிள்ளை தான் மீட்டிங்கில் பேசினான். இனி அது நடக்கக் கூடாது என்று உன் பிள்ளையிடம் சொல்லி வை என்று சொல்லி விட்டு உன் பிள்ளை என்று தெரிந்தேன், அரஸ்டு செய்யாமல் விட்டு விட்டேன். உனக்கு தான் வேலை போகும். அதனால் உன் பிள்ளையைக் கண்டித்து வை என்று சொ(ன்)னார்...’
(தொடரும்)
kattpix1.jpgஇன்னம்பூரான்
12 10 2011

கி.காளைராசன் Wed, Oct 12, 2011 at 6:34 PM

ஐயா “இ“னா அவர்களுக்கு வணக்கம்.


>
> இந்தியாவில் தலைமுறை தலைமுறையாகத் திருடுபவர்கள் என்று பிரிட்டீஷாரால் சூடு
> போடப்பட்ட சமுதாயங்களில், இது ஒன்று. அதனால், தலை குனிவு; நாள் தோறும்,
> ஆண்மக்கள் கிராமத்தில் இரவு தங்கவேண்டும். ஆஜர் என்று நேரடி சாட்சியம்
> தரவேண்டும் என்ற கெடுபிடிகள்: இதன் பின்னணியாகிய

திருச்சியில் இராபர்ட் கிளைவின் குதிரையைக் கள்ளன் ஒருவன் களவு
செய்தததால் இந்தத் தண்டனை?

கள்ளர் கள்வரோ?
அல்லது
கள்ளர் காவலரா?
தாங்கள் அறிந்த நிகழ்வுகளை எங்களுக்கு இன்னும் அறியத்தர வேண்டுகிறேன் ஐயா,

தங்களது நினைவாற்றலுக்கு நன்றி
அன்பன்
கி.காளைராசன்

prakash sugumaran Wed, Oct 12, 2011 at 6:44 PM

அருமையான பதிவு. பிரமலை கள்ளர்கள் தாந்திரீகத்தில் ( மந்திரம், மாயம் இல்லாத ) கை தேர்ந்தவர்கள். அதிகார வர்க்கத்தின் பல அடக்குமுறைகளையும் கடந்து எங்கெங்கோ பிரிந்துள்ள அவர்கள் இன்றைக்கும் செய்யும் செயல்கள் நம்பவே முடியாத, கற்பனைக்கு அப்பார் பட்டவை.

இன்றைக்கு தமிழக காவல்துறையின் கண்களில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அத்தகைய ஒரு நபரின் உறவினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குற சிவா என்பது அந்த கள்வனின் பெயர். சென்னை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மற்றும் பெங்களூரு, ஆந்திரத்தின் சித்தூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருப்பவன். இதுவரை அவன் கொள்ளையிட்ட மொத்த மதிப்பை கணக்கிட்டால் சில நூறு கோடிகளை தாண்டும். என்றாலும் அவனது தினசரி இரவுத் தூக்கம் ஏதோ ஒரு மரத்தின் கிளையில். நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளைகளில் இதுவரை ஒருவரை கூட கொன்றதில்லை. சிக்கிக்கொள்ளும் நிலையில் அவனும் அவன் கூட்டாளிகளும் செய்யக் கூடிய அதிகபட்ச செயல் குண்டாந்தடியால் தலையில் தட்டி ரத்த காயம் ஏற்படுத்துவது.

காவல்துறை கணக்கெடுப்புப் படி அவனுக்கு 27  மனைவிகள். இதில் இறந்து போன முதல் மனைவி ஒருத்தியை தவிர மற்ற எல்லாரும் ஏற்கனவே விதவைகள் அல்லது கணவனால் கை விடப்பட்டவர்கள். பல மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட கள்ளர் குடும்பங்கள் இவனை நம்பியுள்ளன. உண்ண உணவு, உடுக்க உடை, கல்வி, திருமணம் ஆகியவற்றை தவிர வேறு எந்த தேவைக்கும் பண உதவி செய்ய மாட்டான். பல சமயங்களில் களவு போன வீட்டில் உள்ளவர்களுக்கே நீண்ட நாள் கழித்துதான் தெரியும் களவு போன விஷயம். இவனை வளைத்துப் பிடிக்க கிட்டத்தட்ட் 300 தனிப்படை காவலர்கள், மூன்று மாநிலங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் இரவு பகலாக பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். 

இப்போதைக்கு கருநாடக மாநிலம் மங்கலூருவில் உள்ளதாக தகவல்.
]

Innamburan Innamburan Wed, Oct 12, 2011 at 7:28 PM
To: mintamil@googlegroups.com
ப்ரகாஷ் சுகுமாரன் ஸ்பெஷல்: மீள் பதிவு:
***
“தாம் தீம் தூம்’ னு  ராசா  வாராறு! 
                     சுத்துப்பட்ட சனங்கெ எல்லாம் சலாமு
பூம் பூம்ம் னு ஊதறாக, கொம்பு!
                       மத்தப் பட்டணத்து மக்களே, கேளுங்க.”

நேரம் ஆச்சே, தலையை சாய்க்கலாம் என்று விளக்கு அணைச்சேனா, கண்ணின் முன் வந்து நின்றார், சந்தனதேவன். உசிலம்பட்டியில் ஊரோரம் ஒரு காட்டாறு, மணலா ஓடும், வருஷம் முக்காலும். ஆனாலும், மேக்கத்திலே மழை பேஞ்சா, பஞ்சத்தில் அடிப்பட்ட பனாதை போல, ஓடியாரும் தண்ணி. வேடிக்கை பாக்கப்போவோமா? நொறையா பொங்கி பொங்கி போகும். கண்டதையும் அடிச்சிக்கிட்டு போவும். மரமும், செடியும், கிளையும் மொதந்துக்கிட்டே போவும். ஆடும், மாடும் பாத்தானாம், மாயாண்டி.  அடிச்சு விட்றான், பொச்சத்தேவன். பொணம் மிதந்து வந்தது, அப்டீன்னு.

கற்பனை என்றால், இப்படி தான் காதும், மூக்கும் வைத்துக் கொண்டு வரும். வழக்கம் போல, இது நிற்க. சின்ன வயதில், எங்களுக்கு ஹீரோ, சந்தனத்தேவன். வெள்ளைக்காரனுக்கு டேக்கா கொடுத்த கொள்ளைக்காரன். சொத்துக்காரன் வீட்டிலேருந்து கொத்து கொத்தா எடுத்து ஏழை பாழைக்கு கொடுப்பானாம். காட்டிலே இருப்பான்; ஆனையோட குஸ்தி போடுவான், புலியோடு விளையாடுவான், குதிரை சவாரி, ராஜா தேசிங்கு (பாடத்தில் வந்தவர்.) வராப்லே இருக்கும், கம்பீரமா.
இது எல்லாம் ஒரு கூட்டுக்கற்பனை. அவரை பற்றி நாட்டுப்பாடல்கள் பல இருந்தன. ஜாலியாப்பாடுவோம். ஒரு வரி கூட ஞாபகத்தில் இல்லை. அதான், மேலே உள்ள ‘பாட்டு?’ இப்போ இட்டுக்கட்டினது. அதை விடுங்க.

தேவர் என்னமா வாராறு? அதை பாருங்க. உறக்கத்துக்கு, உறுதுணையாக, அகப்பட்ட நூல், கி.வா. ஜகந்நாதனின் ‘மலை அருவி’. நாட்டுப்பாடல் என்றாலே. நா. வானமாமலை, லூர்து, கி.வா.ஜ. போன்றோர் நினைவில் வருவார்கள். பர்சி மாக்வீன் ஐ.சி.எஸ். கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்களை தொகுத்து, சென்னை பல்கலைக்
கழகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தவரை அறியாதவர் பலர். ( அவை உள்ளனவா என்று அறிய அவா.) அதில் ஒரு பகுதியை சரஸ்வதி மஹால் பிரசுரித்தது. கி.வா.ஜ. 2676 பாடல்களை தேர்ந்து எடுத்தார், ஆய்வு செய்ய. அவற்றில் ஒன்றின் தலை மாந்தர், சந்தனத்தேவன். அது கண்ணில் பட, எங்கள் ஹீரோ, சந்தனத்தேவனை பற்றி ஒரு பாடலை போட துணிந்தேன்.

“எல்லாரும் கட்டும் வேட்டி - ஏலங்கிடிலேலோ
 ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடிலேலோ
 சந்தனம் கட்டும் வேட்டி - ஏலங்கிடிலேலோ
 சரியான சரிகை வேட்டி - ஏலங்கிடிலேலோ
 
எல்லாரும் படுக்கும் பாயி - ஏலங்கிடிலேலோ
ஏழைக்கேற்ற கோரைப் பாயி - ஏலங்கிடிலேலோ
சந்தனம் படுக்கும் பாயி - ஏலங்கிடிலேலோ
சரியான ஜப்பான் பாயி - ஏலங்கிடிலேலோ

எல்லோர்க்கும் போலீஸ் என்றால் - ஏலங்கிடிலேலோ
ஏழைக்கேற்ற நடுக்கந்தான் - ஏலங்கிடிலேலோ
சந்தனத்திற்குப் போலீசென்றால் - ஏலங்கிடிலேலோ
சரியான சக்காந்தமாம் -ஏலங்கிடிலேலோ.”

‘சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ


நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 10 2010
***





Geetha Sambasivam Thu, Oct 13, 2011 at 5:14 AM

இதை முதலில் படிச்சிருக்கணும். அருமையான நினைவலைகள்.
2011/10/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 12:I
(தொடரும்

Geetha Sambasivam 
ஆச்சரியமான தகவல்.

Geetha Sambasivam Thu, Oct 13, 2011 at 5:19 AM

சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ//
 
ஏலங்கிடிலேலோ!


கி.காளைராசன் Thu, Oct 13, 2011 at 4:31 PM

...வேலை நேரம் ஆச்சே, தலையைத் திருப்பக்கூட முடியவில்லையே என்று கணினியை
போட்டேனா,   கண்ணின் முன் வந்து நின்றார்,
பார்த்தால், சந்தனதேவன்...
--
அன்பன்
கி.காளைராசன்



No comments:

Post a Comment