Thursday, August 29, 2013

அரசு 12 துரைத்தனம்.


அரசு 12 துரைத்தனம்.


Innamburan S.Soundararajan Fri, Aug 30, 2013 at 9:20 AM

அரசு 12 துரைத்தனம்.

Friday, August 30, 2013, 4:57


இன்னம்பூரான்
Cockroachawardராஜமாதா முப்பெரும்தேவி பொன்னம்மா தேவிஶ்ரீ மதுராபுரியை ஆண்ட ராணிமங்கம்மாவை விட பல திறன்களில் தலை சிறந்து விளங்குபவர். ரோமாபுரி இளவரசி. தாமரை மணாளனை அவரை சங்கத்தமிழ் பண்புக்கு இணங்க காதல் செய்த பின்னரே வரைவு செய்து கொண்டது உலகறிந்த விஷயம். அது அவர்களது உரிமை என்பதில் கடுகளவேணும் ஐயமில்லை. அழகான குழந்தைகள். ஆண் அரசாளும் என்கிறார்கள் சிலர். அவருடைய திருமகனார் இளங்குமரனுக்காக, அரியணை காத்திருக்கிறது. வடிவுக்கரசியான அவருடைய திருமகளோ, குடும்ப விளக்கு. எங்கிருந்தோ வந்த ஆணழகன் இளஞ்சேரலாதனை மணந்து பல வருடங்கள் ஆயின. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றாள், ஒளவை பாட்டி. குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகள் (பாலையையும் விட்டு விடவில்லை!) நாடோடி, நாடோடி இளஞ்சேரலாதனை நாடின. மணிமேகலையின் அமுதசுரபி தோற்றது, போங்கள். அலிபாபாவின் மாயவிளக்கு மங்கியதோ என்ற தோற்றம்! காசுகள் கொட்டின; மோஹராக்கள் ‘தக தக’வென்று மின்னின; திரவியம், கனகதாரா தோத்திரம் மொழிந்தவாறு, கூரையை பிய்த்துக்கொண்டு ‘கொட்டோ கொட்டு’ என்று இடைவிடாமல் பொழிந்தது; பொழிகிறது; பொழிந்து கொண்டே இருக்கும். இளஞ்சேரலாதன் அமர்ந்தவிடத்தில் அல்லது தேகாப்பியாசம் செய்யும் இடத்தில் அல்லது இளைப்பாறலும், தேறலும், விருந்தும் அளிக்கும் மன்றங்களில் மகிழ்வின் மணமும், செல்வத்தின் செல்வாக்கும் நிறைகுடங்களாக ததும்பி வழிகின்றன.
என்றென்றும் ராஜ விசுவாசிகளில் ஒருவராக பரிமளிக்கும் குருக்ஷேத்திரத்தின் குறுநிலமன்னராகிய உலகநாதபெருமான் அவர்களிடம் தெற்கத்திய பத்திரிகை ஒன்று, இளஞ்சேரலாதனுக்கு குருக்ஷேத்திர பிராந்தியம் அள்ளி அள்ளி கொடுத்த நிலபுலனை பற்றியும், ஸ்தாவரசொத்தான பூமியயையே காசு பணமாக ரஸவாதம் செய்யப்பட்ட உத்திகளை பற்றியும், குருக்ஷேத்திர நாட்டின் உயர்/தாழ் ஊழியனனான கண்ணிய கமுக்கனார் தட்டிய முரசொலியின் ‘அபஸ்வர’ எதிரொலியை பற்றியும், ஒரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அவரோ ஜராசந்தன் போன்ற சண்டைக்கோழி. விடுவாரா? ஒரு உயர்/தாழ் ஊழிய சமூகத்தையே அருகில் வைத்துக்கொண்டு கருத்து முத்துக்கள் பல உதிர்த்தார். அவையாவன:
தேசத்தின் மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர்.
குருக்ஷேத்திர தர்மம் மைனர் குடியானவர்களுக்கு, அதுவும் செல்வக் களஞ்சியங்களுடன் ‘தகாத’ இனம் சேரும் மைனர் குடியானவர்களுக்கு சலுகைகள் அளிக்கும்.
ஆகவே மாப்பிள்ளை இளஞ்சேரலாதனுக்கு கொடுத்த சலுகைகள் தர்மத்தின் அடிப்படையே.
இந்திரனா புகாரித்தான்? இந்திர பதவி உயர்ந்தது தான். ஆனால் இந்திரர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. இந்திரனும் காசு பார்த்தான். அநீதி + அநீதி = நீதி! இது அறியாத தென்னாட்டுத் திருமாலே. உம்மை கண்டு பரிதாபம் கொண்டேன்.
கமுக்கரின் குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போயின, ஐயா. செல்வக்களஞ்சியம் ஏன் புகாரிக்கவில்லை. அது எனக்கு புரியவில்லையே!!!
கமுக்கரின் குற்றச்சாட்டுகளை, துரைத்தனத்தாரின் கமிட்டி நிராகரித்து விட்டதே. அதன் ரிப்போர்ட்டை நான் படிக்கவில்லை. அதனால் என்ன கெட்டுப்போச்சு? அது நிராகரித்திருக்கும்.கும்! கும்மோ கும்!!
அப்படியானால் குமுக்கரை ஏன் அமுக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்! நான் அவசரப்படுபவன் அல்ல. என்னை போன்ற நடுநிலையாளர் கிடையாதாக்கும். கும்! கும் கும்!!
மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு பண்பாளர். அவர் ராஜமாதாவின் மாப்பிள்ளை என்பதால் தான், பத்திரிகைகள் அவரை வாட்டுகின்றன. அலக்கழிக்கின்றன. என்னே அக்கிரமம்! மம்! மம்மோ மம்!!
அசரீரி: “ மெய்யெல்லாம் மெய்யல்ல; பொய்யெல்லாம் பொய்யல்ல; மெய் என்பது பொய்யோ? பொய் என்பது மெய்யோ? பொய்யும் மெய்யும் கலந்துக்கட்டியோ? ஐயோ!”
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்’ என்று அரசியல் அறியாமையினால், சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பிழை இழைத்து விட்டார் போலும். எதற்கும் ஒரு செய்தி. அரசியல் பிழைத்தோர்க்கு ஆரூடம் கை வந்த கலை. ஜோசியம் கை கூடிய கலை. அதனால் தான் இந்த உலகநாதபெருமானின் அற்புத வாசகங்கள் வருமுன்னரே, ராஜமாதாவின் பிரதம விசுவாசியும், திவானும் ஆன மனோவசியனார் அவர்கள், பத்திரிகைகளுக்கு ஒரு அறைகூவல் விடுவித்தார். “பத்திரிகைகள் எதையும் விசாரிக்கட்டும்; ஆனால் தனிமனிதர்களை மீது பழி கூறலாகாது….”. அதாவது தவறு செய்தவன் தனிமனிதனாலும், சிஸ்டம் தவறியது என்பது உகந்த சொல் எனலாமோ? அவரது பொழிவை முழுதுமுச்சூடும் கேட்டோ/படித்தோ வசியமானவர்கள் உலகநாதபெருமானின் கூற்றை அனுபவித்து வரவேற்பார்கள்.
‘ஏழை குடியானவர்கள்’ பிழைப்பார்கள். விதர்பா ஏழை குடியானவர்கள் மடிவார்கள். குருக்ஷேத்திரத்தில் நிலபுலன் இழந்த ஏழை குடியானவர்கள் நெற்றியில் பட்டை நாமம் பளபளக்கிறது. மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் மைனர் குடியானவர் என்றால், ‘அமிதா பச்சன் ஒரு அறிமுக நடிகர்’ என்றார், ஒரு ட்விட்டர். மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர் என்றால் முதுகலைஞர் கருணாநிதி அவர்கள் பால் மணம் மாறாத குழவி என்பர் சிலர்.
வர்ரேன்…
சித்திரத்துக்கு நன்றி: asifmeeran.blogspot.com
பிரசுரம்: வல்லமை 30 08 2013


No comments:

Post a Comment